Sunday 31 March 2013

விடை பெற்றுக் கொள்கின்றேன்




ஐந்தாண்டிற்கும் மேலாக வலைப்பதிவினில்
வலைய வந்து விட்டேன்!  
ஓராண்டிற்கும் மேலாக வலைப்பதிவினில்
எழுதியும் வந்து விட்டேன்! இன்னும்
எனது பயணம் நிற்கவில்லை!

அப்படி இப்படி என்றே சமாளித்தாலும்
கண்ணில் ஒருகுறை என்பதால்
என்ன செய்ய முடியும்?

இடைக்கால ஓய்வாக செல்கின்றேன்!
ஒரு சின்ன இடைவெளி மட்டுமே!
யாரிடமிருந்தும் நான் பிரியவில்லை!
எனது எண்ணங்கள் இவ்விடமே!

விடை பெற்றுக் கொள்கின்றேன்
நண்பர்களே! தற்காலிகமாக!
மீண்டு வருவேன்!
மீண்டும் சந்திப்போம்!




  ( Second Picture Thanks to http://blogs.trb.com )

                       இதுவும் கடந்து போகும் ( THIS TOO SHALL PASS )
 










Sunday 10 March 2013

கண் ஆபரேஷன் கட்டணம்



.என்னவென்று தெரியவில்லை. கண்களில் ஒரே கூச்சம். கண்களிலிருந்து அடிக்கடி தண்ணீர் வந்தது.. அப்போதுதான் நேஷனல் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் சேர்ந்து இருந்தேன் பெரும்பாலும் கல்லூரி கட்டடங்களின் வெளிப்புறம் வெளிர் மஞ்சள் நிறம்தான். வகுப்பறையில் உட்கார்ந்து இருக்கும்போது ஜன்னல் வழியே பார்க்கும்போது, வெளியில் எதிர்ப்புறம் உள்ள கட்டடங்களில் வெயில் பட்டு கண்ணை கூசச் செய்யும். வழக்கம் போல கண்களிலிருந்து தண்ணீர். வேறு வழியில்லை. கண் மருத்துவமனை சென்று மருத்துவரைப் பார்த்தேன். அவர் கண்ணாடி போடச் சொன்னார். சில மருந்தும் எழுதிக் கொடுத்தார். கொஞசநாள்தான். கண்களில் தொந்தரவு இல்லை. அப்புறம் கண்ணாடி எதுவும் அணிவதில்லை.

