Tuesday 29 March 2016

ஜீவியின் - ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை



நமது வலைப்பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்கள் சொல்வதைப் போன்று, எனக்கு வாசிப்பது என்பது சுவாசிப்பதைப் போன்று. எனவே புத்தகங்கள், அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் என்றால் (இன்ன தலைப்பு என்று இல்லை) கொள்ளைப் பிரியம். எனவே வீடு நிறைய புத்தகங்கள். அண்மையில் திருச்சியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்கு (மார்ச் 2016) செல்ல ஆயத்தமாக இருந்த போது, நமது மூத்த வலைப்பதிவர் திருச்சி V.G.K.அய்யாவிடமிருந்து ஒரு மின்னஞ்சல் செய்தி. அதில் அவர் குறிப்பிட்டபடி  87 ஆம் எண் ஸ்டாலில் (சந்தியா பதிப்பகம்). ஜீவி அவர்களது ‘ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை’ என்ற நூலை வாங்கினேன்.

ஜீவி அவர்கள்: 
                                                                                                                                                               
எனக்கு எழுத்தாளர் ஜீவி அவர்களைப் பற்றி’ அய்யா திருச்சி V.G.K. அவர்களது வலைத்தளம் மூலம்தான் தெரியும். அதிலும் 2014 ஆம் ஆண்டு முழுக்க V.G.K. தனது வலைத்தளத்தில் நடத்திய ’சிறுகதை விமர்சனப் போட்டி”க்கான நடுவரே ஜீவி என்று தெரிந்து கொண்டபோதுதான் (கடைசிவரை நடுவர் யார் என்பதில் சஸ்பென்ஸ்) இன்னும் அவரை அதிகமாகத் தெரிந்து கொண்டேன். அதிலும் அவர் ஒரு வலைப்பதிவர் (பூ வனம் http://jeeveesblog.blogspot.in) என்பதில் அதிக மகிழ்ச்சி.

இந்த நூலை வாங்கிய உடனேயே மேலோட்டமாகப் பார்த்ததில், இது ஒரு வித்தியாசமான நூல்; வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய ‘நோட்ஸ்’ கிடையாது; ஒரு எழுத்தாளர் தான் அனுபவித்துப் படித்த பிற எழுத்தாளர்களது எழுத்து ரசம் என்பதனைப் புரிந்து கொண்டேன் பி,ஏ, எம்.ஏ என்று நான் படித்தது எல்லாம் தமிழ் இலக்கியம்தான். பி.ஏ படித்தபோது எங்களுக்கு ‘தமிழ் இலக்கிய வரலாறு” என்று ஒரு பாடம். அப்போது ‘தமிழில் நாவல் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் பல தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் அவர்களுள் பலர் எழுதிய நூல்களை நூலகங்களில் எடுத்து ரசித்துப் படிக்கும் வாய்ப்பும் அமைந்தது. எனவே அந்த வகையில் நான் படித்த பழைய எழுத்தாளர்களின் பெயர்கள் நமது ஜீவியின் பெயர் பட்டியலில் இருக்கக் கண்டு இன்னும் மகிழ்ச்சி அடைந்தேன்: ஜீவியின் இந்த நூலைக் கையிலெடுத்து படித்து முடிக்கும் வரை , அந்த எழுத்தாளர்களின் நினைப்பும், அவர்களது எழுத்து சுவாரஸ்யமும் கூடவே வந்தன.
             (படம் - மேலே: எழுத்தாளர் ஜீவி  ( படம் உதவி - நன்றி ;திரு V.G.K )

எழுத்தாளர்களின் பக்கம்:

’கங்கையை செம்புக்குள் அடக்க முடியாதுதான்’ என்று சொல்லும் ஜீவி அவர்கள், இந்தநூலில் தான் அறிந்த 37 எழுத்தாளர்களைப் பற்றியும் குறிப்பிடும்போதும், தான் அவர்களைப் பற்றி அறிந்த ஒரு எடையோடு அவர்கள் பெயர்களுக்கு முன்னால் ஒரு அடைமொழியோடு சொல்கிறார். உதாரணத்திற்கு,

இயற்கையை நேசித்த ந. பிச்சமூர்த்தி,
சிறுகதைச் சிற்பி கு.ப.ராஜகோபாலன்  
மணிக்கொடி பி.எஸ்.ராமையா  
புதுப்பாதை வகுத்த புதுமைப்பித்தன்  
மனித நேயர் தி. ஜானகிராமன்
சிறுகதைச் செம்மல் கு. அழகிரிசாமி  
தனியாகத் தெரியும் அசோகமித்திரன்  
புளியமரத்தின் கதை சொன்ன சுந்தர ராமசாமி  
தீபம்  நா. பார்த்தசாரதி     
ஒரு மனிதனின் கதை சிவசங்கரி  
நெஞ்சில் நிறைந்த பாலகுமாரன்  
எழுத்துப் பயணி  எஸ். ராமகிருஷ்ணன்

என்று தலைப்பைப் பார்த்தவுடனேயே அந்த எழுத்தாளர்கள் நமது மனக்கண் முன் வந்து போவார்கள். ( மற்றவர்களைப் பற்றி அறிய, இந் நூல் பக்கம் 9 – 10).

சுவையான செய்திகள்: 

ஒரு நூல் விமர்சனம் என்றால் அந்த நூலைப் படிக்காமல் எழுதுவது சிறப்பாக இருக்காது. அப்படி இருக்கும் போது எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம் என்றால்?

இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சூழலையும், வாழ்க்கை நிகழ்வுகள் சிலவற்றையும் சுவாரஸ்யமாக குறிப்பிட்டுச் செல்கிறார். உதாரணத்திற்கு எழுத்தாளர் லா.ச.ரா என்றால், எனக்கு அவருடைய அடர்த்தியான இரு புருவங்கள்தான் சட்டென நினைவுக்கு வரும். இந்த புருவத்தைப் பற்றி ஓரிடத்தில் ஜீவி அவர்கள் குறிப்பிடுகிறார்.  எனது கல்லூரிப் படிப்பின்போது அறியாத செய்திகள் இவை.
ந.பிச்சமூர்த்தியின் பக்கத்து வீட்டுக்காரர் கு.ப.ரா; பால்ய காலத்திலிருந்து நண்பர். 

// கு.ப.ரா.வின் இளைய சகோதரிதான் பிரபல எழுத்தாளர் கு.ப.சேது அம்மாள். ‘கலைமகள்’ பத்திரிகையில் நிறைய எழுதியவர் இவர். தமது இளம் வயதிலேயே கணவனைப் பறிகொடுத்த இவருக்கு மறுமணம் செய்து வைத்த புரட்சியாளர் கு.ப.ரா. கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத விஷயங்கள். // ( இந்நூல் பக்கம் 24 )

தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘மணிக்கொடி காலம்’ என்று சிறப்பித்து பேசும் காலகட்டமும் உண்டு. வத்தலகுண்டு ( B stands for Batlagundu)  சுப்ரமணிய ராமையாதான் பி.எஸ்.ராமையா. மேலும் நின்று போய்விடும் நிலைமையில் இருந்த மணிக்கொடியை தூக்கிப் பிடித்து எவ்வாறு ’மணிக்கொடி பி.எஸ்.ராமையா’ என்று ஆனார் என்பதனை விவரித்து சொல்லி இருக்கிறார். புதுமைப்பித்தனைப் பற்றி பேசும்போது அவரது மனைவி கமலா விருத்தாசலமும் மணிக்கொடி எழுத்தாளர் என்பதனை மறவாமல் குறிப்பிடுகிறார்.

சி.சு.செல்லப்பா தேச விடுதலை போராட்டத்தில் சிறைக்கு சென்றதையும், அவர் அங்கு கொடுக்கப்பட்ட ‘கைதி எண்’ பித்தளைப் பட்டயத்தை, ரொம்பநாளாய் நினைவாக வைத்து இருந்ததையும் அறிந்து கொள்ள முடிகிறது. (பக்கம்.43) 

எம்ஜிஆர் – சிவாஜி இணைந்து நடித்த ’கூண்டுக்கிளி’ படத்திற்கு , திரைக்கதை வசனம் எழுதியவர் ‘பாலும் பாவையும்’ விந்தன். குலேபகாவலியில் வரும் ‘ மயக்கும் மாலை பொழுதே நீ போ “ என்ற பாடலை எழுதியதும் விந்தன்தான்.(அன்றைய இலங்கை வானொலி அடிக்கடி ஒலிபரப்பிய எம்ஜிஆர் பட பாடல்களில் இதுவும் ஒன்று)

// கதவைத் திற. காற்று வரட்டும்’ என்று பிற்காலத்து பிரபலமடைந்த வார்த்தைத் தொடர், சுந்தர ராமசாமியின் ஒரு கவிதையின் ஆரம்ப வரிதான் // (இந் நூல்.- பக்கம் 135)

எழுத்து வாசனை:

அதேபோல ஒவ்வொரு எழுத்தாளரது எழுத்துக்களையும் ஒரு சிறந்த வாசகனாய் நின்று படம் பிடித்து இருக்கிறார் நூலாசிரியர் ஜீவி அவர்கள்.

