Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Friday, 5 May 2017

யானைக்கு அல்வா வாங்கி போட்ட கணக்கு



நம்ப ஆட்களை கணக்கு காட்டு என்றால் கவலையே பட மாட்டார்கள். எப்படியும் ஒரு கணக்கை காட்டி விடுவார்கள். ஆனைக்கு அர்ரம் என்றால், குதிரைக்கு குர்ரம் அவ்வளவுதான். பல இடங்களில் இரண்டு கணக்கு பேரேடு இருக்கும். ஒன்று வெள்ளை. இன்னொன்று கறுப்பு. இப்போது அப்படி கூட இல்லை. வெளிப்படையாகவே அடிக்கிறார்கள். செய்யாத வேலைக்கு செய்ததாக கணக்கு காட்டுகிறார்கள்.

தெர்மாக்கோல் கணக்கு

அண்மையில் அமைச்சர் ஒருவர், வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்கும் பொருட்டு, தெர்மாகோல் அட்டைகளை வைத்து மூடும் முயற்சியில் இறங்கினார் என்றும், ஆனால் அம் முயற்சி தோல்வியில் முடிந்தது என்றும் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. அம்மா இருந்தவரை பம்மிக் கிடந்த பலரும், அந்த அமைச்சரை ,நெட்’டில் காய்ச்சி எடுத்து விட்டனர். அவரும் வேறு வழி இல்லாது சமாளித்து அறிக்கை வெளியிட்டு விட்டார். முதலில் அந்த திட்டத்திற்கு 10 லட்சம் என்று செலவுக்கணக்கு சொன்னவர்கள், பிற்பாடு, இல்லையில்லை ரூபாய் எட்டாயிரம் மட்டுமே என்று சொன்னார்கள்.

தயிர்க் கணக்கு 

ரெயில்வே கேண்டீன்கள், ரெயில்வே சமையலறைகள், ரெயில்வே மளிகை சாமான்கள் குடோன் என்று, மத்திய ரெயில்வேயின் கேட்டரிங் பிரிவிற்கு சமையல் சாமான்கள் அனைத்தும் ரெயில்வே கேட்டரிங் துறைதான் வாங்கிப் போட்டு விநியோகம் செய்யும். இதன் தலைமையிடம் இருப்பது மும்பாயில். அவர்கள் எப்போதும் நஷ்டக் கணக்கையே எழுதி வந்தார்கள். பார்த்தார் ஒருவர். அவர் பெயர் அஜய் போஸ். மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை உனக்கு மட்டும் ஏன் என்ற பராசக்தி பட வசன ஸ்டைலில், அவருக்கு. வந்தது அக்கறை. வழக்கம் போல தகவல் அறியும் உரிமைச் சட்டம் கீழ் கணக்கை கேட்டு எழுதிப் போட்டார். அவர்கள் அசைவதாக இல்லை. இவரும் விடுவதாக இல்லை. ஒரு வழியாக பதில் தந்தார்கள். அந்த பதிலில்,ஒரு கிலோ தயிர் ரூ 9720 இற்கும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ1241 இற்கும், ஒரு பாக்கெட் உப்பு ரூ 49 இற்கும், கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில் ஒன்று ரூ 59 இற்கும் வாங்கியுள்ளதாக தெரிவித்து இருந்தார்கள். கணக்கு கேட்டார். கொடுத்து விட்டார்கள். அப்புறம் டைப் செய்ததில் பிழை என்றார்கள்.

யானைக்கு அல்வா

மேலே சொன்ன எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும்படியாக ஒரு கணக்கை சர்க்கஸ் மானேஜர் ஒருவர் சொல்லி இருக்கிறார். இந்த நகைச்சுவை காட்சி வரும் அந்தக் கால ஜெமினியின் பிருமாண்டமான படம் ‘சந்திரலேகா’. வெளிவந்த வருடம். 1948. இந்தி. தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டது. அதில் சர்க்கஸ் கம்பெனி ஒன்று படம் முழுக்க வரும். இந்த சர்க்கஸ் கம்பெனி மானேஜராக நடிகர் எல்.நாராயண ராவ் நடித்து இருக்கிறார். கணக்கப் பிள்ளையாக டி.ஏ.மதுரம். அந்த வசனம் இங்கே

ராவ் : (அதிகார தோரணையில்)

எழுதினியா? இன்னுமா முடியல… ஆண்களுக்கு எளநீர் வாங்கிக் கொடுத்தது முந்நூத்து அம்பது ரூபாய்னு எழுதிக்க

எத்தனை நாழி எழுதற. உன்னையும் ஒரு கணக்குப்பிள்ளைன்னு நான்  வச்சிக்கிட்டு இருக்கிறேன். ம்.. சீக்கிரம் எழுது

இன்னும் ஐநூறு ஒதைக்குதே…  ம்… யானைக்கு அல்வா வாங்கி போட்டது ஒரு எறநூறு … என்ன மொறக்கிற … நான் சொல்றபடி எழுதுறியா இல்லையா … இல்லைனா … உன்னை வேலையிலிருந்து தொலச்சிபிடுவேன். ஹ .. ஹ 
..
யானைக்கு அல்வா வாங்கி போட்டது எறநூறு எழுதியாச்சா … புலிக்கு புல்லு வாங்கி கொடுத்தது நூத்து அம்பது ….. இன்னும் நூத்து அம்பதுக்கு கணக்கு  சரியா வரலியே

(பெண் கணக்குப்பிள்ளை டி.ஏ.மதுரம் சிரிக்கிறார் ) 

மதுரம்:

மொத்தக் கணக்கையும் எழுதட்டுமா .. ஆளப்பாரு ஆளை – ஆனைக்கு அல்வாவாம் புலிக்கு புல்லாம் … ஒன்ன தலைக்கு மூளை வாங்கிக் வச்சதுனு எழுதறேன்

ராவ்:

எழுதேன் … எனக்கு எப்படியாவது … கணக்கு சரியாகனும் … 

மதுரம்:

ம் .. அப்படில்லாம் எழுத முடியாது

ராவ் 

கோவிச்சுக்காதே … மீனாட்சி நிஜமா ஐநூறு செலவழிஞ்சிருக்கு .. கணக்கு ஞாபக மறதியாச்சு

இந்த நகைச்சுவை காட்சியைக் கண்டு கேட்டு ரசித்திட கீழே உள்ள யூடியூப் திரையை அல்லது இணையதளத்தினை சொடுக்கிப் ( CLICK ) பார்க்கவும்.


 நன்றி:  https://www.youtube.com/watch?v=eljZv4L9dGA
  

Friday, 11 October 2013

பழைய நினைப்புதான் …


ஹலோ! ... நான்தான் டெப்டி கலெக்டர் பேசறேன். யார் பேசறது  - என்பார் அவர். அதே மாதிரி யாரிடமிருந்தாவது  போன் வந்தால் கூட “ ஆமாம் நான்தான் டெப்டி கலெக்டர் பேசறேன் சொல்லுங்க “ என்பார். அவர் ஒன்னும் இப்போது டெப்டி கலெக்டர் கிடையாது. அவர் அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்று ஏழு அல்லது எட்டு வருடங்கள் ஆனாலும் அவர் அடிக்கடி தன்னை ஒரு டெப்டி கலெக்டராகவே பேச்சில் காட்டிக் கொள்வார். பேச்சில் மட்டுமல்ல உடை உடுத்துவதிலும்தான். வெளியில் எங்காவது சென்றால் வெளுப்பு கலரில் சபாரி உடை. மேல் பாக்கெட்டில் நீலம், சிவப்பு, பச்சை இங்க் பேனாக்கள். முகம் வழுவழுவென்று தோன்ற தினமும் ஷேவிங். பெர்பியூம்டு செண்ட். கையில் கறுப்பு லெதர் ஹேண்ட் பேக். ஒரு பழைய அம்பாசிடர் காரை இன்னும் விடாப்பிடியாக வைத்து இருக்கிறார்.