வங்கி வேலையில் சேர்ந்து 25 ஆண்டுகள் வரையிலும் எனக்கு கண்ணாடி தேவைப் படவில்லை. அதன்பிறகு கண்களில் எல்லோருக்கும் ஏற்படும் குறைபாடு வந்தது. பொடி எழுத்துக்களை படிக்க இயலவில்லை. காரணம் வங்கிப் பணிகளில் கம்ப்யூட்டர் பணி. எப்போதும் பார்க்கும் கண் மருத்துவமனை சென்று பார்த்தேன். மருத்துவர் படிப்பதற்கென்று ஒரு கண்ணாடி போடச் சொன்னார். படிக்கும் சமயம் மற்றும் வங்கிப் பணி செய்யும்போது மட்டும் போட்டுக் கொண்டேன். அப்புறம் தொலைவில் இருக்கும் பொருட்களைப் பார்க்கவும் படிப்பதற்கும் இரண்டு லென்சுகள் உள்ள கண்ணாடி போட நேர்ந்தது. பெரும்பாலும் இரு சக்கர வண்டியில் செல்லும்போது, பகலில் மட்டும் அணிந்து கொண்டேன்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் மாலை நேரங்களில் யாரையும் எதனையும் தெளிவாகக் காணமுடியவில்லை. எனவே எப்போதும் பார்க்கும் கண் மருத்துவ மனைக்கு சென்றேன். கண்ணில் புரை இருப்பதாகவும், ஆபரேஷன் செய்தால் சரியாகிவிடும் என்றார்கள். முதலில் ஒரு கண். சிலநாள் சென்றதும் இன்னொரு கண் ஆபரேசன் செய்யலாம் என்று முடிவு செய்தேன்.அப்போது பணியில் இருந்தேன். எனது நேரம் அப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச கண் பரிசோதனை முகாமில், அறுவை சிகிச்சை செய்தவர்கள் பலருக்கு கண் பார்வை போனதாக செய்தி வந்தது.. எனவே பயந்து போய் நான் கண் ஆபரேஷன் யாரிடமும் செய்யாமல் தவிர்த்தேன். கொஞ்சநாள் கழித்து வேறு ஒரு கண் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்தேன். அவர்கள் ஆபரேஷன் மற்றும் லென்ஸ் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு கண்ணிற்கு ரூ 28000 ஆகும் என்றார்கள். ஆக இரண்டு கண்ணிற்கும் ரூ 56000 ஆகும். இதற்கிடையில் எனது உறவினர் ஒருவர் பத்தாயிரம் மட்டுமே செலவானதாகச் சொன்னார். எனது பெரியம்மா மகன் ஒருவர் (வேறு மாவட்டத்துக்காரர்) தனக்கும் உறவினர்களுக்கும் அரசு கண் மருத்துவ மனையிலேயே செலவில்லாமல் ஆபரேஷன் செய்து கொண்டதாகவும் இப்போது எல்லோருக்கும் பார்வை நன்றாக இருப்பதாகவும் சொன்னார். மேலும் எந்த மருத்துவ மனையானாலும் கண்ணிற்கு அவர்கள் பொருத்துவது இந்தியன் லென்ஸ் (ரூ500) அல்லது அமெரிக்கன் லென்ஸ் ( ரூ1000) என்றும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் கண் ஆபரேஷனுக்கு என்று அவர்கள் வாங்கும் (நிர்வாகச் செலவுகள்) தொகைதான் அதிகம். என்றும் சொன்னார். (இது அப்போதைய கணக்கு) எனக்குத் தெரிந்த ஆப்டிகல்ஸ் (OPTICALS) கடைக்காரரும் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு ஆம் என்று தயக்கத்துடன் இந்த உண்மையை ஒத்துக் கொண்டார்.

எதற்கும் எனது கண்களை இன்னொரு டாக்டரிடம் காட்டினால் ந்ல்லது என்று எனக்கு தோன்றியது. எனவே நான் என் பெரியம்மா மகன்  சொன்ன மருத்துவரிடம் (தனியார், பக்கத்து மாவட்டம்) சென்று கண்களைப் பரிசோதனை செய்து கொண்டேன். அவர் எனது கண்களில் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு கண்களில் கோளாறு இல்லையென்றும் எப்போதும் போல இப்போது அணியும் கண்ணாடியையே போட்டுக் கொண்டால் போதும் என்றும் சொல்லி விட்டார். அன்றிலிருந்து இன்றுவரை பகல் இரவு எதுவானாலும் தேவைப்படும் சமயங்களில் மட்டும் கண்ணாடி அணிந்து கொள்கிறேன். கடந்த ஐந்து வருடமாக ஆபரேஷன் எதுவும் இல்லை. இருந்தாலும் மறுபடியும் தொந்தரவு. இப்போது ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யப் போகிறேன். வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் வந்ததால் எங்கள் வங்கியில் CLAIM  எதுவும் செய்ய முடியாது.  கண்ணில் ஆபரேஷன் தேவைதான் என்றால் செய்து கொள்ள வேண்டியதுதான்.


( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )  



Monday 4 March 2013

தேவை: பயோகேஸ் சிலிண்டர்கள்



பதிவு பண்ணி பதினைந்து நாளாச்சு. இன்னும் கேஸ் சிலிண்டர் வரவில்லை!”
சமையல் எரிவாயு விலை இன்னும் உயரும்
இனி கேஸ் சிலிண்டருக்கு மானியம் கிடையாது
மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைப்பு



இப்படியாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் பற்றிய செய்திகளை பத்திரிகைகளிலும் , தொலைகாட்சிகளிலும், மக்கள் மத்தியிலும்  
பேசப்படுவதை பார்க்கலாம்.







