Monday 13 February 2017

முதல்வர் பதவியும் சரஸ்வதி சபதமும்



’கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை’ – என்ற கதையாக, இருக்கிற பிரச்சினைகளை யெல்லாம் விட்டு விட்டு, இப்போது ’சசிகலா முதல்வர் ஆகலாமா?” என்று இருபக்கமும் விவாதம் நடைபெறுகிறது. தற்போதைய முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களின் திடீர் தியானப் புரட்சியும், பேட்டிகளும் தமிழக அரசியலை, இன்னும் சூடாக்கி விட்டது. சசிகலா நடராஜனுக்கு ஆதரவாக அப்போலோ புகழ் சி.ஆர் சரஸ்வதி, வளர்மதி போன்றவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்ய, டீவி காட்சிகளில் வந்து விட்டார்கள். பழ.நெடுமாறன், தோழர் தா.பாண்டியன், போன்றவர்களும் தங்களது விசுவாசக் குரலை ஒலிக்கத் தொடங்கி விட்டார்கள். எதிர்க்கட்சி என்ற முறையில் ஸ்டாலின் போன்றவர்கள் தங்களது அரசியலை தொடங்கி விட்டார்கள். மக்களும் பணப் பிரச்சினை, ரேஷன் பிரச்சினை, ஆதார் குழப்பங்கள், பீட்டாவுக்கு தடை, மெரினா தாக்குதல் போன்றவற்றை மறந்து விட்டு நாடகமேடைப் பக்கம் வேடிக்கை பார்க்க வந்து விட்டதில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி கட்சியினருக்கு, அப்பாடா என்று ஒரு ஆசுவாச பெருமூச்சு. 

எங்கே தவறு?

இந்திய ஜனநாயக அரசியல் முறைப்படி, யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம், பெரும்பான்மை ஜனநாயகம் என்ற அடிப்படையில் அந்த கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள்,, முதல்வரை  தேர்ந்தெடுக்கலாம் என்று அரசியல் சாசனம் சொல்வதால், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா முதல்வர் பதவி கோருகிறார். அவர் அந்த பதவிக்கு தகுதியானவரா இல்லையா என்பதற்கு இங்கு எந்த அளவுகோலும் இல்லை.

சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போதே, பார்வையாளராக வந்த சசிகலாவை, சபாநாயகர் ஆசனத்தில் உட்காரவைத்து விட்டு, ’நான் அப்படித்தான் செய்வேன்? உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று மற்றவர்களை ஒரு பார்வை பார்த்தவர் ஜெயலலிதா.
  
ஓ.பி.எஸ்சின் கலகக்குரல்

நெடுநாள் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும், மனதுக்குள் இருந்த மன அழுத்தத்தையும் மெரினாவில் போட்டு உடைத்து விட்டார் ஓ.பி.எஸ். இக்கட்டான சமயங்களில் மட்டும், தேவைப் படும்போது தன்னை பயன்படுத்திக் கொண்டதையும், இப்போது அவமானப்பட்டதையும் அவரால் தாங்கிக் கொள்ள முடியாததன் வெளிப்பாடே அவருடைய காலங்கடந்த திடீர்க் கலகம். சூழ்ச்சி அரசியலில் இதெல்லாம் சகஜம். தி.மு.கவை விட்டு எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது இருந்த நிலைமைதான் இப்போது அ.தி.மு.கவிலும் உண்டாகி இருக்கிறது. ஆனால் ஒ.பி.எஸ் அவர்களை எம்.ஜி.ஆரோடு ஒப்பிட முடியாது. வி.கே.சசிகலா என்ற சின்னம்மா தோற்றத்திலும் உடை அலங்காரத்திலும் தன்னை ஜெயலலிதாவாக காட்டிக் கொள்வதை நிறையபேர் ரசிக்கவில்லை. அவர் சசிகலாவாகவே இருக்கட்டும். மெரினா புரட்சியில், பல்வேறு பிரச்சினைகளும் ‘ஜல்லிக்கட்டு’ என்ற மையப் புள்ளியில் குவிந்ததைப் போன்று, சசிகலாவுக்கு எதிரான எல்லா எதிர்ப்புக் குரல்களும் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் ஒன்று சேர்ந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதும், இரட்டை இலை யாருக்கு என்பதும் ஒரு பொதுத்தேர்தல் வந்தால்தான் தெரியும்.

கதைகளும் கற்பனைகளும்

நமது நாட்டில் மன்னர் ஆட்சியின்போது சாமான்யன் கேள்வி கேட்கமுடியாது, அரசாள முடியாது. ஆனால் சாமான்யன் அரசனை கேள்வி கேட்பது போலவும், அரசன் சாதாரண மக்களிடம் கருத்து கேட்பது போலவும் கதைகள் உண்டு. அரச வம்சத்தில் வாரிசு இல்லாத நிலையில். பட்டத்து யானை கையில் ஒரு மாலையைக் கொடுத்து வீதிக்கு அனுப்புவார்களாம்: அந்த பட்டத்து யானை யார் கழுத்தில் மாலை போடுகிறதோ, அவனை ராஜாவாக்கி விடுவார்களாம் இப்படியும் ஒரு கதை. இதன் அடிப்படையில், கரிகால் சோழன் மன்னன் ஆனான் என்றும் ஒரு கதை உண்டு. (நிச்சயம் அந்த யானையை சாதாரண மக்கள் இருக்கும் தெருக்களின் பக்கம் அழைத்து வந்து இருக்க மாட்டார்கள் எனலாம்)

இதையெல்லாம் விட, மேலாக, காட்டுக்குப் போன ராமன் வரும்வரை, அவனுடைய பாதுகைகளை அரியாசனத்தில் வைத்து பரதன் நாடாண்டதாக இராமாயணத்தில், ஒரு கதை உண்டு. இன்றும் ‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்ற கதாகலாட்சேபம் விமரிசையாகத்தான் சொல்லப் படுகிறது.

சரஸ்வதி சபதம்

சில புராணக் கதைகளையும், மக்கள் மத்தியில் நிலவிய சில நாடோடிக் கதைகளையும், ஒன்றாகப் பிசைந்து, தனது கற்பனா சக்தியின் மூலம், புராண திரைப்படக் கதைகளை தயாரித்து இயக்கி வெற்றி கண்டவர் A.P.நாகராஜன் அவர்கள். அந்தகாலத்து ஊர் திருவிழாக்களில் இவரது புராணப்பட வசனங்களை, சவுண்ட் சர்வீஸ் அபிமானிகள் லவுட் ஸ்பீக்கரில் ஒலிபரப்பாமல் இருக்க மாட்டார்கள்.

மேலே சொன்ன அம்சங்களோடு வெற்றிகண்ட ஒரு தமிழ்த் திரைப்படம்தான் A.P.நாகராஜனின் ‘சரஸ்வதி சபதம்’. இந்த படத்தின் கதைப்படி, ”தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா, இங்கு நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா” என்று பாடிவந்த பிச்சைக்காரப் பெண் ஒருத்தி, யானை மாலை போட்டதால் பட்டத்து ராணி ஆகிறாள். பட்டத்து ராணி ஆனதும், அவள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் இந்த கால அரசியலை நினைவூட்டும். நிறையபேருக்கு இந்த படமும், கதையும் அத்துப்படி என்பதால் கதையை இங்கு விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை. இந்த வேடத்தில் நடித்து இருப்பவர் நடிகை கே.ஆர் .விஜயா அவர்கள்.

சட்ட திருத்தம் தேவை

எனவே, ஒரு பிரதமராகவோ அல்லது முதல் அமைச்சராகவோ தேர்ந்தெடுக்கப் படும்போது அவர் ஜனநாயக முறைப்படி தேர்தலில் நின்று, (எம்.பி அல்லது எம்.எல்.ஏ - என்று) தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருத்தல் அவசியம் என்று அரசியல் சட்ட திருத்தம் செய்யாதவரை, இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும். 

இப்போது நடக்கும் அரசியல் செய்திகளைப் பார்க்கும்போது , சட்டசபையை கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்துவதே நாட்டுக்கு நல்லது என்று தோன்றுகிறது.  

Wednesday 1 February 2017

புதுக்கோட்டை - வீதி எண்.35 இல்



சென்ற வாரம் ஒருநாள் எனக்குள் ஒரு பதட்டம்; ஆனால் காரணம்  இன்னதென்று அறிந்து கொள்ள முடியவில்லை; உடம்பில் வியர்வை வேறு. இரத்த அழுத்தம் என்பதால் இருக்குமோ என்று டாக்டரைப் பார்க்கலாம் என்று இருந்தேன். ஆனால் டாக்டரைப் பார்ப்பதற்கு முன்னரே எனக்கு எதனால் என்று சுதாரித்துக் கொண்டு விட்டேன். சென்றவாரம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த மாணவர்கள் இளைஞர்கள் மீது நடந்த தாக்குதலை டிவியில் பார்த்ததன் எதிரொலி, மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு நந்திக்கடலில் நேர்ந்த அவலத்தைப் போல, கடலுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இடையில் இருந்த மாணவர்களுக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்ற பதற்றம்தான் இவ்வாறு வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே டீவி நிகழ்ச்சிகளை பார்ப்பதை நிறுத்தி விட்டு, மூன்று நாட்களுக்கு டிவி பக்கம் போகாமல் ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். எனினும் ஒரு கண்டனப் பதிவை எழுதிய பின்னரே எனது மனது அமைதியானது. (இந்த அனுபவத்தை இந்த வீதி - கூட்டத்தில், எனது பேச்சிலும் குறிப்பிட்டுள்ளேன்)

இந்த சமயத்தில்தான், ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்கள் ஜனவரி மாத வீதி இலக்கிய கூட்டத்தில் (29.01.2017 – ஞாயிறு) பேச வருமாறு அன்புடன் அழைத்தார். நானும் ‘மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’ என்று கலந்து கொண்டேன். வீதியில் இலக்கிய நண்பர்களைச் சந்தித்த பிறகு கலகலப்பாகி விட்டேன்.

கலந்துரையாடல்:

எப்போதும் போல திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு பஸ்சில் காலையில் புறப்பட்டு, கூட்டம் நடக்கும் ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜிற்கு, கூட்டம் துவங்கும் நேரமான  9.30 மணிக்கெல்லாம் சென்று விட்டேன். அங்கே ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்கள் அன்புடன் வரவேற்றார்.. சற்று நேரத்தில், கூட்டத்தின் தலைமைப் பேச்சாளர் திரு T.சுதந்திரராஜன் அவர்களும் வந்து விட்டார். மற்றைய நண்பர்கள் வரும் வரை எங்களுக்குள் கலந்துரையாடல் நிகழ்ந்தது. 

படம் மேலே – ஆசிரியர் கஸ்தூரிரங்கன்

அப்போது ’படிக்க வேண்டிய பத்து நூல்கள்’ என்ற தலைப்பில் பேச விரும்புவோர் பேசலாம் என்று கூட்ட அமைப்பாளர் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்கள் அழைத்தார். வீதி இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவரான சகோதரி ஆசிரியை கீதா அவர்கள் மட்டுமே முழுமையாக பத்து நூல்கள் பற்றி சொன்னார்.

படம் மேலே - ஆசிரியை கீதா நூல் விமர்சனம் செய்தபோது (படம் உதவி Devatha Tamil)

வலைப்பதிவர் கவிஞர் மீரா செல்வகுமார் அவர்கள், தான் ரசித்துப் படித்த கரன் கார்க்கி எழுதிய ’கறுப்பர் நகரம்’ என்ற நாவலைப் பற்றி சிலாகித்துப் பேசியதும், அப்போதே அந்த நூலை வாங்க வேண்டும், படிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். என்னுடைய பங்காக, டாக்டர் மு.வரதராசன் எழுதிய ‘மொழி வரலாறு, டாக்டர் கே.கே.பிள்ளை எழுதிய ‘தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்’ மற்றும் எட்கர் தர்ஸ்டன் எழுதிய தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் – ஏழு தொகுதிகள் (தமிழில் முனைவர் க.இரத்னம்) – ஆகிய நூல்கள் பற்றி சொன்னேன்.

தலைமை உரை

படம் மேலே - எழில் ஓவியா (படம் உதவி: கஸ்தூரிரங்கன்)

படம் மேலே – தலைமை உரை செய்த T.சுதந்திரராஜன் (படம் உதவி: கஸ்தூரிரங்கன்)

நிகழ்ச்சியின் தொடக்கமாக எழில் ஓவியா அவர்கள் ஒரு அருமையான பாடலைப் பாடினார். கூட்டத்திற்கு திரு T.சுதந்திரராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். இவரைப் பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியம். காவல்துறை அமைச்சுப்பணி அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நூல்கள் வாசிக்கும் ஆர்வம் மிக்கவர். நிறைய நூல்கள் வாசித்து இருக்கிறார். இவரது பேச்சினில் பல நூல்களைப் பற்றியும் தனது மலரும் நினைவுகளையும் சொன்னது ரசனையாக இருந்தது.









கவிஞர்கள் சுகுமாரன், மாலதி, சிவக்குமார், மீரா செல்வகுமார் ஆகியோர் கவிதை வாசிப்பு செய்தனர். 

படம் மேலே – கவிஞர் மீரா செல்வகுமார் கவிதை வாசிக்கிறார் (படம் உதவி Devatha Tamil)

மீரா செல்வகுமாரின் கவிதையில் தமிழ்ச் சொற்கள் துள்ளி விளையாடின. கூட்டத்தின் முடிவில் அவரிடம் உங்கள் கவிதைகளில் தமிழ்சொற்கள் கண்ணதாசனிடம் வந்து விழுவதைப் போல வந்து விழுகின்றன என்று பாராட்டிச் சொன்னேன்.