இதில் ஒன்றும் தப்பில்லை. இந்த வயதிலும் இவர் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என்றால் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். இந்த சுறுசுறுப்பிற்கு காரணம் அவர் இன்னும் தன்னை அந்த பழைய “ரேங்க்கிலேயே வைத்துக் கொள்வதுதான். இவரைப் போன்று நிறையபேர்.

எனக்குத் தெரிந்த கிராமத்தில் ஒருவர் இருந்தார். அவர் ஒரு ஆசிரியராக இருந்து கடைசியோ கடைசியாக தலைமை ஆசிரியராக இருந்து நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்றவர்.. அவர் எப்போதும் இருப்பது ஊருக்கு மூலையில் அவர் வாங்கிப் போட்ட வயலில் இருக்கும் பம்ப் செட்டில்தான். பென்சன் வாங்க அல்லது வேறு ஏதாவது ஜோலி என்றால் தன்னிடம் இருக்கும் டீவீஎஸ் மொபட்டை எடுத்துக் கொண்டு அருகிலிருக்கும் டவுனுக்குப் போய் வருவார். பெரும்பாலும் பம்ப் செட்டிற்கான ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கத்தான் இருக்கும். காரணம் அடிப்படையில் அவர் ஒரு விவசாயி. அந்த நினைப்புதான் அவரிடம் இருந்தது.


                                                            ( Picture: kaiser Wilhelm )

சிலர் மீசையை ந்ன்கு பெரிதாக புசுபுசுவென்று வைத்து இருப்பார்கள். அதிலும் ராணுவம், காவல்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த புசுபுசு மீசை மீது ரொம்பவும் ஆசை. எப்போது பார்த்தாலும் மீசையை தடவிக் கொண்டோ அல்லது முறுக்கிக் கொண்டோ இருப்பார்கள். ரிடையர்டு ஆனாலும் பழைய பந்தா போகாது. மீசைக்கு சாயம் ஏற்றிக் கொண்டு மிரட்டலாக தோற்றமளிப்பார்கள். எத்தனை நாளைக்குதான் அது அப்படியே இருக்கும். வயது ஆக ஆக மீசையில் இருக்கும் மயிர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்து கிழடு தட்டி விடும். வேறு வழி இல்லை. அப்புறம் மீசைக்கு டாட்டாதான்.

எனது பணிக்காலத்தில் நடந்த ஒரு சம்பவம். நான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு நகரக் கிளைக்கு மாற்றலாகிச் சென்றேன். அதே போல் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரும் அந்த கிளைக்கு மாற்றலாகி வந்து இருந்தார். அவர் பணம் வாங்கும் கொடுக்கும் கவுண்டரில் டெல்லர் (TELLER) ஆக இருந்தார். நான் அவருடைய கவுண்டருக்கு அருகில் பாஸிங் பிரிவில் ஆக்டிங் ஆபிசர். ஒருநாள் மேலே சொன்ன டெப்டி கலெக்டரைப் போன்ற வாடிக்கையாளர் ஒருவர் வந்தார். நாங்கள் இருவருமே அவரை அப்போதுதான் பார்க்கிறோம். பணம் எடுப்பதற்காக சலானை பூர்த்தி செய்து டெல்லர் கவுண்டரில் கொடுத்தார். சலான் பச்சை இங்கில் பூர்த்தி செய்யப்பட்டு இருந்தது. உடனே நண்பர் அவரிடம்

“ சார் பச்சை இங்கில் எல்லாம் சலானை பூர்த்தி செய்யக் கூடாது. கறுப்பு அல்லது நீலம் கலரில்தான் இருக்க வேண்டும் என்றார்.

அவரோ “ நான் இத்தனை நாளா இந்த பச்சை இங்கில்தான் சலானை பூர்த்தி செய்வது வழக்கம். இப்போது  புதுசாக சொல்கிறீர்கள் ‘ என்று சொன்னார்.

