ஹரித்துவாரில் கங்கைக்கரையில் திருவள்ளுவர் சிலையை எந்த அரசியல்
கட்சி வைத்தால் என்ன? பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் அதிலும் வழக்கம் போல அரசியல்.
நம்மூர் தமிழ் மக்கள் வடக்கே போய் வள்ளுவர் சிலையை வைத்து விட முடியுமா? ஆனாலும் வள்ளூவர்
மீதும் தமிழின் மீதும் உள்ள மரியாதையின் காரணமாக,
வட மாநில (உத்தரகாண்ட்) ராஜ்யசபா எம்.பி திரு தருண் விஜய் அவர்கள் அங்கே திருவள்ளுவர்
சிலையை நிறுவ முயற்சி எடுத்தார். உடனே அங்கே உள்ள சாதுக்கள் எதிர்ப்பு என்று செய்தி
வருகிறது. இங்கு தமிழ்நாட்டிலும் சிலர் இதற்கு நோக்கம் கற்பித்து அரசியல் பேசுகிறார்கள்.
கர்நாடகாவில் வள்ளுவர்
:
அண்டை மாநிலமான கர்நாடகாவில்,
பெங்களூரில், தமிழ்ச்சங்கம் சார்பில், அல்சூர் ஏரிக்கரை பூங்காவில், 1991 ஆம்
ஆண்டு நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை உடனே திறக்க முடிந்ததா? ( இத்தனைக்கும் கன்னடம்
நமது திராவிட மொழிகளில் ஒன்று என்று தமிழர்களாகிய நாம் பெருமை பேசி வருகிறோம்; பெங்களூரிலும்
தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள்..) அப்போது கர்நாடக முதல்வராக இருந்த பங்காரப்பா (
காங்கிரஸ் ) மற்றும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், திருவள்ளுவர் சிலை
18 வருடங்களுக்கும் மேலாக சாக்கால் சுற்றப்பட்டு இருந்தது. பின்னர் அப்போதைய தமிழக
முதல்வர், கலைஞர் கருணாநிதி அவர்களது முயற்சியால் அவரது ஆட்சிக்காலத்தில், பி.ஜே.பி
முதலமைச்சராக எடியூரப்பா இருந்த போதுதான் ( ஆகஸ்டு 9, 2009) திறந்து வைக்கப்பட்டது.
அதேபோல கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் (Sarvajna) உருவச்சிலை இங்கு சென்னையில் திறந்து
( ஆகஸ்டு 13, 2009) வைக்கப்பட்டது. கவிஞர் சர்வக்ஞர் தமிழ் சித்தர்கள் போன்று ஒரு சீர்திருத்தவாதி
என்பதில் மிக்க மகிழ்ச்சிதான்.
வடக்கே என்ன பிரச்சினை:
பொதுவாகவே வட இந்தியர்களுக்கு, தமிழ்நாடு என்றாலே அவர்கள் இந்தி
எதிர்ப்பாளர்கள் என்ற பரவலான எண்ணம் உண்டு.(தமிழ்நாட்டில் இந்தி படிப்பதை யாரும் எதிர்க்கவில்லை;
அரசியல் அதிகாரத்தின் துணையோடு இந்தி இங்கு தமிழகத்தில் கட்டாய திணிப்பு செய்வதுதான்
எதிர்க்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தி.மு.க மட்டுமல்ல, தமிழக காங்கிரஸ் தலைவர்கள்
உட்பட பிற கட்சி தலைவர்களும் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்தனர். தி.மு.க முன்னணியிலிருந்து
முன்னெடுப்பு செய்தது.என்பது வரலாறு)
மேலும் திருவள்ளுவர் ஒரு
தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவர் சிலையை அங்கே வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்
என்று ஒரு கருத்து சொல்லப்பட்டது. திருவள்ளுவர் இன்ன ஜாதி என்றோ அல்லது இன்ன மதத்தினர்
என்றோ இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை. வள்ளுவரைப் பற்றியும் இன்னும் சில புலவர்களைப்
பற்றியும் இங்கு சொல்லப்படும் கதைகளுக்கு வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடையாது. பழைய
தமிழகவரலாற்றின் பெரும்பகுதி இவ்வாறே இருக்கிறது. அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கோ அல்லது
மதத்திற்கோ சொந்தமானவர் அல்ல. அவர் ஒரு உலகப் பொதுமறையாளர்.