சமையலுக்கு விறகு அடுப்பு, கெரசின் ஸ்டவ் எனப்படும் மண்ணென்ணெய் அடுப்பு, கரி அடுப்பு, கேஸ் ஸ்டவ், மின்சார ஸ்டவ் ( INDUCTION STOVE),  என்று காலம்தோறும் மனிதன் தனது தேவைக்கேற்ப பயன்படுத்தி வருகிறான். மின்சார  ஸ்டவ்வை  ( INDUCTION STOVEமின்வெட்டின் காரணமாக  தேவையான நேரத்திற்கு பயன்படுத்த இயலவில்லை.  

 
இப்போது இந்தியாவில் மக்களிடையே அதிக பயன்பாட்டில் இருப்பது இயற்கை எரிவாயு எனப்படும் LPG GAS  ( Liquefied petroleum gas)  - தான். இப்போது வாகனங்களை இயக்கவும் இந்த கேஸ் பயன்படுகிறது. இதனாலும்நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வருவதாலும் தட்டுப்பாடு அதிகம். ரேஷன் முறையிலும் ஏகப்பட்ட தில்லுமுல்லு வேலைகள். சட்ட விதிகளை மீறி வீட்டு உபயோகத்திற்கான LPG கேஸ் சிலிண்டர்கள் ஓட்டல்கள், வாகனங்களுக்கு திருட்டுத்தனமாக விற்கப்படுகின்றன.

எனவே இந்த இயற்கை எரிவாயு (NATURAL GAS)   முறையிலிருந்து மாறி, உயிரிவாயு (BIO GAS) முறைக்கு நாடு மாறவேண்டும். இரண்டு விதமான முறையும் இருந்தால் எரிவாயு தட்டுப்பாடின்றி இருக்கும். ஏற்கனவே நமது நாட்டில் உயிரிவாயு (BIO GAS) பயன்பாடு இங்கும் அங்குமாய் இருந்து வருகிறது. இதுபற்றிய செய்திகள் தமிழ் நாட்டு பத்திரிகைகளிலும் வந்துள்ளன. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராலாயாவின் சக்தி சுரபி“, - திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அவர்களது சொந்த உபயோகத்திற்கென ஏற்படுத்திக் கொண்ட (பெரிய அளவிலான) பயோகேஸ் யூனிட், -  கோயம்புத்தூர், சாய்பாபா காலனியில் பிரபு என்பவரின் வீட்டில் அவரது சொந்த உபயோகத்திற்கென உற்பத்தி செய்யப்படும் பயோகேஸ் , - கடலூர் பிள்ளையார் குப்பத்தில் மக்கள் தங்களுக்காக தயாரித்துக் கொள்ளும் பயோகேஸ் பயனபாடு பரங்கிப் பேட்டையில் பயோகேஸ் யூனிட் - என்று செய்திகள் வந்துள்ளன. இவை  பயோகேஸ் பயன்பாட்டிற்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பை உணர்த்தும்.



 

ஆனாலும், இதற்கான உபகரணங்கள் இடத்தை அடைத்துக் கொள்வதாலும் பாதுகாப்பு காரணங்களினாலும் இன்னும் அதிக பயன்பாட்டிற்கு வரவில்லை.எனவே இந்த உயிரிவாயு (BIO GAS) திட்டத்தை பெரிய அளவில் தொடங்கி, கிடைக்கும் எரிவாயுவை இப்போதுள்ள கேஸ் சிலிண்டர்களில் அடைத்து விற்பனை செய்யலாம். மேலும் இதற்கு அரசு மானியம் உண்டு என்பதால் அரசாங்கம் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களையும்  அனுமதிக்கலாம். உயிரிவாயு (BIO GAS) சிலிண்டர்களுக்கு பச்சை வண்ணம் பூசி தனியே வித்தியாசப் படுத்தலாம். அல்லது  மேலே உள்ள படத்தில் ள்ளது போன்ற PORTABLE BIOGAS சிலிண்டர்களையும் தயார் செய்து சந்தைப் படுத்தலாம். இதனால் இப்போதைய கேஸ் தட்டுப்பாடு நீங்கும். தொழில் முனைவோர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் இருக்கும். இதனால் பலருக்கு வேலைவாய்ப்பும்  அமையும்.