நண்பரோ சார்! பச்சை இங்கில் கெஜட்டேட் ஆபிசர்கள்தான் கையெழுத்து போட வேண்டும். நீங்கள் போடக் கூடாது “ என்றார். அந்த வாடிக்கையாளர் ஒரு கெஜட்டேட் ஆபிசராக இருந்து ஓய்வு பெற்றவர். எனவே டெல்லர் கவுண்டரில் ஒரே வாக்குவாதம். சத்தம். நான் பாஸிங் ஆபிசர் என்பதால் அவரிடம் பொறுமையாக சாதாரணமாக பச்சை இங்க்கில் கெஜட்டேட் ஆபிசர் மட்டும் கையெழுத்து போடுவார்கள் என்று சொன்னேன். அவரோ கேட்பதாக இல்லை. எனவே இந்த விவகாரம் கிளை மேலாளரிடம் சென்றது. கிளை மேலாளர் சலானில் “PAY என்று ஒப்புதல் தந்து அன்றைய பிரச்சினையைத் தீர்த்தார். அத்தோடு நில்லாமல் மண்டல அலுவலகத்திற்கு போன் செய்து வாடிக்கையாளர் பிரச்சினையைச் சொன்னார். அவர்கள் ரொம்பவும் கூலாக வாடிக்கையாளர் எந்த கலர் இங்கில்  கையெழுத்திட்டாலும் ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள். எனது டெல்லர் நண்பர் பார்த்தார். ஒரு பச்சை இங்க் பேனா வாங்கினார். அங்கு வரும் பெரும்பாலான துப்புரவு தொழிலாளர்கள் சலானை பூர்த்தி செய்ய அவரிடம் பேனா கேட்பது வழக்கம். அவர்களிடம் அவர் அந்த பச்சை இங்க் பேனாவைத்தான் கொடுப்பார். அவர் இருக்கும் வரை துப்புரவு தொழிலாளர்கள் பச்சை இங்கில்தான் கையெழுத்து போட்டனர்.

எல்லாவற்றையும் நினைக்கும் போது “ பதினாறு வயதினிலே “ திரைப்படத்தில் வரும் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாட்டில் வரும் “பழைய நினைப்புதான் பேராண்டி பழைய நினைப்புதான்“ என்ற வாசகம் ஞாபகம் வந்தது.

( குறிப்பு: பதிவு பெற்ற அதிகாரிகள் (GAZETTED OFFICERS)  பச்சை மையினாலோ அல்லது இன்ன கலர் மையினாலோதான் கையெழுத்து இட வேண்டும் என்று அரசு உத்தரவு கிடையாது. எழுத்தர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு வித்தியாசம் தெரிவதற்காக பச்சை மையினால் அதிகாரிகள் கையெழுத்தை இட்டார்கள் )

( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )






Tuesday, 24 September 2013

கேஸ் சிலிண்டர் மானியமும் வடிவேலு நகைச்சுவையும்


திட்டம் போட்டு பொது மக்களுக்கு தொல்லைகள் தருவதற்கு என்றே ஒரு குழு இருக்கிறது. அதற்குப் பெயர் திட்டக் குழு. அவர்கள் எதனை அறிவித்தாலும் மக்களுக்கு அதனால் குழப்பம்தான் மிஞ்சும். முன்பு வறுமைக் கோடு எது என்பதற்கு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு யோசித்தார்கள். அதில் ஏகப்பட்ட பல்டிகள்.

