இந்த ஜாதியில் பிறந்தவன் இந்த தொழிலைத்தான் பார்க்க வேண்டும் என்று,
பிறப்பால் உயர்வு தாழ்வு என்ற வருணாசிரம தர்மத்தின், இடஒதுக்கீட்டை கற்பித்தவர்கள் பிறந்த நாடு நமது
இந்திய நாடு. தலைமுறை தலைமுறையாக இதனை ( ஜாதீய இடஒதுக்கீட்டை) செயல்படுத்த காரணமானவர்களே, இன்று எங்களை பிற்பட்டோர்
இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும் அல்லது இடஒதுக்கீடே கூடாது என்று கலவரம் செய்வது
காலம் செய்த கோலமாக இருக்கிறது.
படேல் சமூகம்
இன்று இந்திய ஊடகங்கள் அனைத்திலும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம்,
ஹர்திக் படேல் (HARDIK PATEL) என்பவர் தலைமையில்,
குஜராத்தில் நடக்கும் படேல் (PATEL) எனப்படும் பட்டிடார் (PATIDAR ) சமூகத்தின்
போராட்டம்தான். பேஸ்புக் (FACEBOOK) போன்ற சமூக வலைத்தளங்கள் இந்த போராட்டத்தை ஒருங்கிணைக்க
மற்றும் வழிநடத்த பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
படேல் எனப்படும் இவர்கள் தலைமுறை தலைமுறையாக நிலச் சுவான்தார்கள்.
பெரும்பாலான படேல்கள் சிறு அல்லது பெரும் தொழிலதிபர்கள். வருணாசிரம தர்மத்தின் அடிப்படையிலும்
தாங்கள் உயர்ந்த குலத்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள். இன்றைக்கு நாடு முழுக்க இருக்கும்
வைர வியாபாரம், துணி ஆலைகள், இரும்பு தொழிற்சாலைகள், பெயிண்ட் கம்பெனிகள், கிரனைட்
மற்றும் கட்டுமானத் தொழிற்சாலைகள், மர அறுவை
மில்கள், இன்னும் பிற தொழில்கள் என்று மிகப் பெரும் தொழில்களையெல்லாம் கையில் வைத்து
இருப்பவர்கள். மேலும் காலத்திற்கு ஏற்ப சுயநிதிக் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும்
இவர்கள் கையில்தான்.
தி இந்து – தமிழ் தினசரியில் வந்த செய்தி இது.
இந்தப் போராட்டங்கள்
குறித்து பெயர் கூற விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, “மாநிலத்தின் தலைமைக்கு
எதிராக இந்தப் போராட்டம் நடைபெறுகிறது, காரணம் மாநிலத் தலைமை படேல் சமூகத்தினரின் ஆதரவை
உத்தரவாதமாக எடுத்துக் கொண்டுவிட்டனர், இதே சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் சுயநிதி
கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் பிற வணிக நலன்களை பிரதானமாகக் கொண்டுள்ளனர்”
என்றார்.
"நான் ஹர்திக்கை
சந்தித்தது இல்லை, அதனால் அவரை எனக்கு தெரியாது. ஆனால் நான் சூரத்திலிருந்து இங்கு
அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே வந்துள்ளேன். ஏனெனில் அவர் நல்லதுக்காக
போராடுகிறார்" என்று சூரத்தில் டெக்ஸ்டைல் வர்த்தகம் செய்யும் மனோஜ் படேல் என்பவர்
கூறினார்.+
(நன்றி : தி இந்து (தமிழ்)
(27, ஆகஸ்ட், 2015)
மத்தியிலும் குறிப்பாக குஜராத்திலும் ( இன்னும் சில மாநிலங்களிலும்) ஆண்ட அரசியல் கட்சிகள் தொழில் வளர்ச்சி என்ற பெயரில்
இவர்களுக்கு கொடுத்த சலுகைகள் ஏராளம். ஆகக் கூடி இந்திய பொருளாதாரமே இவர்கள் கையில்தான்.
