Friday 31 January 2014

நகரவாசியைக் கிண்டலடிக்கும் கிராமவாசி



நகரத்தில் இருப்பவர்கள் கிராமவாசியைக் கிண்டலடிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள். சுத்த பட்டிக்காடு, பட்டிக்காட்டான், வேப்பெண்ணை, முண்டாசு என்று எவ்வளவோ பெயர் சூட்டல்கள். “பட்டிக் காட்டான் ஆனையைப் பார்த்தாற் போல”, “பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போல”, என்று நிறைய வார்த்தைகள். நீர்க்குமிழி என்று ஒரு திரைப்படம். பாலச்சந்தர் இயக்கியது. அதில் மருத்துவமனைக்கு வரும் ஒரு கிராமத்தானைக் காட்டி நையாண்டி செய்து இருப்பார். இன்னொரு தமிழ் திரைப் படத்தின் தலைப்பு “பட்டிக்காடா பட்டணமா”. ராமராஜன் எங்க ஊரு பாட்டுக்காரன்என்ற படத்தில் டவுசர் போட்ட கிராமத்து ஆசாமியாக ( செண்பகமே, செண்பகமே என்று பாடி ) வருவார். அதற்குப் பிறகு அவரை டவுசர் என்றே கிண்டலடித்தாரகள், ந்மது ரசிகர்கள். இப்படி நிறைய.  நாட்டு எலியும் நகரத்து எலியும்என்று ஒரு கதையே இருக்கிறது. அம்புலிமாமா கதைகளில் வரும் கிராமத்து ஆசாமிகள் ஒன்றுமே தெரியாத அப்பாவியாய் இருப்பார்கள். அதில் வரும் வண்ணப் படங்களும் அப்படியே காட்டும். நாம் இப்படி கிண்டலடிக்க கிராமத்து ஆசாமிகளும் நம்மை (நகர வாசிகளை) கிண்டலடிக்கும் விதமே தனிவிதமாக இருக்கும். அதிகம் படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.; “ கெட்டும் பட்டணம் சேர் இவை கிராமத்தார் பழமொழிகள்.
  
என்னுடைய தாத்தா:

பள்ளி பருவத்தில் தொடர் விடுமுறை நாட்களில் எனது அம்மாவின் கிராமத்த்திற்கு சென்று விடுவேன். அங்கே போனால் அவர் கேட்கும் முதல் கேள்வி “ மேட்டூர் அணையில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது?  என்பதுதான்.  நாம டவுனில் பேப்பரில் இதையெல்லாம் எங்கே பார்க்கிறோம்? எனவே “தெரியாதுஎன்பேன். உடனே   இந்த பட்டணத்து பிள்ளைங்களே இப்படித்தான் “ என்பார்.

காலையில் மேயச் சென்ற ஆடு , மாடுகள் மாலையில் திரும்பும்போது அவைகளைப் பிடித்துக் கட்ட வேண்டும். ஆடுகளைப் பிடித்து கட்டுவதில் பிரச்சினை ஏதும் இருக்காது. ஆனால்  மாடுகளை கட்டுவதுதான் சிரமம். புதியவர்களுக்கு போக்கு காட்டும். எங்கள் தாத்தாவிடம் வலிய வந்து அவை அவை கட்ட வேண்டிய இடங்களில் சரியாக வந்து நின்று தலையை நீட்டும். ஆனால் புதியவனாக நான் கட்டும்போது போதும் போதும் என்று ஆகிவிடும். என்னுடைய தாத்தா அப்போது சொல்லும் வார்த்தை. “ என்னா படிச்சிருக்கே? மாட்டை புடிச்சி கட்ட தெரியலே “ என்பார். படிப்புக்கும் மாட்டை பிடித்துக் கட்டுவதற்கும் என்ன சம்பந்தம் என்று அவரிடம் கேட்க முடியாது.

ஒருமுறை இரட்டை மாட்டுவண்டியில் நெல்மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊரில் உள்ள அரிசி மில்லுக்கு போக வேண்டி இருந்தது. நானும் மூட்டைகள் மீது உட்கார்ந்து கொண்டு கூட சென்றேன். தாத்தாவும் வந்தார் மாட்டு வண்டியை எங்களது சொந்தக்கார பையன் ஓட்டினான். மாடுகள் அவைபாட்டுக்கு சென்றன. இடையில் நான் வண்டியை ஓட்ட ஆசைப்பட்டேன். வண்டிக்காரப் பையன் அவர் இடத்தைக் கொடுத்து, என்னை மாட்டு வண்டியை ஓட்டச் சொன்னார். அதுவரை வேகமாக சென்ற மாடுகள், கயிற்றைப் பிடித்து  நான் ஓட்ட ஆரம்பித்ததும் கொஞ்சதூரம் சென்று நின்றுவிட்டன. நான் எவ்வளவோ குரல் கொடுத்தும், அதட்டியும் அவை நகர மறுத்து விட்டன. வண்டிக்காரப் பையனும், தாத்தாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பழையபடி நான் நெல் மூட்டைகள் மீது வந்து உட்கார்ந்து விட்டேன்.


பெரிய இடத்துப் பெண் “என்ற படத்தில் படத்தில் (1963) பட்டிகாட்டு ஆசாமியாக எம்ஜிஆர் குடுமியோடு நடித்து இருப்பார். இந்த படத்தில் எம்ஜிஆர் மாட்டு வண்டி ஓட்டியபடி “பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணம்“ என்று பாடியபடி வருவார். இந்த பாடலில் நகரவாசிகளைக் கிண்டலடிக்கும் கருத்துக்களைக் காணலாம். பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

படிச்சவனுக்கு மூணு:

கிராமத்தில் அங்கங்கே ஆட்டுச் சாணம் , மாட்டுச் சாணம் கிடக்கும். கிராமத்தார்கள் மிதித்து விட்டால், மிதித்த காலை தரையில் அழுத்தி தேய்த்துவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள். இந்த விஷயத்தில் நகரவாசிகள் எப்படி? “படிச்சவனுக்கு மூணு இடத்தில் ஞானம் என்று அவர்கள் கிண்டலடிப்பார்கள். இங்கு படிச்சவன் என்று அவர்கள் குறிப்பிடுவது நகரவாசியைத்தான்.  அது என்ன, மூணு இடம்.? படிச்சவன் முதலாவதாக தான் மிதித்தது என்னவாக இருக்கும் என்று யோசிப்பானாம். அப்புறம் மிதித்த காலை தூக்கி பார்ப்பானாம். அப்படியும் சந்தேகம் தீராமல் மிதித்ததை மோந்தும் பார்ப்பானாம். இது எப்படி இருக்கு?

பொது இடங்களில்:

கிராமத்து ஆட்கள், டவுனுக்கு வந்தால் பஸ் நிலையத்தில் “ இந்த பஸ் எங்கே போவுது “ என்று ஒவ்வொரு பஸ்சாக கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்கள் எங்கே போக வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள். அவர்களே கொஞ்சம் பெரிய கிராமங்களில் உள்ள சிறிய பஸ் ஸ்டாண்டில் கிண்டலடிக்கும் வாசகம் “இந்த படிச்சவனுங்களே இப்படித்தான்! யாரையும் கேட்க மாட்டார்கள். கவுரவம் கொறஞ்சியா போய் விடும்

பொது ஆஸ்பத்திரி, தாசில்தார், கோர்ட் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் பக்கத்து நகரங்களிலிருந்து வருபவர்களாக இருக்கும். சில சமயம் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிடும். அப்போது அந்த கிராமத்து ஆட்கள் அடிக்கும் கிண்டலுக்கு அளவே இருக்காது. “ தொரை இன்னும் ஏந்திரிச்சு இருக்க மாட்டார்” : “ தொரை இன்னும் பல்லே விளக்கி இருக்க மாட்டார்என்பார்கள்.  

நடிகர் நாகேஷ் அனுபவி ராஜா அனுபவி என்ற படத்தில் கிராமத்து ஆளாக நடித்து இருப்பார். அதில் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்என்று பாடியபடி வரும் பாடலில் நகரவாசிகளைக் கிண்டலடிக்கும் கருத்துக்களைக் காணலாம். ( படம்: அனுபவி ராஜா அனுபவி பாடல்: கண்ணதாசன் பாடியவர்: T M சௌந்தரராஜன்  ) (1967)  
  
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெதுவாப் போறவுக யாருமில்லே
இங்கே  சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

சீட்டுக்கட்டுக் கணக்காக
இங்கே வீட்டக் கட்டி இருக்காக
வீட்டக் கட்டி இருந்தாலும்
சிலர் ரோட்டு மேலே படுக்காக
பட்டணத்துத் தெருக்களிலே
ஆளு நிக்க ஒரு நிழலில்லையே
வெட்டவெளி நிலமில்லையே
நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே
அடி சக்கே
வைக்கேலாலே கன்னுக் குட்டி
மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக்
கத்தலையே என்னது
ரொக்கத்துக்கு மதிப்பில்லையே - இங்கு
வெக்கத்துக்கு விலையில்லையே

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்
தேராட்டம் காரினிலே
ரொம்பத் திமிரோடு போறவரே
எங்க ஏரோட்டம் நின்னு போனா
உங்க காரு ஓட்டம் என்னவாகும்?
ஹேஹே
 
காத்து வாங்க பீச்சுப் பக்கம்
காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து
என்ன ஆச்சு வூட்டிலே
கெட்டுப்போன புள்ளிகளா
வாழப் பட்டணத்தில் வந்தீகளா?

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடியோ

( பாடல் வரிகள்: Thanks to  www.thamizhisai.com )

பாடலைக் கண்டு கேட்டு மகிழ கீழே க்ளிக் செய்யவும்


( PICTURES & VIDEO Link :  THANKS TO  “ GOOGLE ” )


Wednesday 29 January 2014

தி.மு.க மூன்றாக உடையும்



நான் சிறு வயது முதல் திமுக அனுதாபியாக இருந்தவன். கட்சி உறுப்பினர் கிடையாது. ஆனாலும் எம்ஜிஆரின் ரசிகன். கண்மூடித்தனமான ரசிகன் கிடையாது. படங்களை ரசித்தவன். அப்பொழுதெல்லாம் திமுகவின் பிரச்சாரம் என்பது மேடைப் பேச்சுதான். பள்ளி மாணவனாக இருந்தபோது என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வீதி வீதியாக “ போடுங்கம்மா ஓட்டு உதய சூரியனைப் பார்த்து என்று முழங்கியபடி சென்றவன். கட்சியிலிருந்து ஒன்றையும் எதிர்பார்த்தது கிடையாது. ஒரு சிங்கிள் டீ சாப்பிட்டுவிட்டு சுவர் விளம்பரம் எழுதும் கட்சிக்காரர்களோடு இரவு நேரம் உதயசூரியனை வரைந்தது ஒரு காலம்.

எம்ஜிஆர் பிரிந்த போது: 


அறிஞர் அண்ணா மறைந்தபோது கட்சிக்கு அப்படி ஒன்றும் பெரிய நெருக்கடி ஏற்பட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பின் கலைஞர் பொறுப்பேற்றவுடன் எல்லாமே சுமுகமாகவே முடிந்தது. எம்ஜிஆரே கருணாநிதிக்கு ஆதரவு  என்றவுடன் எல்லாம் அடங்கிப் போனார்கள். நாவலர் நெடுஞ்செழியனுக்கு  என்று அவர் பின்னால் ஒரு கூட்டம் கிடையாது. ஈ.வெ.கி. சம்பத்தை உசுப்பி விட்டதுபோல் அவரையும் உசுப்பி விட்டார்கள். அவர் புத்திசாலித்தனமாக இருந்து விட்டார்.

ஆனாலும் அந்த எம்ஜிஆரே திமுகவை விட்டு விலக்கப்பட்ட (விலகிய) போது கட்சியில் ஒரு பூகம்பம். எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள், கருணாநிதியின் எதிர்ப்பாளர்கள் அனைவரும் அப்படியே சென்று விட்டனர். ஆனாலும் திமுகவுக்கென்று இருந்த தீவிர தொண்டர்களும் திமுக அனுதாபியாக இருந்த எம்ஜிஆர் ரசிகர்களும் கட்சியை விட்டு போய்விடவில்லை. இதனால் திமுக முற்றிலும் சிதைந்து விடவில்லை. என்னைப் போன்ற கட்சி அனுதாபியான எம்ஜிஆர் ரசிகர்கள், எம்ஜிஆருக்காக அவருடைய கட்சியின் அனுதாபியாகப் போனது கிடையாது.

நெருக்கடி நிலைமையில்:

இந்தியாவில் நெருக்கடி நிலைமை இருந்த நேரம். திமுக ரொம்பவே நெருக்கடிக்கு உள்ளானது ஆனாலும் திமுகவை தனது சாமர்த்தியத்தால், தான் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சிகளில் தொண்டர்களையும், மக்களையும் சந்தித்து, சிதறாமல் பார்த்துக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி.

கோபால்சாமி ஸ்டண்ட்:


கட்சிக்கு கடுமையாக உழைத்த எத்தனையோ பேர் இருக்க வை கோபால்சாமியை மூன்றுமுறை ராஜ்யசபா எம்பியாக்கி பிரபலப் படுத்தியவர் கலைஞர். ஒரு கட்டத்தில் கருணாநிதிக்கும் வை கோபால்சாமிக்கும் உரசல் ஏற்பட்டது. தான் எப்போதும் எம்பியாகவே இருந்து டெல்லியில் லாபி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர். சினிமா ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களோடு படம் எடுத்துக் கொண்டு பெருமைப் பட்டுக் கொள்வார்கள். அதைப்போல விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்ததை ஒரு விளம்பரமாக்கியவர் வை கோபால்சாமி அவர்கள். உண்மையில் அவர் ஒரு அட்வகேட். அவர் தொழிலை அவர் செய்து வருகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது அவருக்கு அரசியல்.. தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார். தமிழ்நாட்டில் யாரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மனதில் வைத்து,  தேர்தலில்  ஓட்டு போடுவதில்லை. நேற்று திமுக. இன்று அதிமுக. நாளை எப்படியோ? இப்படித்தான் அரசியல் மாறிக் கொண்டு இருக்கிறது.. ஆனாலும் வை கோபால்சாமி அதனை மையப்படுத்தி தனிக்கட்சி தொடங்கி திமுகவை பிளவுபடுத்திட முயன்றபோது கட்சியைக் காப்பாற்றியவர் கருணாநிதி.

கருணாநிதிக்கு எதிரி கருணாநிதி:


திமுகவில் கருணாநிதிக்குப் பின் யார் என்று அடையாளம் காணப்பட்டவர் ஸ்டாலின் . கலைஞரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அதிகமாகவே விமர்சிக்கப்பட்டவர். அதிக தாக்குதல்களுக்கு ஆளானவர். ஆனாலும் கருணாநிதி தனது குடும்பத்தாரின் நிர்ப்பந்தத்தின் பேரில் மற்ற குடும்ப உறவுகளையும் கட்சியில் திணித்தார். இந்த விஷயத்தில் கருணாநிதியை  யாராலும் கண்டிக்க இயலவில்லை. குடும்ப நெருக்கடி காரணமாக கட்சியினரையும் அவரால் கட்டுப்படுத்த இய்லவில்லை. கடந்த திமுக ஆட்சியில்,கேட்க ஆளில்லாததால், சாதாரண கவுன்சிலரிலிருந்து மேல்மட்டம் வரை புகுந்து விளையாடினார்கள். அவர்களைக் கண்டிக்க ஆளில்லை. பொது மக்களின் வெறுப்பு காரணமாக திமுக ஆட்சியை இழந்தது.

இப்போது கட்சிக் கட்டுப்பாடு என்பது நீர் மேல் எழுதிய எழுத்தாக, கலைஞரின் கையை விட்டு போய்க் கொண்டு இருக்கிறது. அதன் எதிரொலிதான் ஸ்டாலின் அழகிரி உச்சகட்ட பூசல். அரசியல் தலைவர்கள் சிலர் கனிமொழியையும் உசுப்பிவிட வாய்ப்புகள் அதிகம். எனவே  எதிர்காலத்தில் திமுக.வானது 1.ஸ்டாலின் திமுக 2. அழகிரி திமுக 3. கனிமொழி திமுக. என்று மூன்றாக உடைய வாய்ப்புகள் அதிகம்.அப்போது உண்மையான தி.மு.க விசுவாசிகள் வெறும் பார்வையாளர்களாக இருப்பார்கள் காலப்போக்கில் கனிமொழி அரசியலை விட்டே விலகவும் நேரலாம்..

( நான் இப்போது எந்த கட்சியின் அனுதாபியும் கிடையாது  ஒரு காலத்தில் என்னைப் போன்றவர்கள் அனுதாபியாக இருந்த திமுக இப்போது இப்படி ஆகிவிட்டதே என்ற ஆதங்கம்தான் இந்த கட்டுரை )



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 

Sunday 26 January 2014

ஷேக்ஸ்பியரின் - மாக்பெத் (MACBETH)



ஷேக்ஸ்பியர் ( SHAKESPEARE) எழுதிய மாக்பெத் (MACBETH) -  இது ஒரு துன்பியல் நாடகம் ஆகும். நான் இளங்கலை படித்தபோது எங்கள் கல்லூரி  நூலகத்தில் இந்த நாடக நூலை எடுத்து படித்ததாக நினைவு. எங்கள் கல்லூரியில், ஷேக்ஸ்பியர் பற்றி சொல்லும்போது திருச்சி பேராசிரியர்கள் எம்.எஸ்.நாடார், C S கமலபதி ஆகியோர் ஷேக்ஸ்பியர் நாடகங்களை பாடம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். அப்போது அவர்கள் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தனர். அதிலும் எம்.எஸ்.நாடார் அவர்கள் பாடம் எடுக்கும்போது, ஷேக்ஸ்பியராகவே மாறி நடித்துக் காட்டுவார் என்றெல்லாம் சொன்னார்கள். படிக்கும்போது அந்த நாடகத்தை ஆழ்ந்து படிக்க இயலவில்லை. பின்னாளில் வேலைக்குச் சென்று சேர்ந்த பிறகுதான் மாக்பெத்தை ரசித்துப் படிக்க நேரம் கிடைத்தது.

மாக்பெத் நாடகத்தின் கதை:

சூனியக்காரிகள், அரண்மனை ரகசியம், அரசியல் சதி, நம்பிக்கைத் துரோகம், கொலை, ஆட்சி கவிழ்ப்பு இப்படி நிறைய விஷயங்கள் கொண்ட நாடகம் “மாக்பெத். அனைத்துக்கும் காரணம் ஒரு பெண். அவள் ஸ்காட்லாந்து நாட்டின் தளபதி மாக்பெத் (MACBETH) என்பவனது மனைவி, லேடி மாக்பெத் (LADY MACBETH)

