Thursday 22 October 2015

புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பில் கிடைத்த நூல்கள்



புத்தகங்களை மணிக்கணக்கில் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம், நான் பள்ளி மாணவனாக இருந்த நாளில் இருந்தே வந்து விட்டது. இப்போதும் ஒரு நாளில் ஒருமணி நேரமாவது படித்தால்தான் அன்றைய பொழுது நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த வகையில் வாசிப்புப் பழக்கம் காரணமாக வாங்கிய நூல்கள் நிறைய. இப்போதெல்லாம் முன்புபோல அதிகம் நூல்கள் வாங்குவதில்லை. காரணம் நாம் வாங்கி, வாங்கி குவித்த புத்தகங்களை நமது பிள்ளைகள் நமக்குப் பின் பயன்படுத்துவார்களா என்ற எண்ணம்தான். எனவே எங்கேனும் விழா நடந்தால் அவற்றின் நினைவாக வாங்குவது அல்லது அன்பர்களின் அன்பளிப்பாக வரும் நூல்களை மட்டுமே வாங்குவது என்று இருக்கிறேன். சிலசமயம் வாங்குவதே இல்லை. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு 2015 விழா நிகழ்ச்சியில் (11.10.15 – ஞாயிறு) கிடைத்த நூல்கள் இவை.

கைப்பைக்குள் இருந்த நூல்கள் –

(படம்) விழாவை முன்னிட்டு (விராலிமலை அருகில் உள்ள) இலுப்பூரில் உள்ள ”மதர்தெரசா கல்விநிறுவனங்கள்” சார்பாக அழகிய கைப்பை ஒன்றை அன்பளிப்பாக தந்தார்கள். அவர்களுக்கு நன்றி. அந்த கைப்பைக்குள் விழாக்குழுவினர் சார்பாக அன்பளிப்பாக தந்த நூல்கள் இவை. நன்றி! நன்றி!

உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு (World Tamil Bloggers Guide Book) (படம் - மேலே) நன்றி http://bloggersmeet2015.blogspot.com

முதற்படி – (புன்னகை பூ ஜெயக்குமார்)
(படம் – மேலே) நன்றி flipkart

புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை –

அடுத்து அங்கு விற்பனைக்காக சில நூல்களை வைத்து இருந்தார்கள். அங்கே விலைக்கு வாங்கிய நூல்கள் இவை. வாங்கிய மூன்று நூல்களுமே நமது வலைப்பதிவர்களால் அவரவர் வலைப் பதிவுகளில் எழுதப் பெற்றவை.

வித்தகர்கள் – (கரந்தை ஜெயக்குமார்)
(படம் - மேலே) நன்றி: http://karanthaijayakumar.blogspot.com

ஜன்னல் ஓரத்து நிலா – (கவிஞர் த.ரூபன்)
(படம் - மேலே) நன்றி: www.trtamilkkavithaikal.com

என்றாவது ஒருநாள் – (ஹென்றி லாஸன் தமிழில்: கீதா மதிவாணன்) (படம் - மேலே) நன்றி: http://geethamanjari.blogspot.in

இவற்றுள் கரந்தை ஜெயக்குமார் மற்றும் கவிஞர் த.ரூபன் எழுதிய நூல்கள் இந்த விழாவிலேயே வெளியிடப் பட்டவை ஆகும்.

அரங்கத்துள் வலைப்பதிவர் குடந்தை ஆர்.வி.சரவணன் அவர்கள் தான் எழுதிய “இளமை எழுதும் கவிதை நீ” என்ற நூலினை அன்பளிப்பாக வழங்கினார்.   

இளமை எழுதும் கவிதை நீ …. … (குடந்தை ஆர்.வி.சரவணன்) (படம் - மேலே) நன்றி: http://kudanthaiyur.blogspot.in

ரூபனின் கவிதை நூலை வாசித்து முடித்து விட்டேன். எனக்கு முன்பே ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள், இந்த நூலுக்கு விமர்சனம் எழுதி விட்ட படியினால், சில நாள் கழித்து எனது விமர்சனத்தை எழுதலாம் என்று இருக்கிறேன். மற்ற நூல்களையும் படித்து முடித்தவுடன் எழுத வேண்டும்.




