முன்பெல்லாம் தமிழ்நாட்டு வானொலி நிகழ்ச்சிகளை தமிழ் நாட்டு மக்கள் அதிகம் கேட்க மாட்டார்கள்.இசை என்றால் கர்நாடக சங்கீதம்தான். எப்போது பார்த்தாலும் அந்த வித்துவான் பாடியது ,இந்த வித்துவான் பாடியது என்று இழுத்துக் கொண்டிருப்பார்கள்.எப்போதாவது தமிழ் திரைப் பட பாடல்களை போடுவார்கள்.அதிலும் அவர்கள் எம்ஜிஆர் படப் பாடல்களை ஒலி பரப்ப மாட்டார்கள் .காரணம்,அவர் அப்போது தி.மு.கழகத்தின் முன்னணி நடிகர்.
மக்கள் பார்த்தார்கள்.இலங்கை வானொலியின் தமிழ் ஒலி பரப்பினை கேட்க தொடங்கி விட்டனர்.அவர்களும் தமிழ் மக்களின் ரசனைக்கு ஏற்ப ஒலி பரப்பினர்.ஒவ்வொரு நிகழ்ச்சியை தொடங்கும் முன்னும் ஒரு திரைப் பட மெட்டோடு தொடங்குவார்கள்.ஒலிபரப்பும் துல்லியமாக இருக்கும்.அதிலும் ஒவ்வொரு அறிவிப்பாளரும் நிகழ்ச்சி தொடங்கும் முன்னும் , முடிக்கும் போதும் தங்கள் பெயரைச் சொல்லும் அழகே தனி. கே.எஸ்.ராஜா என்பவர் ஸ்டைலாக ஒருவிதமாக தனது பெயரைச் சொல்லுவார். இன்னும் மயில்வாகனன், அப்துல்ஹமீது,
ராஜேஸ்வரி சண்முகம் (எல்லோருடைய பெயரும் ஞாபகம் இல்லை) என்று மறக்க முடியாத அறிவிப்பாளர்கள். ”பொங்கும் பூம்புனல்”, ”அன்றும் இன்றும்”, ”புது வெள்ளம்”, ”பாட்டுக்குப் பாட்டு”, என்று தலைப்புகள் தந்தனர். பழைய தமிழ் திரைப் படப் பாடல்களை திரும்பத் திரும்ப போட்டு இசை இன்பத்தில் ஆழ்த்தினர். கண்ணதாசன்,வாலி என்று தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களின் கவிதை வரிகள் தமிழ்மக்களிடையே பிரபலமாவதற்கு இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பும் ஒரு காரணம்.
நான் எனது கல்லூரி பருவத்தில்,வீட்டில் இருக்கும்போது, இலங்கை வானொலியின் ஒலி பரப்பினைக் கேட்டபடியே படிக்க வேண்டிய பாடநூல்களின் குறிப்பை எடுப்பேன்.மேலும் அன்றைய நாட்களில் தமிழ் நாட்டில் ரேடியோ, டிரான்சிஸ்டர் வாங்கும் போது மக்கள் கடைக்காரரிடம் கேட்கும் முதல் கேள்வி “சிலோன் எடுக்குமா? என்பதுதான்.(இப்போது சன் டீவி வருமா என்று கேட்கிறார்கள்) சிலோன் எடுக்க வேண்டும என்பதற்காக ஒரு காலத்தில் வீட்டின் உச்சியில் ஏரியல் கட்டியிருப்பார்கள். அப்புறம் ஏரியல் இல்லாமலேயே எடுத்தது. பெட்டிக் கடை, டீக் கடை, வீடு, கிராமங்களில் மாடுமேய்க்கும் இடம் என்று தமிழ்நாட்டில் எங்கெங்கு கேட்டாலும் இலங்கை வானொலிதான். இதனால் அப்போது டிரான்சிஸ்டர் விற்பனை அமோகம். தமிழக மக்களுக்கு இலங்கை வானொலி மீது இருந்த காதலை கண்ட தமிழ் நாட்டு வர்த்தக நிறுவனங்கள் விளம்பரங்கள் தரத் தொடங்கினர்.. உடனே இங்கும் தமிழ் நாட்டில் “தேன் கிண்ணம்” என்று தொடங்கினார்கள். அதில் கிண்ணம்தான் இருந்தது. தேன் இல்லை.மக்கள் விருப்பம் எப்போதும் போல் சிலோன் தான்.
இன்று எல்லாம் பழங்கதையாய் போய்விட்டது. எங்கள் தலை முறையோடு அவை முடிந்து விட்டன.