Saturday 31 October 2015

மாட்டுக்கறி ஆட்டுக்கறியான கதை



அண்மையில் ஒரு டீவி சானலில் ஒரு தீவிர மதக் கட்சிக்காரார் ஒருவர் பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தார். நிகழ்ச்சியை நடத்தியவர் கேள்விகள் கேட்க, அவர் பதில்கள் தர என்று சென்றது. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை அந்த கட்சிக்காரின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட மதத்தவரை சீண்டுவதிலும், அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதனாலேயே மனம் புண்பட்டுக் கிடப்பது போலவும் பேசினார். இத்தனை வருடங்களாக அவர் எங்கிருந்தார் என்று தெரியவில்லை. ( இங்கு ஆச்சாரம், அனுஷ்டானம் பார்த்தவர்களெல்லாம் மேனாட்டுக்குப் போய் அந்த கறியை சாப்பிடுவது பற்றியும் அவர் பேசி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.) பேட்டி முடிந்ததும் எனக்கு, பழைய சில நிகழ்வுகள் இன்றைய சூழலோடு நினைவுக்கு வந்தன.

வெளியில் சொல்லாதீர்கள்

நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம் இது.   அந்த ஏரியா முழுக்க தனியார் மருத்துவமனைகளும், தனியார் நிறுவனங்களும் அதிகம். வெளியில் சாப்பிடும், கம்பெனி பிரதிநிதிகளையும் அதிகம் காணலாம். அதற்கேற்ப அந்த ஏரியாவில் சைவ-அசைவ ஹோட்டல்களும், மெஸ்ஸுகளும் அதிகம். ஒருமுறை அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போது வழியில், ஒரு பழைய நண்பரை டிவிஎஸ் மொபெட்டில் பார்க்க நேர்ந்தது. பொதுத்துறை ஒன்றில் தற்காலிக பகுதிநேர கடைநிலை ஊழியராக வேலை பார்த்தவர் இவர். வண்டியின் பின்புறம் ஒரு பெரிய மரப்பெட்டி. அது ஒரு பெரிய சாக்கினால் இழுத்து மூடி கட்டப்பட்டு இருந்தது. ரொம்பநாள் கழித்து அவரைச் சந்தித்ததால், வழக்கம் போல நலன் விசாரித்தேன். இப்போதும் அதே வேலையைச் செய்வதாகவும், வருமானம் போதாததால், இந்தப் பகுதியில் இருக்கும் அசைவ உணவு விடுதிகளுக்கு தானும் இன்னும் சிலரும் மாட்டுக்கறி சப்ளை செய்வதாகவும், சில இடங்களில் அங்கேயே மாட்டுகறியை  ஆட்டுக்கறி போல சின்னச் சின்ன துண்டுகளாக போடும் வேலையையும் செய்வதாகச் சொன்னார். ”வெளியில் சொல்லி விடாதீர்கள், சார்” என்று எனக்கு அன்பு கட்டளை வேறு. எனக்கோ ஒரே ஆச்சரியம். ஏனெனில் அவர் சொன்ன உணவு விடுதிகளில்தான் மக்கள், மட்டன் குழம்பு, மட்டன் பிரியாணி, மட்டன் வறுவல் என்று ஆசையாக வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆக அவலை நினைத்துக் கொண்டு வெறும் வாயை மெல்லுவது போல, ஆட்டுக்கறியை ( மட்டனை ) சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டு எல்லோரும் மாட்டுக்கறியை ( பீப் ) வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

பெரிய ஆட்டுக்கறி

அப்போதெல்லாம் (இப்போதும்தான்) மாட்டுக்கறியை பெரிய ஆட்டுக்கறி என்றுதான் மறைமுகமாக குறிப்பிடுவார்கள். (இப்போது பீப் என்று அடையாளம் செய்கிறார்கள்) கடைகளில் அசைவம் சாப்பிடவே யோசிப்பார்கள். காரணம் கலந்து விடுவார்கள் என்ற பயம்தான். கலத்தல் என்றால் மாட்டுக்கறியை சின்ன சின்ன துண்டுகளாக்கி ஒருமுறை வேகவைத்து, மறுபடியும் ஆட்டுக் கறியோடு கலந்து வேகவைத்து சமைப்பது ஹோட்டல்காரர்களைக் கேட்டால் ஆட்டுகறி விற்கும் விலையில், நமக்கு கட்டுப்படி ஆகாது சார் என்கிறார்கள். நம்ப பாய் வீட்டுக் கல்யாணம், கச்சேரி , விசேஷம் என்றால் அங்கு மட்டன் பிரியாணிதான். ஆனால் எங்கே கலந்து விடுவார்களோ என்ற பயத்தில், ஒரு காளிமார்க் கலரை அல்லது சோடாவை மட்டும் சாப்பிட்டுவிட்டு , மொய் செய்துவிட்டு வந்தவர்களும் உண்டு. இப்போது அப்படி இல்லை. பிரியாணி என்றால் நிறையபேர் மறுப்பதில்லை. ( நான் சைவம்; மீன் மட்டும் சாப்பிடுவேன் என்றால் யாரும் சிரிக்கக் கூடாது )