31 comments:

  1. பதிவுக்கு நன்றி அய்யா. பொதுவாகவே நமது வலைப்பதிவர்களின் வாசிப்புத்தன்மை குறைவாகவே இருக்கிறது என்பதே விழாவுக்குப் பிந்திய எனது கருத்து. நூல்விற்பனை அந்த அளவிற்கு இல்லை. நீங்களாவது சில நூல்களை வாங்கியிருக்கிறீர்கள். வந்த பலரும் எந்த நூலையுமே வாங்காமல் போனதால் ஆர்வத்துடன் தமது நூல்களைக் கொண்டுவந்து -நாங்கள் ஏற்பாடு செய்திருந்த- “பதிவர் நூல்கள் விற்பனைக்கும் காட்சிக்கும்“ அதிக வரவேற்பைப் பெறவில்லை. கையேடு உட்பட, நம் பதிவர்கள் வாங்கிய நூல்கள் சுமார் 5,000 ரூபாய்க்கே விற்கப்பட்டதாக அந்தப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். ஒரு தகவல் - எனது நூல்கள் வெளியீட்டு விழாவிற்குத் தாங்கள் வந்திருந்தீர்கள் அல்லவா? அந்த விழாவில் எனது 3நூல்களும் 300செட் (அதாவது 900புததகங்கள் அதாவது மொத்தம் 75,000ரூபாய்) விற்பனையானது!. படிப்புக் குறைந்தால் எழுத்தில் எப்படி உலகத் தரமிருக்கும்? இது நம் பதிவர்கள் யோசிக்க வேண்டும். என் வீட்டுக்குத் தாங்கள் வந்திருக்கிறீர்கள் இல்லையா? என் வீடடு நூலகத்தில் மட்டும் சுமார் 10,000 நூல்களைக் கடந்த 40ஆண்டுகளாக நான் சேகரித்து வைத்திருக்கிறேன்.”மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி நிரம்பினால்தானே வீட்டின் அனைத்துக் குழாய்களிலும் தண்ணீர் வரும்?” -உதாரண உபயம் வாரியார் அவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. பல்வேறு பணிகளுக்கு இடையிலும், கருத்துரை தந்த ஆசிரியர் அவர்களின் வரவுக்கு நன்றி. கீழே தனது கருத்துரையில், சகோதரி எழில் அவர்கள் சொன்னது போல “ படிக்க நேரம் ஒதுக்காமையும், இணையத்தில் வாசிக்க நிறைய கிடைப்பதாலும் புத்தக வாசிப்பு பெருமளவு குறைந்துவிட்டது” என்றே நானும் நினைக்கிறேன் அய்யா!

      உங்கள் வீட்டிற்கு நான் வந்து இருந்தபோது, உங்கள் வீட்டு நூலகம் கண்டு பிரமித்து விட்டேன் அய்யா. எங்களது வீட்டு நூலகத்தில் (உங்களுடையது போல் பெரியது அல்ல) நிறைய நூல்கள் இரவல் கொடுத்தே வராமல் போய் விட்டன. நீங்கள் எப்படித்தான் இவ்வளவு நூல்களையும் கட்டி காத்தீர்கள் என்று தெரியவில்லை.

      Delete
    2. கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களுக்கு,
      கடந்த முறை மதுரையில் நடந்த வலைப் பதிவர் சந்திப்பிலேயே கவனித்தேன் ஐயா. நூல்களை வாங்க எவருமே ஆர்வம் காட்ட வில்லை.
      நண்பர் திரு எஸ்.பி.செந்தில்குமார் அவர்கள் , திருவிழாவிற்கு சில நாட்களுக்கு முன்னர் அலைபேசியில் அழைத்துக் கேட்டார்.அவரது நூலான தினத்தந்தி வெளியீடாகிய நம்பமுடியாத உண்மைகள் நூலின் எவ்வளவு பிரதிகளைக் கொண்டு வரலாம் எனக் கேட்டார். தினத்தந்தியில் இருந்து பணம் கொடுத்துதான் வாங்கி வர வேண்டும் என்று கூறினார். இருபது நூல்கள் கொண்டுவாருங்கள் போதும் என்றேன்.
      இருபதும் விற்றிருக்குமா என்பதே சந்தேகம்தான்.
      பொதுவாக ஊக்குவிக்கும் தன்மையானது குறைந்து கொண்டே வருகிறது ஐயா
      எழுதுகிறவர்களை ஊக்குவித்தால்தானே தொடர்ந்து எழுதுவார்கள்,
      ஊக்குவிக்கும் செயல் குறைந்து கொண்டே வருகிறதுஎன்பதுதான் என் கருத்து.
      தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் சொல்வது போல்,நண்பர் என்று புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தால், அவை திரும்ப வருவதேயில்லை,
      திரும்பத் திரும்பக் கேட்டால், நட்புதான் பழுதடையும் போல் இருக்கிறது
      தம +1

      Delete
    3. புத்தகம் வாங்கும் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. நான் கொண்டு வந்த புத்தகங்களில் 7 மட்டுமே விற்பனை ஆகியிருந்தது. மற்றவை என்னிடமே இருக்கிறது. விழாவின் இடையே நண்பர் ஒருவர் உங்கள் புத்தகமே இல்லையே என்றார். ஒருவேளை நான் கொண்டு வந்த அனைத்து புத்தகங்களும் விற்பனையாகி விட்டதோ என்று நினைத்தேன். அங்கு போய்பார்த்தால் புத்தகங்கள் அப்படியே இருக்கிறது. விற்பனை திருப்பதியாக இல்லை என்பது உண்மை.

      Delete
    4. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். கொடுத்த புத்தகத்தை திருப்பிக் கேட்டால் நட்பையே முறித்து விடுவது போல பேசுகிறார்கள்.

      பத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி. செந்தில்குமார் அவர்களுக்கு, நீங்கள் புத்தகம் விற்பனை செய்தவர்களிடம், உங்களது புத்தக பிரதிகளை எப்போது கொடுத்தீர்கள் என்று தெரியவில்லை. ஏனெனில், காலை டிபன் முடிந்தவுடன், புத்தக விற்பனை தொடங்கியவுடனேயே, நான் போய் கேட்டபோது., உங்கள் நூல் அங்கு வரவில்லை என்றார்கள்.

      Delete
    5. நமது பதிவர்கள் புத்தகத்தை கவனிக்கவில்லையோ என்ற எண்ணம் இப்போது தோன்றுகிறது. தென்றல் சசிகலா கூட உங்கள் புத்தகம் அங்கு இல்லையே என்றார்கள். அதன்பின் புத்தகத்தை காட்டியவுடன் வாங்கினார்கள்.
      புத்தகத்தை என்னால் முடிந்த அளவு விலை குறைத்துதான் கொடுத்தேன். பொதுவாக தமிழ் பதிப்பகங்கள் புத்தகம் எழுதியவருக்கு 200 புத்தகங்களை கொடுத்துவிடுவார்கள். அதை அவர்கள் பணத்துக்கும் கொடுக்கலாம். இலவசமாகவும் கொடுக்கலாம். ஆனால் தினத்தந்தியில் அப்படி எதுவும் இல்லை. அவர்கள் எனக்கு மூன்று புத்தகங்களை மட்டுமே இலவசமாக அனுப்பி வைத்தார்கள். ராயல்டி உண்டு என்றார்கள்.
      அதனால் ஒவ்வொரு புத்தகத்தையும் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். அப்படி வாங்கிய புத்தகத்திற்கு 20 % கழிவு நமது பதிவர்களுக்காக நான் கொடுத்தேன். விழாக் குழுவினருக்கு 10 % கழிவும் கொடுத்தது போக ஒரு புத்தகத்தின் மூலம் கிடைப்பது ரூ.105/- (புத்தகத்தின் விலை ரூ.150/-). ஒரு புத்தகத்திற்கு ரூ.45 குறைத்தும் கூட பெரிய வரவேற்பில்லை.

      திருச்சி தினத்தந்தி அலுவலகத்தில் கிடைக்கும். நன்றி நண்பரே!

      Delete
  2. வணக்கம்
    ஐயா
    புதுக்கோட்யில் நடைபெற்ற நிகழ்வின் புதுமையை அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரூபன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. Replies
    1. கவிஞர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. படிக்க நேரம் ஒதுக்காமையும், இணையத்தில் வாசிக்க நிறைய கிடைப்பதாலும் புத்தக வாசிப்பு பெருமளவு குறைந்துவிட்டது எனக்கு. வாங்கிப் படிக்காத புத்தகங்கள் நிறைய சேர்ந்துவிட்டபடியால் இப்போதைக்கு வாங்க வேண்டாமென்று வந்து விட்டேன் நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்ததும் வாங்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. தொடர்ந்து விழா நினைவுகளை மீட்டுத் தந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துதான், எனதும். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  5. ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போது புத்தகம் வாங்கி வருவது வழக்கம். இணையத்தில், குறிப்பாக வலைப்பூக்களில் உலவ ஆரம்பித்த பிறகு புத்தகம் படிப்பது வெகுவாக குறைந்திருக்கிறது. ஆனாலும், அவ்வப்போது படித்துக் கொண்டிருக்கிறேன்..

    பதிவர் சந்திப்பில் வாங்கிய புத்தகங்களில் - கீதா மதிவாணன் அவர்கள் எழுதிய புத்தகம் என்னிடம் உண்டு. படித்து விட்டேன் ஆனால் பதிவு எழுதவில்லை. எழுத வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன் அய்யா!

      Delete
  7. ஏற்கனவே எழுதிய என் பதிவு ஞாபகம் வந்து போனது...

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. என்ன பதிவு என்று குறிப்பிட்டால், நான் மீண்டும் படிக்க வசதியாக இருக்கும்.

      Delete
  8. புத்தகங்கள் வாசிப்பில் தங்களைப்போல நானிருக்கிறேன் என்றும் சொல்ல முடியும். எனினும் இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதில்லை என்பதாலும் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களையே இன்னும் வாசிக்காமல்இருப்பதாலும் பிறகு வாங்கலாம் என்றே நானும் வந்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் , புத்தகங்கள் படிப்பதில் உள்ள அதீத ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  9. பட்டியலிட நினைத்தேன். தாங்கள் பட்டியலிட்டு அறிமுகப்படுத்திவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களே, நீங்கள் உங்கள் நடையில் இன்னும் அதிகமான தகவல்களோடு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
  10. ஒரு காலத்தில் எதையும் விடாது வாசிக்கும் வொரேஷியஸ் ரீடராக இருந்திருக்கிறேன் ஆனால் இப்போது பார்வை குறை காரணமாகப் படிப்பது மிகவும் குறைந்து விட்டது எனக்கும் ஆறேழு புத்தகங்கள் அன்பளிப்பாக வந்தன.

    ReplyDelete
    Replies
    1. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி. என்னாலும் முன்பு போல தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. இருந்தாலும் ஆர்வம் காரணமாக இடைவெளி விட்டு படிப்பதில் முனைகின்றேன்.

      Delete
  11. எனக்கும் சில புத்தகங்கள் கிடைத்தன. விற்பனையில் பெரும்பாலும் கவிதை புத்தகங்களே அதிகம் இருந்தன. கவிதைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு மேன்மையான ஞானம் இல்லை என்பதால் அவைகளை வாங்கவில்லை. மற்றபடி புத்தகங்கள் அதிகம் வாங்கும் பழக்கம் உடையவன்தான் நானும்.
    அருமையான பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி. செந்தில்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. புத்தக கண்காட்சியில், நீங்கள் எழுதிய “நம்பமுடியாத உண்மைகள்’ என்ற நூல் விற்பனைக்கு வைக்கப்படவில்லை. எனவே திருச்சியில் தினத்தந்தி அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

      Delete
  12. தாங்கள் புதுக்கோட்டை பதிவர் விழாவில் வாங்கிய நூல்களைப் படித்தபின் அவைகளைப் பற்றி எழுத இருக்கின்ற தங்களின் திறனாய்வை பதிவில் படிக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஒவ்வொரு நூலையும் படித்து முடித்தவுடன், உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதத்தில், எழுதி விடவேண்டும் அய்யா!

      Delete
  13. உண்மைதான்! பதிவர்களின் வாசிப்புத் திறன் குறைந்து போய்விட்டது என்றே நானும் எண்ணுகிறேன்! நானும் ஒரு காலத்தில் நிறைய நூல்களை வாசிப்பேன்! இப்போது வாசிக்க முடிவது இல்லை! சென்ற புத்தகத்திருவிழாவில் வாங்கிய பல நூல்கள் வாசிக்க படாமல் என் நூலகத்தில் இருக்கின்றன! அதே சமயம் நல்ல நூல்களை வாங்கத் தயங்க மாட்டேன்! பதிவர்களின் நூல்கள் வாங்கிவிட எண்ணியுள்ளேன்! நன்றி!

    ReplyDelete
  14. அன்புள்ள அய்யா,

    புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பில் நானும் சில நூல்கள் வாங்கினேன். பல புத்தகங்களை வாங்கி விடுகிறேன்; படிக்காமலே இருக்கின்றன. இருந்தாலும் எப்பொழுதாவது அசியம் பயன்படும் என்ற நம்பிக்கை உண்டு.

    த.ம.8

    ReplyDelete
  15. புதுக்கோட்டைப் பதிவர் விழாவில் முடிந்தபின் மாலை 5.30 அளவில் புதுக்கோட்டைப் பதிவ நண்பர்கள் கஸ்தூரி ரெங்கன், மைதிலி, மாலதி, மு.கீதா போன்றோரிடம் பேசிக்கொண்டிருந்தேன் சிறிது நேரம். மேலும் வெளியூர்ப் பதிவர்களுடன் பேச ஆசைதான். ஆனால், பெரும்பாலோர், மணியடித்ததும் பள்ளியிலிருந்து சிதறி ஓடும் சிறுவர்களைப்போல் விழா நிறைவு என்றதும் காணாமற்போனார்கள்! வீடு திரும்புவதில் என்ன அவசரமோ?
    அப்போது, புத்தகம் விற்கும் இடத்திற்குச் சென்று இன்னொரு காப்பி பதிவர் கையேடு வாங்க முயன்றேன். கடையை மூடிவிட்டதாகச்சொன்னார்கள்! திறந்திருந்த ஒரு கடையில்(!), யாழி எழுதிய `மகாசிவராத்திரியும் சில தேநீர் கோப்பைகளும்` என்கிற பதிவர் கவிதை நூல் வாங்கினேன். மெல்லப்படித்து வருகிறேன். யாழிக்குப் பிறகு எழுதுவேன்.

    ReplyDelete