கடுமையான மின்வெட்டு காரணமாக சூரிய சக்தியை (SOLAR ENERGY) மாற்று சக்தியாக மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் யாரும் எடுக்காத ஒரு துணிச்சலான காரியத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்து இருக்கிறார்கள். ஒரு தொலை நோக்கு திட்டத்தோடு தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” ( Tamil Nadu Solar Energy Policy 2012 )என்ற ஆவணத்தை  சென்ற ஆண்டு, 20.10.2012 அன்று  தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இப்போது எங்கு பார்த்தாலும் சூரிய சக்தி (SOLAR ENERGY) தேவைப் படுவோர் அணுகவேண்டிய விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாற்றத்திற்கு காரணமான கொள்கை அறிவிப்பைத் தந்த, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டுக்கள். இதைப் போலவே உயிரிவாயு (BIO GAS) திட்டத்தினையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும். LPG சிலிண்டர்கள் போன்று
உயிரிவாயு (BIO GAS) சிலிண்டர்களும் மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு வரவேண்டும்.

சீனாவிலிருந்து மலிவு விலை சைக்கிள்கள் இறகுமதி செய்ய முயற்சி நடந்தபோது, இங்கிருக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் சுதேசி விதேசி என்று தடை செய்தார்கள். அதேபோல் பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க பல தடைகள். இந்த உயிரிவாயு (BIO GAS) திட்டத்தினை செயல்படுத்த விடாமல் தடுக்கவும் உள்குத்து அரசியல் நம்நாட்டில் நடக்கும். இருந்தாலும் நாட்டு மக்கள் நலன் கருதி -  நாட்டிற்கு இப்போது தேவை: பயோ கேஸ் சிலிண்டர்கள்

ஊதுகிற சங்கை ஊதி வைப்போம். நல்லது நடந்தால் சரி!



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 



Friday 1 March 2013

ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய “டாலர் நகரம்” – நூல் விமர்சனம்.



நான் வங்கி வேலைக்கு சேர்ந்த பிறகு திருப்பூரைப் பற்றி கேள்விப் பட்ட தகவல், திருப்பூரில் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் கிளைகளும் உள்ளன என்பதுதான். எனக்குத் தெரிந்த கிராமத்தைச் சேர்ந்த இருவர் திருப்பூருக்கு சென்றனர். ஒருவர் 15 நாளிலேயேஎன்னால் ஈரத்தில் ரொம்பநேரம் நிற்க முடியவில்லை என்று தாக்கு பிடிக்க முடியாமல் வந்து விட்டார். இன்னொருவரால் கடினமாக உழைக்க முடியவில்லை. அவரும் ஓடி வந்து விட்டார். ஆனாலும்  மற்றொருவர் (கடுமையான உழைப்பாளி) எங்கள் கிராமத்துக்காரரோடு திருப்பூருக்கு சென்றவர், இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார். தனது கடைசி தம்பிகள் இருவரையும் நன்கு படிக்க வைத்தார். கிராமத்தில் நிலங்களை  வாங்கி போட்டார் . எனவே எனக்கு திருப்பூரில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ரொம்ப நாளாக ஆவல். அந்த கேள்விக்கு விடை சொன்ன நூல்தான்  ஜோதிஜி (திருப்பூர்) எழுதியடாலர் நகரம் என்ற நூல் ..

ஆசிரியரும் திருப்பூரும்:

டாலர் நகரம்என்ற இந்நூலின் ஆசிரியர் சிறந்த வலைப்பதிவாளர். இவரைப் பற்றி வலைச்சரத்தில் நான் எழுதிய வரிகள் இவை.

