Showing posts with label வலைச்சரம். Show all posts
Showing posts with label வலைச்சரம். Show all posts

Saturday, 20 June 2015

வலைச்சரம் – சில சர்ச்சைகள்


தமிழ் வலையுலகில் தனக்கென ஒரு பெரிய வாசகர் வட்டமும் ஆதரவும் பெற்ற (26.02.2007 இல் தொடக்கம்) வலைச்சரம், 22.மார்ச்.2015 இற்குப் பிறகு புதிதாக ஆசிரியர் பொறுப்பேற்க யாரும் வராதபடியினால் அப்படியே நின்றது. வலைச்சரம் மீதுள்ள ஆதங்கத்தினால் வலைச்சரம் ஒரு வேண்டுகோள்
http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_97.html என்ற ஒரு பதிவு ஒன்றினை எழுதி இருந்தேன்.

அதில் பல நண்பர்களும் தங்களது கருத்தினை வெளியிட்டு இருந்தார்கள். அவற்றுள் மூத்த வலைப்பதிவர் திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்)  அவர்களின் கருத்துக்களைக் கண்ட சகோதரி ஆதி.வெங்கட் (கோவை டூ தில்லி) அவர்கள், “வை.கோ சார் - எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்த தாங்களே உடனடியாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று தங்களின் உற்சாகமான எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம். இதை உடனடியாக பரிசீலனை செய்யலாமே சார்.. என் அன்பான வேண்டுகோள் இது...:18 April 2015 at 09:01.... என்று ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்தார். நானும் இதனை வழி மொழிந்தேன்; சகோதரி தேனம்மை லஷ்மணன் அவர்களும் வழிமொழிந்து கருத்துரை தந்தார்.

திரு V.G.K அவர்களும், வலைச்சர நிர்வாகிகளின் சம்மதத்தோடே எழுதத் தொடங்கினார். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது.

வலைச்சர விதிகள்:

வலைச்சரத்தில் எழுதும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்று சிலவற்றை வலைச்சர நிர்வாகிகள் நிர்ணயித்துள்ளனர். அய்யா திரு V.G.K அவர்களின் முதல் மூன்றுநாள் பதிவுகளைத் தொடர்ந்து படித்ததில், அவர் தனது வலைத்தளத்தில் எழுதுவது போலவே எழுதுவது தெரிய வந்தது. இருந்த போதிலும், ஒரு மூத்த பதிவர் என்ற முறையில் அவருக்காக விதிவிலக்கு கொடுத்து இருக்கலாம் என்றே எண்ண வேண்டி இருந்தது. அதன்பின்னர் திரு V.G.K அவர்களின் வலைத்தளத்தில் (நினைவில் நிற்போர் - 14ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/14.html ) தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் கருத்துரை, மறுமொழி என்று சூடாக விவாதம் நடந்து இருக்கிறது. இது நிறையபேருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் திரு V.G.K அவர்கள் தனது பதிவுகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதில்லை. இதற்கிடையே முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் தனது பாணியில் வலைச்சரம் பற்றிய ஒரு கண்டனம் என்ற தலைப்பினில் ஒரு பதிவை எழுதி இருந்தார். http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_20.html  அதில் ( 15. ஜூன். 2015) நான் எழுதிய கருத்துரை இது.

// இந்த பதிவைப் பார்த்த பிறகுதான் ஒரு மிகப் பெரிய விவாதமே அய்யா திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களது வலைத்தளத்தில் நடைபெற்று இருப்பதைப் பார்த்தேன். திரு V.G.K அவர்கள் ஆர்வமாக வலைச்சரம் ஆசிரியர் பணி செய்ய தானாகவே முன்வந்தார். வலைச்சரத்தில் உள்ள சில விதிமுறைகள் அவருக்கு ஒத்துவரவில்லை என்றதும் விலகிவிட்டார்.

ஆனால் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எங்கே வலைச்சரத்தை மற்றவர்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற ஆதங்கத்தில், வலைச்சர நிர்வாகிகளில் ஒருவர் என்ற முறையில் நிறையவே எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல பல பின்னூட்டங்களை திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எழுதி இருக்க வேண்டியதில்லை.

நினைவுக்கு வந்த ஒரு காட்சி திருவிளையாடல் படத்தில் (தருமி நகைச்சுவை) பாண்டியன் அரசவையில் புலவர் நக்கீரனும் இறையனாரும் சூடாக விவாதம் செய்யும் போது , மன்னன் செண்பகப் பாண்டியன் சொல்வதாக ஒரு வசனம்

புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள். புலமைக்கு சர்ச்சை தேவைதான். அது சண்டையாக மாறிவிடக் கூடாது.