மற்ற ஒடுக்கப்பட்டவர்களோடு ஒப்பிடுகையில், பொருளாதாரம் மற்றும் அரசியலில் இவர்கள் மேல்தட்டில்
உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.
சுதந்திர இந்தியாவில்:
பலபேருக்கு தெரியாத பொதுவான விஷயங்கள் சிலவற்றை கீழே சொல்லியுள்ளேன். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் , இந்திய பொருளாதார
வளர்ச்சிக்காக வேண்டி பல தொழில் அதிபர்களுக்கும், புதிய தொழில் அதிபர்களுக்கும் (இவர்களில்
பலர் முன்னவர்களின் வாரிசுகளாக அல்லது பங்குதாரர்களாக இருப்பார்கள் ) தொழிற்சாலைகள்
தொடங்கவும் குறைந்த விலையில் அல்லது இலவசமாகவே பல ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன. இப்பொழுதும்
ஆட்சியாளர்கள் நினைத்தால் இதுபோன்று செய்யலாம்.
பல புறம்போக்கு நிலங்கள் இல்லாமல் போனதற்கு இதுவே காரணம். (இன்றைக்கு நாட்டில் இருக்கும் பெரிய பெரிய தொழிற்சாலைகள்,
தனியார் கல்வி நிறுவனங்களில் அரசாங்கம் கொடுத்த இடம் எவ்வளவு என்று ஆதியந்தமாக விசாரித்தால்
தெரிந்து கொள்ளலாம்)
அதேபோல வங்கிக் கடன்கள். பெரும்பாலான தொழில் அதிபர்களுக்கு அவர்கள்
நடத்தும் தொழிற்சாலைகளுக்கு வங்கிகளில் ஓவர்டிராப்ட் எனப்படும் நிரந்தரக் கடனோடு பல்வேறு
சலுகைகள் ( அவ்வப்போது வட்டி தள்ளுபடி மற்றும் வாராக் கடன் என்ற பெயரில் முழுக் கடனுமே
தள்ளுபடி) உண்டு..
விவசாயிகள் என்ற பெயரில் பல ஏக்கர் நிலங்களுக்கு விவசாயக் கடன்,
இலவச மின்சாரம் உண்டு. மேலும் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் பல பணக்கார விவசாயிகள்தான்
பெரும் பலன் அடைந்தனர். (ஏழை விவசாயிகள் தாங்கள்
வாங்கிய நகைக்கடனில் (அதிலும் விவசாயத்திற்கு என்று வாங்கியிருக்க வேண்டும்) மட்டும் தள்ளுபடி சலுகை பெற்றனர்.
இப்படியாக சுதந்திர இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் தொழில் வளர்ச்சி
என்ற பெயரில், பொருளாதாரச் சலுகைகளை சில குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே அனுபவித்து
வருகின்றனர்.
ஹர்திக் படேலின் கோஷம்:
இப்படியான இவர்கள், இடஒதுக்கீடு இல்லாததால் எங்கள் சமூகம் பின்தங்கி
விட்டது என்று போராடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி போராடும் இவர்களே ஒருசமயம்
(1980 இல்) SC, ST மற்றும் BC சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று கலவரம் செய்தவர்கள்
என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இப்போது
இடஒதுக்கீட்டில் முற்பட்டோருக்கான 50.5% சதவீதத்தில் இருக்கும் இவர்கள்
49.5% உள்ள பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை தங்கள் சமூகத்திற்கும் கேட்டு போராட்டம்
நடத்துகிறார்கள்., ”இடஒதுக்கீடு என்பதையே ஒழித்துக் கட்டுங்கள்; அல்லது அனைத்து சமூகத்துக்கும்
இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்” என்ற ஹர்திக் படேலின் கோஷம் நாட்டில் பல ஐயப்பாடுகளை தோற்றுவித்துள்ளது.
