Friday 23 November 2012

காதலும் ஜாதியும்




நெஞ்சம் மறப்பதில்லை என்று ஒரு பழைய தமிழ் திரைப்படம். டைரக்டர் ஸ்ரீதரின் இயக்கத்தில் கல்யாண்குமார் தேவிகா நடிப்பில் உருவான படம். போன ஜென்மத்தின் போது தனது பண்ணையில் வேலை செய்யும் பண்ணையாள் மகளை (தேவிகா) அந்த ஜமீனின் ஜமீன்தார் மகன் (கல்யாண்குமார்) காதலிக்கிறார்.

அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை நெஞ்சில்
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை

இரவுக்கும் பகலிடம் கோபமில்லை இந்த

ஏழையின் காதலில் பாபமில்லை
  
-         (பாடல் : கண்ணதாசன்)


என்று பாடித் திரிகிறார்கள். இது பிடிக்காத ஜமீன்தார் (நம்பியார்) காதலர்கள் இருவரும் குதிரை வண்டியில் தப்பும்போது, அந்த பெண்ணை தனது வேட்டைத் துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகிறார். அவள் இறந்த சோகத்தில் ஜமீன்தார் மகனும் இறந்து விடுகிறார். அப்போதைய வெள்ளைகாரர்கள்  அரசு ஜமீன்தாருக்கு தண்டனை தந்து அந்தமான் சிறைக்கு அனுப்பி வைக்கின்றனர். சிறை தண்டனை முடிந்து வந்த அந்த ஜமீன்தார் தனது அரண்மனையில் மறைந்து வாழ்கிறார். காதலர்கள் இருவரும் . அடுத்த ஜென்மத்தில் பிறக்க விதி வசத்தால் அவர்கள் காதல் தொடருகிறது.

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை

நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை
   - (பாடல் : கண்ணதாசன்)

இதனை அறிந்த, (அவர்களது அடுத்த ஜென்மத்திலும் உயிரோடு இருக்கும்) 109 வயதுள்ள கிழட்டு ஜமீன்தார்  இந்த ஜென்மத்திலும் உங்களை சேர விடமாட்டேன் என்று அந்த பெண்ணை சுடுவதற்கு தனது பழைய துப்பாக்கியை தூக்குகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஜமீன்தார் புதை மணலில் சிக்கி இறக்கிறார். போன ஜென்மத்தில் சேரமுடியாத காதலர்கள் இந்த ஜென்மத்தில் சேருகின்றனர். (கடைசி உச்சகட்ட (Climax) காட்சியில் நம்பியாரின் பயங்கரமான தோற்றம், ஆவேசமான நடிப்பு இவைகளை மறக்க முடியாது.) இந்த படத்தில் காதலின் வலுவான சக்தி எது என்பதனை ஸ்ரீதர் காட்டியுள்ளார்.


எட்டி மரம். அதன் அருகில் ஒரு முல்லைக் கொடி. அது ஒன்றினை பற்றிப் படரும் இயல்புடையது.  அந்த முல்லையானது எட்டிமரம் என்று விலகுவதில்லை. அதன் மீது படரத்தான் நினைக்கிறது. இதனை மனோன்மணியம் இவ்வாறு கூறுகிறது.


பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்;
அருகுள
து  ட்டியே யாயினும் முல்லைப்
படர்கொடி படரும்
(மனோன்மணியம் - முதல் அங்கம்: ஐந்தாம் களம்)

கவிஞர் கண்ணதாசன் காதல் பாடல்கள் பல இதனைத்தான் சொல்லுகின்றன. தாழையாம் பூ முடிச்சு என்று தொடங்கும் பாடலில் கவிஞர்

மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்

கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
          -  பாடல் : கண்ணதாசன்  ( படம்: பாகப்பிரிவினை)

என்ற வரிகளைச் சொல்லுகிறார். இன்னொரு இடத்தில்

காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே

வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே அது

வேதம் செய்த உருவம் போல மறைவதில்லையே

         - பாடல் :கண்ணதாசன்  ( படம்: பாவமன்னிப்பு)

என்று பாடுகிறார்.