எது எப்படி இருந்த போதிலும் , இனியும் வேண்டாம் விவாதம், நண்பர்களே.. //

இந்த கருத்தினை மேற்கோள் காட்டி, திரு V.G.K அவர்களது மேற்படி பதிவினில் பின்னூட்டமாக நான் எழுதியபோது அவர் தந்த மறுமொழி இது.


@தி.தமிழ் இளங்கோ
தங்களின் வருகைக்கும் புதியதொரு தகவலுக்கும் நன்றி.

//இனியும் வேண்டாம் விவாதம், நண்பர்களே.. //

OK Sir. Thanks for your kind advise. Accepted. – vgk ///


தமிழ்வாசியின் மின்னஞ்சல்:

இதற்கிடையே தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் மின்னஞ்சல் ஒன்று (15.06.2015) எனக்கு வந்திருந்தது. (இதன் முழு விவரம் இங்கு வேண்டியதில்லை) அதற்கு நான் அன்றே அனுப்பிய பதில் மின்னஞ்சல் இது.

// அன்புள்ள சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு வணக்கம். நலம். தங்கள் நலனறிய நாட்டம்.

தங்களது  மின்னஞ்சலை மதியம்தான் பார்த்தேன். வலைப்பதிவு நண்பர்களிடையே இப்படி தேவையற்ற சர்ச்சை ஏற்பட்டுவிட்டதே என்ற வருத்தம்தான் மேலிட்டது.

// எனக்காக இல்லாவிட்டாலும் நீங்கள் பற்று வைத்துள்ள வலைச்சரத்திற்காக ஆதரவு தெரிவித்தோ, எங்களுக்காகவோ ஒரு வரி கூட நீங்கள் எழுதவில்லையே? ஏன் ஐயா? //

என்று கேட்டு இருந்தீர்கள்.

திரு V.G.K அவர்களது வலைத்தளத்தில் (14 ஆம் நாள்) அவரது வரிகளை வைத்தே எனது பின்னூட்டம் எழுதி இருக்கிறேன். இதில் வலைச்சர விதிகள் அவருக்கு ஒத்துவரவில்லை என்பதையும், தன் போக்கிலேயே அவர் எழுத ஆசைப்பட்டார் என்பதையும் அவரே சொல்லி இருப்பதையும் காணலாம்.

இதே பதிவினில் G.M.B  அய்யா, சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் ஆகியோர் எழுதிய பின்னூட்டங்களையும் காண்க. மேலும் வலைச்சரம் 11.06.2015 பதிவினில் சூரி என்கிற சுப்புத் தாத்தா எழுதிய பின்னூட்டத்தையும் பார்க்க. 

மேலும் இது குறித்து நானே ஒரு பதிவை எழுதலாம் என்று எண்ணி இருந்த நேரத்தில், முனைவர் பழனி. கந்தசாமி அவர்கள் இதுகுறித்து பதிவு ஒன்றை எழுதியிருந்தார். வீண் சர்ச்சையை மேலும் வளர்க்க வேண்டாம் என்பதால் நான் அவருடைய பதிவினில் எனது கருத்தை மட்டும் எழுதியுள்ளேன்.

மூத்த வலைப்பதிவர் திரு V.G.K மற்றும் வலைச்சரம் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டில் என்ன செய்வது என்ற திகைப்பின் காரணமாக பல பதிவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர் என்பதே உண்மை.

தமிழ்மணம் ஒரு நதியைப் போல; வலைச்சரம் அதன் கிளைநதியைப் போல. நதிப் பிரவாகம் என்பது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மனம் தளர வேண்டாம்.

அன்புடன் தி.தமிழ் இளங்கோ, 15.06.2015 //

இதற்கு அவர் (தமிழ்வாசி பிரகாஷ்) அன்றே அனுப்பிய பதில் மின்னஞ்சல் இது.