தள்ளுவண்டி வியாபாரம்

இது ஒரு பக்கம் என்றால், எல்லா ஊர்களிலும் இருக்கும் பழைய, புதிய பேருந்து நிலையங்கள் அருகில் இருக்கும் சாராயக் கடைகள் பக்கம், பீப் பிரியாணி, பீப் வறுவல், பீப் பகோடா என்று வெளிப்படையாக போர்டு போட்டுக் கொண்டு, இரவு நேரத்தில் வெள்ளை நிற பல்புகள் ஜொலிக்க , தள்ளுவண்டிகளில் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அந்த பக்கம் சாலையைக் கடந்தாலே ஒரே மசாலா நெடி எனக்கு குமட்டுகிறது. அங்கு நின்று கொண்டு வாங்கி சாப்பிடுவர்களை இன்ன ஜாதி, இன்ன மதம் என்று அடையாளம் சொல்ல முடியாது. நல்ல கும்பல். அந்த தள்ளு வண்டிக்காரர்கள், மற்ற கடைக்காரர்களைப் போலவே கொடுக்க வேண்டிய மாமூலை கொடுத்து விடுகிறார்கள்; கூடவே இலவசமாக ஒரு பொட்டலமும் உண்டு. அப்புறம் என்ன? எந்த கட்சிக்காரன் வந்து தடுக்கப் போகிறான்?

அதெல்லாம் சரி! நகர்ப்புறம், எதைப் பற்றியும் கவலைப் படாமல் ரோட்டில் மாடுகளை மேய விட்டு விடுகிறார்களே அவர்களை ஏன் யாரும் தண்டிப்பதில்லை? போக்குவரத்திற்கு இடைஞ்சலான மாடுகளைப் பிடித்துக் கொண்டு போய் பட்டியில் அடைப்பதில்லை? இவ்வாறாக அலையும் மாடுகளில் சில, தினமும் காலையில் எங்கள் குடியிருப்பு பகுதிகளில் வந்துவிடுகின்றன. ஒவ்வொரு வீட்டு வாசலிலும், ஒரு மாடு யாராவது , எதையாவது தின்ன தர மாட்டார்களா என்று நின்றுவிடும். கொடுத்தால்தான் வாசலைவிட்டு நகரும்.


Wednesday 28 October 2015

கில்லர்ஜி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!



இதனால் சகலருக்கும், தொடக்கத்திலேயே, நான்  சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கும், எனக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என்பதே. இதைச் சொல்லுவதற்கு முக்கிய காரணம், இப்போதெல்லாம், சிலர் எந்தவித அடையாளமும் இல்லாமல் வெறும் பெயரை மட்டுமே வைத்துக் கொண்டு கருத்துரை என்ற பெயரில் குழப்பம் செய்வதாகத் தெரிவதுதான்.

கில்லர்ஜி அவர்கள், அண்மையில் “பதிவர்களுக்கு இனிய வேண்டுகோள் “ என்ற தலைப்பின் கீழ் ( http://killergee.blogspot.in/2015/10/blog-post_27.html ) நடந்து முடிந்த வலைப்பதிவர் சந்திப்பிற்குப் பிறகு ஒரு பதிவினை எழுதி இருந்தார். அதில் கீழ்க்கண்ட ஒரு விஷயத்தினையும் சுட்டிக் காட்டி இருந்தார்.