ஸ்காட்லாந்தின் மன்னன் டங்கன்   (DUNCAN). அவனுக்கு இரண்டு மகன்கள். மால்கம் மற்றும் டொனால்பைன். டங்கன் ஒரு உள்நாட்டு கலவரைத்தை அடக்க தனது நாட்டின் தளபதி மாக்பெத் (MACBETH) தலைமையில் படைகளை அனுப்புகிறான். அவனும்,  தனது நண்பனும் இன்னொரு தளபதியுமான பேங்க்வோ (BANQUO)வுடன் போர்முனைக்குச் சென்று எதிரிகளை அழித்துவிட்டு திரும்புகிறான். வரும் வழியில் மாக்பெத்தும் பேங்க்வோவும் மூன்று சூனியக்காரிகளை (Three Witches) எதிர்பாரத விதமாக சந்திக்கின்றனர். அந்த மூன்றுபேரும் மாக்பெத், பேங்க்வோ இருவரது வாழ்க்கையிலும் நடைபெறப் போகும் நிகழ்ச்சிகளை சொல்கின்றனர். அவர்கள் மாக்பெத்தை அரசனாவாய் என்றும், பேங்க்வோவிடம் நீ அரசனாக ஆகாவிட்டாலும் அரசர்களின் தந்தையாவாய் ‘ என்று சொல்லுகின்றனர். பின்னர் மறைந்து விடுகின்றனர்.

மாக்பெத் அரசனாகவேண்டும் , தான் அரசியாக வேண்டும் என்பதற்காக டங்கனை கொல்லச் சொல்கிறாள் லேடி மாக்பெத். 


அரசன் டங்கன் கொல்லபபடுகிறான். பின்னர் அவன் அரசனாக இருக்க இடைஞ்சலாக இருப்பவர்கள் தீர்த்துக் கட்டப்படுகிறார்கள். பேங்கோவும் கொல்லப்படுகிறான். பேங்கோவின் பிள்ளைகள் தப்பி விடுகின்றனர். உயிருக்கு பயந்து டங்கனின் மகன்கள் இருவரும் தப்பி ஓடி விடுகின்றனர்.

நாடகத்தின் முடிவில் மாக்பெத் கொல்லப்படுகிறான். லேடி மாக்பெத் தற்கொலை செய்து கொள்கிறாள். மால்கம் ஆட்சிக்கு வருகிறான்.

மாக்பெத் கதையில் நிறைய கதை மாந்தர்கள். எனவே எங்கே யார் என்று புரிந்து கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். 

சிறப்பான வசனங்கள் :

ஷேக்ஸ்பியரின் ஒவ்வொரு நாடகத்திலும் சிறப்பான மேற்கோள் காட்டத்தக்க வசனங்கள் உண்டு. அந்த வகையில் “மாக்பெத் நாடகத்திலிருந்து சில வசனங்கள்.

பாலைவனப் பகுதி. ஓரிடத்தில் மூன்று சூனியக் காரிகள் ஒன்று சேர்கின்றனர். அப்போது மூவரும் ஒருமித்த குரலில் சொல்லும் வாசகம்.

நல்லதெல்லாம் தீயது. தீயது எல்லாம் நல்லது.
Fair is foul, and foul is fair.

போரில் வெற்றி பெற்ற மாக்பெத் தனது நண்பனும் இன்னொரு தளபதியுமான பேங்கோவுடன் ஒரு தரிசு நிலத்தை கடக்கிறான். அப்போது அவன் மனதில் இன்னதென்று இனம் புரியாத கலக்கம்
மாக்பெத் தன் நண்பனிடம் சொன்னது.

நல்லதும் கெட்டதும் கலந்த இதுபோன்ற ஒருநாளை நான் இதுவரை பார்த்ததில்லை.
So foul and fair a day I have not seen.


மாக்பெத் தனது மனைவிக்கு கடிதம் எழுதுகிறான். அதில் மூன்று சூனியக்காரிகள் சொன்ன  வார்த்தைகளையும், அவற்றுள் பலித்தவைகளையும் குறிப்பிட்டு இருந்தான். அதனைப் படித்ததும் லேடி மாக்பெத்திற்கு தனது கணவன் அரசனாக வேண்டும், தான் மகாராணியாக வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. இருந்தாலும் தனது கணவன் காரியத்தைக் கெடுத்து விடுவானோ என்ற எண்ணம் ஏற்பட தனக்குள் பேசும் வசனம்:

அவர்கள் சொன்னபடியே நீங்கள் அரசன்  ஆக வேண்டும். இருந்தாலும் உங்களுக்குள் இருக்கும் அன்பான குணத்தைக்  கண்டு அஞ்சுகிறேன். உங்களுக்கு அரசன் ஆக வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. ஆனாலும் குறுக்கு வழியை நாட மாட்டீர்கள். நல்லவனாக இருந்தால் உயர் நிலையை அடைவது எங்ஙனம்? எதற்காக பயப்படுகிறீர்களோ அதனை நீகக வேண்டும். அதனை நான் செய்வேன்.

Glamis thou art, and Cawdor; and shalt be
What thou art promised. Yet I do fear thy nature;
It is too full o' the milk of human kindness
To catch the nearest way; thou wouldst be great,
Art not without ambition; but without
The illness should attend it; what thou wouldst highly,
That thou wouldst holily; wouldst not play false,
And yet wouldst wrongly win.

அரசன் டங்கன் மாக்பெத்தின் அரண்மனைக்கு விருந்தாளியாக வருகிறான். அவனுக்கு மாக்பெத்தும் அவனது மனைவியும் உபசரிக்கிறார்கள். லேடி மாக்பெத்தின் சூழ்ச்சியை அறியாத அரசன் டங்கன் அவளிடம் சொல்லும் வார்த்தை இது

நம்மைத் தொடரும் அன்பானது சிலசமயம் தொல்லையாக உள்ளது. இருந்தாலும் அது அன்பு என்பதால் நாம் நன்றியறிதல் செய்கிறோம். உனக்கு நான் தரும் அன்புத் தொல்லைகளுக்கு இறைவன் நல்ல வெகுமதியளிக்க வேண்டிக் கொள்க “


அரசன் டங்கனைக் கொலை செய்ய மாக்பெத்திற்கு மனமில்லை. அவன் தனது மனைவியிடம்

“ அன்பே! அமைதியாயிரு! என்னால் ஒரு மனிதனாக எல்லா காரியத்தையும் செய்ய முடியும். அதற்குமேல்  யார் என்ன செய்வார்கள்? “


என்று சொல்லுகிறான். கடைசியில் லேடி மாக்பெத்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அரசனைக் கொலை செய்ய முடிவு செய்கிறான். அப்போது அவன் சொல்லும் வார்த்தை

“ தீய இதயத்தில் தோன்றும் தீய எண்ணத்தை தீய முகம் மறைக்க வேண்டும் 


கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்! தீயவர்களை நல்லவர்களாகவும் , எதிரிகளை நண்பர்களாகவும் மாற்றும் மனிதர்களையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! 

God's benison go with you; and with those
That would make good of bad, and friends of foes!

டங்கன் கொலையானதும் டங்கனின் மகன்கள் டொனால்பெயின் ( DONALBAIN ), மால்கம் ( MALCAM ) இருவரும் குதிரைகளில் தப்புகின்றனர். அப்போது டொனால்பெயின் சொல்லும் வாசகம் இது.

நான் அயர்லாந்து செல்கிறேன். இங்கே நெருங்கிய உறவிலும் மனிதர்களின் புன்முறுவலிலும் கொடிய வாள் மறைந்து இருக்கிறது.


லேடி மாக்பெத் மன்னன் டங்கனைக் கொன்ற பிறகு மனம் அமைதியற்றவள் ஆகி தனக்குத்தானே பேசுகிறாள். தூக்கத்தில் நடக்கிறாள். ஒரு கட்டத்தில் தன் கைகளில் டங்கனின் இரத்தக் கறைகள் இன்னும் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு கழுவுகிறாள். அப்போது சொல்லப்படும் வசனம் ....

இங்கே இன்னும் இரத்த வாடை வீசுகிற்து. அரேபிய வாசனைத் தைலங்கள் அனைத்தாலும் இதனை நீக்க முடியாது. ஓ .. ஓ ..ஓ



         (படம் மேலே லேடி மாக்பெத் தூக்கத்தில் நடத்தல்)


ஒரு குகை. அதன் உள்ளே நடுவில் ஒரு கொப்பரை. அதில் சிலவற்றை கொதிக்க வைத்து இருக்கிறார்கள். இடி இடிக்கும் ஓசை, சூனியக்காரிகள் மூவரும் அங்கே தோன்றுகின்றனர். மூவரும் ஒருவருகொருவர் பேசிக் கொள்கின்றனர். அப்போது ஒருத்தி சொல்லும் வசனம்

எனது கட்டை விரல்கள் அரிக்கின்றன. எனவே ஏதோ ஒரு கெட்டது இந்த வழியில் வருகிறது.
By the pricking of my thumbs,
Something wicked this way comes.


டன்சினேன் கோட்டை. அங்கே மாக்பெத். ஒரு அழுகுரல் கேட்கிறது. என்ன அழுகை என்று கேட்கிறான். லேடி மாக்பெத் இறந்து விட்டதாக செய்தி. அப்போது மாக்பெத் சொல்லும் வசனம்.

ஒவ்வொரு நாளும், நாளை நாளை நாளை என்றே நாட்கள் நகர்ந்து நேற்றைய நாட்களாக மாறி விடுகின்றன. நமமை முட்டாளாக்கி மரணத்தையே காட்டின.. மெழுகுவர்த்தியே! அணைக! அணைக! வாழ்க்கை என்பது ஒரு நடக்கும் நிழல்! மேடையில் நடிக்கும் பரிதாபமான நடிகன். முட்டாளால் சொல்லப்பட்ட வெற்றுக் கூச்சல் கொண்ட ஒன்றுமில்லாத கதை.  




இது போன்று நிறைய வசனங்கள். சொல்லிக் கொண்டே போகலாம்.

( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )



Thursday 16 January 2014

திருமண பொருத்தம் - நட்சத்திரம், ராசி பார்க்கலாமா?



ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் வீட்டிற்கு போயிருந்தேன். அவர் மக்கள் சமூகப் பணிகளில் ஆர்வம் மிக்கவர். நான் போயிருந்த சமயம் பேராசிரியர் வீட்டில் இரண்டு வயதான தம்பதினர் இரண்டு ஜோடிகள் வந்து இருந்தனர். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடி , பேராசிரியரிடம் சொல்லிவிட்டு போக வந்தவர்கள். இதுபோல் அடிக்கடி நிறையபேர் அவர் வீட்டிற்கு வந்து, தங்கள் பிள்ளைகளைப் பற்றிய விவரம் தந்துவிட்டு போவார்கள். பேராசிரியர் வீட்டில் ஆண் , பெண் என்று நிறைய வரன்கள் அடங்கிய பைல்கள் இரண்டு இருந்தன. வந்தவர்கள் அவற்றில் இருந்த விவரங்களைப் பார்த்துவிட்டு நட்சத்திரப் பொருத்தம் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றனர். பேராசிரியர் இந்த திருமண தகவல் சேவையை சமுதாயப் பணியாக இலவசமாக, ஒரு அறக்கட்ட்ளைக்காக  செய்து வருகிறார். நான் அவரிடம் எல்லாவற்றையும் கம்ப்யூட்டரில் ஏற்றி இலவசமாக எல்லோரும் பார்க்கும் வண்ணம் வலைத்தளம் ஒன்றைத் தொடங்கியும் தருவதாகச் சொன்னேன். அவரும் சரி என்றார்.

என்ன பொருத்தம் ஆகா என்ன பொருத்தம்:

அவர் வீட்டில் இருந்த இரண்டு பைல்களையும் எனது வீட்டிற்கு எடுத்து வந்தேன். தேவையான தகவல்கள் மட்டும் கொண்ட பொதுவான PROFILE ஒன்றை உருவாக்கிவிட்டு அதன்படி எல்லா வரன்களின் விவரத்தையும் கம்ப்யூட்டரில் ஏற்றத் தொடங்கினேன். டாக்டர்கள், சிவில் என்ஜீனியர்கள், சாப்ட்வேர் என்ஜீனியர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள், தனியார் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நிறையபேர். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளின் விவரத்தோடு , எது இருக்கிறதோ இல்லையோ கட்டு கட்டாக ஜாதகத்தைத்தான் முக்கியமாக இணைத்து இருந்தார்கள். அதிலும் சிலர் தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தோடு இன்ன நட்சத்திரம், இன்ன ராசி உள்ளவைகளே பொருத்தம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

வரன் விவரங்கள் அடங்கிய பைல்கள் என்னிடம் இருந்த படியினால், பேராசிரியர் தனது வீட்டிற்கு வருபவர்களை என்னிடம் அனுப்பி வைத்தார். வந்தவர்கள் பேராசிரியர் அவர்களிடம் கொடுக்க இருந்த வரன் விவரங்களை என்னிடம்  கொடுத்துவிட்டு , என்னிடம் கொடுக்கப்பட்ட பைல்களில் இருந்து தேவையான வரன்களின் குறிப்புகளை குறித்துக் கொள்வார்கள். பெரும்பாலும் எல்லோரும் வெளியில் எடுத்துப் போய் ஸிராக்ஸ் போட்டுக் கொள்வார்கள். வருபவர்கள் எல்லோரும் பிள்ளைகளின் பெற்றோர்தான். அவர்கள் பிறந்த தேதி, பிறந்த இடம், வயது, படிப்பு, வேலை, போட்டோ எல்லாம் பார்ப்பார்கள். பிடித்து இருக்கும். இருந்தாலும் கடைசியில் நட்சத்திரம், ராசியில் வந்து நின்று விடுவார்கள். பொருத்தம் இல்லை என்பார்கள். அதிலும் பெண் பிறந்த நட்சத்திரங்களில், குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் (அவற்றை இங்கு குறிப்பிடத் தேவையில்லை) என்றால் கேட்கவே வேண்டாம்.

அனைத்து வரன்களையும் டைப் செய்து முடிந்ததும், ஒரு இலவச திருமண தகவல் வலைத்தளத்தை, அறக்கட்டளை ஒன்றினுக்கு உருவாக்கிவிட்டு, பைல்கள் இரண்டையும் பேராசிரியரிடம் ஒப்படைத்து விட்டேன். இனிமேல் அவர் பார்த்துக் கொள்வார்.

பொருத்தம் பார்க்கலாமா? வேண்டாமா?

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். பெண்பார்க்கும் விஷயத்தில் மாப்பிள்ளை வீட்டார் செருப்பு தேயத்தேய அலைந்து விசாரிக்க வேண்டும் என்று கூட அப்பொழுது சொல்வார்கள். முப்பது வயதுக்கு மேல் ஆகி விட்டாலே நட்சத்திரம், ராசி பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என்றும் சொல்கிறார்கள் திருமணப் பொருத்தம் பத்து என்றால் அதில் ஆறு பொருத்தமாக இருந்தால் கூட போதும் என்று சொல்பவர்களும் உண்டு.. ஆனாலும் எல்லோரும் 10/10  ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள்.

 சுயம்வரம்என்ற பெயரில் திருமண தகவல் மையம் ஒன்று  வரன்தேடும் நிகழ்ச்சி ஒன்றை ஒரு கல்யாண மண்டபத்தில் நடத்தினார்கள். அங்கும் இதே நிலைமைதான். ஒவ்வொரு பெற்றோரும் மேடையில். தமது பிள்ளைகளின், பிறந்த தேதி, பிறந்த இடம், வயது, படிப்பு, வேலை என்று சொல்லிவிட்டு இன்ன நட்சத்திரம் உள்ள வரன்தான்  வேண்டும் என்று முடித்தார்கள். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர் மேடையில் தனது டாக்டர் மகனோடு மேடைக்கு வந்தார். மகனின் விவரங்களை மட்டும் சொல்லிவிட்டு, ராசி, நட்சத்திரம் சொல்லவில்லை. உடனே கூட்டத்தில் இருந்தவர்கள்  பையனின் ராசி, நட்சத்திரம் சொல்லச் சொன்னார்கள். அவர் “ நான் எனக்கு மருமகளாக வருபவருக்கு ராசி, நட்சத்திரம் பார்ப்பதில்லை. ஆனாலும் பெண் வீட்டார் இதனைப் பார்த்துக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை. பையனை பிடித்து இருந்தால் தொடர்பு கொள்ளவும் “ என்று சொன்னார்.

எனவே தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும்போது நட்சத்திரம், ராசி பார்ப்பது என்பது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது.
  
உறவுக்குள் நடக்கும் திருமணம்:

அந்த காலத்தில் மாமன் மகனையும், மாமன் மகளையும், உற்வுக்காரர்களுக்குள் திருமணம் முடித்தபோது ரொம்பவும் நுணுக்கமாக பார்த்ததாகத் தெரியவில்லை.. என்னுடைய அப்பா அம்மா திருமணம் நட்சத்திரம் , ராசி பார்த்து நடக்கவில்லை. உறவுமுறைக் கல்யாணம்தான். என்னுடைய திருமணத்தில் நான் எதுவும் பார்க்கவில்லை. ஆனால் பெண் வீட்டில் பார்த்துக் கொளவதில் ஆட்சேபனை இல்லையென்று சொல்லி விட்டேன்.

இன்று  எத்தனையோ காதல் திருமணங்கள் நடக்கின்றன. குறிப்பாக நகர்ப்புறத்தில் நிறையவே நடக்கின்றன. நட்சத்திரம், ராசி பார்ப்பதில்லை. நன்றாகவே இருக்கிறார்கள். இங்கு மனப் பொருத்தம் மட்டுமே! ஒரு சில திருமணங்கள் தோல்வியில் இருக்கலாம். காதல்மணத்தைப் பற்றி காதலும் ஜாதியும் http://tthamizhelango.blogspot.com/2012/11/blog-post_23.html என்ற தலைப்பில் ஏற்கனவே பதிவு ஒன்றில் நான் எழுதியிருப்பதால் அதனைப் பற்றி விவரிக்கவில்லை.

நாள், நட்சத்திரம், ராசி பார்த்து இருவீட்டாரும், நடத்திய  திருமணங்களிலும் தோல்விகள் உண்டு. இன்றைக்கு குடும்பநல கோர்ட்டுகளில் அதிகம் இழுவையில் இருப்பவை எல்லாம் பார்த்து நடந்தவைதான். திருமணத்திற்கு முன் யோக்கியமாக இருக்கும் ஒருவர் திருமணத்திற்குப் பின் பிறழ்ந்து போனால் என்ன செய்ய முடியும். எல்லாம் பார்த்து தாலி கட்டப் போகும் சமயத்தில் நின்று போன திருமணங்களும் உண்டு.

ஒவ்வொரு சமூகத்திலும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் திருமண ரேஸில் நின்று கொண்டு இருக்கிறார்கள். இதில் நிறையபேர் முதிர் கன்னிகள் மற்றும் முதிர் கண்ணன்கள். ஜாடிக்கு ஏற்ற மூடி என்று, ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்று பார்த்தாலே போதும். நிறையபேருக்கு திருமணம் நடந்துவிடும். எந்த மணமாக இருந்தாலும் இருமனம் ஒத்தால் திருமணத்திற்குப் பின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். இனிக்கிற வாழ்வே கசக்கும். கசக்கிற வாழ்வே இனிக்கும்.

மக்களைப் பெற்ற மகராசி “ என்ற படத்தில் “ ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா? “ என்று தொடங்கும் பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ கீழே க்ளிக் செய்யவும். ( பாடல்: கவிஞர் கா மு ஷெரீப்  பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாசன் & சரோஜினி, இசை: கே வி மகாதேவன் )


 
( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )