Saturday 29 March 2014

திருச்சிக்கு ஏது திருப்புமுனை?



எந்த கட்சி திருச்சியில் மாநாடு நடத்தினாலும் அவர்கள் சொல்லும் வார்த்தை திருச்சி மாநாடு எங்களுக்கு ஒரு திருப்புமுனை மாநாடு “  இது எல்லா அரசியல்வாதிகளாலும் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தை. காரணம், திருச்சி என்ற பெயரிலும் திரு இருக்கிறது; திருப்புமுனை என்ற சொல்லிலும் திரு இருக்கிறது. திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் ஏற்படுமடா! உந்தன் விருப்பம் நிறைவேறுமடா! என்ற பாடலில் வரும் எதுகை மோனை போன்றுதான் இதுவும். அடுக்குமொழி வார்த்தை. ஆனால் இந்த அரசியல்வாதிகளால் திருச்சிக்கு ஏதாவது திருப்புமுனை ஏற்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை.

பேருந்து நிலையங்கள்:

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. எல்லா மாவட்ட தலைநகர்களிலும் புது பேருந்து நிலையம் கட்டி விட்டார்கள். ஆனால் இன்னும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் மாற்றப்படாமல் மூத்திர நாற்றம் வீச, அதே நெருக்கடியோடு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த மத்திய பேருந்து நிலையத்தை ஒட்டி வெளியே உள்ள டவுன் பஸ் நிலையத்தில் பயணிகள் படும்பாடு சொல்ல முடியாது. பயணிகளுக்கான இடம் முழுவதும் சிறு வியாபாரிகள். பிளாட்பாரத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் சறுக்க வைக்கும் அமைப்பு. படிக்கட்டுகள் இல்லை. கீழே எப்போதும் கழிவுநீர் மற்றும் குப்பை. புறநகர் செல்லும் பிரயாணிகள் நிற்க இடம் கிடையாது. கூட்டத்திற்குள் பஸ் வேகமாக நுழையும்போது மக்கள் இங்கும் அங்கும் ஓட வேண்டி உள்ளது.


  
ஒவ்வொரு தடவையும் நகரசபை தேர்தல் முடிந்தவுடன், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,  நகரசபை தலைவர் (இப்போது மேயர்) சொல்லும் வாசகம் “விரைவில் திருச்சிக்கு என்று புதிய பேருந்து நிலையம் பெரிதாக அமைக்கப்படும்என்பதுதான். இடம் பார்ப்பதாக இங்கும் அங்கும் சென்று “பிலிம்காட்டுவார்கள். அப்புறம் அவ்வளவுதான். என்ன காரணத்தினாலோ அந்த திட்டம் கிடப்பில் போடப்படும். உண்மையான காரணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சிலர்தான் என்கிறார்கள். காரணம் பேருந்து நிலையத்தை புதிதாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால் அவர்கள் வியாபாரம் படுத்துவிடும் என்பதுதான். உண்மையில் புதிய இடத்திற்கு பேருந்து நிலையம் போனாலும் இந்த பேருந்து நிலையமும் செய்லபட வாய்ப்புகள் அதிகம் என்பதை யாரும் மறுக்க இயலாது.

திருச்சியில், இந்த மத்திய பேருந்து நிலையத்திற்கு இணையாக உள்ளது , சிந்தாமணி பகுதியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம். இங்கே பெரும்பாலும் டவுன் பஸ்கள் வந்து போகின்றன.  மற்றொரு கோடியில் வெளியூர் பஸ்கள் நிறுத்தப் படுகின்றன. மத்திய பேருந்து நிலைய அவலங்கள் இங்கேயும் அப்படியே உள்ளன.


 
எனவே சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் போல் திருச்சியில் , ஒரு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது திருச்சி வாழ் மக்களின் நெடுநாள் கோரிக்கை ஆகும்.

