Tuesday, 14 April 2015

ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய தமிழர் தேசம் - மின்நூல் விமர்சனம்



வலைப்பதிவு நண்பர்களின் மின்நூல்கள் பலவற்றை எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து வைத்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது அவற்றை படிப்பது வழக்கம். அவற்றுள் சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் தமிழர் தேசம் என்ற மின்நூலினை அண்மையில்தான் படித்து முடித்தேன். இதுவே இது ஒரு அச்சு நூலாக இருந்திருந்தால் என்றோ படித்து முடித்து இருப்பேன். தமிழ் வலையுலகில் பிரபலமான சிறந்த வலைப்பதிவாளராகிய ஜோதிஜி திருப்பூர் அவர்களைப் பற்றி (http://deviyar-illam.blogspot.com)அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

நூலின் அமைப்பு:

நூலின் தலைப்பைப் பார்த்தவுடன், அவர்கள் ஆண்டார்கள், இவர்கள் ஆண்டார்கள் என்று கால வரிசையிடப்பட்ட தமிழ்நாட்டைப் பற்றிய ஒரு சிறு வரலாற்று குறிப்பு நூலாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் படிக்க தொடங்கிய பிறகுதான், தமிழ்நாட்டைப் பற்றி தமிழரான ஜோதிஜி திருப்பூர் அவர்களின் ஒரு மானிடவியல் பார்வை என்று புரிந்தது. மார்க்கோபோலோவின் பயணக் குறிப்புகள் போன்று, தமிழர்கள் பற்றி, தான் நேரில் தெரிந்து கொண்டதையும், படித்து உணர்ந்ததையும் தமிழரான ஜோதிஜி திருப்பூர் அவர்கள் எழுதி இருக்கிறார். ஆசிரியரின் நோக்கம் தமிழர் என்ற கண்ணோட்டம் இருந்தாலும், அவர் வாழ்ந்த, அந்நாளில் பிரிக்கப்படாத பழைய இராமநாதபுர மாவட்ட மக்களைப் பற்றிய அவரது ஆதங்கங்களையே எதிரொலிக்கக் காணலாம்.

உணர்ச்சித் தமிழன்:

ஒருகாலத்தில் தமிழன் போர்க்குணம் மிக்கவனாக இருந்தான். பலநாடுகள் மீது போர் தொடுத்தான். ஆனால் இன்றோ அவன் எடுப்பார் கைப்பிள்ளையாய் தன்னம்பிக்கை இல்லாதவனாய் இருக்கிறான். இதற்குக் காரணம் தமிழன் பல ஆண்டுகளாய் அடிமைப் பட்டு கிடந்ததுதான் என்கிறார் ஆசிரியர்.

// களப்பிரர் (கிபி 200 முதல் 500), பல்லவர் (கிபி 500 முதல் 800), வட இந்தியர், மராட்டியர், தெலுங்கு நாயக்கர் (கிபி 1200 முதல் 1600) போர்ச்சுகீசியர், பிரஞ்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் கீழ் 1947 வரைக்கும். 2000 ஆண்டுகள் அடிமை தமிழனாகவே வாழ்ந்த வாழ்வியலின் எச்சமும் சொச்சமும் இன்று உங்களையும் என்னையும் பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது. // ( பக்கம் 25)

இந்த அடிமைத்தனத்தால் நம்மிடம் ஒற்றுமையின்மையால் எவ்வளவோ சிறப்புகள் இருந்தும் பலநாடுகளில் தமிழர்கள் அகதிகளாகிப் போனார்கள் என்று வருத்தப் படுகிறார் ஆசிரியர் ஜோதிஜி திருப்பூர் அவர்கள்.

// ஆனால் நாம் வேறு ஒரு வகையில் சிறப்பை பெற்றுள்ளோம்.  பர்மா அகதி, வியட்நாம் அகதி, இலங்கை அகதி.  இந்த பட்டியல் எதிர்காலத்தில் இப்போது உள்ள இந்திய அயல்உறவு கொள்கையினால் இன்னமும் நீளும் என்று தோன்றுகிறது? // (பக்கம். 29)

பொதுவாகவே தமிழ்நாட்டில் நிலவும் வெப்பம் காரணமாக தமிழர்கள் நிறம் கறுப்புதான். ஆனால் தமிழர்களோ கறுப்பு நிறத்தை புறக்கணித்து விட்டு சிவப்புத் தோலுக்குதான் அலைகிறார்கள் என்பதனை வெயிலான் என்ற தலைப்பினில் சொல்லுகிறார் ஆசிரியர். மேலும் தனது பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் வைப்பதில் கூட தமிழனுக்கு ஆர்வம் இல்லை; அரசியல் தலைவர்களுக்காக தற்கொலை செய்து கொள்ளுதல், தீக்குளிப்பு, சாலைமறியல், நடிகர்களுக்காக கோயில் கட்டுதல் போன்ற செயல்களில் தமிழன் மட்டும்தான் செய்கிறான் என்று ஆதங்கப்படும் அவர், இதற்கு முக்கியக் காரணம் தமிழன் உண்மைத்தமிழனாக இல்லாமல் உணர்ச்சித் தமிழனாகவே இருப்பதுதான் என்று வெளிப்படுத்துகிறார்.

தமிழர்களின் தொன்மை குறித்து பேசும் சிந்துசமவெளி ஆராய்ச்சி, பூம்புகார் அகழ்வாராய்ச்சி போன்ற ஆராய்ச்சி விவரங்கள், வெளி உலகுக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கப்பட்டுவிட்டன, இன்னும் சொல்லப் போனால் தமிழ் நாட்டில் கூட வெளியாகவில்லை  என்கிறார்  ஆசிரியர்.

ஜாதியும் மதமும்:

தமிழன் என்றொரு இனமுண்டு      தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடி வைத்தார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை. ஆனால் இன்றைய தமிழனுக்கு ஜாதி அபிமானம் ஒன்றுதான் தமிழனுக்கான தனிக்குணமாக இருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

இந்து மதத்தில் நிலவிய தீண்டாமை, இஸ்லாம் மதம் வந்தது, கிறிஸ்தவம் வளர்ந்தமை என்று பலவிவரங்களையும் சொல்லி இருக்கிறார். வெளியே தமிழ், தமிழன் என்று பேசினாலும் தமிழர்களின் நடைமுறை வாழ்க்கை ஜாதீய அடிப்படையில் சிக்கி இருப்பதை நூலின் பல இடங்களிலும் வெளிப்படையாகவே பேசுகிறார்..

// இந்தியாவில் தொடக்கத்தில் சாதி என்ற பெயரால் எவ்வளவு பாரபட்சம் நிலவியதோ அந்த அளவிற்கு அந்த சாதியை வைத்துக் கொண்டே பல திருகுதாள வேலைகளும் நடந்து கொண்டுருந்தது. நீ இந்த சாதியில் பிறந்து இருக்கிறாயா?  இப்படித்தான் வாழ வேண்டும் என்பதில் தொடங்கி உன்னுடைய வட்டம் இதற்குள் தான் முடிகின்றது.  இதற்கு மேல் நீ வெளியே வரமுடியாது என்பதாக ஒவ்வொரு இன மக்களுக்கும் ஆதிக்க சாதியினர் கோடு கிழித்து வைத்திருந்தனர்.  தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி இந்தியாவில் அடக்கி வைக்கப்பட்ட இன மக்களின் வாழ்வியல் சோகத்தை எந்த வார்த்தைகளாலும் எழுதி விட முடியாது. வாழ்க்கை முழுக்க மிருகங்களை விட கேவலமாக நடத்தப்பட்டவர்கள் தான் அதிகம். சங்ககால மன்னர்கள் காலம் முதல் இருந்து வந்த இது போன்ற கொடூரங்கள் இன்று வரைக்கும் அங்கங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது.  மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவனின் குலத்தை அடிப்படையாக வைத்து, ஒருவர் செய்து வந்த வேலைகளை வைத்தே இது போன்ற பிரிவினைகள் உருவாக்கப்பட்டது // (பக்கம் 161)

தமிழ் முஸ்லிம்கள்:

பொதுவாக இஸ்லாம் மதம் வாள் முனையில் தமிழ்நாட்டில் பரவியது என்பார்கள். அப்படி அல்ல, இந்துமதத்தில் நிலவிய தீவிரத்தன்மைக்கு பயந்தே பலரும் இஸ்லாத்தில் இணைந்தார்கள் என்று இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர் ஜோதிஜி திருப்பூர் அவர்கள் முஸ்லீம்கள் நதிமூலம் என்று வலைத்தளத்தில்  எழுதியுள்ளார். பின்னூட்டமிட்ட, இஸ்லாமிய சகோதரர்கள் சிலர் அனைத்து ஜாதியினரும் இஸ்லாத்தில் இணைந்தார்கள் என்பதனையும்; ராவுத்தர்,மரைக்காயர், லெப்பை முதலான பெயர்கள் பற்றியும், அரபு மற்றும் உருது பேசும் தமிழ் முஸ்லிம்கள் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களது பின்னூட்டங்கள் இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் இஸ்லாமியர்கள் இடையே உள்ள பாகுபாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.  

நாடார்கள் மற்றும் முக்குலத்தோர்:

இந்த நூலில் நாடார்கள் பற்றியும் மற்றும் முக்குலத்தோர் பற்றியும் இந்த இரு பிரிவினருக்கு இடையே நிகழ்ந்த சாத்தூர் கலவரம் மற்றும் சிவகாசி கலவரம் போன்ற வெட்டு, குத்து விவரங்களையும் விவரமாக தெரிந்து கொள்ளலாம். நாடார்களின் வரலாறு, மற்றும் அவர்களின் உழைப்பு, முன்னேற்றம் குறித்தும் இந்த நூலில் விரிவாகக் காணலாம். மரமேறி தாண்டி வந்த நாடார்கள் ; கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றங்கள் ;  “ தோல் சேலை தொடக்க உரிமை போராட்டம் “ ; “கல்வி பலமான ஆயுதம்  என்ற தலைப்புகளில் சிறப்பாகக் காணலாம்.

அச்சில் வரவேண்டும்:


ஆசிரியர் ஜோதிஜி திருப்பூர் அவர்கள் தான் கண்ட, கேட்ட, படித்ததை தனது நடையில் எழுதியுள்ளார். ஒரு வரலாற்று நூலுக்குத் தேவைப்படும் இன்னும் பல சான்றுகளையும் மேற்கோளாக இணைத்து, இந்த தமிழர்தேசம் என்ற மின்நூல் அச்சிடப்பட்ட புத்தகமாக வெளிவந்தால் எதிர்காலத்தில் ஒரு ஆவண நூலாகவும் விளங்கும். மேலும் அனைவரது கைகளுக்கும் போய்ச்சேரும்.

இந்த மின்நூலினை டவுன்லோட் செய்ய http://freetamilebooks.com/ebooks/tamilar-desam


ஆசிரியர் அவர்களது பிறிதொரு நூல் பற்றிய எனது பதிவு இது.

ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய டாலர் நகரம்” – நூல் விமர்சனம்.