Saturday 9 July 2016

எல்லோர் கையிலும் ’ரிவால்வர்’



( நண்பர்களே ஏற்கனவே வெளிவந்த, எல்லோர் கையிலும் ‘ரிவால்வர்’ என்ற http://tthamizhelango.blogspot.com/2016/06/blog-post_26.html  இந்த பதிவினை எடிட் செய்யும்போது, DASHBOARD இல் ஏதோ ஒரு குழப்பத்தில் தவறுதலாக நீக்கி விட்டேன். Google's cache உதவியுடன் கண்டெடுத்து மீண்டும் இப்பதிவை வெளியிட்டுள்ளேன்.)

’குலை குலையாய் முந்திரிக்காய்’ என்பது போல தினம் ஒரு கொலை. பத்திரிக்கையைத் திறந்தால் , டீவீ செய்தி சானலைப் போட்டால் ஒரே கொலை மயம். கூகிளில் ‘கொலை’ என்று தேடினால். குலைகுலையாய்ச் செய்திகள் சிதறுகின்றன. அதிலும், அண்மையில், நுங்கம்பாக்கம் ரெயில்வே நிலையத்தில் நடந்த இந்த ஸ்வாதி கொலை அனைவரையும் ரொம்பவே பாதித்து விட்டது. நாலு பேர் கூடும் பொதுவிடத்திலேயே, கொலைகாரர்கள் சர்வசாதாரணமாக கொலையை செய்து விட்டு நடந்தோ, வண்டியிலோ பதட்டம் இல்லாமல் செல்கிறார்கள். உடுமலைப் பேட்டையில் ஏதோ சினிமா சூட்டிங் போல நிஜக் கொலை. பொதுமக்களும் உயிர்பயம் காரணமாக நமக்கேன் என்று இருந்து விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கிரிமினல்களின் கையில் ஆயுதம் இருக்கிறது; கிரிமினல்களை தடுக்க நினைப்பவர்கள் கையில் எதுவும் இல்லை.

பயம் என்பதே இல்லை

முன்பெல்லாம் ஒரு சின்ன தப்பு செய்தால் கூட யாரேனும் எதுவும் சொல்வார்களோ என்ற பயம் இருந்தது. போலீஸ் என்றால் ஒரு பயம் கலந்த மரியாதை இருந்தது; இப்போது, ஒவ்வொரு கொலைகாரனையும் அல்லது குற்றவாளியையும் கைது செய்யும் போது, அவர்கள் மீது ஏற்கனவே கொலை முதலான குற்ற வழக்குகள் பல நிலுவையில் இருப்பதாகவும் செய்திகள் தருகிறார்கள். இந்த ஜாமீன் குற்றவாளிகள்தான் வெளியில் வந்து மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். மேலும் கொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக மனித உரிமைகள் பேசுகின்றவர்களும் இருக்கும் காலம் இது. 

எனக்கு நேர்ந்த அனுபவம்

ஒருமுறை டவுன்பஸ்சில் பின்புற வாசல் அருகே உள்ள நீளமான கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து கொண்டு இருந்தேன். எனக்கு முன்னே இரண்டு இருக்கைகளுக்கு  முன்னால் பெண்கள் சீட்டில் இரண்டு பெண்கள் அமர்ந்து இருந்தார்கள். அவர்களில் ஒருவர் அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும் வழியில் இறங்கிவிட ஒருவர் மட்டும் இருந்தார். அவரும் நடுத்தர வயதான பெண்மணி. பஸ்சில் நின்று கொண்டு இருந்த இரண்டு கூட்டாளிகளில் ஒருவன், காலியான இடத்தில் அந்த பெண்ணின் அருகே சட்டென்று உட்கார்ந்து விட்டான். அவனும் சரியான போதை. அந்த பெண்மணி அவனை எழுந்திருக்குமாறு சொல்ல, அவன் முடியாது என்று சொல்ல ஒரே வாக்குவாதம். அவனுடைய வாதம் என்னவென்றால் ‘உன்னுடைய வயதுக்கு நான் உட்கார்ந்ததில் என்ன தப்பு?” என்பதுதான். பஸ்சில் கண்டக்டர் உட்பட யாரும் இந்த சண்டையை நிறுத்த முன்வரவில்லை.

 நான் மனது கேட்காமல், அந்த அம்மாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். அவன் அந்த சீட்டில் இருந்தபடியே என்னிடம் தகராறு செய்ய ஆரம்பித்து விட்டான். எனக்கு ஆதரவாக யாரும் பஸ்சில் குரல் கொடுக்கவில்லை. கடைசியில் நான் சத்தமாக ‘கண்டக்டர் பஸ்சை வழியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்துங்கள்’ என்றதும் அவன் எழுந்து விட்டான். ஆனாலும் அவனது சண்டை அந்த அம்மாவிடமும், என்னிடமும் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் பஸ்சில் அதுவரை பொறுமையாக இருந்த ஒரு பெண்மணியும்,அவரது வீட்டுக்கரரும் , அவனை நோக்கி கண்டித்து சத்தமாக பேச ஆரம்பித்ததும் அடங்கி விட்டான். கடைசிவரை அந்த பஸ்சின் கண்டக்டரோ அல்லது டிரைவரோ ஏன் என்று ஒருவார்த்தை கூட கேட்கவில்லை. இந்த சம்பவத்தில் அந்த ஆசாமி ஒருவேளை கிரிமினலாக இருந்திருந்து .என்மீது கோபம் கொண்டு கத்தியாலோ அல்லது வேறு ஏதாவது ஆயுதத்தாலோ தாக்கியிருந்தால் கூட யாரும் உதவிக்கு வந்து இருக்க மாட்டார்கள்.

நான் பணியில் இருந்த போது, கடுமையான விதிமுறைகளில் சிலவற்றை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். (இல்லையேல் எனது வேலைக்கு நானே உலை வைத்துக் கொண்டது போலாகிவிடும்.) இதன் காரணமாக ’வெளியே வா, உன்னை பேசிக் கொள்கிறேன்’ என்று மிரட்டியவர்களும் உண்டு.

எல்லோர் கையிலும் கைத்துப்பாக்கி

நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே போலீஸ் பாதுகாப்பு தருவது என்பது இயலாத காரியம். அவரவர் பாதுகாப்பை அவரவர்களே செய்து கொள்ள வேண்டிய காலமாக இருக்கிறது. எனவே ஒரு சில குறிப்பிட்ட, பேர்களிடம் மட்டுமே இருக்கும் துப்பாக்கி லைசென்ஸை நாட்டிலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், குறிப்பாக கைக்கு அடக்கமான, கைப்பையில் வைத்துக் கொள்ளக் கூடிய  ரிவால்வர் துப்பாக்கியை வைத்துக் கொள்ள அனுமதி தர வேண்டும். எல்லோரது கையிலும் துப்பாக்கி இருந்தால் குற்றவாளிகள் அடுத்தவரை கொலை செய்ய யோசிப்பார்கள். குற்றம் நடக்கும்போதே, பார்ப்பவர்கள் குற்றவாளியை சுட்டு விடுவதாக மிரட்டலாம் அல்லது காலுக்கு கீழே சுட்டு பிடிக்கலாம். 

’கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு’ என்றால் சிலர் கேட்பதில்லை. அவர்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள என்ன வழி? இந்த நேரத்தில், மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற விழா ஒன்றில், தனது கட்சித் தொண்டர்களை, தற்காப்புக்காக கத்தி வைத்துக் கொள்ளச் சொல்லி எம்.ஜி.ஆர் பேசியது நினைவுக்கு வருகிறது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ’யாத்திரை போகும் போது!’ என்ற தலைப்பில் அவர் எழுதிய பாடலில் , பயணம் செய்யும் போது, எடுத்துச் சொல்லும் பொருட்கள் பட்டியலில் சிறு கத்தி ஒன்றையும் குறிப்பிடுகிறார். பெரியார் கூட ஒருமுறை கோபத்தில் கத்தியை வைத்துக் கொள்ளச் சொன்னார் என்று படித்ததாக நினைவு. சீக்கியர்கள் மதத்தின் அடிப்படையில் கத்தி வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள். சில அதி தீவிர மதவாதிகளும் கத்தியை வைத்துக் கொள்ளச் சொல்லி, பேசியதாக பத்திரிகைகளில் செய்திகள் அடிக்கடி வரும். 
 
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.   – திருக்குறள் (550)
( டாக்டர் மு. வரதராசனார் உரை:  கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்.)

( நாட்டில் நடக்கும் சில நிகழ்ச்சிகளைப் பற்றிய ஒருவித ஆதங்கத்தினால் எழுந்த கட்டுரை அல்லது குளத்தில் அலைகள் உண்டாக்க எறியப்பட்ட ஒரு கல் இது )

38 comments:

யோசிக்க வைக்கும் கட்டுரைதான். பகிர்வுக்கு நன்றிகள்.
மூத்த வலைப்பதிவர் அய்யா திரு V.G.K. அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

அருமையான கருத்துக்கள்! மனித நேயம்ச் செத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது பாதுகாப்பிற்காக நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது!
மேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. நமது பாதுகாப்பை நாமே உறுதி பண்ணிக் கொள்ள முடியாத சூழ்நிலை நாட்டில் இப்போது நிலவுகிறது.

அனைவருக்கும் ஒரு துப்பாக்கி - நியாயமான வேண்டுகோளாகத் தான் இருக்கிறது. ஆனாலும் தில்லி போன்ற பெரு நகரங்களில் இந்த துப்பாக்கி வைத்து தான் பல இடங்களில் கொலைகள் நடக்கிறது. சென்ற வாரத்தில் பட்டப்பகலில் ஒரு அப்பாவையும் மகனையும் சுட்டுக் கொன்றார்கள் - கூடவே அந்த இடத்தில் இருந்த மூன்று பொதுமக்களுக்கும் குண்டடி பட்டிருக்கிறது....... கட்டா என்று அழைக்கப்படும் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்து நடக்கும் கொலை கொள்ளைகள் இங்கே ஏராளம்.....
நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

நல்ல துப்பாக்கியோ கள்ளத் துப்பாக்கியோ, கத்தியோ கப்படாவோ கிரிமினல்கள் கைகளில் இப்போது சர்வசாதாரணமாக அவை ஆயுதங்களாக புழக்கத்தில் இருக்கின்றன.

கத்தி வைத்திருக்கச் சொன்னதற்காகத்தான் எம் ஜி ஆர் அத்தனை விமர்சனம் செய்யப்பட்டார் தி மு க வினரால் அன்றைக்கு. பேசாத முதல்வர் என்று நக்கலடித்த கருணாநிதி கூட எம் ஜி ஆர் இப்படி பேசிவிட்டார் என்று குதித்தது நினைவுக்கு வருகிறது.
நண்பர் காரிகன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

சில ஆண்டுகளுக்கு முன் - தஞ்சையிலிருந்து குடந்தை செல்லும் அரசு பேருந்தில் இதே போல எனக்கும் நேர்ந்திருக்கின்றது..

அப்போதும் நடத்துனரும் ஓட்டுனரும் - யாருக்கோ வந்த விருந்து என்பது போல இருந்தார்கள்.. பயணிகளும் அமுக்கமாக இருந்தார்களே தவிர - யாரும் அநீதிக்கு எதிராக பேசவே இல்லை..

ஆனாலும் - பாதிக்கப்பட்ட அந்தப் பயணியின் கண்களில் தெரிந்த உணர்வு!...

அது ஒன்றே போதும்!..
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. இப்போதெல்லாம் பயணம் செய்யும்போது, குறிப்பாக தனிமைப் பயணத்தின் போது, நல்லபடியாக போய் வரவேண்டுமே என்ற கவலைதான் அதிகம் வருகிறது. ஒருமுறை ஈரோட்டிலிருந்து, உப்பிடமங்கலம் வழியாக பஸ்சில் வரும்போது என் அருகே இருந்தவர் இறங்கி விட, அந்த ஊரில் பஸ்சில் ஏறிய ஒருவர் என் அருகே அமர்ந்து விட்டார். நிறை போதை. அந்த நிதானத்தில் அவரது முழு உடம்பையும் என்மீது சாய்ந்தபடி மயக்கத்திலேயே இருந்தார். முன்னாள் இராணுவ வீரர் போலிருக்கிறது. வேறு சீட் மாறலாம் என்றால் இடம் காலி இல்லை. பாயிண்ட் டூ பாயிண்ட் என்பதால் திருச்சி வரை ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டேன்.

ஏற்கனவே குடிகாரர்களின் ஆட்டம் தாங்க முடியவில்லை .இதில் அவர்கள் கையில் துப்பாக்கி வேற ?உங்கள் அனுபவத்தையே எடுத்துக் கொள்வோமே ...நீங்கள் அவனை சுட முடியுமா ?மனசு வருமா ?ஆனால் ,எதிரி யோசிக்காமல் சுட்டு விடுவானே !
நல்ல கேள்வி!
எனக்கும் இந்த கேள்வி வந்தது உண்டு! ஆனால், என் மகளுக்கு இந்த கேள்வி எழவே இல்லை! காரணம்?
--என் மகள் இங்கு வளர்ந்து...வசிப்பதால் துப்பாக்கி வைத்து இருக்கிறார்கள். இங்கு இதை second amendment rights--right to bear armsஎன்று கூறுவார்கள்.

இது தப்பு என்று என் மகளிடம் சொன்னால்...
என் மகளின் பதில்...
"அப்பா! நான் இங்கு வளர்ந்தேன்! என் வீட்டிற்கு என் அனுமதி இல்லாமல் வந்தால் சுடுவேன்...செத்த பிறகு நான் வருத்தப்படுவதற்கு பதில்...அவன் என் அனுமதி இல்லாமல் என் வீட்டிற்க்கு வந்ததற்கு அவன்/அவள் தான் வருத்தப்படனும்..

நாம் செத்த பின் நீதி கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன! I will go as per the law--I will exercise my rights! இப்படி என் மகள் சொல்கிறார்கள்!
நண்பர் பகவான்ஜீ அவர்களே நீங்கள் சொல்லிய கருத்தும் யோசிக்க வேண்டிய ஒன்றுதான். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்ன கவிதை வரி இது. - ‘ கொலைவாளினை எடடாமிகு கொடியோர்செயல் அறவே’
நம்பள்கி அவர்களின் வருகைக்கும், அனுபவ பகிர்வு ஒன்றினுக்கும் நன்றி. தனிநபர் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி என்ற விஷயத்தில் அமெரிக்க நடைமுறை என்னவென்று எனக்கு தெரியாது மேலே உங்கள் மகள் சொன்ன பதில்தான் எதார்த்தமான வலுவான பதில்.

கட்டுரை தலைப்பினைப் பார்த்ததும் அண்மையில் அமெரிக்காவில் மக்கள் தொகையை விட துப்பாக்கியின் எண்ணிக்கை அதிகம் என்றும் அதற்கான சட்டத்தை எப்படித் திருத்துவது என்றும் விவாதம் நடப்பதைப் பற்றிப் படித்தது நினைவிற்கு வந்தது.இங்குள்ள பிரச்னைக்கு வருவோம். நாம் பாதுகாப்பிற்காக வைத்துக்கொள்ளும் ஆயுதம் நமக்கே எதிரியாகிவிட்டால் என்ன செய்வது?
முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அமெரிக்க நடைமுறை என்னவென்றும், இதன்மீதான விவாதம் என்னவென்றும் எனக்கு தெரியாது. கூகிளில் போய்ப் பார்க்க வேண்டும்.

துப்பாக்கிகள் மீது கட்டுப்பாடு கொண்டுவர வாக்களிக்குமாறு வலியுறுத்தும் வகையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில், ஜனநாயகக் கட்சியினரால் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது.
http://www.bbc.com/tamil/global/2016/06/160623_usgunvt

http://www.wsj.com/articles/no-consensus-among-americans-on-gun-control-wsj-nbc-news-poll-shows-1466946002
நண்பர் வேகநரி அவர்களின் கருத்துரைக்கும், அமெரிக்க செய்தி ஒன்றினைப் பற்றிய தகவலுக்கும் நன்றி நீங்கள் தந்த இணைய முகவரி சென்று பார்த்தேன். அங்கும் மக்களிடையே இருவேறு கருத்துக்கள் உள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது.