// தமிழின் முதல் நவீன கவிதை என்று வெகுவாக அறியப்பட்ட பெட்டிக்கடை நாரணன் கவிதையின் விசேசம் என்னவென்றால், அந்தக் கவிதை ரொம்பவும் எளிய மொழியில் பேசப்படுவது. … … … … இப்படித்தான் வெகுவாக எல்லோருக்கும் தெரிந்தவிதத்தில் பிச்சமூர்த்தி இந்த பெட்டிக்கடை நாரணனை படைத்து தமிழ்ப் புதுக்கவிதை உலகின் பிதாமராகிறார். //  ( இந்நூல் – பக்கம் 13 )

ஆண் – பெண் உறவுகளைப் பற்றிய கதைகளில் இப்போது நிறையபேர் வெளிப்படையாக எழுதுகிறார்கள். ஆனால் அன்றைய எழுத்தாளர்கள் இப்படி எல்லாம் எழுத முடியாது. பத்திரிகை ஆசிரியரின் கத்தரிக்கோலுக்கு அதிக வேலை வைத்து விடும்; அல்லது குப்பைக் கூடைக்கு சென்று விடும். எனவே நுட்பமாக எழுதி, வாசகனின் கற்பனைச் சுகத்திற்கு தள்ளி விடுவார்கள்.
                                                                                                                                                               
அந்த வகையில் சிறிது வெளிச்சம் (கு.ப.ரா), மோகமுள், அம்மா வந்தாள் (தி.ஜானகிராமன்) நாவல்களைச் சொல்லலாம். ஜீவியின் பார்வை இங்கே.
                                                                                                                                                               
// வாழ்க்கையின் போக்கில் ஆண் பெண் உறவுகளுக்கிடையேயான நுட்பமான மன உணர்வுகளையும் அதன் சிடுக்குகளையும் கு.ப.ரா. தனது கதைகளில் மையப்படுத்திக் காட்டும் பொழுது ஆச்சரியமாய் இருக்கிறது. அந்த காரியத்தைக் கூட வெளிச்சம் போடாமல், வெகு நேர்த்தியாய் லேசாகக் காட்டி விட்டு நகர்வதுதான் அவர் எழுத்தின் அழகு. இப்படிச் சொல்லாமல் சொல்வது கு.ப.ராவிற்கு கைவந்த கலை.// ( இந்நூல் – பக்கம் 18 )

// ஆஹா! ஜானகிராமனின் எழுத்து நம்மைக் கட்டிப் போடும் லாகவம்தான் என்னே1 மோகமுள்ளை படிக்கத் துவங்கி விட்டால்  போதும். இந்தண்டை அந்தண்டை  நம் கவனம் சிதறுவதற்கு வழியேற்பட்டு விடாமல் வளைத்துப் போட்டு அந்தக் கதையோடு ஒன்றச் செய்து விடுவார் மனிதர்! // ( இந்நூல் – பக்கம் 78)

எழுத்தாளர் அகிலன் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர் எழுதிய பாவை விளக்கு, சித்திரப்பாவை அந்நாட்களில் சிறப்பாகப் பேசப்பட்டவை. அவர் எழுதிய ஒரு நூல் பற்றி ஜீவி அவர்கள் சொல்லும் உணர்ச்சி மயமான கருத்து இது.

// அகிலனின் புதுவெள்ளம் படித்திருக்கிறீர்களோ? கல்கியில் தொடராக வந்தது. நிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் வியர்வை சிந்தும்  தொழிலாளர்களின் அவதிகள் பற்றி, சுரங்கங்களில் திடீர் திடீரென அவர்கள் சந்திக்கும் ஆபத்துக்கள் பற்றிப் படித்தால் நெஞ்சம் பதறும். கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், மனிதாபிமானம் என்று வந்து விட்டால், வேற்றுமைகள் எப்படித் தூள் தூளாகும் என்பதை நிலக்கரி சுரங்கத்தில் நடக்கும் ஒரு விபத்தின் ஊடே இருட்டின் இடையில் ஒளிர்ந்த வெளிச்சமாய் புலப்படுத்துவார் அகிலன். //  (இந்நூல் – பக்கம் 98)

ஜீவியின் இந்த வரிகளைப் படித்தவுடன், சென்ற ஆண்டு (2015) பெரும் மழை வெள்ளத்தின் போது, செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பினால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் பட்ட கஷ்டங்களையும், எந்த வேறுபாடும் இன்றி, ஒருவருக்கொருவர் மனிதநேயத்துடன் உதவி செய்து கொண்டதையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

ஜெயகாந்தனைப் பற்றிய ஆசிரியரின் பார்வை இது.

// ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்?’, ‘பிரளயம்’, ‘விழுதுகள்’ ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?”, ‘கருணையினால் அல்ல’ என்று நீளும் குறுநாவல்களுக்கிடையே, ஒன்று நன்றாகத் தெளிவாகத் தெரிகிறது. ஜெயகாந்தனுக்கு அவரது குறுநாவல்கள்தாம் ஒரு கதையை அவர் எடுத்தாளுகின்ற பாங்குக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. //  (இந்நூல் – பக்கம் 150)

எழுத்தாளர் சுஜாதா பற்றிய இவரது கண்ணோட்டத்தையும் இங்கு குறிப்பிட்டு ஆக வேண்டும்.

// இவர் விகடனில் எழுதிய முதல்கதை ‘ஜன்னல் மலர்’. பின்னால் அதே விகடனில் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ வருவற்குள் நன்றாகவே தமிழ் எழுத்துலகில் சுஜாதா தன் ஸ்தானத்தை நிலை நிறுத்திக் கொண்டு விட்டார். பூப்போன்ற அந்தக் கவிதைத் தலைப்பு, கதையின் இடையிட்ட நாடோடிப் பாடல்கள், கிராமம் கிராமம் சார்ந்தமக்கள், நாடோடிப் பாடல்கள் பற்றி ஆராயும் நோக்குடன்வந்திருக்கும், வாலிபன் கல்யாணராமன், சென்னை வாலிபி சிநேகலதா. ஜமீன், அமானுஷ்யம், மர்மம் என்று கலந்து கட்டி சுஜாதா விளையாடி இருந்தார். அந்த நாடோடிப் பாடல்கள் மிக்ஸிங் அவருக்கு ஒரு இலக்கிய மேதைமையை அளிக்க, ஜெயராஞ் ஓவியம், ஆனந்த விகடன் பிரசுரம் என்று, சுஜாதா வெகுஜன வாசகர்கள் கவனிக்கப்படும் எழுத்தாளரானார். // (இந் நூல் - பக்கம் 155 ) 

கரிச்சான் குஞ்சு எழுதிய ‘பசித்த மானிடம்’ என்ற நாவல் குறித்தான ஆசிரியர் ஜீவியின் பார்வையும் அனுபவமும், எனக்கும் அதே போன்றுதான் உள்ளது. இவர் சேலம் மாவட்ட மைய நூலகத்திலிருந்து இந்த நூலை எடுத்து படித்து இருக்கிறார். நான் திருச்சி மாவட்ட மைய நூலகத்திலிருந்து எடுத்து படித்தேன். ஆனாலும் ஜீவி சாருக்கு கரிச்சான் குஞ்சு மீது இருக்கும் நினைவலைகள் போன்றவை எனக்கில்லை.

// எப்போதாவது கும்பகோணம் செல்கையில், டபீர்தெரு நுழைய நேரிடுகையில், கரிச்சான் குஞ்சு சாரின் நினைவு மேலோங்கி நெஞ்சைக் கனக்கச் செய்யும் //   (இந்நூல் – பக்கம் 67)

நூலின் வெற்றி:

எழுத்தாளர் ஜீவி இந்த நூலில் சொன்ன அவர் லயித்த எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. படிக்கப் படிக்க எனக்கு, மீண்டும் , அந்த நாளில் எனது கல்லூரி படிப்பின் போது படித்த அந்த நூல்களை மறு வாசிப்பு செய்ய வேண்டும் போல் இருக்கிறது. இந்நூலினைப் படிக்கும் என்னைப் போன்ற மற்றவர்களுக்கும் , புதியவர்களுக்கும் அந்த எழுத்தாளர்களது படைப்புகளை படிக்க ஆர்வத்தை இந்த நூல் தூண்டும் என்பதே இந்நூலின் வெற்றி.

பொதுவாக நூல் விமர்சனம் என்றால், அந்த நூலிலிருந்து சிலவற்றை மேற்கோள்களாக காட்டுவது வழக்கம். இது பழைய நடைமுறையே என்றாலும் அந்த எழுத்தாளரை கௌரவிப்பதாக இருப்பதால், நானும் இங்கு எழுத்தாளர் ஜீவியின் நூலிலிருந்து சில மேற்கோள்களை பார்வைக்கு எடுத்து வைத்துள்ளேன். ஆசிரியர் ஜீவி அவர்களுக்கு நன்றி.

