Saturday 29 October 2011

இதற்கெல்லாமா நன்றி சொல்வது?


திருமணம், வரவேற்பு போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து தாம்பூலப்பை போன்றவற்றை தருகிறார்கள். சிலர் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகளிலும், பணி ஓய்வு நிகழ்ச்சிகளிலும் நன்றி தெரிவித்து வெறுங் கையோடு செல்லாதீர்கள் என்று எதையாவது தருகிறார்கள். இதெல்லாம் தவிர கலந்து கொண்டவர்களுக்கு “நன்றி! நன்றி! என்று விளம்பரம் செய்கிறார்கள். சில பெரிய புள்ளிகள் பெரிய, பெரிய போஸ்டர் அடித்தும், பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரம் தந்தும் தங்களது நன்றியை முக்கியத்துவத்தை காட்டிக் கொள்கிறார்கள். இவைகள் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள். எல்லாம் சரியே.

ஆனால், இப்போது துக்க காரியங்களுக்கும் நன்றியை வெளிப்படுத்தி புதிய மரபை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக துக்க நிகழ்ச்சியில் விசாரிக்க வருபவர்களுக்கு  உறவுமுறைகள் வரிசையாக நின்று வருபவர்களுக்கு கைகள் இரண்டையும் நீட்டுவார்கள்.வருபவர்கள் ஆறுதலாக தொட்டுவிட்டு உள்ளே வருவார்கள். அவர்களும் துக்கம் விசாரித்து விட்டு சென்று விடுவார்கள். (போய் வருகிறேன் என்று கூட சொல்லக் கூடாது என்பார்கள்) துக்கம் விசாரித்தல் என்பது மனித சமுகத்தின் கடமை. சிலருக்கு இதுமாதிரி சமயங்களில் காரியங்களை உடனடியாக எடுத்துச் செய்ய உதவிக்கு ஆள் இருக்க மாட்டார்கள். அதுமாதிரி சமயங்களில் சிலர் முன்னின்று உதவுவார்கள். அவர்களுக்கு பிற்பாடு தனிப்பட்ட முறையில் (செய்த உதவிக்கு) நன்றி சொல்லலாம். ஆனால் துக்கம் விசாரித்தமைக்காக சம்பந்தப் பட்டவர்கள்  நன்றி சொல்லி விளம்பரம் தருகிறார்கள். போஸ்டர் அடிக்கிறார்கள். பத்திரிக்கைகளில் முழு பக்க விளம்பரம் தருகிறார்கள்.(கண்ணீர் அஞ்சலி, நீத்தார் நினைவு நாள் போன்ற அறிவிப்பு விளம்பரங்கள் பற்றி ஒன்றும் இல்லை) இவை சரியா? மரபா? என்று தெரிந்தவர்கள் சொல்லவும்.

எம்ஜிஆர் ஒரு படத்தில் துக்கத்திலும், தான் இருக்கமுடியாத ஒரு சூழலில் வெளியிலிருந்து நன்றி சொல்கிறார்.
      “நாலு பேருக்கு நன்றி அந்த
       நாலு பேருக்கு நன்றி
       தாயில்லாத அனாதைக் கெல்லாம்
       தோள் கொடுத்து தூக்கிச் செல்லும் - அந்த
       நாலு பேருக்கு நன்றி

( படம்: சங்கே முழங்கு  பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன் )


2 comments:

  1. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மறுமொழி > Ranjani Narayanan said...

    தகவலைத் தெரியப்படுத்திய சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete