Showing posts with label டாக்டர் எம்.கே.முருகானந்தன். Show all posts
Showing posts with label டாக்டர் எம்.கே.முருகானந்தன். Show all posts

Sunday, 17 May 2015

உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள் (டாக்டர் M.K.முருகானந்தன்) - மின்நூல் விமர்சனம்



       TODAY - 2015 - 17 May - World Hypertension Day



எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் உள்ள மின் நூலகத்தில் (E LIBRARY) மின்நூல்கள் பலவற்றை டவுன்லோடு செய்து வைத்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது அவற்றை படிப்பது வழக்கம். எனக்கு இரத்த அழுத்தம் (PRESSURE) இருப்பதால், டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள் எழுதிய உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள்  என்ற மின்நூலினை அண்மையில் எடுத்து படித்தேன். டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள் அவர்கள் ஒரு சிறந்த டாக்டர். மூத்தவர். நிறைய படித்தவர். நிறைய கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். எனவே அவரது நூலைப் பற்றிய எனது விமர்சனம் என்பதே தவறு. எனினும் தற்போதைய வழக்கப்படி வாசகர்களுக்கு தெரிய வேண்டி நூல் விமர்சனம் என்றே சொல்ல வேண்டியதாயிற்று. அந்த நூலைப் பற்றிய சில குறிப்புகள் இங்கே.

டாக்டர் M.K.முருகானந்தன்



நூலாசிரியர் டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள் பற்றி வலையுலகில் அறிமுகம் தேவையில்லை. இலங்கை குடும்ப மருத்துவரான இவரது மருத்துவக் கட்டுரைகள் படிக்கும் அனைவருக்கும், இவரது ஹாய் நலமா? என்ற வலைத்தளம்
( http://hainallama.blogspot.in ) தெரிந்த ஒன்று. மேலும் முருகானந்தன் கிளினிக் ( https://hainalama.wordpress.com) என்ற வலைத்தளத்திலும் மருத்துவம், இலக்கியம், அனுபவம் என பல்வேறு தலைப்புகளில் எழுதி வருகிறார்.

நூலைப் பற்றி:

இந்த நூலில், நூலின் ஆசிரியர் டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள், இரத்த அழுத்தம் (PRESSURE) என்பது, தலைச்சுற்று, தலைவலி, களைப்போ சோர்வோ எந்தவித அறிகுறிகளற்ற நோய் என்று குறிப்பிட்டு , இந்நோயை ‘அமைதியான கொலையாளி ( Silent Killer) என்று எச்சரிக்கை செய்கிறார். ஆயினும் கடுமையான தலைவலி, மூக்கில் இரத்தம் வடிதல், பார்வை மங்குதல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்றவை பிரஸர் அதிகமானதின் அறிகுறியாகும்;மேலும் எந்தெந்த வயதினில் இந்த நோய் தீவிரம் அடைகிறது, என்று சொல்லிவிட்டு, இந்நோய் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள பரிசோதித்துக் கொள்வதே (குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு அவசியம்)  நல்லது என்கிறார். இந்நோயை மருத்துவத் துறையில் உயர் இரத்த அழுத்தம் (HYPERTENSION) என்று சொல்கிறார்கள்.

இந்த நூலில்

1.கவனத்தில் எடுக்க வேண்டிய நோய், 2.உலகளாவிய பிரச்சனை,
3.தொடர்ச்சியான கணிப்பீடும் கண்காணிப்பும் அவசியம், 4. அளவிடுவது எப்படி?,  5.உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்,  6. வேறு நோய்களின் விளைவான உயர் இரத்த அழுத்தம்,  7.உயர் இரத்த அழுத்தத்தைப் புரிந்து கொள்ளல்,  8.உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல்,  9.உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள்,  10.உயர் இரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தாவிடின் என்ன நடக்கும்?,  11.பெண்களும் உயர் இரத்த அழுத்தமும்

என்ற தலைப்புகளில் டாக்டர் இந்த உயர் இரத்த அழுத்தத்தைப் பற்றி விரிவாக கூறுகிறார்.

பிரஸரை அளப்பதற்கு முன் கடைபிடிக்க வேண்டியவை;

தானாக ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், வேறு நோய்களின் காரணமாக ஏற்படும் உயர் இரத்த அழுத்தம்;

யார் யாருக்கு இந்த நோய் வரும்?;

இரத்த அழுத்தம் என்றால் என்ன?; வருவதற்கான காரணங்கள் என்ன/; அதனைக் கட்டுப்படுத்தும் முறை;

சாதாரண இரத்த அழுத்தம் என்பது 120/80 mm Hg. – இது 140/90 க்கு மேல் உயர்ந்தால் உயர் இரத்த அழுத்தம் (HYPERTENSION); 120/80 இற்கும் 139/89 இற்கும் இடையில் இருந்தால் அது முன் உயர் இரத்த அழுத்தம் (PRE HYPERTENSION); 130/85 என்றால் டாக்டரை பார்த்தல் அவசியம், 140/90 இற்கு மேற்பட்டால் டாக்டர் மேற்பார்வையில் சிகிச்சை அவசியம் வேண்டும்;

உயர் இரத்த அழுத்தம்  குறைப்பதற்காக உடல் எடையைக் குறைத்தல் சம்பந்தப்பட்ட தகவல்கள்; உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகள்;


புகைபிடித்தலால் வரும் தீமைகள்;
மாரடைப்பிற்கான காரணங்கள்
உயர் இரத்த அழுத்த நோயிற்கான மருந்துகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகள்; பெண்களுக்கான ஆலோசனைகள்;

என்று பலவிதமான தகவல்களை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நூலின் இறுதியில், உங்கள் இரத்த அழுத்தத்தையும், உங்கள் எடையையும், நீங்கள் உபயோகிக்கும் மருந்துகளையும் ஒரு பதிவேட்டில் ஒழுங்காகக் குறித்து வைப்பது அவசியம்.   என்று சொல்லும் டாக்டர், ஒரு உதாரண அட்டவணையையும் தந்துள்ளார்.

பிரஸர் எனப்படும் இரத்தஅழுத்த நோயைப் பற்றி அறிந்து கொள்ள, அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய

இலங்கைத் தமிழ் மக்களின், எழுத்தாவணங்கள், தகவல் களஞ்சியங்கள், நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள் என்று  பலவற்றை நூலகம்(NOOLAHAM FOUNDATION) என்ற நிறுவனம் தொகுத்து வைத்துள்ளது, அந்த நிறுவனத்தின் www.noolaham.org  என்ற இணையதளத்தில் இந்த நூலினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.                                                                  
நூலகம் > குறிச்சொற்கள் > நுட்பவியல்> 610 மருத்துவமும் நலவியலும் > உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள் (6.68 MB) (PDF வடிவம்)

நூலின் பெயர்:
உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள்
நூலாசிரியர்:
டாக்டர் M.K.முருகானந்தன் M.B.B.S (Cey), D.F.M (SL), M.C.G.P (SL)
பக்கங்கள்: 41
நூல் வெளியீடு: (நூலகம் / மின்நூல்)