சந்தியா பதிப்பகம் குறிப்புரை:

நூலின் பெயர்: ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை
நூலாசிரியர்: ஜீவி
பக்கங்கள்: 264 விலை; ரூ 225/=
நூல் வெளியீடு: சந்தியா பதிப்பகம், புதிய எண்.77, 53 ஆவது தெரு, 9 ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600 08 தொலைபேசி 044 24896979

// ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும் எழுதி வருகிறார். தமிழில் வெளிவரும்  உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசித்து வருகிறார் ஜீவி என்கிற ஜீ. வெங்கட்ராமன். சென்னையில் வசித்து வரும் இவருக்கு வயது 73.தனது வாசிப்பனுபவம் மூலமாக கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல்.உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி ஒரு எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்து கொள்கிறார் //                             (நன்றி: http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=369

தொடர்புடைய பிற பதிவுகள்:

கரிச்சான் குஞ்சு - ”பசித்த மானிடம்http://tthamizhelango.blogspot.com/2012/03/blog-post_08.html
மறக்கமுடியாத தமிழ் எழுத்துலகம் http://jeeveesblog.blogspot.in/2016/02/blog-post_49.html
.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரைநூல் அறிமுகம் http://unjal.blogspot.com/2016/03/blog-post.html
ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 1 http://gopu1949.blogspot.in/2016/03/1.html

                                                           

Saturday 26 March 2016

சம்சாரிக்கனும் – எனக்கு வந்த ராங்க் நம்பர்



கடந்த ஒரு வாரமாக எந்த வேலையும் நடக்கவில்லை. வலைப்பக்கம் கூட சரியாக படிக்கவும் எழுதவும் முடியவில்லை. ஒரே டென்ஷன். சென்ற வெள்ளிக்கிழமை (18.03.16) எனது மனைவி வழக்கம்போல பஸ்சில் அலுவலகம் புறப்பட்டுச் சென்றார்; சென்ற சில மணி நேரம் கழித்து எனது மனைவியின் அலுவலக போனிலிருந்து மனைவி, தான் கைப்பையில் வைத்து இருந்த பர்ஸ் மற்றும் செல்போனை காணவில்லை என்றும் வீட்டில் மறதியாக விட்டு போய் விட்டேனா என்று தெரியவில்லை, தேடிப் பார்க்கவும் என்றும் பேசினார். நான் வீட்டில் தேடியபோது எதுவும் கிடைக்கவில்லை. எனவே எனது செல்போனிலிருந்து மனைவியின் செல்போன் எண்ணுக்கு டயல் செய்து பார்த்தேன். ரிங்டோன் எதுவும் செல்லவில்லை. அப்போதே மனைவியின் செல்போன் திருட்டு போய்விட்டதை உறுதி செய்து கொண்டேன். மாலை அலுவலத்திலிருந்து திரும்பிய மனைவியும் இதனை உறுதி செய்தார். 

ஹலோ! ராங்க் நம்பர்:

அடுத்தநாள் சனிக்கிழமை மாலை xxxx என்ற எண்ணிலிருந்து எனது செல்போனுக்கு கால் வந்தது. மனைவியிடம் இதே போன் முன்பு நேற்று இரண்டுமுறை வந்ததையும் ஒரு பெண் இந்தியில் ஏதோ கேட்டார்கள்; நான் ராங்க் நம்பர் என்று சொன்னதையும் அது ஆண்ட்ராய்டில் Mundagod, Karnataka என்று இருப்பதாகவும் சொன்னேன். இப்போது மறுபடியும் போன் வந்த போது மனைவி என்னிடம் போனில் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்து விட்டு வைத்துவிடச் சொன்னார்கள். நான் எடுத்து பேசிய போது மறுமுனையில் இருந்து “இது எவ்விட” என்று கேட்டார்கள். நான் “ராங்க் கால், This is Trichy” என்று சொல்லிவிட்டு வைத்து விட்டேன்.

மறுநாள் ஞாயிறு டிராவல்ஸ் கம்பெனியில் பணிபுரியும் ஒருவர், மெயின்கார்டுகேட் பகுதியில் ஒரு பர்ஸ் கிடந்ததாகவும், தான் எடுத்து பார்த்ததில் ஒரு அலுவலக அடையாள அட்டையும் மூக்கு கண்ணாடியும் இருப்பதாகவும் தெரிவித்தார். அதில் இருந்த செல்போனும் இருநூறு ரூபாய் பணமும் இல்லை போலிருக்கிறது.  

அடுத்தநாள் திங்கள் காலை ஆட்டோவில் சென்று, நன்றி தெரிவித்து விட்டு வாங்கி வந்தோம். மனைவியின் ஆபிஸ் வாசலில் ஆட்டோவிலிருந்து இறங்கும்போது.  xxxx என்ற எண்ணிலிருந்து (Mundagod, Karnataka) மீண்டும் போன். ‘கொஞ்சம் சம்சாரிக்கனும்’ என்றார்கள். ‘HELLO THIS IS TRICHY. WRONG NUMBER” என்று சொல்லி வைத்து விட்டேன். அப்புறம் நான் பஸ்ஸில் சத்திரம் பஸ் நிலையம் வரும் வரை, தொடர்ச்சியாக அந்த எண்ணிலிருந்து போன் அழைப்புகள். நான் எடுக்கவில்லை. உடனே plscalme என்று ஒரு SMS வந்தது. Wrong number. This is Trichy in Taml nadu என்று நான் ஒரு SMS அனுப்பினேன். சிறிதுநேரத்தில் I love you.plese என்று மீண்டும் ஒரு SMS வந்தது. அப்போதுதான் இது ஏதோ ஒரு வில்லங்கம் என்று நான் சுதாரித்தேன். உடனே எனது போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு நீண்ட நேரம் கழித்து ஆன் செய்தேன். இந்த சோதனையிலும் எனக்கு கமலஹாசன் நடித்த ’மன்மதலீலை’ படமும், அதில் வரும் ‘ஹலோ மைடியர் ராங்க் நம்பர்” என்ற பாடலும்தான் நினைவுக்கு வந்தன.

61 வயதில் காதலா?

அப்புறம் மதியம் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து வீடு திரும்பும் வரை xxxxx என்ற வேறு ஒரு செல்போனிலிருந்து தொடர்ச்சியாக கால்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. முதல் தடவை எடுக்கும் போது அதே குரல் “சம்சாரிக்கனும்”. அப்புறம் தொடர்ச்சியாக அழைப்புகள். நான் எடுக்கவில்லை. வீட்டிற்கு வந்ததும் எனது மனைவி, மகன் இருவரிடமும் ’சம்சாரிக்கனும்’ பற்றி சொல்லிவிட்டு “61 வயதில் காதலா” என்று சொல்லி சிரித்தேன். அவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எனது மகன் உடனே தனது செல்போனில் இருக்கும் truecaller என்ற சாப்ட்வேரில் அந்த இரண்டு செல்போன் எண்களையும் போட்டு பார்த்ததில் ஒன்று Aswini, Kerala, India மற்றொன்று Faisal, Kerala. India என்றும் தெரிய வந்தன. நானும் உடனே அந்த சாப்ட்வேரை எனது செல்போனில் டவுன்லோடு செய்து கொண்டு அந்த இரண்டு செல்போன் எண்களையும் Block செய்து விட்டேன். வீட்டில் உள்ள டெஸ்க் டாப் கம்ப்யூட்டரிலும் www.truecaller.com என்ற இணையதள முகவரியை ’புக்மார்க்’ செய்து வைத்துள்ளேன். BSNL அலுவலகத்திலும், இதே யோசனையைத் தெரிவித்தார்கள். இருந்தும் நேற்றைய தினம் வரை Faisal, Kerala. India என்ற பெயரில் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்த இந்த அழைப்புகள், இப்போது குறைந்துள்ளன. இன்றைய இப்போதைய நிலவரப்படி, எனது செல்போன் truecaller இல் 9 hours ago என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  அப்படியே ROBO CALLS எனப்படும் இவை முற்றிலும் நின்றுவிடும் என்று நினைக்கிறேன். 

சோதனை மேல் சோதனை:

எனக்குள்ள குழப்பம் என்னவென்றால், ’காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை’ போல்  மனைவியின் செல்போன் காணாமல் போனதற்கும், இதற்கும் தொடர்பு உண்டா அல்லது வேறு எங்கிருந்து எனது செல்போன் எண்ணை, இந்த கும்பல் எடுத்து இருக்கும் என்பதுதான். (இதற்கிடையில் இரண்டு வாரத்திற்கு முன்பு பக்கத்து வீட்டுக்காரர் துரத்தியதால், எங்கள் வீட்டு கொல்லைப்புறம் ஒரு பூனை தனது மூன்று குட்டிகளுடன் வந்து தங்கி இருந்தது; அதில் ஒரு குட்டி கம்ப்ரசர் மோட்டாரில் சிக்கி சென்ற ஞாயிறன்று உயிரிழந்தது தனிசோகக் கதை) அடுத்து என்ன? பார்ப்போம்.

சிறுகுறிப்பு:

A robocall is a phone call that uses a computerized autodialer to deliver a pre-recorded message, as if from a robot. Robocalls are often associated with political and telemarketing phone campaigns, but can also be used for public-service or emergency announcements.   ( Courtesy: https://en.wikipedia.org/wiki/Robocall )


Saturday 19 March 2016

இறைவன் இருக்கின்றானா?



நான் சிறுவயதில், அதாவது பள்ளிப்பருவத்தில், ரொம்பவும் கடவுள் பக்தி உள்ளவன். பள்ளிக்குச் செல்லும்போது, வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு, நெற்றியில் திருநீறு இல்லாமல் சென்றதில்லை.   அப்புறம் கல்லூரியில் சேர்ந்த பிறகு, கம்யூனிசத்தோடு நாத்திகமும் பேசியது ஒரு காலம். (இருபத்தைந்து வயதில் கம்யூனிசம் பேசாதவனும், அதற்கு மேலேயும் பேசிக்கொண்டிருப்பவனும் பரிசீலிக்கப் பட வேண்டியவர்கள் என்று சிலர் சொல்லுவார்கள்.) அப்புறம் குடும்பஸ்தனாக மாறி , வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், புயல்கள் காரணமாக கடவுள் நம்பிக்கை வந்தது ஒரு பெரிய கதை. இருந்தாலும் சிலசமயம் நாட்டில் நடக்கும் சில அநியாயங்களைப் பார்க்கும் போதும், அப்பாவி மக்கள் கஷ்ட நிலையில் இருப்பதும், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று வாழும் வலியவர்கள் நன்றாக இருப்பதைக் காணும்போதும் “இறைவன் இருக்கின்றானா?” என்ற கேள்வி மனதில் சிலசமயம் எழத்தான் செய்கிறது.
     
கடவுள் மீது நம்பிக்கையும் கோபமும்:

நாம் ஒருவரை நம்புகிறோம். அவர் நமது நம்பிக்கைக்கு மாறாக நடந்து கொண்டால் என்ன சொல்கிறோம்..” ரொம்ப நம்பிக்கையா இருந்தேனுங்க. அவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கலை” இதுபோலத்தான் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட தீவிர ஆத்திகர்கள் கூட சிலசமயம் மனம் வெறுத்து “ கடவுள்னு ஒன்னு இருக்கான்னே தெரியவில்லை” என்று மனம் வெறுத்துச் சொல்வதையும் கேட்க முடிகிறது. காரணம் கடவுள் சர்வ சக்தி உள்ளவர்; நியாயவான்; தீயவர்களை தண்டிப்பார் என்ற பெரிய நம்பிக்கை காலங்காலமாக எல்லோருடைய மனதிலும் இருப்பதுதான்.

அண்மையில் ஒரு பதிவர்கூட, தனது உறவினர் இறந்த சோகத்தில் மனம் வெறுத்து - 

// சில வருடங்களுக்கு முன்பு வரை, நானும் ஒரு தெய்வ வழிபாட்டு நெறியினைப் பின்பற்றுபவனாகவே இருந்துள்ளேன். ஆனாலும் நாளடைவில், என் மனவோட்டம் மெல்ல மெல்ல மாறத்தான் தொடங்கியது. காரணம் நான் படித்த புத்தகங்கள், கண்ட காட்சிகள், எதிர்கொண்ட இன்னல்கள், சந்தித்த அனுபவங்கள் பொது நலனை முன் வைத்தும், சுய நலனை முன் வைத்தும், நான் கண்ட காட்சிகள் என்னுள் மாற்றத்தை உருவாக்கின.//

என்று ஆதங்கப்பட்டு எழுதியதோடு ‘கடவுள் கைவிட்டார்’ என்றும் வருத்தப்பட்டு இருந்தார். ஒரு சகோதரி தனது கணவர் இறந்த சோகத்தினாலும், கணவரது நெருங்கிய உறவினர்களே செய்த துரோகத்தினாலும் ‘ இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்? “ என்று தனது வலைப்பதிவினில் ஆற்றாது சொல்லி இருந்தார்.

இலக்கியத்தில்:

இன்று நாட்டில் நடக்கும் கொலை,கொள்ளை, அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் இவற்றைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் “இறைவன் இருக்கின்றானா” என்ற கேள்வி  எழுவது இயல்பான ஒன்றுதான்.
அன்றைய சங்ககாலத்தில் ஒருபுலவர் கண்ட காட்சி , (ஒரு வீட்டில் மணப்பறை முழக்கம்; இன்னொரு வீட்டில் பிணப்பறை முழக்கம்) படைத்தவனையே பண்பு இல்லாதவன் என்று ஏசும் அளவுக்கு அவரது மனம் வெறுத்து இருக்கிறது. இதோ பாடல்.
                                                                                                                                                            
ஓரில் நெய்தல் கறங்க,ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம இவ்வுலகம்!
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!

(பாடியவர்: பக்குடுக்கை நண்கணியார்
புறநானூறு,  பாடல் வரிசை எண்-194)

‘ஆதி பகவன், வேண்டுதல் வேண்டாமை இலான், இருவினையும் சேரா இறைவன்” என்றேல்லாம் சொன்ன வள்ளுவருக்கே, படைத்த அந்த கடவுள் மீதே கோபம் வந்து, அவன் அலைந்து திரிய வேண்டும் என்று சாபம் கொடுக்கிறார். அவர் சொன்ன குறள் இது.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். (திருக்குறள் – 1062)

(மு.வ உரை: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.)

என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்:

எல்லோருக்கும் இயேசு யார் என்று தெரியும். ஆனாலும் அவரை இன்னார் என்று காட்டிக் கொடுக்க சாட்சி ஒருவன் தேவைப் பட்டான். இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத்து முப்பது வெள்ளிக் காசுகளுக்காக விலை போனான். இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். பின்னர் பல்வேறு அவமரியாதை மற்றும் ஆக்கினைகளுக்குப் பிறகு இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அன்றைய பிற்பகல் பூமியெங்கும் ஒரு அடர் இருள் உண்டாயிற்று. இயேசு: ஏலீ! ஏலீ! லெமா சபக்தானி, (Eli, Eli, lema sabachthani?) என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார் (அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் My God, my God, why have you forsaken me?) என்று அர்த்தம் சொல்லுகிறார்கள்) பின்னர் மறுபடியும் மகா சப்தமிட்டு இயேசு ஆவியை விடுகிறார். – இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார்.

பிற்பகல் நேரம் பெருகிய வானம்
இருநா ழிகைகள் இருளில் ஆழ்ந்தது!
கண்ணீர் சிந்திக் கலங்கிய வாறு
சிலுவையின் அருகே தேவ அன்னை
மரியா ளோடும் மற்றொரு பெண்ணும்
அருளப் பர்எனும் அன்புச் சீடரும்
நின்றார் அவரை நேரில் நோக்கி,
இயேசு பெருமான் இருவரை விளித்து
"
அம்மா அவருன் அன்பின் மைந்தன்
அருளப் பாஅவர் அன்னை உனக்கு"
என்றே அவரை அன்பில் இணைத்தார்!
மூன்று மணிக்கு மோகன மன்னன்
தோன்றிய தேதோ சொல்லை உயர்த்திச்
சத்தம் இட்டார் தாரணி ஒடுங்க!
"
இறைவா! இறைவா! என்னை ஏனோ
கைவிட் டாயே! கைவிட் டாயே!"
என்றார் உடனே இருந்த சிலபேர்
"
எலியாஸ் தன்னை இவன்அழைக் கின்றான்'
என்றே அவரை ஏளனம் செய்தார்!
மரண நேரம் வந்ததென் றெண்ணி
வேதன் கூற்றை விளக்கிடு மாறு,
"
தாகம் எனக்கெ"னச் சாற்றினார் இயேசு!
ஆத்மதா கத்தை அவர்சொன் னாரென
அறியா திருந்த ஐந்தறி மாக்கள்
கடலில் எடுத்த காளான் தன்னைக்
காடியில் தோய்த்துக் கட்டையில் நீட்டினர்!
அதையும் பெற்ற அன்பின் மைந்தன்,
"
எல்லாம் முடிந்தது!" என்று நவின்றார்!
எல்லாம் என்ற சொல்லின் பொருளை
நல்லோர் யாவரும் நன்றே அறிவார்!
'
தந்தை எனக்குத் தந்ததோர் கடமை
இந்த உலகில்நான் ஏற்றதோர் கடமை
எல்லாம் முடிந்தது' எனமனம் நிறைந்தார்!

கவிஞர் கண்ணதாசன், இயேசு காவியம், (பக்கங்கள் 367 – 368)

ஒரு சினிமா பாடல்:

அவன் பித்தனா? – 1966 இல் வெளிவந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் & விஜயகுமாரி நடித்த தமிழ்ப்படம். அதில் ஒரு பாடல். ஆண்,  "இறைவன் இருக்கின்றானா?" என்று கேட்கிறான். பெண், "மனிதன் இருக்கின்றானா?"  என்று கேட்கிறாள். இருவரது கேள்விகளிலும் நியாயங்கள் இருக்கின்றன.

ஆண் குரல்:
இறைவன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை 

பெண் குரல்:
மனிதன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா? இறைவன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை

பாடலை முழுவதும் யூடியூப்பில் கண்டு கேட்டிட கீழே உள்ள இணைய முகவரியை சொடுக்குங்கள்:
 
இறைவன் இருக்கின்றான்:

விடை தெரியா கேள்விகள் ஒரு புறம் இருந்தாலும் சில காரண காரியங்களை வைத்து (ஒவ்வொரு கிரகமும் அதனதன் வட்டப் பாதையில் சுற்றுதல், இந்த பூமியின் செயல்பாடு, மற்றும் பூமியில் உள்ள உயிர்களின் வாழ்க்கை சுழற்சி முறை போன்றவற்றை வைத்து பார்க்கும் போது) நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி எல்லாவற்றையும் இயக்குகிறது என்பதனை உணர முடிகிறது. அந்த சக்திக்கு அவரவர் அவரவர் மதத்தில் ஒரு பெயரை வைத்து வணங்குகின்றனர் என்பதாகக் கொள்ளலாம். திருவள்ளுவர் பொதுப்பெயரில் தமிழில் ‘இறைவன், என்று சொல்லுகிறார்.