Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

Thursday, 21 July 2016

மகாத்மா காந்தியைக் கொன்றது யார்?




நேற்று (20.07.16) காலை வழக்கம் போல தினசரிகளைப் படித்துக் கொண்டு இருந்தேன். ஒரு அரசியல் செய்தி எனது கவனத்தை ஈர்த்தது. 

// ‘மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்.’ என அவதூறாக பேசிய விவகாரத்தில், வருத்தம் தெரிவிக்காவிட்டால், வழக்கு விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று ராகுல் காந்தியை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்தது. ….. …. நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘பஞ்சாப்–அரியானா ஐகோர்ட்டு ஆவணத்தில் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. காந்தியை கோட்சே கொலை செய்தார் என்பதற்கும், காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொலை செய்தது என்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. நீங்கள் (ராகுல் காந்தி) ஒருபடி மேலே போய்விட்டீர்கள். நீங்கள் பொத்தாம்பொதுவாக கூறக்கூடாது’’ என கண்டித்தார்.//
-    (நன்றி : தினத்தந்தி 20.07.2016)

கோர்ட் நடவடிக்கையைப் பற்றி விமர்சனம் செய்வது கூடாது என்பதால், இங்கு இதுபற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. எனினும் மகாத்மா காந்தி கொலை சம்பந்தமாக அன்று வந்த செய்திகளையும், இன்றைய நாட்டு நடப்பையும் ஒப்பிட்டு பார்ப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

அன்றைய செய்திகள்:

மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டபோது வந்த செய்திகள் இவை.
                                                                                                                                                         

// இருபதாம் நூற்றாண்டில் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதாகும், சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, சதித்திட்டம் தீட்டிய ஆப்தே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர் //

மேலும் விவரங்களுக்கு படிக்கவும்- கீழே உள்ள இணையதள முகவரியை சொடுக்கவும் :மகாத்மா - கொல்லப்பட்ட வரலாறு- http://kannalattuthingaasaiya.blogspot.in/2012/02/blog-post_222.html 
.
காந்தி தேசமே காவல் இல்லையா?

இன்றைய காலகட்டத்தில், எல்லாவற்றையும் பார்க்கும்போது, நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில் வரும் ’காந்தி தேசமே காவல் இல்லையா?; என்று தொடங்கும் பாடல்தான் நினைவுக்கு வந்தது.
                                                                                                                                                  
1985 இல் வெளிவந்த இந்த படத்தில் ரஜினிகாந்த் – அம்பிகா சத்தியராஜ் ஆகியோர் நடித்து. இருக்கிற்றர்கள். டைரக்‌ஷன் – எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இசை – இளையராஜா. பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியன் குழுவினர்.கீழே பாடல் வரிகள்.

காந்தி தேசமே காவல் இல்லையா
நீதிமன்றமே நியாயம் இல்லையா
பதவியின் சிறைகளில் –
பாரதமாதா பரிதவிக்கிறாள்

சுதந்திரதேவி சுயநலப் புலிகளின்
துணி துவைக்கிறாள்
துணி துவைக்கிறாள்
தாயை மீட்க வா! தர்மம் காக்க வா!

காந்தியும் நேருவும் வாங்கிய சுதந்திரம்
ஒருசிலர் உரிமையில்லை
வளமிங்கு குறைவில்லை
ஏழைக்கு நிறைவில்லை
வறுமைக்கு வறுமையில்லை
வறுமைக்கு வறுமையில்லை

சாலையில் தனிமையில்
அழகிய இளமையில்
நடக்கவும் முடியவில்லை
நடக்கவும் முடியவில்லை
இளமையும் கலைந்தது
இருபுறம் நரைத்தது
வேலையும் கிடைக்கவில்லை
வேலையும் கிடைக்கவில்லை

ஜாதி என்கின்ற
மாயப் பேயொன்று
ரத்தம் கேட்கின்றதே
தர்மம் தப்பித்துக்
கள்வர் கோட்டைக்குள்
தஞ்சம் கேட்கின்றதே

இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள்
எல்லையில் நிறைந்திருப்பார்
எல்லையில் நிறைந்திருப்பார்
நாட்டினைக் காசுக்கு
காட்டியே கொடுப்பவர்
ஊருக்குள் ஒளிந்திருப்பார்
ஊருக்குள் ஒளிந்திருப்பார்

அகிம்சையைப் போதித்த தேசத்தில்
ரத்தத்தின் ஆறுகள் ஓடுதடா
ஆறுகள் ஓடுதடா
ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல்
வான்வரை ஏறுதடா வான்வரை ஏறுதடா

விடுதலை வாங்க – அன்று நாம் தந்த
விலைகள்தான் கொஞ்சமா?
வேலியே இங்கு பயிரை மேய்கின்ற
நிலைமைதான் மாறுமா?

