Wednesday 26 February 2014

தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள்



அது ஒரு பேக்கரி கடை. பெயர்தான் அப்படி. மற்றபடி, அங்கு வடை,  பஜ்ஜி, முறுக்கு, பானி பூரி, மசாலா பூரி, ஜிகிர்தண்டா, பேக்கரி வகையறாக்களான கேக், பிஸ்கட், ரொட்டி அனைத்தும் மற்றும் காபி, டீ விற்பனையும் உண்டு. நான் வெளியே  கடைத்தெரு என்று சென்று வரும்போது அந்தக் கடையில் காபி குடிப்பது வழக்கம். சிலசமயம் மெதுவடையும் சட்னியும் உண்டு. கடையின் உள்ளே மேஜையில் பரிமாறுதலும் வெளியே டோக்கன் முறையில் விற்பனையும் உண்டு. இந்த கடையில் பணிபுரிபவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவருமே இந்தி பேசும் வட இந்திய இளைஞர்கள். தமிழ் தெரியாது. ஆனாலும் சமாளித்துக் கொள்கிறார்கள். இந்த கடையை நடத்துபவர் ஒரு தமிழர்.   

இன்னொரு ஸ்வீட் ஸ்டால். அங்கேயும் இதே கதைதான். அங்கு இனிப்பு காரம் தயார் செய்வதிலிருந்து விற்பனையாளர்கள் வரை வட இந்திய இளைஞர்கள்தான். நாம் போனால் சிலசமயம் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பொருட்களை அடையாளம் காட்ட வேண்டி இருக்கும். ஒருமுறை மூன்று கால் இனிப்பு என்பதனை மூன்று விரல்களால் காட்டியபோது, மூன்று கிலோவாக போடத் தொடங்கி விட்டார் அங்குள்ள இளைஞர்.

ஒருமுறை வெளியூர் சென்றுவிட்டு வீடு வர நேரமாகிவிட்டது. இரவுநேர டிபனுக்காக பஸ் ஸ்டாண்ட் அருகிலிருந்த இரவுநேர ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு சென்று இருந்தேன். அங்கு முக்கால்வாசி பேர் படித்துக் கொண்டே வேலை பார்க்கும் வட இந்திய இளைஞர்கள். மேஜையில் தண்ணீர் வைப்பது முதல், பரிமாறுவது, சுத்தம் செய்வது வரை சலிக்காது செய்கிறார்கள். ஆனாலும் அவர்கள் முகத்தில் இனம் தெரியாத சோகம்.

ஒரு நண்பர் வீட்டு நிச்சயதார்த்தம். ஒரு ஹோட்டலில் மினிஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் முடிந்ததும், மதிய உணவு தொடங்கியது. சாப்பாட்டு மண்டபம் சென்றபோது ஒரு மணிப்பூர் இளம்பெண் கைகூப்பி, மழலைத் தமிழில் ஒவ்வொருவரையும்,  வணக்கம் சொல்லி வரவேற்றார். அங்கு உண்வு பரிமாறலில் இருந்து அனைத்து பணிகளையும் செய்தது மணிப்பூர் இளைஞர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மேற்பார்வையாளர் அவர்களுக்கு உதவியாக இருந்தார்..

அதேபோல் ஒரு இடத்தில் கட்டிட பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. அங்கு ரெடிமேட் கான்கிரீட் போடும் கலவை எந்திரம் கொண்டு வந்தார்கள். அதில் பணிபுரிந்த அனைவருமே இந்தி பேசும் இளைஞர்கள். அவர்களை வழி நடத்த இந்தி தெரிந்த நம்மூர்க்காரர் ஒருவர். நான்கு வழிசசாலை வேலையாட்கள், மெட்ரோ ரயில் பணி செய்பவர்கள் என்று எல்லா இடத்திலும் அவர்கள்தான். லல்லு பிரசாத் யாதவ் மத்தியில் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது நிறைய பீகாரிகள் தமிழ்நாட்டில் ரெயில்வேயில் நுழைக்கப்பட்ட்னர். 

