Monday, 2 April 2012

கண்ணீர்க் கவிதை!


சென்ற ஆண்டு எனது மகள் திருமண ஏற்பாடுகளை நான் செய்து கொண்டு இருந்த நேரம். திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கும் போது, ஒரு துயரம் நிகழ்ந்தது. அன்று (02.04.2011)  எனது தங்கை மகன், சிறு வயது, பள்ளி மாணவன் (அப்போது பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தவன்) நண்பர்களோடு விளையாடப் போவதாகச் சொல்லிச் சென்றவன், குளத்தில் மூழ்கி இறந்து விட்டான். பெயர் K.சுரேந்தர் பாபு. அப்போது நாங்கள் பட்ட மன வேதனை சொல்ல முடியாதது. ஓராண்டு முடிவடைந்தது! எனது  நினைவஞ்சலி! அவன் நினைவாக ஒரு கண்ணீர்க் கவிதை!

தண்ணீருக்கு தாகம் எடுத்ததால்
  தன்னுயிர் தந்தவனே! நாங்களோ
கண்ணீரால் இன்னும் கரைகின்றோம்!

நீ குதித்து விளையாடிய குளத்தில்
   அலைகள் ஓய்ந்து விட்டன!
எங்கள் மனக் குளத்தின் அலைகளுக்கு
   இன்னும்  ஓய்வு இல்லை!

என்ன பாடு பட்டாயோ அப்போது?
எப்படித்தான் மூச்சை விட்டாயோ?
நண்பர்களே காரணம் ஆனாரோ?
விதியின் பிழையில் யாரைச் சொல்வது?

விடை தெரியாத கேள்விகள் ஓராயிரம்!
   ஒருநாள் வருவேன் உன்னிடம்!
சொல்வாய் விடைகள் என்னிடம்!