இப்பேர்பட்ட சூழ்நிலையில்
திரு தருண் விஜய் அவர்கள் வடக்கே வள்ளுவர் சிலையை நிறுவ எடுத்துக் கொண்ட முயற்சி
பாராட்டத் தக்கது ஆகும்.
தருண் விஜய் பற்றி:
யார் இந்த தருண் விஜய் என்று பார்க்கும்போது அவரைப் பற்றிய விவரத்தை
இணையதளங்களில் காண முடிகிறது. டேராடூனில் (உத்தர்காண்ட்) மார்ச் 2 ஆம்தேதி 1956 இல்
பிறந்த இவர், பி.ஏ. பட்டதாரி; எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர். பாஞ்சசான்யா என்ற
ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையின் எடிட்டராக இருந்தவர். நூல்கள் சிலவும் எழுதியுள்ளார். பாரதீய ஜனதா கட்சி சார்பாக, உத்தரகாண்ட்
ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தி இந்து (தமிழ்) பத்திரிகையில் அவர் அளித்த
பேட்டியின் ஒரு பகுதி இங்கே.
தமிழ் மீது உங்களுக்குப் பாசம் உருவானது எப்படி?
பெரும்பாலான வட இந்தியர்கள் இந்தி மொழி மீது உள்ள கர்வத்தினால், மற்ற மொழிகளை விமர்சிக் கிறார்கள். இதனால், நம் நாட்டின் மற்ற மொழிகளையும், ‘தமது’ என ஏற்காத குணம் அவர்களிடம் இல்லாததை உணர்ந்தேன். இதைச் சரிசெய்ய விரும்பிய எனக்கு மற்ற தென் இந்திய மொழிகளில் தமிழின் மீதான ஆர்வம் அதிகமானது. தமிழின் பாரம்பரியம், கலாச்சாரம், ஒழுக்கம் போன்றவைதான் இதற்குக் காரணங்கள். தமிழை மற்ற மொழி என்று கூறாமல், எனது தாயின் மொழிகளில் ஒன்று என ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
மாநிலங்களவையில் இந்தி மட்டும் இருக்கும் தேசிய மொழிப் பட்டியல்களில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் எழுப்பிய குரலுக்குக் கிடைத்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ன?
எதிர்ப்பை விடப் பல மடங்கு ஆதரவுதான் எனக்கு அதிகமாகக் கிடைத்தது. தமிழகத்திலிருந்து திமுக தலைவர் மு. கருணாநிதி என்னைப் பாராட்டித் திருக் குறளைப் பரிசாக அளித்திருக்கிறார். ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் உட்படப் பலர் தொலைபேசி மூலம் அழைத்து பாராட்டினார்கள். அதிமுக சார்பிலும் அதன் எம்பிக்கள் பாராட்டுக் கடிதங்கள் எழுதியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வட இந்தியாவில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் நேரில் வந்து என்னைச் சந்தித்து நெகிழ்ந்துபோனார்கள்.
எதிர்ப்புத் தெரிவித்த மிகச் சிலரிடம், தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அவர்கள் மனதையும் மாற்றுவேன்.
(நன்றி: தி இந்து (தமிழ்) தேதி
14.செப்டம்பர் 2014 )
பாராட்டுக்குரியவர்:
ஆனாலும் திரு. தருண் விஜய் அவர்கள் அவர் ஒரு பி.ஜே.பி அரசியல்வாதி
என்பதால், அவர் தமிழுக்கு செய்கின்ற நல்ல காரியங்களுக்கு உள்நோக்கம் கற்பித்து எதிர்ப்பவர்களும்
இங்குண்டு. என்னைப் பொருத்தவரை, இவர்களது கருத்துக்களை புறந்தள்ளி விட்டு, வடக்கே வள்ளுவர்
சிலையை நிறுவும் திரு. தருண் விஜய் அவர்களை பாராட்ட வேண்டியது நமது கடமை என்றுதான்
சொல்வேன்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxx
( ஹரித்வாரில் தொடர்மழை காரணமாக நிறுத்தி
வைக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் சிலை நிறுவும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இம்மாத
(ஆகஸ்ட் 2016) இறுதியில் திறப்புவிழா நடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது – புதிய
தலைமுறை செய்தி 06.08.2016 / பார்க்க https://www.youtube.com/watch?v=I1GlIm6RbGc )
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)





