Showing posts with label இடஒதுக்கீடு. Show all posts
Showing posts with label இடஒதுக்கீடு. Show all posts

Saturday, 29 August 2015

ஹர்திக் படேல் போராட்டம் – சில ஐயப்பாடுகள்



இந்த ஜாதியில் பிறந்தவன் இந்த தொழிலைத்தான் பார்க்க வேண்டும் என்று, பிறப்பால் உயர்வு தாழ்வு என்ற வருணாசிரம தர்மத்தின்,  இடஒதுக்கீட்டை கற்பித்தவர்கள் பிறந்த நாடு நமது இந்திய நாடு. தலைமுறை தலைமுறையாக இதனை ( ஜாதீய இடஒதுக்கீட்டை)  செயல்படுத்த காரணமானவர்களே, இன்று எங்களை பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும் அல்லது இடஒதுக்கீடே கூடாது என்று கலவரம் செய்வது காலம் செய்த கோலமாக இருக்கிறது.

படேல் சமூகம்

இன்று இந்திய ஊடகங்கள் அனைத்திலும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம், ஹர்திக் படேல் (HARDIK PATEL) என்பவர் தலைமையில்,  குஜராத்தில் நடக்கும் படேல் (PATEL) எனப்படும் பட்டிடார் (PATIDAR ) சமூகத்தின் போராட்டம்தான். பேஸ்புக் (FACEBOOK) போன்ற சமூக வலைத்தளங்கள் இந்த போராட்டத்தை ஒருங்கிணைக்க மற்றும் வழிநடத்த பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

படேல் எனப்படும் இவர்கள் தலைமுறை தலைமுறையாக நிலச் சுவான்தார்கள். பெரும்பாலான படேல்கள் சிறு அல்லது பெரும் தொழிலதிபர்கள். வருணாசிரம தர்மத்தின் அடிப்படையிலும் தாங்கள் உயர்ந்த குலத்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள். இன்றைக்கு நாடு முழுக்க இருக்கும் வைர வியாபாரம், துணி ஆலைகள், இரும்பு தொழிற்சாலைகள், பெயிண்ட் கம்பெனிகள், கிரனைட் மற்றும் கட்டுமானத் தொழிற்சாலைகள்,  மர அறுவை மில்கள், இன்னும் பிற தொழில்கள் என்று மிகப் பெரும் தொழில்களையெல்லாம் கையில் வைத்து இருப்பவர்கள். மேலும் காலத்திற்கு ஏற்ப சுயநிதிக் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் இவர்கள் கையில்தான்.

தி இந்து – தமிழ் தினசரியில் வந்த செய்தி இது.

இந்தப் போராட்டங்கள் குறித்து பெயர் கூற விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, “மாநிலத்தின் தலைமைக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெறுகிறது, காரணம் மாநிலத் தலைமை படேல் சமூகத்தினரின் ஆதரவை உத்தரவாதமாக எடுத்துக் கொண்டுவிட்டனர், இதே சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் சுயநிதி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் பிற வணிக நலன்களை பிரதானமாகக் கொண்டுள்ளனர்” என்றார்.

"நான் ஹர்திக்கை சந்தித்தது இல்லை, அதனால் அவரை எனக்கு தெரியாது. ஆனால் நான் சூரத்திலிருந்து இங்கு அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே வந்துள்ளேன். ஏனெனில் அவர் நல்லதுக்காக போராடுகிறார்" என்று சூரத்தில் டெக்ஸ்டைல் வர்த்தகம் செய்யும் மனோஜ் படேல் என்பவர் கூறினார்.+

(நன்றி : தி இந்து (தமிழ்) (27, ஆகஸ்ட், 2015)    

மத்தியிலும் குறிப்பாக குஜராத்திலும் ( இன்னும் சில மாநிலங்களிலும்)  ஆண்ட அரசியல் கட்சிகள் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இவர்களுக்கு கொடுத்த சலுகைகள் ஏராளம். ஆகக் கூடி இந்திய பொருளாதாரமே இவர்கள் கையில்தான். மற்ற ஒடுக்கப்பட்டவர்களோடு ஒப்பிடுகையில், பொருளாதாரம் மற்றும் அரசியலில் இவர்கள் மேல்தட்டில் உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.

சுதந்திர இந்தியாவில்:

பலபேருக்கு தெரியாத பொதுவான விஷயங்கள் சிலவற்றை கீழே சொல்லியுள்ளேன்.  இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் , இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக வேண்டி பல தொழில் அதிபர்களுக்கும், புதிய தொழில் அதிபர்களுக்கும் (இவர்களில் பலர் முன்னவர்களின் வாரிசுகளாக அல்லது பங்குதாரர்களாக இருப்பார்கள் ) தொழிற்சாலைகள் தொடங்கவும் குறைந்த விலையில் அல்லது இலவசமாகவே பல ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன. இப்பொழுதும் ஆட்சியாளர்கள்  நினைத்தால் இதுபோன்று செய்யலாம். பல புறம்போக்கு நிலங்கள் இல்லாமல் போனதற்கு இதுவே காரணம்.  (இன்றைக்கு நாட்டில் இருக்கும் பெரிய பெரிய தொழிற்சாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களில் அரசாங்கம் கொடுத்த இடம் எவ்வளவு என்று ஆதியந்தமாக விசாரித்தால் தெரிந்து கொள்ளலாம்)