/// ஒரு நண்பர் கருத்துரை எழுதி இருந்தார் அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை வலைப்பூவும் இல்லை திரு. முத்து நிலவன் அவர்கள் அவரை பிரபலப்படுத்த இந்த விழாவை உபயோகப்படுத்துகிறார் என்று இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியுமா ? ///

எனக்குத் தெரிந்து எல்லோரும் புதுக்கோட்டை  வலைப்பதிவர்கள் சந்திப்பினைப் பற்றி எழுதும்போது, சிறப்பாக  நடைபெற்றதையும், அய்யா நா.முத்துநிலவன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ், விழாக்குழுவினர் ஆற்றிய பணிகளைப் பற்றி பாராட்டியுமே எழுதி இருந்தனர். யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லி எழுதியதாகத் தெரியவில்லை. உங்கள் பதிவினுக்கு பின்னூட்டம் எழுதிய கவிஞர் S.ரமணி அவர்கள் கூட ,
////
யாரும் இதுவரை குறை சொன்னதாக
நான் உணரவில்லை
சிறு சிறு விடுதல்களைச் சொன்னார்கள்
அது குறைகள் அல்ல.
இன்னும் அடுத்து மிகச் சிறப்பாக நடத்த
தங்கள் ஆலோசனைகளச் சொன்னார்கள்
அது தவறு அல்ல
வாழ்த்துக்களுடன்...
  ////

என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறார். நானும் இதே கருத்தினை வழி மொழிந்துள்ளேன்.

இருந்தாலும், அய்யா நா.முத்துநிலவன் அவர்கள் பற்றிய விமர்சனத்தை அவர் மீது அன்பு வைத்துள்ள என்போன்ற பல வலைப்பதிவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதனை, உங்களுக்கு வந்த பின்னூட்டங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறு விமர்சனம் செய்த நபரின் பெயரையும் குறிப்பிட்டு, நீங்கள் சொன்னது முறையா என்று கேட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். இவ்வாறு சொன்னவர் யாரென்று குறிப்பிடாததால் இங்கு வலையுலகில் அவராய் இருக்குமோ? இவராய் இருக்குமோ என்று வீண் சந்தேகங்களே விஞ்சி நிற்கின்றன. என்னாலும் யார் எதற்காக அப்படி எழுதினார்கள் என்பதனை யூகிக்க இயலவில்லை.

மேலும், நமது வலைப்பதிவர் சகோதரர் பரிவை சே.குமார் அவர்களும், ” மனசு பேசுகிறது : நாம் நாமாக இருப்போமே... ” என்று கில்லர்ஜியின் கருத்தை ஒட்டி, http://vayalaan.blogspot.com/2015/10/blog-post_27.html ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.

எனவே, இந்த விமர்சனம் காரணமாக அய்யா நா.முத்துநிலவன் அவர்கள் மனம் என்ன பாடுபட்டு இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. இதற்கு மேல் என்ன எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள்தான். அந்த நபர் யார் அல்லது என்ன பெயரில் எழுதினார் என்பதனைச் சொல்லி (தனி பதிவாக) தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday 27 October 2015

வலைப்பதிவு எழுதுவதால் என்ன பயன்?



வலைப்பதிவர் அல்லாத பலரிடம், குறிப்பாக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம், வலைப்பதிவு என்றால் என்ன என்று புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. பலரும் கேட்கும் கேள்வி “பேஸ்புக் (facebook) மாதிரியா?” என்பதுதான். இன்னும் சிலர் இதில் எழுதுவதால் வருமானம் கிடைக்குமா? இதனால் என்ன பலன்?” என்பதுதான். நம்மில் வலைப்பதிவரில் நிறையபேருக்கே ” இதனால் என்ன பலன்?” என்ற எண்ணம் இருப்பதைக் காண முடிகிறது.

சன்மானம் உண்டா?

வலைப்பதிவர் ஒருவர், தனக்குப் பழக்கமான ஒரு எழுத்தாளரிடம், தான் எழுதும் வலைப்பதிவுகளைப் பற்றி சொல்லி நீங்களும் வலைப்பதிவு ஒன்றினைத் தொடங்கி , வலைப்பதிவராக எழுதலாம் என்று சொல்லி இருக்கிறார். அவரோ எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு “ இண்டர்நெட், அது இது என்று செலவுசெய்து பதிவு எழுதுவதற்கு, பத்திரிகையில் தருவது போல சன்மானம் தருவார்களா?” என்று கேட்டு இருக்கிறார். நமது வலைப்பதிவர் “பணமெல்லாம் கிடைக்காது; எழுதுவதில் ஒரு ஆத்ம திருப்திதான்” என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அந்த எழுத்தாளரோ “ அப்படியானால் எதற்கு எழுத வேண்டும்? எல்லாம் வேஸ்ட்” என்று சொல்லி விட்டார்.

வலைப்பதிவு எழுதுவதால்

வலைப்பதிவு எழுதுவதால் ஏதாவது பயன் உண்டா என்று கேட்டுக் கொண்டே, இன்னும் எழுதிக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. ”விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடே” என்று எழுதியது போதும் என்று விலகியவர்களும் உண்டு. நண்பர் டி.என்.முரளிதரன் – மூங்கில் காற்று அவர்கள் சொல்லும் கருத்துக்கள் இவை.

உண்மையில் பார்த்தால் வலைப் பதிவு எழுதுவதால் பொருளாதாரப் பயன்கள் ஏதுமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. பின் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் சின்ன எழுத்துத் திறமைக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இணையம். கொஞ்சம் பேராவது நமது படைப்புகளை ரசிக்கிறார்கள். ஒரு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. பல நல்ல நட்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.  திறமையாளர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவர்களும் நம்மை அறிந்து கொள்ள வாய்ப்பை அமைத்துக் கொடுத்திருக்கிறது. நமது திறனை வளர்த்துக் கொள்ளும் மேடையாக வலைப்பூக்கள் அமைகின்றன. உடனடியாக நமது படைப்பின் கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது. எதிர்வினைகளை கையாள கற்றுக் கொடுக்கிறது . நம்மை புதுப்பித்துக்  கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது. பலரையும் ஊக்கிவிக்க முடிகிறது. நமது எண்ணங்களுக்கு ஒரு வடிகாலாக அமைகிறது. பத்திரிகையில் எழுதியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது . பிரபல பத்திரிகைகளின் பார்வையில் படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது . போட்டிகளில் கலந்து கொள்ளவும் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கிறது.  வலை உலகம் பல பாடங்களை கற்றுத்தரும் ஆசிரியராக இருக்கிறது. தொடக்கத்தில் எழுதியதற்கும் இப்போது எழுதுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிகிறது. (நன்றி: http://www.tnmurali.com/2014/04/benefits-of-writing-blogposts.html )

ரெஜி ஸ்டீபன்சன் - என்னும் ஆங்கில வலைப்பதிவர், வலைப் பதிவினால் கிடைக்கும் 25 பயன்பாடுகளை, தனது வலைத்தளத்தில் சொல்லி இருக்கிறார். (இயல்பான தமிழில் நான் இங்கு தமிழாக்கம் செய்துள்ளேன்)

#1. Networking with various people worldwide.
   (உலகில் உள்ள பல்வேறு மக்களிடம் வலைத் தொடர்பு
   கொள்ளலாம்)
#2. Blogs help you to improve your writing skills.
   (வலைப்பதிவுகள் உங்களது எழுத்துத் திறமையை அதிகரிக்கச்
   செய்கின்றன)
#3. Mastering a subject.
   (குறிப்பிட்ட துறையில் வல்லுநர் ஆகலாம்)
#4. Flexibility of working hours.
  (பணி செய்யும் போது பிறரிடம் அனுசரித்து செல்லும் மனப்பக்குவம்
  தரும்)
#5. Your photographic skills may improve.
   (உங்களிடம் இருக்கும் போட்டோகிராபி திறமைகள் மேம்படலாம்)
#6. Your videography skills may improve.
   (உங்களிடம் இருக்கும் வீடியோகிராபி திறமைகள் மேம்படலாம்)
#7. Your presentation skills may improve.
  (இன்று உங்களிடம் இருக்கும் திறமைகள் இன்னும் மேம்படலாம்.)
#8. Blogging as a source of income.
   (வலைப்பதிவு எழுதுவதிலும் வருமானம் உண்டு)
#9. Blogs promote small scale business.
   (உங்களது சிறுவணிகத்தினை மேம்படுத்தலாம்)
#10. Blogs promote large scale business.
   (உங்களது பெரும் வணிகத்தினை மேம்படுத்தலாம்)
#11. Blogs make it easy to connect with social media.
   (வலைப்பதிவினை சமூக ஊடகங்களோடு எளிதில் இணைக்கலாம் )
#12. Blog as a source of information
   (தகவல் பரிமாற்றத்திற்கு உதவும்)
#13. Blog as a helping tool for carrying out certain day-to-day activities.
   (அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவும்)
#14. Blogs may act as a portfolio.
   (உங்களுக்கென்று ஒரு போர்ட்ஃபோலியோ உருவாகும்)
#15. Blogs may help you to become a professional writer or blogger.
    (தொழில்முறை வலைப்பதிவாளர் அல்லது எழுத்தாளர் ஆகலாம்)
#16. Blogs may lead you to start a new career.
   (ஒரு புதிய தொழிலை தொடங்க உதவலாம்)
#17. Blogs are very easy to set up.
   (வலைப்பதிவை தொடங்குவது எளிமையானதே)
#18. Blogs help you to increase your knowledge in different fields.
   (வெவ்வேறு வகைகளில் உங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள
   உதவும்)
#19. Gaining popularity and respect from others.
   (மற்றவர்களிடம் நீங்கள் பிரபலமும் மதிப்பும் பெறலாம்)              
#20. Blogging as a hobby.
    (வலைப்பதிவை ஒரு பொழுது போக்கிற்காகவும் வைத்துக்
    கொள்ளலாம்) 
#21. Blogs are easy to update.
   (அன்றாட மேம்பாடு செய்து கொள்ளலாம்)
#22. Blogging may change your attitude towards life.
   (வாழ்க்கையில் உங்கள் அணுகுமுறைகளில் மாற்றம்
   உண்டாகலாம்)
#23.Good exercise for your mind
   (வலைப்பதிவு மனதிற்கு நல்ல பயிற்சியாகும்)
#24.It is possible to become a successful blogger without higher education.
   (அதிக மேற் படிப்பு இல்லாமலேயே ஒரு நல்ல வலைப்பதிவராக
   விளங்கலாம்)
#25.Location is not a problem for blogging as a career.
   (வலைப்பதிவிற்கு நாம் இருக்குமிடம் முக்கியமல்ல)


எனது அனுபவம்:

மாருதி கார் புதிதாக வந்த புதிதில், அவர்கள் “மாருதியின் உரிமையாளர்களே அதன் ஓட்டுநர்களாகவும் இருக்கிறார்கள்” என்று பெருமையாகச் சொன்னார்கள். அதைப்போல வலையுலகில் பெரும்பாலும் வாசகர்களே பதிவர்களாகவும், பதிவர்களே வாசகர்களாகவும் இருக்கக் காணலாம்.

நான் பணியில் (வங்கி) இருந்தபோது, எனக்கு முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில்தான் வேலை. வீட்டிற்கு வந்தால் படிக்கவே நேரம் இருக்காது. இருந்தாலும் ஒருமணி நேரமாவது படித்தால்தான் அன்றைய தினம் நிறைந்ததாகவே இருக்கும். எனவே நானும் தமிழ்மணம் போன்றவற்றில், முதலில் ஒரு வாசகனாக மட்டுமே இருந்து பின்னூட்டங்கள் எழுதிக் கொண்டு இருந்தேன். வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் பொழுது போக்காக எழுதத் தொடங்கி ஒரு வலைப்பதிவர் ஆனேன். இன்றும் என் விரல்களும், மனமும் நான் இன்னும் பணியிலிருப்பது போன்றே உணர்கின்றன. வலைப்பதிவர்கள் வட்டத்தில் எழுதுவது, அவர்களைப் பாராட்டுவது என்பது மனம் மகிழ்வான செயலாகவே இருக்கிறது. தனிமை உணர்வை விரட்டுகிறது. பல்வேறு பிரச்சினைகளில் மனம் தத்தளித்த போது, மனம் தடுமாறாமல் ஒருமுகப்படுத்த உதவியது. வலைப் பதிவர்கள் பலர் எழுதும் வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் பயணக் கட்டுரைகள், பல்வேறு அனுபவங்கள் யாவும் வழிகாட்டிகளாய் இருக்கின்றன. எனது அம்மா இறந்த மீளாத்துயரத்தில் நான் இருந்தபோது, வலைப்பதிவு நண்பர்கள் தந்த ஆறுதல் வார்த்தைகள், மற்றும் காலில் காயம் ஏற்பட்டு முடங்கியபோது அவர்கள் தந்த நம்பிக்கை மொழிகள் யாவும், என்னை நானே மீட்டெடுக்க உதவின. சுருக்கமாகச் சொல்வதென்றால் வலைப்பக்கம் வாராது இருந்திருந்தால், என்றோ தொலைந்து இருப்பேன்.

நூல் வெளியீட்டு விழா மற்றும் வலைப்பதிவர்கள் சந்திப்பு போன்ற சந்திப்புகளில், முகமறியாமல் இருந்த பல நண்பர்களை முதன்முதல் சந்திக்கும் போது ஏற்படும் உணர்வை (ஏதோ போன ஜென்ம பந்தம் என்பார்களே) விளக்க இயலாது.

                                            Image courtesy -  jannoon028/FreeDigitalPhotos.net