// No Consensus Among Americans on Gun Control, WSJ/NBC News Poll Shows
About half of those polled favor assault-weapons ban, but nearly half of those polled believe ban would be ineffective //

சிந்தனையைத் தூண்டும் பதிவு ஐயா
ஒரு வேளை அனைவரிடமும் துப்பாக்கி இருந்தால் வன்முறைகளும்
வழிப்பறிகளும் குறைவதற்கு வாய்ப்பு உண்டு என்றே எண்ணுகின்றேன்
தம+1
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

தங்களின் பதிவு நிச்சயம் எல்லோரையும் சிந்திக்க வைக்கும். ஆனால் எல்லோரும் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்பது நம் ஊருக்கு சரிப்பட்டு வருமா என்பது கேள்விக்குரியது. மிகவும் உணர்ச்சிவசப்படும் நம்மவர்களிடம் அது இருந்தால் மிக அற்ப விஷயத்திற்கு கூட பயன்படுத்திவிடுவார்கள். எனவே தீவிரமாக யோசித்து எடுக்கவேண்டிய முடிவு இது.
அய்யா V.N.S. அவர்களுக்கு வணக்கம். தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. இதற்கு முந்தைய பதிவினில் வடலூர் வள்ளலாரின் கொள்கைகளைப் பற்றி எழுதி விட்டு, இந்த பதிவினில் அனைவர் கையிலும் துப்பாக்கி வேண்டும் என்று முரண்பாடாக எழுதுவதில், எனக்கு உடன்பாடு இல்லைதான். எனினும் இந்த கருத்தானது, நாலுபேர் மத்தியில் பேசப்பட்டு, தீர்வு காண வேண்டியவர்கள் மனத்துள் ஒரு தாக்கத்தை உண்டாக்கும் என்ற நம்பிக்கையின் காரணாமாகவே இந்த கட்டுரை. மற்றபடி ஏதும் இல்லை.

அப்பேருந்து சம்பவம் ... பெண்ணின் மேல் தவறு. அவளுக்குத் துணையாகப்பேசிய உங்கள் மேலும் தவறு.

இது பொதுவாக இன்றைய தமிழகத்தில் நடைபெறும் தவறாகும். ஆண்-பெண் இருபாலரின் வயதுகளைப்பொறுத்தே ஒரு செயல் கணிக்கப்படவேண்டும்.. இதன்படி, முதியவள் இருக்குமிடத்தில் ஒரு இளைஞன் அமர்வது தவறு என்று அம்முதியவள் பொருளெடுத்தால், அவள் மனங்கெட்டுப்போயிருக்கிறாள் என்று பொருள். குணப்படுத்தப்படவேண்டியவ்ள் அவள்.

ஆண்-பெண் இருக்கைகள் தனித்தனியாக எனறு ஏன் இருக்கின்றன என்பதை தயவு செய்து சிந்தியுங்கள். ஓடும்பேருந்தில் பெண்ணிருக்கைகள் அனைத்திலும் ஒவ்வொன்றிலும் ஒரு பெண் இருக்க, அங்குகோர் முதியவன் தனக்கு இருக்கையில்லாத போது ஒரு பெண் இருக்குமிருக்கையில் அமர்ந்தால், அவன் முதியவன் என்று பார்க்காமல் தரும் அடி கொடுத்தே கொல்லும் இடம் எப்படிப்பட்ட இடம்?

எதற்கும் எல்லை உண்டு. அந்த எல்லைமீறிய செயல்தான் அப்பேருந்து சம்பவம். அவன் குடித்திருக்கிறான்; அவனால் தனக்குத் தீங்கு வரும் என்று அவள் அவனை இருக்கவிடாமல் மறுத்தால் சரி. அப்படியா செய்தாள்? அதற்கு முகாந்திரம் உங்கள் பதிவில் இல்லை.

எல்லாருக்கும் துப்பாக்கி வைக்க உரிமை கொடுத்து விட்டால், காவலரேன்? க்டமையேன்? நீதிமன்றங்களேன்? சட்டங்கள் ஏன்?

நம்முயிரைப்பாதுக்கவேண்டுமென்றால், எத்தனை பேர் அதற்காகவே துப்பாக்கியைப் பயன்படுத்துவர்?

உலகில் எல்லாவிடயங்களும் நன்மைசெய்ய எனத் தொடங்கப்பட்டு பின்னர் சீரழியும்: முகநூல், இணையம் போன்று. அதை நினைவில் வைத்துக்கொண்டு இம்மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ஆலோசனைகளைச் சொல்லலாம்

கொலைகளைத்தடுக்க, பெருக்கவன்று நம் ஆலோசனைகள் இருக்க வேண்டும்.

நன்றி.
நண்பர் மலரன்பன் அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி.! மேலே மரியாதைக்குரிய திரு வே.நடனசபாபதி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நான் எழுதியுள்ள மறுமொழியையும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அய்யா இப்போதெல்லாம், தமிழ்நாட்டில், பயணத்தின் போது, இருக்கைகளில், வயதான ஆண்கள் அருகே பெண்கள் உட்காருவதையும், வயதான பெண்கள் அருகே ஆண்கள் உட்காருவதையும் யாரும் முன்புபோல பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் சாராயத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு இந்த குடிகாரர்கள் செய்யும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. இதன் எதிரொலிதான் மேற்படி சம்பவம்..
துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமை கொடு என்றால் எந்த அரசாங்கமும் உடனே கொடுத்து விடப் போவதில்லை. நடைமுறை சாத்தியமும் குறைவு. இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால், சட்ட நடைமுறைகளையெல்லாம் மீறி தீயவர் கையில் ஆயுதங்கள் புழங்குகின்றன, அப்பாவிகள் நிராயுதபாணிகளாக பலியாகின்றனர். இதற்கு தீர்வுதான் என்ன? என்ற ஆதங்கம்தான் இந்த கட்டுரை.
அய்யா, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதப்பட்ட கட்டுரை அல்ல இது. நீங்களே கூட ஒரு நல்ல ஆலோசனையை, என்ன செய்யலாம் என்று சொல்லலாம்.

தற்காப்பு அவசியம்தான்! அதற்கு ஆயுதம் தாங்கவேண்டியது இல்லை என்பது என் தாழ்மையான கருத்து!
நல்ல கருத்தொன்றினைச் சொன்ன நண்பர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.

இது சரியான யோசனை இல்லை! தூக்கிய துப்பாக்கியை எப்படிக் கீழே போடுவது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறது அமெரிக்க சமூகம். துப்பாக்கி இன்னும் பற்பல கேடுகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதற்கு அமெரிக்காவே சான்று. வேந்து ஒறுக்க வேண்டும். குடிகளும் உதவ வேண்டும். தற்காப்புக் கலைகளை ஒவ்வொருவரும் பயில வேண்டும்.
நண்பர் சுந்தரவடிவேல் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

சிந்திக்க வேண்டிய பதிவு.எதாவது ஒரு அநியாயம் எங்காவது நடக்கும் போது, அகஸ்மாத்தாக ஒருவர் அதை தட்டி கெட்டாலும், 'நமக்கென்ன?' என்னும் மனப்பான்மை மாற வேண்டும். அப்போது தான் குற்றங்களும் குறையும். தட்டி கேட்காத தம்பி சண்ட பிரசண்டன் என்பது பழமொழி!
மரியாதைக்குரிய எழுத்தாளர் ”ஆரண்ய நிவாஸ்” அய்யா அவர்களின் கருத்தினுக்கு நன்றி. அநியாயத்தை நாலுபேர் தட்டிக் கேட்பார்கள் என்ற பயம் இருந்தாலே போதும்; இது மாதிரியான சம்பவங்கள் நடக்காது.

கட்டுரை அருமை
தம்பி ஸ்ரீராம் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

எல்லோர் கையிலும் துப்பாக்கி . விளைவுகளை நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை
அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எல்லோர் கையிலும் துப்பாக்கி என்றால் எல்லோருமே கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள் என்பது எனது கருத்து. இதுவே பிரச்சினை என்றால், இப்போது தீயவர்கள் கையில் மட்டுமே ஆயுதங்கள் புழங்குவதும் அப்பாவிகள் மட்டும் பலியாவதும் பிரச்சினைதானே?

"கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் " - குடியரசு நாட்டில் மக்கள் அனைவரும் அரசர்கள்தான் என்பதால்தான், எல்லோரிடமும் துப்பாக்கியை வைத்துக்கொள்ளச் சொல்லுகிறீர்களா.. உங்களிடமே ஒரு துப்பாக்கி அப்போது இருந்தது என்றுவைத்துக்கொள்வோம். அந்தக் குடிகாரன் உங்களை நோக்கிக் கத்தியை நீட்டினால், பயத்தில், ரிவால்வரை கீழே போட வாய்ப்பு இருக்கிறதா? அல்லது பயத்தில், ரிவால்வரை மாற்றிப் பிடித்துக்கொண்டு டிரிக்கரை அமுக்க வாய்ப்பு இருக்கிறதா?
அன்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. அந்த பஸ் சம்பவத்தில், எல்லோருக்கும் துப்பாக்கி லைசென்ஸ் என்று இருக்கும் பட்சத்தில், அவன் உட்பட எல்லோருமே அடக்கிதான் வாசிப்பார்கள். அதிலும் குற்றம் செய்ய நினைப்பவனுக்கு தப்பி ஓடுவது மற்றும் உயிர்மேல் ஆசைதான் முதல் எண்ணமாக இருக்கும்.

இந்த இடத்தில் ’சுட்டான் சுட்டேன்’ என்ற பிரபலமான வாசகத்தை, அந்த பிரபலமான கொலை முயற்சி வழக்கின் வாத பிரதி வாதங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

என்னுடைய நிலை என்னவென்று கற்பனையாக கேட்டீர்கள். நான் பயந்தாரி கிடையாது. அப்படி இருந்தால் எனக்கு துப்பாக்கி எதற்கு.

அந்த காலத்தில் வேலும், வில்லும், குறு வாளும் தற்காப்பிற்காக ஒவ்வொருவர் கையிலும் இருந்தது எல்லோரும் ஒருவரையொருவர் எந்நேரமும் தாக்கிக் கொண்டேவா இருந்தார்கள்.

நண்பரே, இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணியதன் விளைவாக எழுந்த, இது ஒரு மாற்று சிந்தனை கட்டுரை. மற்றவர்கள் மத்தியில் என்ன கருத்து என்பதை அறிந்து கொள்ளவும் முடிந்தது.

நம்மை நாமே பாதுகாக்க வேண்டிய கொடுமையான சூழலில் வாழ்கிறோம். நம்மைப் பாதுகாக்க வேண்டியவர்கள் கடமை தவறுகிறார்கள். தங்களுடைய பதிவு பலரைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது,
நண்பர் வர்மா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.


12 comments:

  1. ஆயுதங்களை வைத்துக் கொள்ள லைசென்ஸ் ஏதும் இல்லாமல் இருக்கும்போதே இத்தனை வன்முறைகளும் கொலைகளும் என்றால் அனுமதியும் இருந்து விட்டால் நினைத்துப்பார்க்க வே அச்சமாய் இருக்கிறது என்றுதான் சொல்ல வந்தேன்

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இந்த அச்சம் வரத்தான் செய்யும். ’கத்தியை எடுத்தவன் கத்தியால்தான் சாவான்’ என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இது ஒரு மாற்று சிந்தனை கட்டுரை. அவ்வளவுதான்.

      Delete
  2. //நான் பணியில் இருந்த போது, கடுமையான விதிமுறைகளில் சிலவற்றை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். (இல்லையேல் எனது வேலைக்கு நானே உலை வைத்துக் கொண்டது போலாகிவிடும்.) இதன் காரணமாக ’வெளியே வா, உன்னை பேசிக் கொள்கிறேன்’ என்று மிரட்டியவர்களும் உண்டு.//

    இந்த அனுபவம் எனக்கும் உண்டு!

    நாட்டில் சுயநலம் பெருகிவிட்டதால் கூற்றன்வளை செய்பவர்கள் தைரியம் பெறுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ’எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  3. //கூற்றன்வளை//

    * குற்றங்களை

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா. நானும் முதலில் குழம்பி விட்டேன்.

      Delete
  4. எல்லோர் கையிலும் ’ரிவால்வர்’ என்றால்
    எவர் கையில் எவரது உயிர் என்றாச்சு
    அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  5. ரௌத்ரம் பழகத் தவறி விட்டோம்!
    நன்று

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா. ஒரு அதட்டல் போடுவதற்கு கூட ஆள் இல்லை.

      Delete
  6. வணக்கம்
    ஐயா

    சொந்த கோபம் எல்லாம் வைத்து பலர் இரவோடு இரவாக சுடப்படுவார்கள்... சொல்வது ஒருவகையில் நல்லதுதான் ஐயா த.ம 3
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி. நூல் வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்.

      Delete