படம் மேலே – ஆசிரியர் மகாசுந்தர் (படம் உதவி: கஸ்தூரிரங்கன்)

கவிதை நூல் விமர்சனம் என்ற வகையில் ஆசிரியர் முனைவர் மகாசுந்தர் அவர்கள், கவிஞர் தங்கம் மூர்த்தி எழுதிய ’தேவதைகளால் தேடப்படுபவன் ’ என்ற நூலினை ஆய்வுரை செய்தார். அவர் அந்த நூலினை எந்த அளவுக்கு மிகுந்த ஈடுபாடு கொண்டு படித்து இருக்கிறார், என்பதனை, வாசித்தபோது, அவரது உடல் மொழியும், கவிதை வரிகளை வாசிக்கும்போது  குரலில் தொனித்த ஏற்ற இறக்கங்களும் சொல்லாமல் சொல்லின. அவர் பேசி முடிந்ததும், புதுக்கோட்டையில் ஒரு சிறப்பு பட்டிமன்றக் கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், இன்னொரு சாலமன் பாப்பையா உருவாகி வருகிறார் என்று பாராட்டினேன்.

எனது அனுபவங்கள்

படம் மேலே – நான் பேசியபோது (படம் உதவி: அண்டனூர் சுரா)

நான் பேச வேண்டிய தருணமும் வந்தது. ’வலையுலக அனுபவங்கள்’ என்ற’ தலைப்பை ஏற்கனவே சொல்லி இருந்தார்கள் பேசுவதற்கு வசதியாக, எனது பதிவுகளை மீள் பார்வையாக வாசித்து குறிப்புகள் எடுத்து ஒரு கட்டுரை வடிவில் டைப் செய்து எடுத்துப் போயிருந்தேன். ஆனால் நான் மேடையில் பேசிய பேச்சுக்கும் இதில் உள்ள குறிப்புகளுக்கும் நிறையவே வித்தியாசம். எனது பேச்சினில் வலைப்பூ பற்றிய பொதுப் பார்வை, ஃபேஸ்புக்கிற்கும் வலைத்தளத்திற்கும் உள்ள வேறுபாடு, விமர்சனங்கள், வலைப்பதிவர் சந்திப்பால் எனக்கு நிகழ்ந்த நன்மை, சில தொழில் நுட்பங்கள் பற்றியும், மின்னூலை விட அச்சுநூல்கள் சிறந்தவை ஏன், கவிதை நூல்களை ஒரு கவிஞர் ஏன் பிரபலம் செய்ய வேண்டும் என்றும் பன்முகமாக பேசினேன்.

படம் மேலே – கவிஞர் தங்கம் மூர்த்தி நடுவில் இருப்பவர் (படம் உதவி Devatha Tamil)

(மேலே - படம் உதவி : thangam moorthy facebook)

கூட்டத்திற்கு புரவலர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியான விஷயம். கூட்ட அமைப்பாளர் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்கள் நன்றியுரை சொல்லிட விழா இனிதே முடிந்தது.கூட்டத்தின் முடிவில், அமெரிக்காவில் இருக்கும், மென்பொறியாளர் சகோதரி கவிஞர் தேன்மதுரத்தமிழ் கிரேஸ் எழுதிய ’பாட்டன் காட்டைத் தேடி’ என்ற கவிதைநூல் விற்பனைக்கு வந்தது. இரண்டு பிரதிகள் வாங்கினேன். ஒன்று எனக்கு. இன்னொன்றை கூட்டத்திற்கு தலைமை தாங்கிய T.சுதந்திரராஜன் அவர்களிடம் அன்பளிப்பாக வழங்கினேன். 
  
படம் மேலே – ஸ்ரீமலையப்பன் (படம் உதவி: கஸ்தூரிரங்கன்)

(மேடையில் நானும் ஒரு பேச்சாளன் என்ற முறையில் அமர்ந்து இருந்ததால் என்னால் எனது கேமராவில் நிறைய படங்கள் எடுக்க இயலாமல் போய்விட்டது. எனவே நண்பர்கள் எடுத்த படங்களையே அதிகம் இங்கு இணைத்துள்ளேன் அவர்களூக்கு நன்றி.) 

தொடர்புடைய பதிவு:
வலையுலக அனுபவங்கள் http://tthamizhelango.blogspot.com/2017/01/blog-post_29.html