குடிநீர்ப் பிரச்சினை:

காவிரி ஆறே கரை புரண்டு ஓடினாலும், காவிரிக் கரையில் இருக்கும் திருச்சி மக்களுக்கு மட்டும் குடிக்க  தண்ணீர் சரிவர கிடைக்காது. திருச்சி நகரத்தின் நிலைமை அப்படித்தான் உள்ளது. அதிலும் குறிப்பாக திருச்சியின் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் இன்னும் குடங்களை வைத்துக் கொண்டு குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளது “ .

காவிரிக் கரையில் உள்ள திருச்சியில் குடிநீர்ப் பிரச்சினை  http://tthamizhelango.blogspot.com/2012/01/blog-post_26.html என்ஒரு பதிவில் இவ்வாறு எழுதியுள்ளேன் . அந்தப் பதிவில் எழுதிய மேலும் சில கருத்துக்கள்:

// இங்கு இவ்வாறு திருச்சி மக்கள் குடிநீருக்காக அல்லாடிக் கொண்டு இருக்கும்போது, திருச்சி காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் பிற மாவட்ட மக்களுக்கு ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் கொண்டு செல்லப் படுகிறது. இந்த திட்டம் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு குழாய் மூலம் காவிரி நீர் கொண்டு செல்லப் படுகிறது. மேலும் செல்லும் வழியில் சில இடங்களில் இந்த குழாயிலிருந்து திருட்டுத்தனமாகவும் தண்ணீர் எடுக்கிறார்கள். அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் என்பது போல திருச்சி அரசியல்வாதிகள், அடுத்தவர்களுக்கு த்ண்ணீரை தானம் செய்து விட்டு திருச்சி மக்களை தாகத்தில் விட்டு விட்டார்கள். புறநகர் பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளை கட்டுகிறார்கள், கட்டுகிறார்கள் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் கட்டினாலும் தரப் போவது காவிரிநீர் கிடையாது. போர்வெல் தண்ணீரும் காவிரி தண்ணீரும் கலந்த ஒன்றுதான். சுத்தமான காவிரி தண்ணீர் இல்லை..//

தொழில்வளம் இல்லை:

திருச்சியில் தொழிற்சாலைகள் தொடங்கும் அளவுக்கு நிறைய வசதிகள் வாய்ப்பும் இருந்தும் என்ன காரணத்தினாலோ புறக்கணிக்கப் படுகிறது. பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையும், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெல் ( BHEL ) நிறுவனம் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை மட்டும்தான். அதன் பின்னர் தொழில் வளர்ச்சி என்பதே இல்லை. இதைப் பற்றி எந்த அரசியல்வாதிகளும் பேசுவதே இல்லை.

திருப்புமுனை:

எனவே அரசியல் கட்சிகள் திருச்சியில் திருப்புமுனை மாநாடுகள் நடத்துவதோடு இல்லாது திருச்சிக்கும் ஏதாவது செய்ய நினைக்க வேண்டும்.






Sunday 2 March 2014

செல்லப் பிராணிகளுக்கு சொர்க்கம் நரகம் உண்டா?



மனிதனுக்கு மட்டுமே இறப்பிற்குப் பின்பு நியாயத் தீர்ப்பு உண்டு என்றும், அதன் பின்னர் அவனது ஆன்மா சொர்க்கம் அல்லது நரகம் சென்றடைகிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால் நாம் செல்லமாக வளர்த்த செல்லப் பிராணிகளின் ஆன்மாக்கள் என்ன ஆகின்றன? சரியான விடை இல்லை. ஆனாலும் அவை எல்லா பிறப்பும் எடுத்து இறுதியில் மனித பிறவியை அடைகின்றன என்ற ஒரு சமய நம்பிக்கை உண்டு

புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லா மனிதராய் பேயாய் ங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

என்று பாடுகிறார் மாணிக்கவாசகர் (திருவாசகம்)

மகாபாரதத்தில்:

மகாபாரதத்தின் இறுதி கட்டத்தில் ( மகாபிரஸ்தானிக பருவம்) ஒரு காட்சி. தருமர் துறவு பூண்டு தனது சகோதரர்களோடும் துரோபதையுடனும் இமயமலைச் சாரலை அடைகிறார் கைலாசமலை நோக்கி முதலில் தருமர் , பின்னர் மற்ற ஐவர் என்று வரிசையாக மேலே செல்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் அவர்களைத் தொடர்ந்து ஒரு நாயும் வருகிறது. வழியில் அந்த நாயும் தருமரும் தவிர மற்றவர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். இறுதியில் இந்திரன் தனது தேரில் வந்து தருமரை சொர்க்கத்திற்கு அழைக்கிறான். “ என்னோடு வந்தவர்கள் இல்லாது சொர்க்கத்திற்கு வர விருப்பமில்லை என்று தருமர் மறுக்கிறார். “ அவர்கள் ஐவரும் ஏற்கனவே சொர்க்கம் அடைந்து விட்டார்கள்“ என்று இந்திரன் சொல்ல, தருமர் தன்னோடு வந்த நாயுடன் தேரில் ஏற முற்படுகிறார். “நீர் மட்டும் வரலாம். நாய்க்கு இடம் இல்லைஎன்று இந்திரன் தடுக்கிறான். அப்படியானால் நானும் வரவில்லைஎன்று மறுக்கிறார் தருமர். இந்த பதிலைக் கேட்டதும் நாய் வடிவில் வந்த தருமதேவதை தனது சுயரூபத்தைக் காட்டி தருமரைப் பாராட்டுகிறாள். பின்னர் மூவரும் சொர்க்கலோகம் அடைந்தனர் என்பது மகாபாரதம் சொல்லும் கதை.   

வானவில் பாலம் ( RAINBOW BRIDGE)

செல்லப் பிராணிகளை இழந்து வருந்தும் நெஞ்சங்களுக்கு ஆறுதல் சொல்ல  www.petloss.com என்று ஒரு இணையதளம் உள்ளது. இங்கு தங்களது செல்லப் பிராணியை இழந்தவர்கள் ஆன் லைன் வழியே, இறந்துபோன  தங்களது செல்லப் பிராணியின் ஆன்மாவிற்காக பிரார்த்தனை செய்து கொள்ளலாம். அங்கு வானவில் பாலம் ( RAINBOW BRIDGE)என்ற தலைப்பில் ஒரு கதைப்பாடல். சொல்லப்பட்டுள்ளது. எழுதியவர் பெயர் தெரியவில்லை. கதைச் சுருக்கம் வருமாறு.

  
சொர்க்கத்திற்கு (HEAVEN) செல்லும் வழியில் ஒரு பச்சைப் புல்வெளி. அந்த புல்வெளிக்கும் சொர்க்கத்திற்கும் இடையில் ஒரு பாலம். அதன் பெயர்  வானவில் பாலம் ( RAINBOW BRIDGE). செல்லப் பிராணி இறந்ததும் புல்வெளிகளும் சிறு குன்றுகளும் நிரம்பிய அந்த இடத்தை அடைகின்றது. அந்த இடத்தில் இந்த செல்ல பிராணி போன்று நிறைய செல்லப் பிராணிகள் இறந்தவுடன் அங்கு வந்து சேர்ந்துள்ளன. அங்கு அவைகளுக்குத் தேவையான உணவும், தண்ணீரும், விளையாட இடமும், சூரிய ஒளியும் கிடைக்கின்றன. இந்த செல்லப் பிராணிகள் அங்கு சென்றதும் நல்ல உடல்நலம் பெற்று வலிமையுள்ளதாக மாறி மற்ற செல்லப் பிராணிகளோடு விளையாடுகின்றன ஆனாலும் அவைகளுக்கு தங்களை நேசித்த அந்த அன்பு எஜமானர்கள் இல்லையே என்ற வருத்தமும் ஏக்கமும் ரொம்பவே உண்டு. எனவே அவர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் வழியில் உள்ள இந்த பாலத்திற்கு, எப்போது வருவார்கள் என்று எதிர்பார்த்தபடியே உள்ளன. அவைகளின் எஜமானர்கள் பூமியில் இறந்ததும் இந்த வானவில் பாலம் வழியே சொர்க்கத்திற்கு செல்ல வருகிறார்கள். அவ்வாறு வரும்போது தமது எஜமானர்களைக் கண்டவுடன்  இந்த செல்லப் பிராணிகள் ஒரே ஓட்டமாக தாவிச் செல்கின்றன. எஜமானர் மீது சந்தோஷத்தால் தாவி குதிக்கின்றன. நாவால் நக்குகின்றன. அதன்பின் அவைகளும் தமது எஜமானர்களோடு வானவில் பாலம் வழியாக சொர்க்கத்திற்கு செல்லுகின்றன.