// வணக்கம் ஐயா...
   நலமே...
   தங்களது பதில் மிகவும் திருப்தியளிக்கிறது. நன்றி //

சர்ச்சைகள் தேவையில்லை:


முனைவர் பழனி.கந்தசாமி அவர்களின் நேற்றைய (19.06.15) பதிவை (http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_5.html பதிவுலகில் அநியாயங்கள் நடக்கின்றனவா? ) பார்க்கும்போது இன்னும் தேவையற்ற சர்ச்சைகள் தொடர்வதாகவே தெரிகிறது. யார் தொடர்கிறார் என்ற விவாதத்திற்குள் நான் நுழைய விரும்பவில்லை. ஏற்கனவே எனது கருத்தினை சொல்லி விட்டேன். நாளை ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது அவரவர் முகத்தை எங்கு வைத்துக் கொள்வோம் என்பதனை யோசிக்க வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள் மாநாடு தொடங்க இருக்கிறது. சகோதரி தேனம்மை லஷ்மணன் அவர்கள் தனது வலைத்தளத்தில் ( http://honeylaksh.blogspot.in ) சொல்வதைப் போல

                            வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
                          என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! 
                                        - தேனம்மை லஷ்மணன்



Thursday, 16 April 2015

வலைச்சரம் – ஒரு வேண்டுகோள்



சில மாதங்களுக்கு முன்னர் “தமிழ் திரட்டிகளுக்கு என்ன ஆயிற்று? என்ற ஒரு பதிவினை எழுதி இருந்தேன்.அதில்(http://tthamizhelango.blogspot.com/2014/05/blog-post_9869.html ) என்ன காரணம் என்று தெரியவில்லை? இப்போது சமீப காலமாக நன்கு பிரபலமாக இருந்த தமிழ் தளங்கள் நின்று விட்டன. அல்லது செயல்படாமல் நிற்கின்றன என்ற எனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்தேன்.

இப்போது வலைச்சரத்தில் 22.மார்ச்.2015 இற்குப் பிறகு புதிதாக ஆசிரியர் பொறுப்பேற்க யாரும் வராதபடியினால் அப்படியே நிற்கிறது. வலைச்சரம் மீதுள்ள ஆதங்கத்தில் (அன்பர்கள் மன்னிக்கவும்) எழுதிய கட்டுரை இது.

வலைச்சரம்:


தமிழ் வலையுலகில் தனி மணிமகுடமான் வலைச்சரம் 26.02.2007 இல் தொடங்கப் பட்டது வலைச்சரம். இங்கு வாரம் ஒரு வலைப் பதிவர் ஆசிரியராக இருப்பார். அவர் தனது மனங் கவர்ந்த அல்லது படித்த வலைப் பதிவர்களை அந்த வாரம் முழுக்க அறிமுகம் செய்ய வேண்டும். அப்போது வலைச்சரத்திற்கு வரும் பின்னூட்டங்களுக்கும் பதில் தர வேண்டும். இதுதான் வலைச்சரத்தின் நடைமுறை. இந்த வலைச்சரத்தில் வலைப்பதிவர் உதவிப்பக்கம் மற்றும் தமிழில் எழுத மென்பொருள் என்று ஆக்க பூர்வமான பதிவுகளும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் வலைச்சரத்தில் யார் யார் ஆசிரியர்களாக இருந்தார்கள் என்ற பட்டியலும் இருக்கின்றது வலைச்சரத்திற்கு ஒருவாரம் ஆசிரியர் பொறுப்பு என்பது பெருமிதமாகவும் அந்த வலைப் பதிவரையும் அறிமுக நண்பர்களையும் ஊக்குவிப்பதாகவும் இருக்கின்றது.

அன்பின் சீனா மற்றும் தமிழ்வாசி பிரகாஷ்

அன்பின் சீனா அவர்கள் வலைச்சர வரலாற்றை கீழ்க்கண்ட தனது பதிவுகளில் எழுதி இருக்கிறார். மேலும் அன்று தொடங்கி இன்றுவரை பொறுப்பேற்ற வலைப்பதிவர் பெயர், வலைத்தள முகவரி, மின்னஞ்சல் மற்றும் செல் போன் எண்கள் ஆகியவற்றை கொண்ட MS WORD XL  கோப்பு (FILE) ஒன்றையும் தந்துள்ளார். வலைப் பதிவர்களோடு தொடர்பு கொள்ள இந்த கோப்பு பயன்படும்.




வலைச்சரத்தில் அந்த வார ஆசிரியரின் பணி நிறைவடைந்த ஒவ்வொரு ஞாயிறு அன்றும், அடுத்த வாரம் வரப் போகும் ஆசிரியரைப் பற்றி அறிமுகம் செய்வது அன்பின் சீனாவின் வழக்கம்.

அன்பின் சீனா அவர்களுக்கு வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் குழுவில் துணையாக இருந்து வருபவர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள். இவர் "வலைச்சரம்" சீனா ஐயா சிறப்புப் பேட்டிhttp://www.tamilvaasi.com/2012/02/blog-post_27.html  என்ற பதிவினை மீள் பதிவாக வெளியிட்டுள்ளார். இந்த பதிவினில் வலைச்சரம் பற்றிய தகவல்கள், மற்றும் வலைப் பதிவர்களுக்கான பயனுள்ள தகவல்களைக் காணலாம்.

எனது வேண்டுகோள்

கடந்த ஏழு ஆண்டுகளாக  தொடர்ந்து இயங்கி வந்த வலைச்சரத்தில், கடந்த மாதங்களில் ஒரே ஆசிரியர் ஒருவாரம் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விட்டு அடுத்த வாரமும் அவரே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. தனது அனுபவத்தை, விடாது கருப்பு வலைச்சரத்தில்! என்றே தலைப்பிட்டு எழுதினார் திரு வெங்கட் நாகராஜ் அவர்கள்.

மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K (வை.கோபால கிருஷ்ணன்) அவர்கள் என்னை ஒருவாரம் வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்க அழைத்தபோதும், இரண்டாவது முறையாக அன்பின் சீனா அவர்கள் அழைத்தபோதும், அப்போது கண்ணில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உடனடியாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இருந்த போதிலும் அப்போதிருந்தே, வலைச்சரம் ஆசிரியர் பணிகளுக்காக வலைப்பதிவர்கள் பற்றிய குறிப்புகள் படங்கள் ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொண்டேன். பின்பு அன்பின் சீனா அவர்கள் மறுபடியும் அழைத்தபோது, தட்டாமல் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு பணி (18.பிப்ரவரி.2013 முதல் 24.பிப்ரவரி.2013 முடிய) செய்தபோது இவை உதவின. அவ்வப்போது பின்னூட்டங்கள் இடும்போது மட்டும் கொஞ்சம் அதிகம் கம்ப்யூட்டரில் உட்கார வேண்டி இருந்தது. மேலும் நான் பணி விருப்பஓய்வு பெற்று வீட்டில் இருந்தபடியினால் பணிச்சுமையோ அல்லது அலுப்போ தெரியவில்லை.  

அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள், வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது எழுதியது இது.

// ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா. பதிவர்களையும் அவர்களின் பதிவுகளையும் தேடிப்பிடிச்சு, தினம் ஒரு பதிவு வீதம் போட்டு, வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதி, மூச்சு முட்டிப் போச்சுங்க.  ஆச்சு, ஒரு மாதிரியாகத்தானே இந்த வலைச்சர ஆசிரியப் பொறுப்பு என்னும் இன்பமான சுமையை இறக்கி வைக்கிறேன். //

                                         ( PICTURE - COURTESY: “ GOOGLE IMAGES  )

இதற்கு வலைப்பதிவர்கள் மத்தியில் நிலவிவரும் சலிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது தொடர்ச்சியாக ஏழு நாட்கள் ஆசிரியர் பொறுப்பில் இருக்க வேண்டுமே என்ற எண்ணமும் இருக்கலாம். ஏனெனில் முன்புபோல் அதிகம் யாரும் எழுதுவதும் இல்லை; பின்னூட்டங்கள் தருவதும் இல்லை.

இப்போது வலைச்சரம் கடந்த மூன்று வாரங்களாக அப்படியே நிற்கிறது. எனவே “வலைச்சரம்  அடுத்து என்ன யுத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலைப்பதிவர்கள் யோசிக்க வேண்டிய தருணம் இது. என்னுடைய ஆலோசனை என்னவெனில், ஆசிரியர் பணிக்கு யாரும் இல்லாத போது வலைச்சரத்தின் அந்நாளைய பழைய பதிவுகளை மீள் பதிவுகளாக வெளியிடலாம். இதில் ஒன்றும் தவறேதும் இல்லை. வாழ்க வலைச்சரம்!

                                         

Monday, 7 October 2013

அன்பின் சீனா – மெய்யம்மை ஆச்சி தம்பதியினருடன் ஒரு சந்திப்பு




வலைச்சரம்“ பொறுப்பாசிரியரான சீனா அவர்களின் முழுப்பெயர் சிதம்பரம் காசிவிஸ்வநாதன் என்பதாகும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் முதன்மை அதிகாரியாக (CHIEF MANAGER) பணி புரிந்தவர். (நன்றி www.facebook.com/Cheenakay ) தனது வங்கிக்குத் தேவைப்படும் மென்பொருட்களை  (SOFTWARE) வெளியில் வாங்காமல் அவர்கள் வங்கியிலேயே உருவாக்குவது என்ற குழுவில் முக்கிய பங்கினை வகுத்தவர். அசை போடுவது “ http://cheenakay.blogspot.in என்ற வலைப் பதிவில் எழுதி வருகிறார். அன்பின் சீனா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுபவர்.

// தஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிக்கிறேன். இளமைக் கால நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து பதிவு செய்ய ஆசை. தமிழ் கற்றவன் - அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்//

// எனக்கு எழுதியதில் இருந்த இன்பத்தை விட பதிவுகளைப் படித்ததிலும், பொருள் பொதிந்த மறு மொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன். அதிக நேரம் செலவிட்டேன். அதிக நண்பர்களைப் பெற்றேன். //

என்று சொல்லும் இவர் இப்போது அதிகம் எழுதுவதில்லை. வலைச்சரம் பொறுப்பாசிரியராக இருந்து பதிவர்களை ஊக்குவிப்பதிலும், உற்சாகமூட்டும் பின்னூட்டக் கருத்துக்களைத் தருவதிலும் ஆர்வமாக இருந்து வருகிறார்.

நமது அன்பின் சீனா அய்யாவின் மனைவி மெய்யம்மை ஆச்சி அவர்களும் சிறந்த வலைப்பதிவர். தமிழ் ஆர்வம் கொண்ட இவர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் புலவர் பட்டம் பெற்று ஆசிரியையாக பணி புரிந்தவர். பட்டறிவும் பாடமும்  http://pattarivumpaadamum.blogspot.in மற்றும் எண்ணச் சிறகுகள் வள்ளுவம் “ http://ennassiraku.blogspot.in என்ற இரு வலைப் பதிவுகள் இவருடையது. இரண்டாவது வலைப்பதிவில் திருக்குறளைப் பற்றி பேசுகிறார்.

// ஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன்! ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது! என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன்! இது தான் நான்! இது - மெய்! இதைத் தவிர வேறில்லை எனக்கு! //


என்று சொல்லுகிறார் இவர்.

அன்பின் சீனா- மெய்யம்மை ஆச்சி தம்பதியினர் நேற்று, ஞாயிறு அன்று  (06. 10.2013) திருச்சி வந்து பெமினா ஹோட்டலில் தங்கி இருந்தனர். அவர்கள் வரும் செய்தியை மூத்த வலைப் பதிவர் திருச்சி வை கோபாலகிருஷ்ணன்  http://gopu1949.blogspot.in   அவர்கள் எனக்கு முன்னரே தெரிவித்து இருந்தார். அவர்களை நேற்று மாலை இருவரும் சந்தித்து உரையாடினோம். VGK அவர்கள் அன்பின் சீனாவுக்கு பொன்னாடை போர்த்தி தான் எழுதிய நூல்களை இருவருக்கும் வழங்கி கௌரவம் செய்தார். நான் கவிஞர் கண்ணதாசன் எழுதிய “அர்த்தமுள்ள இந்துமதம்  என்ற முழுத் தொகுதி (10 பாகங்கள்) அடங்கிய நூலினை அன்பின் சீனா தம்பதியினரிடம் தந்தேன்.

அப்போது புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். எனது கேமராவில் எடுக்கப்பட்ட படங்களில் ஒன்று இரண்டைத் தவிர மற்றவை சரியாக அமையவில்லை. (கேமராவை சர்வீஸ்  செய்ய வேண்டும்) எனவே VGK  (வை கோபாலகிருஷ்ணன்) அவர்கள் பதிவில் வந்த சில படங்களையும் இங்கு இணத்துள்ளேன். அவருக்கு நன்றி. திருச்சியில் அன்பின் சீனாவுடன் நடைபெற்ற இந்த சந்திப்பினை
61 / 2 / 2 ] மீண்டும் பதிவர் சந்திப்பு - அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் திருச்சி விஜயம். .  http://gopu1949.blogspot.in/2013/10/61-2-2.html  என்ற பதிவில் திரு VGK  எழுதியுள்ளார். .

படம்.1 : (மேலே) அன்பின் சீனா மெய்யம்மை ஆச்சி தம்பதியினர்


படம்.2: (மேலே) கண்ணதாசன் எழுதிய நூலை நான் தந்தபோது


படம்.3: (மேலே)  திரு VGK, அன்பின் சீனா ஆகியோருடன் நான்

படம்.4: (மேலே) திரு VGK பொன்னாடை போர்த்துகிறார்
PHOTO THANKS TO http://gopu1949.blogspot.in


 
படம்.5: (மேலே) திரு VGK தான் எழுதிய “எங்கேயும் எப்போதும் என்ற நூலினைத் தருகிறார்.
PHOTO THANKS TO http://gopu1949.blogspot.in
  
படம்.6: (மேலே) திரு VGK பரிசுப் பொருள் வழங்குகிறார்
PHOTO THANKS TO http://gopu1949.blogspot.in