மேலே சொன்ன பணிகளில் மட்டுமன்றி உடல் உழைப்பு தேவைப்படும் எல்லா இடத்திலும், தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட இந்திய இளைஞர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களும் இவர்கள் தரும் சொற்ப சம்பளத்திற்காக நாள் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களாக உழைக்கிறார்கள். ஒருபக்கம் இவர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்றாலும் இன்னொரு பக்கம் ஒருசிலர் செய்யும் திருட்டு வேலைகள் மற்றும் கிரிமினல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினையால்  அனைவரையுமே சந்தேகத்தோடு பார்க்க வைக்கின்றன. எனவே இவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் இவர்களது முழு விவரங்களையும் வைத்துக் கொள்ளுதல் நல்லது.
  
                   PHOTO (above) THANKS TO : HINDUSTAN TIMES     

 இப்படி ஏன் தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் இந்தி பேசும் வட இந்தியர்களை மட்டுமே பணியில் வைத்துக் கொள்கிறார்கள்; உள்நாட்டு தமிழர்களை வைத்துக் கொள்வதில்லை? இதுகுறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல். உள்ளூர் தமிழர்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும், தொழிலாளர் பிரச்சினை, சில இடங்களில் ஜாதி கட்சிகளால் பிரச்சினை இவையே முக்கியமான  காரணமாக சொல்லப் படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் மேஜை சுத்தம் செய்ய, சாப்பிட்ட இலையை எடுக்க ஆட்கள் கிடைப்பது கஷ்டம். இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு ஆட்கள் எடுப்பதால் இங்குள்ள முதலாளிகளுக்கு பிரச்சினை இல்லை. இதேபோல் வடக்கில் உள்ளவர்கள் இந்தி பேசாத மாநிலத்தில் உள்ளவர்களை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.  

ஒரு காலத்தில் இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் இப்போதோ இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அவர்கள் ஊரிலேயே அவர்களுக்கு வேலை இல்லை. இதுபோல் வடக்கு தெற்கு இரண்டிலும், மொழி தெரியாத தொழிலாளர்களை குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தி சுரண்டலைச் செய்யவே பல நிறுவனங்கள் விரும்புகின்றன 




Saturday 22 February 2014

ராஜீவ் காந்தி கொலையான அன்று



முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை அன்று படுகொலை செய்யப்பட்டார் அப்போது நாங்கள் திருச்சி அய்யப்ப நகரில் வாடகை வீட்டில் குடியிருந்தோம். அப்பாவும் அம்மாவும் என்னோடு இருந்தனர். எனது தங்கைக்கு ஜூன் முதல் வாரத்தில் திருமணம் என்பதால், அப்பா மட்டும் உறவினர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுப்பதற்காக, அன்றுதான் இரவு ரெயிலில் புறப்பட்டு சென்னைக்கு சென்று கொண்டு இருந்தார். நாங்கள் எல்லோரும் வழக்கம் போல எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தூங்கிவிட்டோம். நான் மறுநாள்  எப்போதும் போல காலை வேலைகளை முடித்து விட்டு மெயின் ரோட்டிற்கு சில பொருட்கள் வாங்க சென்றேன். ஒரு கடை கூட இல்லை. எல்லாம் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரே மயான அமைதி. கடைத் தெருவில் இருந்த திமுக பேனர்கள்,கொடிக் கம்பங்கள் சின்னா பின்னமாகக் கிடந்தன.  திமுகவின் சின்னமான உதயசூரியன் வடிவில் இருந்த டியூப் லைட்டுகள் யாவும் உடைக்கப்பட்டு கிடந்தன. ஏதோ கட்சி தகராறு என்று நினைத்தேன். ஒருவரிடம் கேட்ட போது விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியை குண்டு வைத்து கொன்று விட்டனர். திமுகதான் காரணம் என்று பேசிக் கொள்கிறார்கள் “ என்று  விஷயத்தை மெதுவாகச் சொன்னார். அப்புறம்தான் முதல்நாள் இரவில் (21.05.1991 அன்று) ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி அவர்கள் கொல்லப்பட்டார் என்பது தெரிந்தது. அப்போது தேர்தல் நேரம். அப்போதைய பிரதமர் சந்திரசேகர். மேலும் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. அப்போது அதிமுக காங்கிரஸ் கூட்டணி இருந்தது குறிப்பிடத் தக்கது.


            
உடனே வீட்டிற்கு ஓடினேன். நாங்கள் இருந்த வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு நண்பர். ரெயில்வேக்காரர். அதிமுக அனுதாபி. அவரிடம் நான் பேசியபோது அவர் திமுகவையும், இலங்கைத் தமிழர்களையும் கடுமையாக திட்டிப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர்கள் பலர் திருச்சியில் கருணாநிதி நகர், அய்யப்ப நகர், சீனிவாச நகர், குமரன் நகர் முதலான இடங்களில் வாடகைக்கு இருந்து வந்தனர். எங்கள் வீதியில் எனக்கு அறிமுகமான ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம் இருந்தனர். அவர்களுக்கு எங்களுக்கு முன்பே விஷயம் தெரிந்து இருந்தது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர்களைப் பார்த்து கவனமாக இருங்கள் என்று சொன்னேன். இதுபோல் நிறையபேர் வெளியில் வராமல் இருந்தார்கள். எங்கள் பகுதியில் நடமாட்டம் இல்லை. வீதிகளில் போலீஸ் ஜீப்புகளின் ரோந்து அதிகமாக இருந்தது.  

நான் வேலைக்கு சென்றாக வேண்டும். எனது டிவிஎஸ் மொபட்டில் வங்கிக்கு சென்று வந்தேன். வங்கியில் வாடிக்கையாளர்களும் அதிகம் இல்லை. நிறைய பெண் ஊழியர்கள் விடுப்பில் இருந்து விட்டனர். சாலையில்.மக்கள் நடமாட்டம் இல்லை. பஸ் சர்வீஸ் இல்லை. ஒரு சில இடங்களில் கல்வீச்சு. ரெயில்கள் ஆங்காங்கே அப்படியே நிறுத்தப்பட்டதாக செய்திகள். காங்கிரஸ்காரர்களும் அதிமுகவினரும் பல இடங்களில் ராஜிவ் காந்தி படத்திற்கு மாலைகள் போட்டு ஊதுவத்தி ஏற்றி வைத்து இருந்தனர். வானொலியில் ஒரே சோகம். அப்போது சன் டீவி போன்ற தனியார் சேனல்கள் எதுவும் இல்லை. இருந்த ஒன்று தூர்தர்ஷன் மட்டுமே. அதிலும் இரங்கல் செய்திகள்; பஜனைப் பாடல்கள்.  

       
அன்று மாலையும் அடுத்தநாள் காலையும் பத்திரிகைகளில் செய்திகள் சுடச்சுட இருந்தன. டெல்லியில் இருந்த தமிழர்கள் , இந்திரா காந்தி கொலையுண்ட போது சீக்கியர்கள் மீது நடந்த தாக்குதல் போல நம் மீதும் தாக்குதல் வருமோ என்ற ஒருவித பயத்துடன் இருந்தததாக நண்பர்கள் சொன்னார்கள். நல்லவேளை அப்படி ஏதும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் பல அரசியல் தலைவர்கள் வெளியில் தலைகாட்டவில்லை. அரசியல் காரணமாக ராஜீவ் காந்தி கொலையின் முழு பழியும்  திமுகவின் மீது போடப்பட்டது. திமுகவினர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்ற பிரச்சாரம் நடந்தது. பல இடங்களில் திமுகவினர் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. இலங்கைத் தமிழர்கள் என்றாலே அவர்கள் விடுதலைப் புலிகள்தான் என்று எல்லோரையும் கருதத் தொடங்கி விட்டனர். ராஜீவ் காந்தி கொலை என்ற அனுதாப அலையால் காங்கிரஸ் அதிமுக கூட்டணி வென்றது. மத்தியில் நரசிம்மராவ் பிரதமர் ஆனார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வர் ஆனார்.    

சென்னைக்கு ரெயிலில் சென்ற எனது தந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள இயலவில்லை. அப்போது செல்போன் புழக்கத்தில் இல்லாத நேரம். வீட்டிலும் போன் வசதி இல்லை.(சொந்த வீடு கட்டியதும் போன் வசதி வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டோம்). அடுத்தநாள் மாலை சென்னையில் உள்ள மாமாவிடம் போனில் விசாரித்தபோது அப்பா இன்னும் வரவில்லை என்று சொன்னார். எங்களுக்கு ஒரே பதட்டம். இரண்டுநாள் கழித்து அப்பாவைப் பற்றிய தகவல் கிடைத்தது. விழுப்புரத்தில் நடு வழியில் வண்டி நிறுத்தப்பட்டு விட்டதால் ரெயில்வே குவாட்டர்சில் இருந்த சொந்தக்காரர் வீட்டில் இருந்து விட்டு சென்னைக்கு வந்துள்ளார்.சென்னையில் மேலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு இயல்புநிலை வந்த பிறகு வீட்டுக்கு வந்தார். எங்களுக்கும் நிம்மதி!

(PICTURES : THANKS TO  “ GOOGLE ”)







Thursday 13 February 2014

திருச்சி – ரோட்டரி புத்தகக் கண்காட்சி.2014



A ROOM WITHOUT BOOKS IS LIKE A BODY WITHOUT A SOUL  -  CICERO 


சின்ன வயதிலிருந்தே எனக்கு புத்தகம் வாசிப்பதிலும் , விலைக்கு வாங்குவதிலும் ஆர்வம் அதிகம். வீட்டில் நிறைய புத்தகங்கள். அவ்வாறு சேர்த்தவைகளில் பல புத்தகங்கள் இரவல் கொடுத்ததில் வாராமலே போய்விட்டன. 1977- இல் திருச்சியில் உள்ளே வந்த புயல் வெள்ளத்தில் நிறைய புத்தகங்கள் சேறு படிந்து வீணாகி விட்டன. அதற்கு அப்புறமும் புத்தகம் வாங்கும் பழக்கம் நிற்கவில்லை. வாடகை வீட்டில் குடியிருந்த போது , ஒவ்வொரு முறையும் வீடு மாறும்போது மற்றவர்கள் கேட்கும் கேள்வி இத்தனை புத்தகங்களையும் படித்து இருக்கிறீர்களா என்பதுதான். என்னிடம் இருக்கும் புத்தகங்கள் அனைத்துமே (அகராதிகள் தவிர) என்னால் படிக்கப்பட்டவைதான். ஒரு சில புத்தகங்களில் உள்ள முக்கியமான வரிகள் எங்கு உள்ளன என்று கூட நினைவில் உண்டு. இவ்வளவு புத்தகங்களையும் எனக்குப் பின் , எனது வீட்டில் என்ன பண்ணுவார்கள் என்று தெரியவில்லை. எனவே படிப்படியாக இந்த புத்தகம் வாங்கும் பழக்கத்தை குறைத்து வருகிறேன்.

நான் எடுத்த படங்கள்: 
 
எனவே இப்பொழுது திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு  போவதா வேண்டாமா? என்று குழப்பமாக இருந்தது. எனவே முதல்நாள் நிகழ்ச்சிக்கு செல்ல இயலவில்லை. அப்புறம் மனசு கேட்காமல் வழக்கம் போல நேற்று (12.02.2014) சென்றேன். போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்காக மாலை 3.45 மணிக்கே புத்தகக் கண்காட்சி சென்றேன். நல்ல வேளை கூட்டம் இனிமேல்தான் வரும். ஒரு சில பள்ளி மாணவிகளும், கல்லூரி மாணவிகளும் மட்டுமே காணப்பட்டனர். அங்கே புத்தகக் கண்காட்சியில் கேனான் டிஜிட்டல் கேமரா (CANON POWERSHOT A800) வினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
(படம் மேலே) புத்தகக் கண்காட்சி நுழைவு வாயில்
 
(படம் மேலே) டிக்கெட் கொடுக்குமிடம்.

(படம் மேலே) புத்தக ஸ்டால்கள் அமைந்துள்ள நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வாயில்

(படம் மேலே) இதுவும் அது.