அதேபோல வங்கிக் கடன்கள். பெரும்பாலான தொழில் அதிபர்களுக்கு அவர்கள் நடத்தும் தொழிற்சாலைகளுக்கு வங்கிகளில் ஓவர்டிராப்ட் எனப்படும் நிரந்தரக் கடனோடு பல்வேறு சலுகைகள் ( அவ்வப்போது வட்டி தள்ளுபடி மற்றும் வாராக் கடன் என்ற பெயரில் முழுக் கடனுமே தள்ளுபடி) உண்டு..

விவசாயிகள் என்ற பெயரில் பல ஏக்கர் நிலங்களுக்கு விவசாயக் கடன், இலவச மின்சாரம் உண்டு. மேலும் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் பல பணக்கார விவசாயிகள்தான் பெரும்  பலன் அடைந்தனர். (ஏழை விவசாயிகள் தாங்கள் வாங்கிய நகைக்கடனில் (அதிலும் விவசாயத்திற்கு என்று வாங்கியிருக்க வேண்டும்) மட்டும் தள்ளுபடி சலுகை பெற்றனர்.

இப்படியாக சுதந்திர இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் தொழில் வளர்ச்சி என்ற பெயரில், பொருளாதாரச் சலுகைகளை சில குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.

ஹர்திக் படேலின் கோஷம்:

இப்படியான இவர்கள், இடஒதுக்கீடு இல்லாததால் எங்கள் சமூகம் பின்தங்கி விட்டது என்று போராடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி போராடும் இவர்களே ஒருசமயம் (1980 இல்) SC, ST மற்றும் BC சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று கலவரம் செய்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இப்போது  இடஒதுக்கீட்டில் முற்பட்டோருக்கான 50.5% சதவீதத்தில் இருக்கும் இவர்கள் 49.5% உள்ள பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை தங்கள் சமூகத்திற்கும் கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள்., ”இடஒதுக்கீடு என்பதையே ஒழித்துக் கட்டுங்கள்; அல்லது அனைத்து சமூகத்துக்கும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்” என்ற ஹர்திக் படேலின் கோஷம்  நாட்டில் பல ஐயப்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

Friday, 7 August 2015

தலித் கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் கருத்து



இப்போது நாடெங்கும் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களையும்  (தாழ்த்தப்பட்ட இந்துக்களைப் போலவே) பட்டியல் இனத்தில் (SCHEDULED CASTE) சேர்க்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இந்திய உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது. கீழே சொல்லப்பட்ட செருப்பு தைக்கும் சூசை வழக்கு  பலருக்கு தெரியாது. சில வருடங்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட அந்த வழக்கின் தீர்ப்பைப் பற்றி அப்போது தினகரன் ( 02, டிசம்பர், 1995 ) நாளிதழில் வந்த செய்தி இது. (அப்படியே டைப் செய்துள்ளேன்)

செருப்பு தைக்கும் சூசை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை சாதியில் இணைக்கலாமா? கூடாதா என்னும் பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வைக்கப்பட்டது 1982-ம் வருடத்தில்! இந்த வழக்கு நமது மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்தது என்பதால் தமிழர்களாகிய நாம் இதனைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

1982-ம் வருடம் மே மாதம் தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தார் சென்னை நகரத்தின் தெருவோரங்களில் அமர்ந்து செருப்பு தைக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தொழில் பற்றிய சர்வே ஒன்றை மேற்கொண்டது. அப்படி சர்வே செய்யப்பட்டபோது அதில் பதிவானவர்கள்  பலருள் சூசை என்பவரும் ஒருவர். இவர் பூர்வீகத்தில் இந்து மதத்தை சார்ந்தவர். ஆனால் பின்னர் கிறிஸ்தவராக மதம் மாறியவர்.

1982 ஜூலை மாதம் இவர்களுக்கெல்லாம் ‘பங்க்எனப்படும் பெட்டிக்கடைகளை இலவசமாக வழங்கினார்கள். இந்திய அரசின் பணத்தில் இந்த பெட்டி கடைகள் செய்யப்பட்டு மாநில அரசால் வழங்கப்பட்டது. சூசை தவிர பிற செருப்பு தைப்போர் அனைவருக்கும் கடைகள் வழங்கப்பட்டன. சூசைக்கு மட்டும் இல்லை. ஏன்? சூசை கிறிஸ்தவர் என்பதால் அட்டவணை சாதியினர் நல்வாழ்வுக்காக அமுல் நடத்தப்படும் திட்டத்தின் கீழ் அட்டவணை சாதி அல்லாத சூசைக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்பது அரசின் நிலை.

இதுகுறித்து சூசை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீடித்துக்கொண்டே போய் 1985-ம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதியன்று தீர்ப்பு கூறப்பட்டது. சூசையின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதற்கு காரணமாக உச்சநீதிமன்றம் கூறிய காரணம் என்ன?

சாதி அமைப்பு என்பது இந்து சமய அமைப்பில் ஓர் அம்சம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. சாதி அமைப்பு என்பது இந்து சமயத்துக்கு மட்டுமே உரிய ஒரு வினோதமான ஒரு சமூக விசித்திரம் “ ( …. IT CANNOT BE DISPUTED THAT THE CASTE SYSTEM IS A FEATURE OF THE HINDU SOCIAL STRUCTURE. IT IS A SOCIAL PHNOMENON PECULIAR TO HINDU SOCIETY “ ) 

இப்படி சொல்லியதோடு நில்லாமல் இன்னொரு கருத்தையும் கூறியது. அதாவது, “ இந்து மதத்தில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒருவர், இந்து மதத்திலுள்ள பிறரால் இழிவாக நடத்தப்படுவது போல அவரே கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறிய பிறகும் அவரை அவரது புதிய சமயத்தவர்களான கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்களா? “ இது உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து - கேட்ட கேள்வி. இதற்கு இன்னமும் சரியான பதில் உச்சநீதிமன்றம் வாயிலாக இன்னமும் கூறப்படவில்லை. இது ஒரு பெரிய தடைக்கல்லாக உள்ளது என்று சில சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நன்றி: தினகரன் (திருச்சி பதிப்பு) தேதி- 02, டிசம்பர், 1995.

இன்னொரு கோணம்:

மதத்தின் அடிப்படையில் அல்லாது இன்றைய நிலை என்ற கோணத்தில் பார்க்கும்போது, கிறிஸ்தவ மதத்தினை தழுவினாலும் அவர்கள் நிலைமை அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள்.

இன்னும் படித்த பலர் இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பிற்காக வேண்டி கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிக் கொள்கிறார்கள். பெயர் மாற்றம செய்து கொள்ளும்போது கூட கிறிஸ்தவத்திற்கும் இந்து மதத்திற்கும் பொதுவான ஒரு பெயரை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் கிறிஸ்தவர்களாகவே இருந்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இதனை எதிர்த்த கிறிஸ்தவ மெஷினரிகள் இதனை இப்போது கண்டு கொள்வதில்லை.  

நாட்டின் பல இடங்களிலும் முக்கிய நகரங்களிலும் கிறிஸ்தவ மெஷினரிகள் மற்றும் பணக்கார கிறிஸ்தவர்கள் நடத்தும் பல கல்வி நிறுவனங்களில் தொழிற்சாலைகளில்  தலித் கிறிஸ்தவர்களுக்கு சரியான வாய்ப்புகள் தரப் படுவதில்லை. இதற்காகவும் அவர்கள் போராடி வருகிறார்கள்.

கல்லறையில் குறுக்குச்சுவர்:

Till death do us part: Dalits are buried on the other side of the wall in this cemetery (Courtesy: http://www.bbc.com/news/world-south-asia-11229170 )

திருச்சியில் ஒரு கிறிஸ்தவ கல்லறையில் தலித் கிறிஸ்தவர்களையும் மற்ற கிறிஸ்தவர்களையும் ஒரு குறுக்குச்சுவர் வைத்து பிரித்து வைத்து இருக்கிறார்கள். அதை உடைக்கவும் போராடுகிறார்கள். ஆனால் இவைகள் எதனையும் யாரும் கண்டு கொள்வது கிடையாது. இந்த குறுக்குச் சுவரைக் கட்டிக் காக்கும் கல்லறைக் கமிட்டியின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலர் அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்.

இதற்கு யார் காரணம்? இந்த நிலைமையை நீக்க வேண்டியது பல்வேறு தொண்டு நிறுவனங்களையும், பல கல்வி நிறுவனங்களையும் வைத்துள்ள கிறிஸ்தவ சமூகம்தான் இதனை நீக்க பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அந்த நிறுவனங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை சரியாக கொடுக்க வேண்டும்.                                                              

எனவே பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீட்டிற்காக  ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தால்தான் தலித் கிறிஸ்தவர்களின் கோரிக்கை நிறைவேறும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பார்களா என்று தெரியவில்லை. அதிலும் இப்போது நடக்கும் பி.ஜே.பி ஆட்சியில் எந்த அளவிற்கு இது சாத்தியம் என்று சொல்ல முடியாது. மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே, எல்லா மட்டத்திலும் வெளியாள் முறை (OUTSOURCING) மற்றும் ஒப்பந்தமுறை (CONTRACT) நுழைந்து விட்டபடியினால், இடஒதுக்கீடு என்பது பெயரளவில்தான் இருக்கிறது.

கட்டுரை எழுத துணை நின்றவை:
1. தினகரன் (திருச்சி பதிப்பு) தேதி- 02, டிசம்பர், 1995
3. Google search : writ of petition No. 9596 of 1983
     SOOSAI THE COBBLER AGAINST THE SUPREME COURT OF INDIA