இப்போது எல்பிஜி மானியம் எனப்படும் சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம். ஏற்கனவே ஆதர் அட்டை ஒரு குழப்பமாகவே இருந்து வருகிறது. நிறையபேர் இன்னும் பதிவே செய்யவில்லை. பதிவு செய்த பலபேருக்கு அட்டைகள் வந்தபாடில்லை. இந்த நிலையில் எல்பிஜி மானியம்  வங்கிகள் மூலம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு. இதற்கு ஆதர் அட்டை எண் அவசியம் என்று அறிவித்து இருக்கிறார்கள். இந்த அட்டையை வாங்கி, இதில் உள்ள எண்ணை ஒரு மனுவில் பூர்த்தி செய்து நமக்கு சேமிப்பு கணக்கு உள்ள வங்கியில் கொடுக்க வேண்டும். அவர்கள் அதை சரிபார்த்த பின்னர் நமக்கு கேஸ் வழங்கும் ஏஜென்சியிடம் கொடுக்க வேண்டும். பின்னர் அவர்கள் இந்தியாவில் உள்ள கோடான கோடி மக்களுக்கு ஒவ்வொரு சிலிண்டருக்குமான மான்யத்தை கணக்கில் வரவு வைப்பார்கள். இதெல்லாம் உடனே நடக்கக் கூடிய காரியமா என்பதை யாரும் யோசிக்கவில்லை தலையைச் சுற்றி மூக்கை தொடும் கதைதான்.

இதுநாள் வரை சிலிண்டர் வந்ததா பணத்தை கொடுத்தோமா என்று இருந்தது. அதாவது கையில காசு வாயில தோசை. இனிமேல் எப்போது பார்த்தாலும் இந்தியா முழுக்க ஆதர் அட்டைக்கு பெரிய க்யூ, வங்கியில் ஒரு பெரிய க்யூ என்று இருந்து கொண்டே இருக்கும் மானியத்தை வங்கிக்கு அனுப்பி விட்டதாக இவர்கள் சொல்வார்கள். அங்கே போனால் இன்னும் வரவில்லை என்பார்கள். நாளுக்கு நாள் ஏறும் சிலிண்டரில் பழைய மான்யமா புதிய மான்யமா என்று அவ்வப்போது குழப்பம் ஏற்படும். வெட்டி வேலையை நாள் முழுக்க அரசு ஊழியர்கள் பார்த்துக் கொண்டு இருப்பாரகள்.


இவர்கள் செய்யும் காரியத்தைப் பார்க்கும் போது திரைப்படம் ஒன்றில் வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சிதான் ஞாபகத்திற்கு வருகிறது. அதில் தெருவில் வடிவேலுவின் வியாபாரம் நடக்கிறது.   மூட்டைப் பூச்சியை கொல்லும் நவீன மெஷின் என்று சின்ன பிள்ளைகள் தங்கள் விளையாட்டில் வைத்து விளையாடும் மாவுக்கல் போன்ற ஒன்றையும் குழவி ஒன்றையும் விற்பனை செய்கிறார். வாங்கிச் சென்ற சிங்கமுத்து திரும்ப வருகிறார். இந்த எந்திரத்தை வைத்து எப்படி மூட்டைப் பூச்சியைக் கொல்லுவது என்று கேட்பார். அதற்கு வடிவேலு, ஒவ்வொரு மூட்டைப் பூச்சியாக பிடித்து அந்த எந்திரத்தில் போட்டு, அந்த சின்ன குழவியால் குத்தினால் மூட்டைப் பூச்சி காலி என்பார். சிங்கமுத்து வெறியாகி வடிவேலுவை உதைப்பார். இப்படியாகத்தான் உள்ளது இவர்களது கேஸ் சிலிண்டர் மானிய விவகாரம்.

வீடியோவில் இந்த நகைச்சுவையைக் காண இங்கே “க்ளிக்செய்யுங்கள்.




இப்போது சுப்ரீம் கோர்ட் ஆதார் அடையாள அட்டை வாங்க வேண்டும் என, நாட்டின் குடிமக்கள் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. அத்தியாவசிய சேவைகள் வழங்குவதற்கு, அந்த அடையாள அட்டை அவசியம் என, நிர்பந்திக்கக் கூடாது. மேலும், பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்களுக்கு, கட்டாயம், இந்த அடையாள அட்டை வழங்கப்படக் கூடாது. என்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இனி என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.


