Saturday 22 October 2011

மரங்களை வாழ விடுங்கள்


அசோகர் செய்த தொண்டுகள் யாவை என்று கேட்டால் போதும். பள்ளிப் பிள்ளைகள் ஒப்புவிப்பது முதலில் “அசோகர் சாலைகள் போட்டார். மரங்கள் நட்டார்என்பதுதான். சாலையோர மரங்கள் அவ்வளவு நன்மையானவை. இப்போது தங்க நாற்கரச் சாலை என்ற பெயரில் இந்தியா முழுவதும் நீண்ட,அகலமான சாலைகள் அமைக்கப் பட்டன. சாலை பணிகளின்போது  சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டப் பட்டன.அவைகளுக்கு ஈடாக புதிய மரங்கள் நடப் பட வேண்டும். தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். ஆனால் மீண்டும் மரங்கள் அதிகம் நடப் பட்டதாகத் தெரியவில்லை. மேலும் மரங்களுக்குப் பதிலாக சாலைகளின் நடுவே அரளி மலர்ச் செடிகளைத்தான் அதிகம் காண முடிகிறது.

பல நகரங்களில் திடீரென்று ஒருநாள் சிலர் ஆர்வலர்கள் என்ற பெயரில் நடச் சொல்லி மரக் கன்றுகளைத் தருவார்கள். சிலர் மரங்களைப் பற்றி மணிக் கணக்கில் பேசுவார்கள்.சிலதொண்டு நிறுவனங்களும், பள்ளிகளும், நகரசபைகளும் சாலை ஓரங்களில் இருபுறமும் மரங்கள் நடுவார்கள். பள்ளி மாணவர்களிடையே மரங்களின் அவசியம் பற்றி பாடம் சொல்வார்கள். மரம் நடு விழாக்கள் நடத்தப் படும். தினசரிகளில் புகைப் படங்களோடு செய்திகள்  வெளியிடப்படும்.இத்தனை மரங்கள் இத்தனை மணிகளில் எங்களால் நடப்பட்டன என்று புள்ளி விவரம் தருவார்கள். கொஞ்ச நாள் தண்ணீர் ஊற்றுவார்கள். மரங்களும் அப்புறம் தானாக வளரத் தொடங்கி விடும். நன்கு வளர்ந்து சாலைகளில் நிழல் தரத் தொடங்கும்.

மரங்கள் தங்களுக்கு மேலே உள்ள மின் கம்பிகளைத் தொட்டும் தொடாமலும் அப்பாவியாக நின்று கொண்டிருக்கும். திடீரென்று ஒருநாள் மின் வாரியத்திலிருந்து ஆட்கள் வருவார்கள்.  பராமரிப்பு என்ற பெயரில் சாலையோர மரங்களை யெல்லாம் மொட்டையாக்கி விட்டு சென்று விடுவார்கள். மரங்களை நட்ட புண்ணியவான்களோ பொது மக்களோ யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அவர்கள் மறுபடியும் மரங்களை நடுவார்கள். இவர்கள் மறுபடியும் வெட்டுவார்கள். ஒரு முடிவே இல்லை. பாவம் மரங்கள்.

நண்பர்களே மரங்களை நட்டதோடு உங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். மின்வாரிய ஊழியர்களே இதற்கு ஒரு வழி காணுங்கள். மரங்களை வாழ விடுங்கள்.


3 comments:

  1. வணக்கம்! மதுரை சரவணன்.வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.இளங்கோ,
    மிக உயர்தரமான பதிவு.

    இக்கருத்தை பகிரத்தான் நான் ஒரு வலைப்பூ ஆரம்பித்தேன். அப்புறம் தொடர்ந்து எழுதியும் வருகிறேன்.
    எப்போதும் முகப்பில் இருக்கும் ஒரு பதிவு..!

    நன்றி சகோ.

    ReplyDelete