அவள் ஓர் செவிலித் தாய். கண்ணுக்கு கண்ணாய் வளர்த்த அவளது பெண் தன் காதலனுடன் சென்றுவிட்டாள். தன் மகளையும் அவளது காதலனையும் தேடி பாலை நிலத்தில் செல்கிறாள். எதிரே ஒரு ஜோடி. அந்த பெண் அவளது மகளைப் போலவே இருக்கிறாள். அருகில் சென்று பார்த்தாள். அவள் வேறு ஒரு பெண். இது போல் பல ஜோடிகள். தேடித் தேடி அவளது கால்கள் நடை தளர்ந்து விட்டன. கண்கள் ஒவ்வொருவரையும் உற்று உற்று பார்த்து ஒளி இழந்து விட்டன. அப்போதுதான் அவளுக்கு தெரிகிறது. தனது மகளையும் அவளது காதலனையும் போன்று உலகில் வானத்து நட்சத்திரங்களைப் போன்று அநேகர் என்று. இனி எங்கு தேடுவேன் என்று  அவர்களை மனதால் வாழ்த்திவிட்டு அந்த தாய் திரும்பி விடுகிறாள்.

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே

அகலிரு விசும்பின் மீனினும்

பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
                             -  வெள்ளிவீதியார்.  ( குறுந்தொகை 44 )


பாரதியார்  தனது குயில் பாட்டில்

காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்

என்று கீதமிசைக்கிறார்.

பாரதிதாசன்

காதல் அடைதல் உயிரியற்கை - அது
கட்டில் அகப்படும் தன்மையதோ - அடி
சாதல் அடைவதும் காதலிலே - ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய். 
                                 -  ( பாரதிதாசன் கவிதைகள்

என்று பாடியுள்ளார்.

இப்படி மேற்கோள்கள் பலவர்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

காதல் என்பதற்கு எந்த இலக்கணமும் கிடையாது. இலக்கிய படைப்புகள்தான் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. யாரும் திட்டம் போட்டு காதல் கொள்வது கிடையாது. அது ஒரு இயற்கையான ஒன்று. இன்றைய சினிமாக்களிலும் சின்னத் திரைகளிலும் பழிவாங்கும் வில்லத்தனமான கதைகளில் காதலை கொச்சைப் படுத்தி விட்டார்கள்.








Sunday 18 November 2012

கவிஞர் கவி அருவி பி.கலைமணி




ஒருமுறை திருச்சியில் ஹால் ஒன்றில் நடந்த இலக்கிய கூட்டத்திற்கு சென்று இருந்தேன். கவிஞரை பேச அழைத்தார்கள். மேடையில் ஏறியதும்

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக 

 - பாடல்: கவிஞர் வாலி (படம்: பாசம்)

என்று தொடங்கும் எம்ஜிஆர் படப் பாடல் ஒன்றினை ராகம் மாறாமல் முழுதும் பாடினார். அதன் பிறகுதான் அவர் தனது பேச்சையே தொடர்ந்தார். அவர் எப்போதுமே மேடையில் பேசுவதற்கு முன் இந்த பாடலை பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர்தான் கவிஞர் கவிஅருவி பி.கலைமணி. மேடைகளில் பாடும் திறனோடு கவி எழுதுவதிலும் வல்லவரான இவர் புள்ளி இயல் உதவி இயக்குநராக , பொருளியல் மற்றும் புள்ளி இயல் துறை , திருச்சி மாவட்ட ஆசிரிய கல்வி பயிற்சி மற்றும் நிறுவன அலுவலகம், குமுளூரில் பணி புரிந்து வருகிறார். மேலும் அவர் ஒரு பட்டிமன்றப் பேச்சாளர்; இலக்கிய சொற்பொழிவாளர், மேடைப் பாடகர் ( இசைக் குழுக்களில் தற்போது பாடியும் வருகிறார்). 

ஆசிரியர் பெற்ற விருதுகள்:

1.கவி அருவி
2.வியன்கவி வேந்தர் 
3.சிகரம் தொட்ட சாதனையாளர்
4.பல்துறை வித்தகர்
5.சிந்தனைப் பேரொளி
6.மனித நேயக் கவிஞர்
7.சாதனைக் கவிஞர்
8.இசை அரசு
9.கல்விக் காவலர்
10. மத நல்லிணக்க நாயகர்
11.கர்மவீரா காமராஜர் விருது
12.பாரத ரத்னா ராஜிவ்காந்தி விருது
13.டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் விருது
14.வாழ்வியல் சிந்தனைச் செம்மல்

அவருடைய நூல்கள் பற்றிய எனது விமர்சனம்.



கவி அருவி கலைமணி கவிதைகள்


இந்த கவிதை நூலில் கவிஞரின் எளிய நடையில் அமைந்த பல கவிதைகளைக் காணலாம். மனைவி என்ற தலைப்பில் ஒரு கவிதை (பக்கம் 17)

சிந்தனையில் தாயாக
சிரிப்பினில் சேயாக
மொழியினில் தமிழாக
மொழியவள்நல் மனைவி!

உயர்ந்தவர்கள் என்ற கவிதையில் (பக்கம் 35)

நாடு போற்றும் நல்லவர்கள்
நற்பண்பை வளர்ப்பவர்கள்
பீடு மிகவும் கொண்டவர்கள்
பிறரை என்றும் மதிப்பவர்கள்!

கவிநர் தமிழ்ப் பற்றோடு நாட்டுப் பற்றும் மிக்கவர். இந்தியனாக வாழ்ந்திடுவோம்என்ற கவிதையில்

இந்தியனாக வாழ்ந்திடுவோம்!
ஏழ்மை வறுமை ஒழித்திடுவோம்!
இயன்ற வரையில் உழைத்திடுவோம்!
இல்லாமையினை விரட்டிடுவோம்!

என்றே முழங்குகிறார்.

நூல் வெளியீடு: க.பெர்னாட்ஷா பதிப்பகம், எண் 5, ஐஸ்வர்யா எஸ்டேட், கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி 620 004 அலைபேசி எண்: 98659 52478
(நூலின் விலை ரூ 40/= பக்கம் -103)

நெஞ்சம் எனும் வானிலே

நெஞ்சம் எனும் வானிலே என்ற ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு இருக்கிறார். நூல் முழுவதும் அழகு தமிழில்  சின்னஞ் சிறு அடிகளில் அமைந்த ஒரு பக்கக் கவிதைகள். இயற்கை, சமுதாயம், உறவுகள், பல்சுவை என்று பல கவிதைகள். ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு தலைப்பு கொடுத்து இருக்கிறார்.

தனது கவிதை நூலினை 

செம்மொழி உயர்வைப் பெற்றவளே
சிந்தைக்கு இனிய என் தமிழே
உலகில் உள்ள மொழிகளிலே
உயரிய மொழியே நீதானே!

என்று தமிழன்னை வாழ்த்தோடு (பக்கம் 20 ) தொடங்குகிறார்.

மலைச் சாரலில்  என்ற தலைப்பில்

விடியற் காலையில்
வீசிடும் சாரலில்
இதயம் குளிர்கிறதே
என்னில் இன்பம் சுரக்கிறதே!  (பக்கம் 21)

எது வசந்தம்? என்று வினா எழுப்பி அவரே விடைகளையும் ஒரு பக்கத்தில் தருகிறார். (பக்கம் 31). இறைவனிடம்

என்னை உலகுக்கு கொடுத்த இறைவா
எல்லோர் மனதிலும் மகிழ்வை ஊட்டு
ஏழ்மை தாழ்மை இவற்றை நீக்கி
இனிக்கும் வாழ்வைக் கொடுத்தருள்வாயே!

என்று கேட்கிறார். (பக்கம் 40 ) ஆசிரியர் பெருமை குறித்து,

வாழ்வைச் சொன்னவர் இவரே
வாழ்க்கைக் கல்வியும் இவரே
பாட்டால் கதையால் என்றும்
பண்படுத்தியவரும் இவரே!

என்ற வரிகளால் சிறப்பிக்கிறார்.  (பக்கம் 45 ) எது வேண்டும் என்று? ஒரு இடத்தில் கேட்கிறார் கவிஞர். (பக்கம் 49)

அறிவு வேண்டுமா? நூல்களைப் படி!
அன்பு வேண்டுமா? உயிர்களை நேசி!
உயர்வு வேண்டுமா? கடினமாய் உழை!
உவகை வேண்டுமா? இல்லறம் பேணு!

இலக்கியம் என்னும் தலைப்பில்

இலக்கியம் படிப்பது இன்பத்தைக் கொடுக்கும்
இதயம் சிறக்க அறிவை வளர்க்கும்
கவிதைகள் தோன்றும் கற்பனை பெருகும்
காலம் முழுதும் இதயமோ நெகிழும்

என்று உரைக்கிறார். .  (பக்கம் 91) இன்னும் உலகம், வாழ்க்கை, சமத்துவம், அறிவு என்று பல்வேறு தலைப்புகளில்.

நூல் வெளியீடு: க.பெர்னாட்ஷா பதிப்பகம், எண் 5, ஐஸ்வர்யா எஸ்டேட், கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி 620 004 அலைபேசி எண்: 98659 52478
(நூலின் விலை ரூ 80/= பக்கம் -112)

சிந்தனை மின்னல்கள்

அடுத்து சிந்தனை மின்னல்கள்  என்று கவிஞரின் கட்டுரை தொகுப்புகள் அடங்கிய நூல். கவிஞர் எம்.ஏ பொருளியல் படித்தவர். புள்ளியியல் துறையில் அதிகாரி. அதன் தாக்கம் நூலின் பல இடங்களில் எதிரொலிக்கிறது.

முதல் கட்டுரை அம்மாவும் அன்னைத் தமிழும். இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சியில் தமிழின் வளர்ச்சிக்கும் , தமிழ் மொழியின் உயர்வுக்கும் செய்த பணிகளை விவரிக்கின்றார். மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது, மாணவர்களுக்கு அளித்த சலுகை, தமிழ் மொழிக்கான விருதுகள் என்று அவர் ஆட்சிக் கால
சாதனைகளை பட்டியலிடுகிறார்.

பண்டைத் தமிழர் வாழ்வியல் பண்பாடு, தாய்மொழி வழிக் கல்வி, சமுதாய மறுமலர்ச்சி என்று நூலின் பல இடங்களில் தனது கருத்துரைகளை தந்துள்ளார்.

கவிஞர் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்தவர். அந்த கிராமத்து பொங்கலையும் அந்த மண்ணின் மக்களையும் மறக்க முடியாதவர்.“ பொங்கல் விழா “ என்ற தலைப்பில் சுவையான செய்திகள் தருகிறார்.

தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர் நம் கவிஞர் பி. கலைமணி அவர்கள். நூலில் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கிய நூல்களைப் பற்றியும். மகாகவி சுப்ரமண்ய பாரதியாரைப் பற்றியும்,  அறிஞர் அண்ணாவின் எழுத்துகளைப் பற்றியும் இலக்கிய ரசனையோடு எழுதியுள்ளார்.

நம்பிக்கையுடன் பா.விஜய் - என்று  அந்த கவிஞரைப் பற்றியும் சிறப்பித்து பேசுகிறார்.

மேலும் குறளில் இல்லறம், கவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்களில் பெண்மையும் தத்துவமும், பாரதியும் இலட்சியப் பெண்மையும், கற்றபடி நிற்க, எண்ணித் துணிக, செல்வம் என்பது சிந்தையின் நிறைவும் சமத்துவ உணர்வு சிந்தனைகள், நாடு உயர  போன்ற அற்புதமான தலைப்புகளில் கட்டுரைகளை தந்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் இந்த நூலுக்கு வாழ்த்துரை தந்துள்ளமை இந்நூலுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

நூல் வெளியீடு: க.கிருஷ்ணகுமாரி பதிப்பகம், எண் 5, ஐஸ்வர்யா எஸ்டேட், கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி 620 004 அலைபேசி எண்: 98659 52478
(நூலின் விலை ரூ 100/= பக்கம் -166)












Thursday 1 November 2012

யாரிடம் கோளாறு?



சிவனே என்று இருந்தேன்                 
சிவனை பார்த்த துண்டா
என்றே வினவு கிறார்கள்.!

சீர்திருத்தம் பேசி நின்றால்
உன்வீட்டில் செய்து விட்டாயா
என்றே எட்டிப் பார்க்கிறார்கள்.!

சாலையிலே கொட்டும் குப்பையை
அமைதியாக தடுத்துச் சொன்னாலும்
உன்வேலையைப் பார் என்கிறார்கள்!

வீதியிலே ஜோடியாய் இரண்டுபேர்
யார் வீட்டுப் பிள்ளைகள் என்று பார்த்தால்
கொள்ளிக்கண் என்றே குமுறுகிறார்கள்!

எதிர்திசையில் வண்டியில் வருபவரை
சரியான பாதையில் வரச்சொன்னால்
நீஒழுங்காய் பார்த்துப் போ என்கிறார்கள்!

ஓட்டு கேட்டுவரும் கவுன்சிலரிடம்
கோரிக்கைகள்  சிலவற்றை வைத்தால்
தெருக்காரரே என்னை முறைக்கிறார்!

மளிகை கடைக்குச் சென்று
அரிசியில் ஒரே கல் என்றேன்
இனி வேறுகடை பாருங்கள் என்றார்!

வலையுலகில் பதிவை திருடுகிறார்கள்
என்செய்வது என்றே புலம்பினேன்
கவலைப் படாதே என்றார்கள்!


யாரிடம் கோளாறு என்றே
என்னுள் கேட்டேன் - அதுவோ
உன்னிடம்தான் என்றே சொன்னது.



( PICTURE :  THANKS TO  “ GOOGLE ” )