Sunday, 6 March 2016

கண்ணீர் அஞ்சலி! - பதிவர் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்கள் மறைவு!



      
                             (திருமதி. இராஜ ராஜேஸ்வரி மறைவு: 09.02.2016)
         (PICTURE COURTESY: http://honeylaksh.blogspot.in/2014/11/blog-post_8.html)

வெளியூர் சென்றிருந்த நான், நேற்று மாலை வீடு திரும்பியதும் தமிழ்மணம் திரட்டியை பார்த்துக் கொண்டு இருந்தபோது, தில்லைக்கது V துளசிதரன் அவர்களது (thillaiakathuchronicle) பதிவினில், ‘பதிவர் சகோதரி திருமதி இராஜராஜேஸ்வரிக்கு அஞ்சலி’ என்ற அதிர்ச்சியான செய்தியைக் காண நேர்ந்தது,. மேலும் திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களது பதிவினில்,”அம்மா துணை!!’ என்ற தலைப்பினில், அவரது மகள் மற்றும் மகன்கள் ”எங்கள் தாயார், மிகவும் மகிமை பொருந்திய இறைவன் திருவடி தன்னில் கலந்திட 9-2-2016 அன்று வைகுண்ட பிராப்தி அடைந்தார்” என்று செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். ( http://jaghamani.blogspot.com/2016/03/blog-post_92.html )

வலைச்சரத்தில் நான்:

ஒருமுறை வலைச்சரத்தில் ( http://blogintamil.blogspot.in/2013/02/2.html ) நான் எழுதிய வரிகள் இவை “ மணிராஜ் என்ற பெயரில் எழுதி வருபவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள். கோயில் குளங்கள் என்று போவோருக்கு இந்த வலைப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். கோயில்களைப் பற்றியும் அங்குள்ள தெய்வங்களைப் பற்றியும் அழகான வண்ணப் படங்களுடன் தருகிறார். இடையிடையே அருமையான நாம் எப்போதும் கேட்கும் இன்னிசைப் பாடல்களின் வரிகள்.”

ஆன்மீகப் பதிவர்:

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் ஒரு வலைப்பதிவராக (BLOGGER) ஜனவரி 2011 இலிருந்து தமிழ் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். கோயமுத்தூர் வாசியான இவர் ’மணிராஜ்’ என்ற தனது வலைத்தளத்தில் பெரும்பாலும் ஆன்மீகம் சம்பந்தமான பதிவுகளையே, அழகிய வண்ணப்படங்களுடன் அதி பக்தியோடு சிறப்பாக வெளியிடுவார். இதனாலேயே இவர் ‘ஆன்மீகப் பதிவர்’ என்று அன்பாக அழைக்கப்பட்டவர். இவர் எழுதிய ஒரு பதிவின் வழியாகவே, நான் இருக்கும் திருச்சியில், உறையூர் சாலைரோட்டில் இருக்கும் ’ஸ்ரீ குங்கும்வல்லி அம்பிகை’ கோயில் இருப்பதும், அம்மனுக்கு வளையல்களால் ஆன அலங்காரம் விசேஷம் என்றும் தெரிந்து கொண்டேன். (http://jaghamani.blogspot.com/2011/07/blog-post.html )


எனது வலைப்பதிவுகளை நான் எழுதத் தொடங்கிய புதிதில், ஒருமுறை ‘தமிழ் வண்ணம் திரட்டி’ ( http://tamilvannamthiratti.blogspot.in ) என்ற வலைத்தளத்தில், எனது வலைத்தளத்தினை இணைக்கச் சொல்லி எழுதி இருந்தார். அன்று முதல் இவரது வலைத்தளம் எனக்கு அறிமுகம்.  

இந்து மதம் சம்பந்தமாக மட்டுமன்றி, ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களோடு பதிவுகளை வெளியிடும் மத நல்லிணக்கம் கொண்டவர். ‘என்னைக் கவர்ந்த கிறிஸ்தவ கீதங்கள்என்ற எனது பதிவினில், அவர் எழுதிய கருத்துரை இது.

கல்லூரி விடுதியில் பல கிறிஸ்துவ தோழியர் உண்டு.. கிறிஸ்துமஸ் சமயங்களில் பாட்டு ஆசிரியையை பல கிறிஸ்து பாடல்களை பாட பயிற்சி தருவார்... , ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுகளுக்கும் சென்று பாடிய இனிய நினைவுகளை தங்கள் பதிவு மீட்டெடுத்தது ..பாராட்டுக்கள்..! ///
 
ஆன்மீகப் பதிவுகள் மட்டுமன்றி தனது குடும்பத்தினருடன் சென்ற சுற்றுலா மற்றும் பேரப்பிள்ளைகள் மற்றும் பொங்கல், தீபாவளி , புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியும் அழகிய வண்ணப்படங்களுடன் பதிவுகள் தந்தவர்.

கண்ணீர் அஞ்சலி:

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களது மறைவுச் செய்தியைக் கேட்டதும் நமது தமிழ் வலைப்பதிவர்கள், தில்லைக்கது V துளசிதரன், வை.கோபாலகிருஷ்ணன், சூரி சிவா என்கிற சுப்பு தாத்தா, தஞ்சையம்பதி துரை செல்வராஜூ ஆகியோர் தங்களது வலைத்தளங்களில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மறைந்த ஆன்மீகப் பதிவர் திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களது மறைவு என்பது, தமிழ் வலையுலகில் நமக்கெல்லாம் வருத்தமான செய்தி என்பதோடு ஆன்மீக நண்பர்களுக்கு பெரும் இழப்பும் ஆகும். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மணிராஜ் இராஜேஸ்வரி (சில படங்கள்):

அவருடைய பதிவிலிருந்து சில படங்கள் (நன்றி: Google Plus)

                                  ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்

                                                             Shanmuka Temple, Bangaluru

                                    மங்களங்கள் மலரும் தட்சிணாமூர்த்தி வழிபாடு

                                                      பிருந்தாவன துளசி பூஜை


பிற்சேர்க்கை (10.03.16) – தேனம்மைக்கு நன்றி!

ஆரம்பத்தில் எங்கள் வீட்டிற்கென்று டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கிய புதிதில், தமிழ்மணம் படிக்கத் தொடங்கியதிலிருந்து வலைப்பதிவர்களின் புகைப்படங்களை அவ்வப்போது ஒரு போல்டரில் சேமித்து வைத்து இருந்தேன். ஒருமுறை கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறில் எல்லாமே அழிந்து விட்டன; இப்போது மறுபடியும் அதே தவறு நேராதிருக்க, அவ்வப்போது பென்டிரைவிலும் சேமித்து விடுகிறேன். 

மேலே உள்ள திருமதி இராஜராஜேஸ்வரி படத்தை , சகோதரி தேனம்மை லட்சுமணன்  அவர்களது பதிவினில் இருந்துதான் எடுத்து சேமித்து வைத்து இருந்தேன். மேலே எனது பதிவினிலும், பதிவை வெளியிட்ட அன்றே  இதனை குறிப்பிட்டு இருக்கிறேன். (PICTURE COURTESY: http://honeylaksh.blogspot.in/2014/11/blog-post_8.html) ஆனாலும் சில நண்பர்கள், முதன்முதல் நான்தான் இந்த படத்தை வெளியிட்டது போலவும், சிலர் நான் இதுபற்றி எதுவும் குறிப்பிடாதது போலவும் நினைத்துக் கொள்கிறார்கள். எனவே மேற்கொண்டு விவரம் வேண்டுவோர்  ”சாட்டர்டே ஜாலி கார்னர். இராஜேஸ்வரி ஜெகமணியும் ஜெகத்ரட்சகர்களும்’ என்ற மேலே சொன்ன தேனம்மை பதிவினுக்கு சென்று திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களது பேட்டியினை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.