(படம் மேலே) ஸ்டால் 


(படம் மேலே) ஸ்டால் 

(படம் மேலே)  புத்தகக கண்காட்சியின் ஒரு தோற்றம் 


(படம் மேலே) ஸ்டால் 

(படம் மேலே) NCBH ஸ்டாலில் நான் 


(படம் மேலே) ஸ்டால்
 

(படம் மேலே) ஸ்டால்

(படம் மேலே) புத்தகக கண்காட்சியின் இன்னொரு தோற்றம்

நான் வாங்கிய நூல்கள்:

இவ்வளவு தூரம் வந்த பிறகு ஒருசில புத்தகங்களாவது வாங்காமல் போனால் எப்படி.? எனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது அவர்களுக்காக வாங்கிய லயன் காமிக்ஸ் கதைகள், இப்போது அழகிய வண்ணப் படங்களுடன் தொகுப்புகளாக வந்துள்ளன. அவற்றுள் ஒன்று வாங்கினேன். நூலின் பெயர் லயன் ALL NEW ஸ்பெஷல்.  நான் சிறுவயதில் படித்த வேதாளன், மந்திரவாதி மண்ட்ரக் கதைகளைப் பற்றிக் கேட்டேன். அவற்றையும் வெளியிட வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்கள்.


அடுத்தது “ மேயோ கிளினிக்என்ற உடல்நலக் கையேடு.

                    
இன்னொன்று “கலிவரின் பயணங்கள் (தமிழில் யூமா வாசுகி) NCBH வெளியீடு.                 

கடைசியாக இரா. முருகன் எழுதிய அரசூர் வம்சம் (கிழக்கு பதிப்பகம்) 

சில தகவல்கள்:

முன்பெல்லாம் புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு பதிப்பகமும் தங்களது நூல் விலைப்பட்டியல் ( CATALGUE ) தருவார்கள். இப்போது அந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவதாலும், விலைப்பட்டியலை நிறையபேர் வாங்கி வாசலிலேயே போட்டு விட்டு போவதாலும் இப்போது தருவதில்லை. கிழக்கு பதிப்பகம், மற்றும் அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட விலைப்பட்டியல் கிடைத்தது.
  
உணவுத் திருவிழா:   
                                                   
அங்கு புத்தகக் கண்காட்சியோடு உணவுத் திருவிழாவும் சேர்த்தே நடைபெறுகிறது. நான் சென்ற நேரம் அப்போதுதான் உணவுக் கடைகளை தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. ஒரு கடையில் மசாலாபூரி தயார் நிலையில் இருந்தது. நல்ல காரம். எனக்குப் பிடித்தமான காரம். மாலை ஆறு மணிக்குள் அங்குள்ள எல்லா கடைகளையும் தொடங்கி விடுவார்கள். மேடை நிகழ்ச்சிகளும் தொடங்கி விடும். எனக்கு வேறு முக்கிய வேலைகள் இருந்ததால், அவற்றில் கலந்து கொள்ளவில்லை.

வரும் 14 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி முடிய தஞ்சையில் கிங்ஸ் ரோட்டரி கிளப் சார்பாக புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. முடிந்தால் அங்கு சென்று வர வேண்டும். 

  



Saturday 8 February 2014

அன்னதானம் செய்ய அரசு கட்டுப்பாடு


கோயில் திருவிழா அல்லது ஊரில் ஏதாவது விஷேசம் என்றால் பல ஊர்களில் அன்னதானம் வழங்குதல் , நீர்மோர் அல்லது பானகம் கொடுத்தல் என்பது நடைபெறும். ஏற்பாடு செய்த சில மணி நேரங்களில், ஒரு இடத்தில் சாலை ஓரத்தில் இவை நடைபெறும். சிலசமயம் சிலர் மண்டபங்களில், சத்திரங்களில் பந்தி பரிமாறி அன்னதானம் செய்வதும் உண்டு. ஸ்ரீரங்கம், பழனி போன்ற பல முக்கியமான திருக்கோயில்களில், அரசே அன்னதானம் செய்ய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.  

அரசு விதிமுறைகள்;

கட்டுப்பாடுகள் இல்லாது இருந்தது. ஆனால் இப்போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் (2006ம் ஆண்டு) மற்றும் விதிமுறைகள்படி, தமிழக அரசு அன்னதானம் செய்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே இனிமேல் அன்னதானம் செய்ய விரும்புபவர்கள்,  அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு  அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே இவற்றை செய்ய வேண்டும்.

சென்ற மாதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்

// அன்னதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் பதிவு செய்து, உரிமம் பெற்ற பின்பே உணவு வழங்குதல் வேண்டும். உணவு தயாரிக்கப்படும் இடம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை தவிர்க்க வேண்டும் மற்றும் சமைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மூடி வைத்து பாதுகாப்பாக பரிமாற வேண்டும். சமையல் செய்பவர்கள், உணவுப் பொருட்களை பரிமாறி கையாள்பவர்கள் தொற்றுநோய் அற்றவர்களாக இருத்தல் மற்றும் தன்சுத்தம் பேணுபவர்களாக இருக்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் வழங்கும் உணவினால் ஏற்படும் உபாதைகளுக்கு தாங்களே பொறுப்பானவர்கள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள் //

என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், தகவல்கள் பெறுவதற்கும் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கும் மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவு பிரிவு) ஜமால் முகம்மது கல்லூரி அருகில், ரேஸ் கோர்ஸ் ரோடு, (ஆயுதப்படை எதிர்புறம், துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் வளாகம், டி.வி.எஸ் டோல்கேட், திருச்சி என்ற முகவரியில் அணுகலாம். என்றும் சொல்லி இருந்தார்.

நண்பர்களின் அன்னதானம்

ஆண்டுதோறும் எனது நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து சமயபுரம் கோயில்
கடைவீதியில் காலையில் குடிதண்ணீர் வழங்கல், சூடான பால் தருதல் மற்றும் அன்னதானம் செய்தல் முதலானவற்றை லைசென்ஸ் பெற்ற உணவு தயாரிப்பாளர்கள் மூலம் செய்து வருகின்றனர். இந்த அன்னதான நிகழ்ச்சிகள் பற்றியும் எனது வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.
 
எனவே அன்னதானம் பற்றிய அரசின் விதிமுறைகளை இன்னும் விவரமாகத் தெரிந்து கொள்வதற்காக, மேலே சொல்லப்பட்ட அலுவலகம் சென்றேன். அங்குள்ளவர்கள் நீங்கள் அன்னதானம் செய்ய இருக்கும் பகுதிக்கு (Area) என்று ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி இருக்கிறார். அவரோடு தொடர்பு கொள்ளுங்கள் “ என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பட்டியலையும், அவர்களது செல்போன் எண்களையும் காண்பித்தார்கள். நான் குறித்துக் கொண்டேன். சம்பந்தப்பட்ட அலுவலரோடு தொடர்பு கொண்டபோது, அன்னதான விண்ணப்பம் பற்றியும், பணம் கட்ட வேண்டிய சலான் பற்றியும், மற்ற விவரங்கள் குறித்தும் சொன்னார். மேலும் இதுபற்றி அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் ஒரு கூட்டம் நடக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

 
( படம் மேலே) தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு . தற்போது மத்திய அரசு, 2014–ம் ஆண்டு பிப்ரவரி 4–ந்தேதி வரை இருந்த காலக் கெடுவை, மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது.

பெரிய அமைப்பு அல்லது தொண்டு நிறுவனம் மூலம் அன்னதானம் செய்பவர்களுக்கு பெரும்பாலும் சிக்கல்கள் வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களே உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் (Licence) பெற்று இருப்பார்கள். அல்லது உரிமம் பெற்ற உணவு தயாரிப்பாளர்களை (Catering Service) ஏற்பாடு செய்து இருப்பார்கள். ஆனால் ஆர்வக் கோளாறு காரணமாக கோயில் திருவிழா, சிலரது பிறந்தநாள் விழா சமயங்களில் மன்றங்கள் சார்பாக, அனுமதி பெறாமல், அன்னதானம் செய்யும் நண்பர்களுக்கு  சிக்கல்கள் நேரிடலாம். எனவே பொதுவாக அன்னதானம் செய்ய விரும்புவோர் அதற்கான அரசுவிதி முறைகளைக் கடைபிடித்து, பொது சுகாதாரம் கெடாதபடி  செய்யவும். இல்லையேல் “ குளிக்கப் போய் சேறு பூசிய கதையாக , நல்லது செய்யப்போய் வீண் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடும்.
மேலும் அதிக விவரங்களுக்கு http://www.tnhealth.org/FoodSafety.htm 

 
(PICTURES: THANKS TO “GOOGLE ”)