(பாடலில் உள்ள வரிகளுக்காகவே இந்த பாடலை இங்கு மேற்கோளாகக் காட்டி உள்ளேன். பாடலைக் கண்டு கேட்க கீழே உள்ள திரையை சொடுக்குங்கள். வீடியோ நன்றி SEPL)
                                  
                            (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

Friday, 24 April 2015

கவிஞர் வைரமுத்து – மவுனம் கலைய வேண்டும்.



இலக்கிய உலகில் சர்ச்சை என்பது காலம் காலமாக இருந்து வருவதுதான். அஞ்சு தமிழ்ப் புலவர்கள் இருக்கும் இடத்தில், ஒரு போலீஸ் ஸ்டேஷன் தேவைப்படும் என்று கிண்டலடித்த காலமும் உண்டு. அதாவது அந்த அளவிற்கு அவர்களுக்கு இடையில் வாதங்கள் அனல் பறக்கும் என்பதுதான். அந்த வகையில் இப்போது சிக்கி இருப்பவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். கவிஞருக்கு என்று இருக்கும் புகழ் மற்றும் மரியாதைக்கு அவர் தானாக விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ரசிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். 

     (ஒரு விழாவில் கமல்ஹாஸன், ஜெயகாந்தன், வைரமுத்து) 

குமுதத்தில் வந்த கடிதம்:

கவிஞர் வைரமுத்துவும், மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனும் இலக்கிய நண்பர்கள். இலக்கிய உலகில் ஒரு எழுத்தாளரின்  நூலுக்கு இன்னொரு எழுத்தாளர் பாராட்டி அணிந்துரை தந்து கொள்வது என்பது புதிய விஷயமன்று. அந்த வகையில், குமுதம் (27.04.2015) வார இதழில் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகளை ஜெயகாந்தன் பாராட்டி எழுதியதாக ஒரு கடிதம் வந்தது. அத்தோடு அதுதான் ஜெயகாந்தனின் கடைசி எழுத்தும் என்று சொல்லி இருந்தார்கள்.



 
பேஸ்புக்கில் ஜெயகாந்தனின் மகள் :

விஷயம் அத்தோடு முடிந்து போயிருக்கும். ஆனால் இது விஷயமாக எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் தீபா லட்சுமி அவர்கள், அப்படி ஒரு கடிதம் அப்பா எழுதவில்லை, அப்பாவே பாராட்டி கையெழுத்து போட்டது போன்று வெளியிட்டு விட்டார்கள் என்பதாகும். இதற்கு அவர் சொல்லும் காரணம், கடந்த ஓராண்டு காலமாகவே எழுத்தாளர் ஜெயகாந்தன் எதனையும் நினைவில் வைத்துக் கொள்ளவோ எழுதவோ அல்லது வாசிக்கவோ முடியாத நிலையில் இருந்தார் என்பதுதான். தீபா லட்சுமி அவர்கள் தனது பேஸ்புக்கில் (FACEBOOK) https://www.facebook.com/deepajoe கொடுத்த விளக்கம் இது.


கேட்டு வாங்கும் பாராட்டுக்கள்:

சகோதரி மு.வி.நந்தினி அவர்கள் குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன்  என்ற தலைப்பினில் (http://mvnandhini.com/2015/04/22 )ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் காலம் காலமாக நடந்துவரும், இதழியல் துறை சாராத, மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார். சகோதரி மு.வி.நந்தினி அவர்கள் எழுத்தாளர், வலைப்பதிவர் மற்றும் ஊடக பணியில் ஒன்பதாவது ஆண்டினை எட்டி இருப்பவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. அவர் மேலே சொன்ன தனது பதிவினில்,

குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன் சர்ச்சையில் வைரமுத்துவை இந்த அளவுக்கு தூற்ற அவசியமில்லை. காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான்

என்று கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதில் நான் எழுதிய கருத்துரை இது.


 மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான ஒரு நல்ல கவிஞர் வைரமுத்து. இவர் விளம்பரத்திற்காக ஒரு காரியத்தை செய்தார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

// காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். //

இலக்கிய உலகில் பத்திரிகைகள் மத்தியில் பிரபலங்களின் கையெழுத்தை அவர்களது அனுமதியோடு மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வழக்கத்தை இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த நடைமுறை தெரியாத ஜெயகாந்தன் மகள் தீபா லட்சுமி, கவிஞர் வைரமுத்து விஷயத்தை பெரிதுபடுத்தி விட்டாரோ என்னவோ? தெரியவில்லை. கவிஞர் வைரமுத்து மவுனம் கலைய வேண்டும்.
  
எனவே கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது மவுனத்தைக்  கலைத்து உண்மை என்ன என்பதனை விளக்க வேண்டும் எது எப்படியோ பேஸ்புக்கில் வலம் வந்த ஜெயகாந்தன் மகளை ஊடகங்கள் இனிமேல் பிரபலமாக்கி விடும்.

                    ( ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES )




Monday, 19 January 2015

மாற்றம் ஒன்றே மாறாதது



பெரும்பாலும் வீட்டில் குடும்பத்துடன் நான் டீவி பார்ப்பதில்லை. இதனால் பல திரைப்படங்களையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்க்க இயலாமல் போய்விடும். முக்கிய காரணம், வேறொன்றுமில்லை. பிள்ளைகளோடு சேர்ந்து பார்க்குமளவுக்கு டீவி நிகழ்ச்சிகளும், படங்களும் இல்லை என்பதுதான். இதன் காரணமாக நான் தனியே டீவியில் படம் பார்த்தால் ஒன்று பாதிப் படமாக இருக்கும்; அல்லது படம் முடியும் தறுவாயில் இருக்கும். இதன் காரணமாக அண்மையில் ஜெயா டீவியில் ஒளி பரப்பிய கோச்சடையான் படத்தில் வரும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற பாடலையும் அது சார்ந்த சில காட்சிகளையும் மட்டுமே காண முடிந்தது. அப்புறம் வழக்கம் போல யூடியூப்பில் (YOUTUBE) அந்த பாடலை பார்த்தேன். இந்த பாடலில் வரும் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இந்த  பொன்மொழியை அடிக்கடி பத்திரிகைகளிலும் வலைப் பதிவுகளிலும் மேடைப் பேச்சுக்களிலும் பலர் சுட்டிக் காட்டுவதை பார்த்திருக்கலாம். ஆனால் இந்த வார்த்தையை சொன்னது யார் என்று சொல்வதில்லை.

என்றும் மாறாதது

ஆதியில் தொடங்கிய மனிதனின் நடை பயணம் இன்று பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கும் அதற்கு அப்பாலும் நீண்டு போய்க் கொண்டு இருக்கிறது. காலத்திற்கு தகுந்தவாறு மாறிக் கொண்டவர்களுக்கு பிழைப்பு கிடைத்தது. உதாரணத்திற்கு நம் நாட்டில் பார்ப்போம். கைரிக்‌ஷா போய் சைக்கிள் ரிக்‌ஷா வந்தது. அப்புறம் ஆட்டோவாக மாறியது. இந்த தொழில் செய்தவர்களில் மாற இயலாதவர்கள் காணாமல் போனார்கள். பல இடங்களில் சுனாமி வந்தது வாரி சுருட்டியது. இதில் பலநாட்டின், பலருடைய வாழ்க்கை முறையே மாறிப் போனது. இன்னும் கம்ப்யூட்டர் , செல்போன் என்று எவ்வளவோ மாற்றங்கள் மனித வாழ்வில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆக மாற்றம் ஒன்றே மாறாதது.   

ஹெராகிளிடஸ் (HERACLITUS)

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இந்த பொன்மொழியைச் சொன்னவர் ஹெராகிளிடஸ் (HERACLITUS)என்ற கிரேக்க அறிஞர். (படம் மேலே) இவர் கிரேக்கத்தில் சொன்னதை ஆங்கிலத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது (Change is the only immutable) மற்றும்மாற்றம் ஒன்றே நிலையானது  (Change is the only constant) என்று இரண்டு விதமாக மொழிபெயர்த்தனர். இன்னும் சிலர் There is nothing permanent, except Change” என்றும் எழுதினர்.

ஹெராகிளிடஸ், Ephesus  என்ற நகரில் (இது ஆசியா மைனர் என்ற இடத்தில், தற்போதைய துருக்கி நாட்டில் உள்ளது) ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திரமான சிந்தனையாளர். உலகளாவிய ஒரு சக்தியின் மேல் நம்பிக்கை உள்ளவர். தனிமை விரும்பி. புலம்பல் ஞானி (Weeping Philosopher) என்று அழைக்கப்பட்டவர். தனக்கென்று பின்தொடரும் மாணவர் பட்டாளம் ஏதும் இல்லாதவர். இவரது காலம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் (கி.மு 535 கி.மு 475) ஆகும்.

இந்த பொன்மொழி பிரபலமானது எப்படி?


பராக் ஒபாமா (BARACK OBAMA) அவர்கள் 2008 - இல் அமெரிக்க குடியரசுத் தலைவராக வந்தார். (இப்போது இரண்டாம் முறை) அப்போது தனது உரை ஒன்றில் மாற்றம் தேவை என்று உரையாற்றினார். அன்றுமுதல் இந்த பொன்மொழியும் ஊடகங்களில் கூடவே சேர்ந்து பிரபலமாயிற்று.

பாடல் வரிகள் மற்றும் வீடியோ:
       

ரஜினி வசனம்:
எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு

குழு:
உண்மை உருவாய் நீ
உலகின் குருவாய் நீ
எம்முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ
உன் மார்போடு காயங்கள்
ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள்
நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே
மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

ரஜினி வசனம்:
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது

பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது
சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்

நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை செயல்

குழு:
உடலா உயிரா பெயரா நீ ?
மூன்றும் இல்லை செயலே நீ
விதியை அமைப்பது இறைவன் கையில்
அந்த விதியை முடிப்பது உந்தன் கையில்

உன் வில்லோடு வில்லோடு
வீரம் கொடு
உன் சொல்லோடு சொல்லோடு
மாற்றம் கொடு
மாற்றம் ஒன்று தான் மாறாதது

ரஜினி வசனம்:
நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?

நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

பெற்றோர்கள் அமைவது விதி;
நண்பர்களை அமைப்பது மதி

சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்

நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்

குழு:
உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்…!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது..

பாடல்: வைரமுத்து  - படம்: கோச்சடையான்
இசை: A.R.ரகுமான்
பாடியவர்கள்: ரஜினிகாந்த், ஹரிசரண்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது” - என்ற என்ற இந்த பாடலை, கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் (YOUTUBE) இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)



கட்டுரை எழுத துணை நின்றவை (நன்றியுடன்):
கோச்சடையான் பாடல் வரிகள்

                      (ALL PICTURES - COURTESY: "GOOGLE IMAGES")

  

Monday, 30 September 2013

ஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி”



சிலநாட்களுக்கு முன் வீட்டுத் திண்ணையிலிருந்து நாங்கள் வளர்த்த ஜாக்கி( JACKIE ) (வயது 10) விழுந்து விட்டது. அதற்கு காய்ச்சல் ஏற்பட மருந்து கொடுக்க சரியானது. (சின்ன குட்டி நாயாக இருந்தபோது எனது மகன் அதனை எடுத்து வந்தான்.) அதற்கு அடுத்து சிலதினம் சென்று, வீட்டு படிக்கட்டில் நான் கால் வழுக்கி விழுந்து விட்டேன்.முதுகில் அடிபட்டதால் வலி வந்து இப்போது குறைந்து விட்டது. அப்போதிலிருந்து  மனது சரியில்லை. மேலும் சின்னச் சின்ன பிரச்சினைகளால் குழப்பம். இந்தச் சூழ்நிலையில் ஜாக்கிக்கு மறுபடியும் உடம்பு நலமில்லை. திடமான உணவை ஜாக்கியினால். சாப்பிட இயலவில்லை. சென்ற வாரம் டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். சரியாக சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றார். ஆனாலும் பால், தண்ணீர்  தவிர வேறு எதனையும் உட்கொள்ளவில்லை.

மனது சரியில்லாததால் படிப்பது, எழுதுவது, வலைப் பதிவுகள் பக்கம் செல்வது என்று இருந்தேன். வெள்ளிக் கிழமை (27.09.2013) காலை வலையில் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்  (http://deviyar-illam.blogspot.in/2013/09/blog-post_26.html) என்ற ஜோதிஜியின் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதில் ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க “ என்று தொடங்கும் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதையை வீடியோ இணைப்பாகக் கொடுத்து இருந்தார்.அந்த பாடலைக்  கேட்ட போது மனதில் இனம் புரியாத விளக்கம். இந்த பாடலை எங்கோ கேட்டது போல் இருந்தது. (பின்னர் எங்கு என்பதற்கு விடை கிடைத்தது )அப்போது அவர் பதிவில் கருத்துரைப் பெட்டியில் நான் எழுதியது

// தாங்கள் இறுதியில் இணைத்து இருந்த பிறப்பு இறப்பு தத்துவத்தை உணர்த்தும் பாடல், நெருடலானது. தனிமையில் இருக்கும் போது மீண்டும் இந்த பாடலை நிதானமாக கேட்டு அசை போட வேண்டும். பகிர்வுக்கு நன்றி!  //
  
அடுத்தநாள் நேற்று முன்தினம் சனிக்கிழமை  காலை முதல் இனம் புரியாத உணர்வு. ஏதோ ஒன்று நடக்கப் போவதாய் உள்ளுணர்வு. இன்னதென்று சொல்ல இயலவில்லை ஷேக்ஸ்பியர் நாடகத்தில், போரில் வெற்றி பெற்ற மாக்பெத்(MACBETH) தனது நண்பனும் இன்னொரு தளபதியுமான பேங்கோவுடன் ஒரு தரிசு நிலத்தை கடக்கிறான். அப்போது அவன் மனதில் இன்னதென்று இனம் புரியாத கலக்கம். மாக்பெத் தன் நண்பனிடம் சொன்னது.

நல்லதும் கெட்டதும் நிறைந்த இது போன்ற ஒருநாளை இதுவரை நான்  கண்டதில்லை.

So foul and fair a day I have not seen. (MACBETH -  1.3.38)


மாக்பெத் மன நிலைமையில் நான் இருந்தேன். மனதில் ஆறுதல் தேடி மீண்டும் ஜோதிஜியின் கட்டுரையிலுள்ள  இணைப்பை சென்று பார்க்கச் சென்ற போது, எனக்கான மறுமொழியில் அவர் 

//  இரவு நேரத்தில் கேட்காதீர்கள். தூக்கம் வராது // 

என்று எழுதியிருந்தார். இருந்தாலும் நேற்று முன்தினம்  இரவு (சனிக் கிழமை) அந்த பாடலைக் கேட்டேன். மேலும் GOOGLE இல் தமிழில் ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க” - என்று பாடலின் முதல் வரியைக் கொடுத்து அதில் வந்த கட்டுரைகளைப் படித்தேன். படுக்க இரவு மணி 12 ஆகிவிட்டது.

அன்று இரவு 1.30 மணி அளவில் வீட்டினுள்ளே வராண்டாவில் இருந்த ஜாக்கி வெளியே விடச் சொல்லி முனகியது. வெளியே சென்ற ஜாக்கி தண்ணீர் குடித்துவிட்டு மாடிப்படிகளின் மேல் சென்று படுத்துக் கொண்டது. (வீட்டின் நான்கு பக்கமும் சுற்றுச் சுவர்) நான் கதவைப் பூட்டிவிட்டு  வீட்டினுள் படுத்து விட்டேன். நேற்று (29.09.2013) ஞாயிறு காலை 6.30 மணி அளவில் ஜாக்கி ஜாக்கி “ என்று அழைத்தேன். வரவில்லை. கொஞ்ச நேரம் கழித்து கிரில் கேட்டைத் திறந்து வெளியில் பார்த்தபோது வீட்டு வாசலில் இறந்து கிடந்தது (மாடிப்படிகளில் இருந்து கீழே ஓடிவந்து இருக்கிறது). வீட்டினுள் நான், எனது மனைவி மற்றும் எனது மகன் (கல்லூரி மாணவர்) என மூவர் மட்டுமே. எல்லோரும் அழுதோம். விஷயம் கேள்விப் பட்டு எனது பெற்றோர் வந்து பார்த்தனர். அடுத்த வீட்டிலும் விசாரித்தனர்.

இறந்து போன் ஜாக்கியை வீட்டின் கொல்லைப் பக்கம் புதைக்கலாம் என்றால், அந்த இடத்தைப் பார்க்கும் எனது மகன் எப்போதும் அழுது கொண்டே இருப்பான். மேலும் அதன் நினைவுகள் அடிக்கடி எல்லோரது மனதிலும் வந்து மனதை அலைகழிக்கும். எனவே வெளியில் எங்காவது புதைக்க முடிவாயிற்று. ஞாயிற்றுக் கிழமை என்பதால் கார்ப்பரேசன் ஆட்கள் யாரும் கிடைக்கவில்லை. அருகில் இருந்த ஒரு சில ஊழியர்கள் புதைக்க மாட்டோம். சாக்கில் கட்டி வெளியே தொலைவிற்கு சென்று காட்டில் வீசி விடுவோம்என்றார்கள். நாங்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. காலையிலிருந்து எனது டிவிஎஸ் 50 XL ஐ எடுத்துக் கொண்டு அலைந்தேன். கடைசியாக 11.30 அளவில் இந்து, கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் இடுகாடுகளில் சவக்குழி தோண்டும் கான் என்ற முஸ்லிம் சகோதரரைச் சொன்னார்கள். அவரும் முன்வந்தார். இவர் ஒரு தட்டு ரிக்‌ஷாக்காரர். அவரது தட்டு ரிக்‌ஷாவிலேயே  ஜாக்கியை ஒரு சாக்குப் பையில் நானும் எனது மகனும் எடுத்துச் சென்று, இடுகாட்டின் ஒரு மூலையில் காம்பவுண்டு சுவர் அருகே அடக்கம் செய்தோம்.


எங்கள் ஜாக்கியைப் பற்றியும் அதன் குணாதிசயங்களைப் பற்றியும் ஒரு பதிவாக எழுதலாம் என்று இருந்தேன். அதற்குள் இப்படி ஆகி விட்டது. நாங்கள் நேசித்த அந்த ஜாக்கியின் ஆன்மா சாந்தியடையட்டும்


(மண்ணில் தோன்றிய எல்லா உயிரினமும்  இறைவன் படைப்புதான். சுயநலம் காரணமாக சில உயிர்களை நேசிக்கிறோம்; சில உயிர்களை வெறுக்கிறோம்.. கவிஞர் வைரமுத்து மனித உயிரின் பயணத்திற்காக மட்டும் இந்த கவிதையை எழுதியதாக நான் நினைக்கவில்லை. மண்ணுலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்குமாகவே எழுதியதாக நினைக்கிறேன் )
  
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு நன்றி! கவிதை இங்கே.

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன! 


மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

-                     கவிஞர் வைரமுத்து



இந்த பாடலை வீடியோவில் கேட்க கீழே உள்ள முகவரியில் “க்ளிக்செய்யுங்கள்.

VIDEO THANKS TO GOOGLE  ( YOUTUBE )

ஒரு சிறிய குறிப்பு :
 ஒரு நாயின் ஆயுட்காலம் சராசரியாக 12 ஆண்டுகள் என்று ஜாக்கி இறந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன் எங்கள் ஜாக்கியின் வயது 10. DOG AGE CALCULATOR – துணை கொண்டு இப்போது கணக்கிட்டதில், அதாவது மனிதனின் வயதோடு ஒப்பிடுகையில்  கணக்குப்படி ஜாக்கி இறக்கும்போது அதன்  வயது 65 ஆகிறது (நன்றி: www.pedigree.com )  
தி தமிழ் இளங்கோ 06.10.2013