பதிவின் பெயர்: //  தேவியர் இல்லம்  http://deviyar-illam.blogspot.in (ஜோதிஜி) இந்த பதிவின் ஆசிரியர் ஜோதிஜி. தொழில் நகரமான திருப்பூர் பற்றிய செய்திகளை இவரது பதிவுகளில் காணலாம். மற்றும் தமிழ், தமிழ் மக்கள், சமுதாயம் என்ற உணர்வுடன் எழுதி வருகிறார். அடிமைகள் சரித்திரம், காரைக்குடி உணவகம் போன்ற தொடர்கள் குறிப்பிடத் தக்கவை. இவர் எழுதிய டாலர் நகரம்  என்ற கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்படும் http://www.4tamilmedia.com/cont/sani-peyarchi-palan/7492-1
//. திருப்பூரில் ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு தொழில் நிறுவனத்தின் நிர்வாகியாக உயர்ந்திருப்பவர் திருப்பூர் ஜோதிஜி. தான் சார்ந்த தொழில்துறையின் நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பவர். எழுத்து, வாசிப்பு, என்பவற்றில் ஆர்வம் மிகுந்தவர். அதற்கும் மேலாக சமூகம் சார்ந்த அக்கறை மிக்கவர். இவையாவும் இணைந்ததில் பிறந்திருக்கிறது இந்த டாலர் நகரம். //  என்ற முன்னுரையே இவரது பெருமையைச் சொல்லும்.


கோவில் விசேடத்திற்கு ஊருக்கு வந்திருந்த செட்டியார் மூலம் இந்த முதல் வேலை வாய்ப்பு வந்தது. ஊரில் வாட்ச் கடை நாச்சியப்பனிடம், படித்த ஒரு பையன் தேவையென்று செட்டியார் சொல்லி வைத்திருக்க; கூட்டாளிகளுடன் சுற்றிக் கொண்டிருந்த என்னை வாட்ச் கடை நாச்சியப்பன் தான் திருப்பூருக்கு அனுப்பி வைத்தார். பள்ளித்தோழன் மாதவன் செலவுக்கு பணங்கொடுத்து வழியனுப்ப திருப்பூருக்கு வந்து சேர்ந்தேன். - என்று தொடங்கி தான் மஞ்சள் பையோடு திருப்பூரில் தொடங்கிய வாழ்க்கை அனுபவத்தினை விளக்குகிறார். -  (பக்கம்.27.)

திருப்பூரிலுள்ள எந்த நிறுவனங்களையையும் நம்ப முடியாது. உள்ளே பணிபுரிபவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தங்களின் அடுத்த நாள் எப்படியிருக்கும்? என்பதே யூகிக்க முடியாது. இன்று நிறுவனத்திற்கு லாபமாக வந்த பத்து லட்சம், நாளை பத்து கோடி நட்டத்தில் சிக்க வைத்து விடும். ஏற்றுமதி நிறுவனங்கள் வளர உழைப்பு, தரம், நிர்வாகத்திறமை வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலே அதிர்ஷடம்., நம்ப கடினமாக இருக்கும், ஆனால் இது தான் உண்மை. மாமனாரும் சகலையும் என்னைப் பார்த்து விட்டு சென்ற போது மற்றொரு நிறுவனத்தில் உள்ளே நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தேன்.” என்று தான் கூடு விட்டு கூடு பாய காரணம் என்ன என்பதனை விளக்குகிறார். - (பக்கம்.65)

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறி மாறி உழைத்த அவர், 15 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருந்த சொந்த தொழில், சொந்த நிறுவனம் என்ற எண்ணம் இயல்பாக என்னைத் தேடி வந்த போது சரியாக பயன்படுத்திக் கொண்டேன். வாழ்வின் அடுத்த மறுமலர்ச்சி அத்தியாயங்கள் உருவாகத் தொடங்கியது “ என்று சொல்கிறார். -(பக்கம் 111) அப்போது தனக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட சொல்லிச் செல்கிறார். அவருடைய ஒவ்வொரு அனுபவமும் திருப்பூரில் வேலைதேடி செல்வோருக்கும் தொழில்முனைவோருக்கும், கலங்கரை விள்க்கங்களாக உள்ளன.

திருப்பூரில் ஆடை தயாரிப்பு:


திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் எவ்விதம் உருவாகின்றன,  சாயப் பட்டறையில் ஏற்றப்படும் சாயங்கள் ,தயாரிக்கப் பயன்படுத்தும் எந்திரங்கள் பெயர் என்பது உட்பட அலுப்பு தட்டாத வகையில் எழுதுகிறார்.
 உருவாகும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒவ்வொரு சூத்திரம். அத்தனையும் பயன்படுத்தும் நூலில் தான் தொடக்கம் பெறுகிறது. நீங்கள் போடும் ஜட்டி, போர்வை போல கடினமாக இருந்தால் உங்கள் உறுப்புகளை உண்டு இல்லை என்று படுத்தி எடுத்தி விடாதா? குளிர் காலத்தில் போடக்கூடிய ஆடைகள் உள் உறுப்புகள் தெரியும் அளவிற்கு இருந்தால் எப்படியிருக்கும்? குளிர் நடுங்க வைத்து விடாதா? -  (பக்கம் 144)

நீங்கள் உடுத்தும் சில ஆடைகளில் ஜட்டியின் துணி ஒரு விதமாகவும் பனியனி துணி வேறுவிதமாகவும் இருப்பதை பார்த்திருப்பீர்கள் தானே? சில துணிகளில் உள்ளே கடினமாக சொர சொரப்பாக இருக்கும். அதே துணியின் வெளிப்புறம் முயலை தடவிப் பார்க்கும் சுகம் தெரியும். அத்தனையும் நிட்டிங் எந்திரத்தின் மூளைப் பகுதியில் செய்யப்படும் ஜாலவித்தையாகும்.” -   (பக்கம் 154)


திருப்பூர் சாய பட்டறைகள்:

திருப்பூர் என்றாலே சாயப் பட்டறைகள் நினைவுக்கு வராமல் போகாது. அந்த அளவுக்கு இப்போது செய்தித் தாள்களில் ஊடகங்களில் சாயப்பட்டறை பற்றிய தகவல்கள் வருகின்றன. சாயமே இது பொய்யடா (அத்தியாயம் 22), சாயப்பட்டறைகளை மூடு (அத்தியாயம் 24) என்ற தலைப்புகளில் இவைகளைக் காணலாம்.

 இந்த சாயப்பட்டறை மற்றும் சலவைப் பட்டறைகளில் பணிபுரியும் 90 சதவிகித தொழிலாளிகள் தஞ்சாவூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், மதுரை சிவகங்கை, கம்பம், தேனி, போடி, சுற்று வட்டார பகுதியில் இருந்த வந்த 16 முதல் 40 வயது வரைக்கும் உள்ள நல்ல உடல்வலிமை  வாய்ந்த  இளைஞர்கள்.. படிப்பை பாதியில் விட்டு ஓடி வந்தவர்கள் முதல்,  வாழ்க்கையை வாழ்ந்தாகி விட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வரையுள்ள அத்தனை பேரையும்  இந்தத்  தொழிலில் பார்க்கலாம். “ - (பக்கம் 199)

மேலும் இந்த சாயக்கழிவுநீரால் ஒரத்துப் பாளையம் அணை, விவசாயம், குடிநீர் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதனை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அதில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றியும் சொல்கிறார்.

திருப்பூர் நிறுவனதாரர்கள்:

திருப்பூர் இந்த அளவுக்கு ஒரு தொழில் நகரமாக உருவாக அங்கு முதல் போட்ட நிறுவனதாரர்களின் பங்கு முக்கியமானது. இந்த நூலின் ஆசிரியர் ஜோதிஜி அவர்கள், இந்த தொழில் ஈடுபட்ட நிறுவனதாரர்கள் எனப்படும் முதலாளிகளைப் பற்றியும் அவர்கள் செய்த, ஏற்றுமதி இறக்குமதி தொழில் திருப்பூரில் பெற்ற வளர்ச்சியைப் பற்றியும் எடுத்துக் காட்டுகளோடு விளக்குகிறார். அதேசமயம் இறக்குமதியாளரிடம் தான் பேசியபடி போட்ட  ஒப்பந்தத்தை நிறைவேற்றாததால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை இழந்தவர்கள், காமத்தால் தொழிலை சொத்துக்களை அழித்தவர்கள்,  என்றும்  உதாரணம் காட்டுகிறார்.

 உலகமயமாக்கல் தத்துவத்தில் இறக்குமதியாளரின் சட்டங்கள் ஒவ்வொன்றாய் திருப்பூருக்கு உள்ளே வர, நிறுவன முதலாளிகள் தங்களின் வாலைச் சுருட்டிக் கொள்வதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை . நிறுவனங்களின் உள்ளே பணிபுரிபவர்களின் வயது கணக்கெடுக்கப்பட்டது. தொழிலாளிகளின் அடிப்படை வாழ்வாதார வசதிகள் சோதிக்கப்பட்டது. சோதித்த முடிவு சாதகம் என்றால் ஒப்பந்தம். இல்லையென்றால் நிறுவனங்களுக்குப் பாதகம்.. நிறுவனத்தின் கழிப்பறை சுத்தம் முதல் பணியாளர் வசதி வரை கண்கொத்திப் பாம்பாய் இறக்குமதியாளர்கள் கவனிக்கும் போது முதலாளிகளால் என்ன செய்து விட முடியும்? இன்றைய நவீன வசதியில் நேரடி ஒலி ஒளி காட்சியாய் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு திருப்பூரில் உள்ள நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தையும் தனக்குள் வைத்துக்கொள்ளும் இறக்குமதியாளர்களும் உண்டு. – (பக்கம் 91 – 92 )

இறக்குமதியாளர்களின் வெளிப்படையான ஒப்பந்தம் குறித்து.... ...
நான் இப்படித் தான். இது தான் எனக்கு வேண்டும். உனக்கு என்ன தேவை? அப்படியா? இது தான் என்னால் முடியும்? உனக்கு வாய்ப்பு இருக்கா இல்லையா? சரி இதை வைத்துக் கொள்? இதுதான் இதற்கான சட்டதிட்டம். மாறாதே........ நீ மாறினால் நானும் வேறு பக்கம் மாற்றிக் கொள்வேன். எளிமையான சட்டதிட்டம். அதற்கு நீங்கள் சுயநலம், பொதுநலம் போன்ற எத்தனை பெயர்களை வைத்துக்கொண்டாலும் அவர்கள் கவலைப்படுவது இல்லை. - (பக்கம் 162)”
மேலும் ஏற்றுமதி இறக்குமதியில் விளையாடும் அரசியல் பற்றியும் கோடிட்டு காட்டுகிறார்.

திருப்பூர் தொழிலாளர்கள்:

திருப்பூர் என்றாலே உழைப்பு என்று அழைப்பு தருகிறார்.


தூங்கா நகரம், கோவில் நகரம், ன்ற பெயர்கள் மதுரைக்கு இருப்பது போலவே திருப்பூரும் நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னாலாடை நகர், பனியன் நகரம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆயத்த ஆடைகளின் (HOSIERY GARMENTS) உற்பத்தியை நம்பி மட்டுமே இந்த நகர் இயங்கிக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி அல்லது உள்நாட்டுக்கு தேவைப்படும் ஆடைகள் என்று  இரண்டு விதங்களில் இங்குள்ளவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” –  (பக்கம் 112 )

.  ”. தினந்தோறும் எட்டு மணி நேரம் தான் என்னால் உழைக்க முடியும்? என்பவர்கள் இந்த ஊர்ப்பக்கம் எட்டிப்பார்க்காமல் இருப்பது நல்லது.  தினந்தோறும் 16 மணிநேர உழைப்பு என்பது இங்கு சர்வசாதாரணம். ( பக்கம் 113 )

புதுக்கோட்டை பக்கம் ஆலங்குடி அருகே உள்ள ஒரு கிராமம்தான் கருணாகரனுக்கு சொந்த ஊர். படிப்பு வரவில்லை என்று திருப்பூருக்கு வந்த அவன் ஆரம்பத்தில் செய்த வேலை தினக் கூலிக்கு காஜா பட்டன் அடிப்பது. அவன் தனது உழைப்பால் முன்னேறி பெரிய ஆளாகிய கதையை எடுத்துக் காட்டுகிறார்.


பணம் துரத்திப் பறவைகள் ( அத்தியாயம் – 20) என்ற தலைப்பில் திருப்பூர் தொழிலாளர்களது நிலையக் காட்டுகிறார். அதில் ஆண் தொழிலாளர்களை மட்டுமன்றி பெண் தொழிலாளர்களைப் பற்றிய விவரங்களையும் வெளிப்படையாகவே பேசுகிறார்.

பெண்களின் பணி நேரமென்பது, தினமும் காலை எட்டு மணிக்குள் நிறுவனத்திற்குள் இருக்க வேண்டும். காலை ஐந்து மணிக்குள் சமையல் செய்தாக வேண்டும். இதற்கிடையே பெண்களின் மற்றொரு வேலையில் கவனம் வைத்தாக வேண்டும். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அவசரமாய் டப்பாவில் காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து உணவை அடைத்துக் கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும். இரவு ஒரு மணி வரைக்கும் வேலையென்றால் நிறுவனங்களுக்கருகே கிடைக்கும் இரண்டு புரோட்டாக்கள் தான் உணவாகயிருக்கும். ள்ளிரவு வேலை முடித்து வந்தாலும்,  மறுநாள் காலை , எப்போதும் போல , காலை ஐந்து மணிக்கு எழுந்து தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காலை எட்டு மணி வேலைக்கு செல்லமுடியாது. இரவு எத்தனை மணிக்கு வேலை முடிகின்றது ? என்பது முக்கியமல்ல. மறுநாள் காலை எட்டு மணிக்கு நுழைவது தான் முக்கியமாக இருக்கும். அரை மணி நேரம் தாமதம் என்றாலும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். “ (பக்கம் 183  184)

மேலும்  தொழிலாளர்களது குடியிருப்புகள், அங்கும் வேலை பார்க்கும் இடங்களிலும்  நடக்கும் பாலியல் குற்றங்கள், கட்டை பஞ்சாயத்துக்கள் குறித்தும் அத்தியாயம் 21 இல்” காமம் கடத்த ஆட்கள் தேவை” என்ற தலைப்பில் பேசுகிறார்.
.
திருப்பூர் இடைத் தரகர்கள்:

இப்போது  எல்லா மட்டத்திலுமே  இடைத் தரகர்கள் ஊடுருவி விட்டார்கள். மந்திரி பதவி வாங்கித்  தருவதற்கு  கூட ஆட்கள் இருக்கிறார்கள். திருப்பூர் மட்டும் இதற்கு விதிவிலக்கா? என்ன?
நிறுவனதாரர்களும் தொழிலாளிகளும் உழைத்து உருவாக்கும் திருப்பூரில் எல்லாவற்றிற்கும் இடைத் த்ரகர்களே முன் வந்து நிற்கிறார்கள். “ தரகர்கள் எனும் தரமற்ற கூட்டம் ( அத்தியாயம் 4.) “ என்ற தலைப்பில் இடைத் தரகர்களின் மோசடித்தனங்களை சொல்லுகிறார்.

திருப்பூரில் வேலை வாய்ப்பு, மார்க்கெட்டிங்:

திருப்பூர் செல்லும் அனைவருக்கும் வேலை கிடைத்து விடுமா? இந்த வேலை வாய்ப்பை வைத்து நடக்கும் மோசடிகள் குறித்தும் அலசுகிறார்.” வேலை காலி இருக்கு என்ற பக்கங்களைப் படியுங்கள். அத்தியாயம் – 18   இல் சந்தைக்கு போகலாம் வாரீங்களா ?என்று மார்க்கெட்டிங் முறைகளைப் பற்றி விவரிக்கிறார். மார்க்கெட்டிங் பற்றி ஆராயும் மாணவர்களுக்கு தேவையான குறிப்புகள்.


முடிவுரை:

ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள் எழுதிய டாலர் நகரம்  என்ற நூல் அனைவருக்கும் பயன்படக் கூடியது.  எனவே இந்நூலை  ஆங்கிலம், ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். ஒரு ஆராய்ச்சி நூல் போல பல விவரங்கள் அடங்கிய இந்த நூலுக்காகவே ஆசிரியருக்குமுனைவர்பட்டம் தரலாம்.

நூல் வெளியீடு: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம்
நூலின் விலை ரூ 190/= பக்கம் 248