PICTURES & VIDEO: THANKS TO GOOGLE 
 


 

 

Tuesday, 17 September 2013

கோழிக்கறியும் கோபால்சாமியும்



எனது பணிக்காலத்தின் போது நகர்ப்புறத்தில் இருந்த கிளையில் பணி புரிந்தேன். அது ஒரு நடுத்தரமான கிளை. (Medium size Branch). எனவே அதில் ஓரளவு அதிக ஊழியர்கள் இருந்தார்கள். வங்கியின் பின்புறம் தனிக் கட்டிடத்தில் உணவு அறை. அங்குதான் எல்லோரும் மதிய உணவு சாப்பிடுவோம். மகளிர்க்கு தனியே வேறு ஒரு இடம் இருந்தது. மதிய உணவின் போது பெரும்பாலும் அரட்டைக் கச்சேரியாகவே இருக்கும். நானும் அந்த கிளைக்கு வந்த புதிதில் வீட்டிலிருந்து எடுத்து வந்த மதிய சாப்பாட்டை அங்குதான் சாப்பிட்டேன்.

ஒருநாள் வழக்கம் போல மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது ஒருவருக்கொருவர் ஜாலியாக பேச்சு களை கட்டியது. அப்போது ஒரு நண்பருக்கு கோழிக்கறியும் குருமாவும் வீட்டிலிருந்து வந்து இருந்தது. அவர் சில நண்பர்களோடு குருமாவையும் சிக்கனையும் பகிர்ந்து கொண்டார். அப்போது நான் அசைவம். என்றாலும் சிக்கன் சாப்பிட மாட்டேன். வீட்டிலிருந்து எடுத்து வருவது பெரும்பாலும் தயிர் சாதம்தான். அப்போது  ஒரு நண்பர், தான் கேள்விப்பட்ட அரசியல் ஜோக்கை சொன்னார். அது இதுதான்.

ஒரு VIP வீட்டில் விசேஷம். சர்வகட்சி நண்பர் அவர்.. சைவம் தனியே, அசைவம் தனியே என்று விருந்து அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. பெரும்பாலும் அசைவம் என்றால் மட்டன் பிரியாணி கோழிக்கறியுடன் மசாலா கிரேவியை வைப்பார்கள்.மற்றும் கூடவே ஒரு முட்டை.அரசிய்ல்வாதிகள் பலரும் அந்த அசைவ விருந்தின் பக்கம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களில் கோபால்சாமியும், துரைமுருகனும் இருந்தனர். இருவரும் இருவேறு மூலைகளில். துரைமுருகன் எப்போதும் யாரையும் தனக்கே உரிய முகம் மற்றும் உடற் பாவனையில் (Body Language ) அடுத்தவர்களை கிண்டல் செய்வார். அங்கேயும் ஒரு அரட்டைக் கச்சேரி நடந்து கொண்டு இருந்தது. கோபால்சாமி கோழிக்கறியை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த  ஒருவர் துரைமுருகனைப் பார்த்து அண்ணே! போன தடவை கோபால்சாமியை ஒரு விருந்தில் கோழிக்கறி சாப்பிடச் சொன்னபோது ஈழம் கிடைக்கும் வரை கோழிக்கறி சாப்பிட மாட்டேன் என்று சொன்னார். இப்போது இந்த வெட்டு வெட்டுகிறாரே? ‘ என்று கேட்டார். அதற்கு துரைமுருகன் தனக்கே உரிய ஸ்டைலில் சொன்ன பதில் அவர் அப்படி சொன்னபோது அது புரட்டாசி மாதமாக இருந்து இருக்கும். அதனால்தான் அவர் அன்று சாப்பிடவில்லை  என்பதுதான். அந்த உணவுக் கூடத்தில் மட்டுமல்ல எங்கள் மதிய உணவு அறையிலும் ஒரே சிரிப்பலைகள்.



( நண்பர்களே! இந்த ஜோக், சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு சக ஊழியர் ஒருவர் சொன்னது.  இதனை நகைச் சுவையாகவே எடுத்துக் கொள்ளவும். இங்கு குறிப்பிடப்பட்ட  பெயர்கள் நிகழ்வுகள் யாரையும் எதனையும் குறிப்பவை அல்ல. )
 
( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )