Tuesday 4 October 2011

இவ்வுலகம் இன்னாதது! இனியது காண்பீர்!


வழி நெடுக மரங்கள்.பாதையின் இரு புறமும் சலசலத்து ஓடும் வாய்க்கால்கள்.மரங்களில் பறவைகளின் ஒலிகள்.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே பசுமை.இயற்கை அழகை ரசித்தபடி அவர் போய்க்கொண்டு இருக்கிறார்.இடையில் ஒரு சிற்றூர். பாதையிலிருந்து சற்று தள்ளி இருக்கிறது.ஊரில் சற்று இளைப்பாறிச் செல்லலாம் என்று நினைத்து உள்ளே செல்கிறார்.அவர் ஒரு புலவர். காலம் சங்க காலம்.
  
ஊரினுள் நுழைந்ததும் அவர்கேட்ட முதல் ஓசை அழுகுரல் ஓசை. ஒரு வீட்டின் முன்னர் உள்ளேயும் வெளியேயும் கும்பல்.வெளியே ஒருவன் நெய்தல் பண்ணை மெல்லிதாக இசைத்துக் கொண்டு இருக்கிறான்.வீட்டின் முற்றத்தில் அழுது கொண்டு இருக்கிறார்கள்.கணவனை இழந்த பெண் கண்களில் நீர் வழிய துயரத்தோடு இருக்கிறாள்.வீடு முழுக்க ஒரே துயரம். இதயம் கனத்தவராய் அந்த இடம் விட்டு நகருகிறார்.

சிறிது தூரம் சென்றதும் அதே ஊரில் வேறு ஒரு காட்சியை காண்கிறார்.ஒரு வீட்டின் முன் மகிழ்ச்சி ததும்பும் பாடல்களை முழவில் இசைத்துக் கொண்டும்,ஆடிக் கொண்டும் இருந்தனர். பெண்கள் பூக்களை விதம்விதமாய் அணிந்தபடி ஆடிப் பாடி மகிழ்வோடு  இருந்தனர். மணப்பெண் பூக்களைச் சூடி முகமலர்ச்சியோடு காணப்பட்டாள்.அந்த வீட்டில் எங்கும் மகிழ்ச்சி.மனதில் வாழ்த்தியவராய் அந்த இடமும் கடந்து செல்கிறார்.

இரவு நேரம் .படுத்து இருந்த புலவருக்கு தூக்கம் வரவில்லை.
பகலில் அவர் கண்ட இரு வேறு காட்சிகளே மனதில் திரும்பத் திரும்ப நிழலாடின.ஒரே நாளில்,ஒரே நேரத்தில்,ஒரே ஊரில், ஓர் வீட்டில் துன்பம்.இன்னோர் வீட்டில் இன்பம்.இவ்வுலகைப் படைத்தவன் நிச்சயம் பண்பு இல்லாதவனாகத்தான் இருக்க வேண்டும்.வாழ்க்கையில் துன்ப நினைவுகளே நிலைத்து நிற்கின்றன. இன்ப நினைவுகளை விரட்டி விடுகின்றன.எனவே இனியதை நினைத்து மனதை ஆற்றுப்படுத்தியவர் ஒரு பாடலையும் தந்து விட்டார்.இதோ அப்பாடல்....  

ஓரில் நெய்தல் கறங்க,ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம இவ்வுலகம்!
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!

(பாடியவர்: பக்குடுக்கை நண்கணியார்
புறநானூறு,  பாடல் வரிசை எண்-194)

No comments:

Post a Comment