காணொளி காட்சிக்கு கீழே உள்ள இணைய முகவரியை ‘க்ளிக்செய்யுங்கள்.


செல்லப்பிராணிகள் கல்லறை (  PET CEMETERY)

மேலை நாடுகளில் செல்லப் பிராணிகள் இறந்ததும் அவற்றின் எஜமானர்கள் , மனிதர்களை அடக்கம் செய்வது போலவே பிரார்த்தனையுடன் அவற்றை அடக்கம் செய்கிறார்கள். நியூமெக்சிகோவில் , வில்லியம்ஸ்பர்க் என்ற இடத்தில் செல்லப் பிராணிகளுக்கென்று கல்லறைத் தோட்டம் ஒன்று உள்ளது. அங்கே அவற்றைப் புதைக்க கட்டணம் வாங்குகிறார்கள். வாரம் ஒருமுறை செல்லப் பிராணிகள் அடக்கம் செய்யப்படுகின்றன.. புதைக்கும் வரை (பத்து நாட்களுக்கு மிகாமல்) குளிர்பெட்டியில் வைத்திருக்கும் வசதியும் உண்டு. அங்கு The Sierra County Humane Society “ என்ற சமூக தொண்டு நிறுவனம் இதனை ஏற்றுச் செய்து வருகிறது.. இவை போன்று பல இடங்களில் மேலை நாடுகளில், செல்லப் பிராணிகளுக்கென்று தனி கல்லறைத் தோட்டங்கள் உள்ளன. நமது நாட்டில் கிராமப்புற மக்களும் வசதியானவர்களும் தங்கள வளர்ப்பு பிராணிகள் இறந்ததும் அவற்றை வீட்டு தோட்டங்களில் புதைக்கின்றனர்.

டாக்டர் ஆல்பர்ட் ஸ்வைட்சர் விலங்குகளுக்கென்று ஒரு பிரார்த்தனைப் பாடல் எழுதியுள்ளார்.

A Prayer For The Animals

Hear our humble prayer, oh, God,
Especially for animals who are suffering;
For any that are haunted or lost or deserted
Or frightened or hungry;
For all that must be put to death.
We entreat for them all Thy mercy and pity,
And for those who deal with them
We ask a heart of compassion
And gentle hands and kindly words.
Make us, ourselves
To be true friends to animals
And so to share the blessings
Of the merciful.

Dr Albert Schweitzer


கட்டுரை எழுத உதவியவை

மகாபாரதம் - (மகாபிரஸ்தானிக பருவம்)

(PICTURES : THANKS TO  “ GOOGLE ”)


Saturday 1 March 2014

ஒரு பிதற்றல் - இன்று எனக்கு வயது 60 தொடக்கம்!



எல்லாமே நேற்று நடந்தது போலவே இருக்கிறது! பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலைக்கு சேர்ந்தது, திருமணம் செய்தது, பிள்ளைகளைப் பெற்றது, அவர்களை வளர்த்தது,ஆளாக்கியது -  எல்லாமே இன்றுவரை ஒரு கனவாகவே தோன்றுகிறது! இத்தனை வருடங்கள் ஓடியது தெரியவில்லை. இன்று எனக்கு வயது 60 தொடக்கம்! எனது  பிறந்த தேதி 01.மார்ச்.1955

பிறப்பதற்கு முன் என்னவாக இருந்தோம்? இறந்து போனால் நமக்கு என்ன நடக்கும்? இப்போது நம்முடன் இருப்பவர்கள் நாளை நமது மரணத்திற்குப் பின் நாம் இருக்கும் இடம் தேடி வருவார்களா? நானும் முன்னோர் இடத்திற்குச் செல்வேனா? விடுபடாத பாசவலை! விடை தெரியாத கேள்விகள் ஓராயிரம்.

நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்றார்கள். நல்லவன் வாழ்வான், கெட்டவன் அழிவான் என்றார்கள். ஆனால் நல்லவனும் வாழ்கின்றான். கெட்டவனும் வாழ்கின்றான். நல்லது இது, கெட்டது இது என்பதும், பாவம் என்பதும் புண்ணியம் என்பதும் மனிதர்களால் மனிதர்களுக்காக செய்யப்பட்ட கட்டுமானங்கள் போலவே உள்ளன. வாழ்க்கையில் நடக்கின்ற விஷயங்கள் யாவும் வந்து போகும் காட்சிகளாகவே தோன்றுகின்றன.

இறைவன் இருக்கின்றானா? சில நிகழ்வுகள் யோசிக்க வைக்கின்றன. ஆனாலும் நமக்கும் மேலே ஏதோ ஒன்று நம்மை வழி நடத்திச் செல்வதாகவே உணர்கின்றேன். எனது நிலைமை ஒன்றும் மோசமாகவும் இல்லை. அடுத்தவர்கள் துணை தேவைப்படாத உடல் நலத்துடன், போதும் என்ற மனத்துடனேயே இருக்கிறது. எனக்கென்று என்ன கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கின்றது. இறைவனுக்கு நன்றி! இனி வரக் கூடிய காலமும் இப்படியே ஓடி விட வேண்டும்  என்றே  இறைவனிடம் வேண்டுகின்றேன்!

நேற்றுதான் பிறந்தேன் வளர்ந்தேன்
படித்தேன் பணியமர்ந்தேன்

நேற்றுதான் திருமணம் செய்தேன்
பிள்ளைகள் பெற்றேன்
படிக்க வைத்தேன் ஆளாக்கினேன்

எல்லாமே நேற்றைய நிகழ்ச்சிகள்
ஆகி விட்டன! கனவே வாழ்க்கை!

நல்லது செய்தால்
நல்லது நடக்கும் எனறே
நானும் நம்பினேன

வந்த துன்பங்கள் வதைத்தபோது
எனக்கு மட்டுமே ஏனென்று
எண்ணி எண்ணி மாய்ந்தேன்

வெளியில் வந்தே பார்த்தேன்
எல்லோர் மனதிலும் இதேதான்

அவரவர் மனதினில் இங்கு
தான்தான் நல்லவன் என்றால்
கெட்டவர் எவருமே இல்லை!


வாழ்க்கை என்றால்? வலைச்சரத்தில்
நான் எழுதிய வரிகளை கீழே நினைவு கூர்கின்றேன்!    

நான் கல்லூரி படித்த நாட்களில் கிராமத்திற்கு சென்ற போது ரொம்பவும் வயதான பெரியவர்கள் பலரைப் பார்த்து இத்தனை நாள் இருந்ததில் நீங்கள் கண்டது என்ன?”  கேட்பேன். அவர்கள் சிரிப்பார்கள். சிரித்துக் கொண்டே என்னத்தைச் சொல்றது. ஒன்னும் இல்லை என்பார்கள்.

இப்போது அதே கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். வாழ்க்கை என்றால் என்ன?” என்று நினைத்துப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் தெரிகிறது. இத்தனை நாட்கள் வாழ்ந்த நாட்களில் நாம் அடைந்த துயரம், துரோகம், அவமானம், ஏமாற்றம் ஆகியவை தானாகவே முன்னே வந்து நிழலாடுகின்றன. இனிமையான நினைவுகளை நாம்தான் அசை போட்டு கொண்டு வர வேண்டியுள்ளது. ஒரு சங்க இலக்கியப் புலவர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.

இன்னாது அம்ம,
இவ் உலகம்;
இனிய காண்க,
இதன் இயல்பு உணர்ந்தோரே
                     - பக்குடுக்கை நன்கணியார்  ( புறநானூறு 194 )


                                                 ( Picture above thanks to http://kaninitamilan.in )




(PICTURES : THANKS TO  “ GOOGLE ”)