Wednesday 30 November 2016

புதுக்கோட்டை – புத்தகத் திருவிழா 2016




புதுக்கோட்டைக்கு எத்தனையோ முறை சென்று வந்து இருக்கிறேன்; பணியில் இருந்தபோது, டெபுடேஷன் பணிக்காக, திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு ஒருமாதம் சென்று வந்தும் இருக்கிறேன். ஆனால் எனக்குத் தெரிந்து புதுக்கோட்டையில் பெரிதாக புத்தகத் திருவிழா ஏதும் நடந்ததாக நினைவில் இல்லை. இத்தனைக்கும் இங்கு நூல்வாசிக்கும் ஆர்வலர்கள் அதிகம் என்பதனை, இங்கு சொல்ல வேண்டியதில்லை. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பாக வழக்கம் போல அவர்கள் நடத்தும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை மட்டும் அடிக்கடி நடைபெறும். ஆண்டுதோறும் சென்னையிலும் நெய்வேலியிலும் நடக்கும் பிரமாண்டமான புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டையிலும் நடத்த முயற்சி செய்யுங்கள் என்று, ஆசிரியர் முத்துநிலவன் அய்யாவிடம் நான் சொல்லியதாக நினைவு. இப்போது புதுக்கோட்டை புத்தக வாசிப்பு ஆர்வலர்கள் கனவை நிறைவேற்றும் வண்ணம், சென்ற சனிக்கிழமை (26.11.16) முதல் 04.12.16 முடிய, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் புத்தகத் திருவிழா, புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் முத்துநிலவன் அவர்கள் விழாக்குழு சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் வரச் சொல்லி குறுஞ்செய்திகள் அனுப்பி இருந்தார்.

சென்று வந்தேன்:

எனவே நேற்று (29.11.16 – செவ்வாய்) மாலை திருச்சியிலிருந்து இந்த புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு சென்று வந்தேன். பஸ்சில் செல்லும்போது, வறட்சியான காட்சிகளையே (இந்த வருட மழை பொய்த்து விட்டதால்) பார்க்க முடிந்தது. இரவு திரும்பி வரும்போது நல்ல குளிர். நேற்று அங்கே எடுத்த படங்கள் இவை (கீழே)

(படம் மேலே) புதுக்கோட்டை நகர்மன்ற நுழைவு வாயிலில் அழைப்பு. 

(படம் மேலே) நேற்றைய நிகழ்ச்சிக்கான ப்ளக்ஸ் பேனர்.
 
(படம் மேலே) பங்கேற்ற ஸ்டால்கள் விவரம்

(படம் மேலே) புதுக்கோட்டை மண்ணின் மைந்தர்கள் பற்றிய குறிப்புரைகள் அடங்கிய ப்ளக்ஸ் பேனர்கள்.

(படம் மேலே) புதுக்கோட்டை நகர்மன்றம் நூறாண்டு பாரம்பரிய பெருமை உடையது. இந்த மன்றத்தையே முழுமையாக மறைத்த வண்ணம் ப்ளக்ஸ் பேனர்கள். இதனை தவிர்த்து இருக்கலாம்.

(படம் மேலே) ஒரு புத்தக ஸ்டாலில் எடுத்த படம்

புதுக்கோட்டைக்கு தனி ஸ்டால்:

புதுக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்களின் நூல்களுக்கென்று தனியாக ஒரு ஸ்டால் வைத்து இருந்தார்கள். நான் போனபோது, தம்பி மாணவக்கவிஞர் நடராஜ் என்பவர் ஸ்டால் பொறுப்பாளராக இருந்தார்.

(படங்கள் மேலே) மாணவக்கவிஞர் நடராஜ்

(படம் மேலே) புத்தகத் திருவிழாவிற்கு சென்று வந்ததன் அடையாளமாக நானும் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்.

(படம் மேலே) அப்போது அங்கே வந்த கவிஞர் சோலச்சி மற்றும் எழுத்தாளர் அண்டனூர் சுரா. இருவரும் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள்: வலைப்பதிவாளர்களும் கூட.

மாலை நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், வீடு திரும்ப நள்ளிரவு ஆகி விடும் என்பதால் உடனே திரும்பி விட்டேன். 

வாங்கிய நூல்கள்:

’ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இராது’ என்ற பழமொழிக்கு ஏற்ப, நூல்கள் வாசிக்கும் வழக்கம் உள்ள, என்னைப் போன்ற புத்தக ஆர்வலர்களுக்கு, புத்தகம் வாங்காமல், படிக்காமல் இருக்க இயலாது. அந்த வகையில் எங்கள் வீட்டு நூலகத்திற்கு என்று வாங்கிய நூல்கள் இவை.

1.வீடில்லாப் புத்தகங்கள் – எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து)
2.மகாத்மா காந்தி கொலை வழக்கு – என்.சொக்கன் (கிழக்கு பதிப்பகம்)
3.சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன் (அகரம்)
4.சாதிகளின் உடலரசியல் – உதயசங்கர் (நூல் வளம்)
5.என்கதை - சார்லி சாப்ளின் – தமிழில்: யூமா வாசுகி (NCBH)
6.சாதியும் நானும் – பதிப்பாசிரியர்: பெருமாள் முருகன் (காலச்சுவடு)
7.எது நிற்கும்? – கரிச்சான் குஞ்சு (காலச்சுவடு)
8.சுவிசேஷங்களின் சுருக்கம் – லியோ டால்ஸ்டாய் – தமிழில்: வழிப்போக்கன் (பாரதி புத்தகாலயம்)
9.சங்க காலத் தமிழகத்தின் சமூக நிலை – வெ.பெருமாள் சாமி (பாரதி புத்தகாலயம்)
10.சாதி, வர்க்கம், மரபணு – ப.கு.ராஜன் (பாரதி புத்தகாலயம்)

11.ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை – அண்டனூர் சுரா (இருவாட்சி)


 

Monday 21 November 2016

நந்தவனம் சந்திரசேகரனுடன் ஒரு சந்திப்பு



உள்ளூரில் (திருச்சியில்) இருந்து கொண்டே பழகிய நண்பர்களை நேரில் பார்த்து பேசுவதிலும் சிலசமயம் மாதக் கணக்கில், அல்லது வருடக் கணக்கில் ஓடி விடுகிறது. காரணம் நகரின் ஒரு கோடியில் நாம் இருப்போம்; அவர்கள் இதே நகரின் இன்னொரு கோடியில் இருப்பார்கள். அதிலும் வலைப்பதிவு, ஃபேஸ்புக் நண்பர்களோடு, இணைய உலாவின்போது  தொடர்பு இருந்தாலும், நேரில் சந்திக்க ஆர்வம் இருந்தாலும், நாம் சந்திப்பதற்குள் நாட்கள் ஓடி விடுகின்றன. எழுத்தாளரும் மூத்த வலைப்பதிவருமான V.G.K என்று அன்பாக அழைக்கப்படும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை, வலைப்பதிவினில் அறிமுகம் ஆன ஓராண்டு கழித்தே சந்திக்க முடிந்தது. இவ்வாறே திருச்சி வலைப்பதிவாளர்கள் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, ரிஷபன், வெங்கட் நாகராஜ், ஆதி வெங்கட் மற்றும் கீதா சாம்பசிவம் ஆகியோரையும் சந்தித்தேன். ஃபேஸ்புக் வழியே அறிமுகம் ஆன, திருச்சி உறையூரில் இருக்கும் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களையும் சந்திக்க விரும்பினேன். 

நந்தவனம் சந்திரசேகரன்

இலங்கை வவுனியா சின்னப்புதுக்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட நந்தவனம் சந்திரசேகரன் அவர்கள், இப்போது, தனது தாத்தாவின் (பூர்வீக) ஊரான திருச்சியில் வசித்து வருகிறார். ஒரு கெமிக்கல் கம்பெனியின் முகவராக இருந்து வரும் இவர் இலக்கிய ஆர்வம் மிக்கவர். இதுவரை 500க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 400க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளையும், 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இவற்றுள் பல பிரபல தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. 1997 ஆம் ஆண்டு ஜனவரியில், ‘இனிய நந்தவனம்’ என்ற மாத இதழைத் தொடங்கி சிறப்புற நடத்தி வருகிறார். இவரது இதழியல் சேவைக்கு ’சிற்றிதழ் செம்மல்’ என்ற விருதும், ’சிறந்த சிற்றிதழ்’ என்ற விருதும் கிடைத்துள்ளன. ( தகவல் உபயம்: தமிழ் விக்கிபீடியா ) 

சந்தித்தேன்:

திருச்சி நகரில் புத்தகக் கண்காட்சி எப்போது நடந்தாலும் முடிந்தவரை அங்கு சென்று வருவது வழக்கம். கடந்த பத்துநாட்களுக்கும் மேலாக நடந்து வரும் திருச்சி தில்லைநகரில் ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெற்ற விஷயமே எனக்கு தெரியாமல் போயிற்று. காரணம், ஐநூறு, ஆயிரம் ரூபாய்கள் மீது மோடி போட்ட அஸ்திரத்தில், கடந்த இரண்டு வாரத்தில் பலவிஷயங்கள் காதுக்கு வராமல் அல்லது கண்ணில் படாமல் போய்விட்டன. நல்ல வேளையாக இந்த புத்தகக் கண்காட்சி குறித்தும், அங்கு அவரது நூல்கள் கிடைக்கும் ஸ்டால் குறித்தும் நந்தவனம் சந்திரசேகரன் அவர்கள் தனது ஃபேஸ்புக்கில் எழுதியதைப் படிக்க நேர்ந்தது. சென்றவாரம் 18.11.16 – வெள்ளிக்கிழமை மாலை இந்த புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன்.அவர் சொன்ன ‘ஸ்ரீ ஆனந்த நிலையம்’ – என்ற ஸ்டாலுக்கு சென்றபோது, இனிய அதிர்ச்சியாக அவரையும், சென்னையைச் சேர்ந்த அவரது நண்பர் எழுத்தாளர் கவிஞர் K மணி எழிலன் அவர்களையும் சந்தித்தேன் என்பது ஒரு இனிய நிகழ்வு ஆகும். அப்போது எனது செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

( படம் - மேலே – நானும் நந்தவனம் சந்திரசேகரனும் ) 

( படம் - மேலே – நந்தவனம் சந்திர சேகரனும் அவரது நண்பர் K மணி எழிலனும் ) 
                                                                         xxxxxx


( படங்கள் : (நன்றி கூகிள்)- கீழே – ஸ்ரீ ஆனந்த நிலையம் ஸ்டாலில் நான் வாங்கிய புத்தகம் மற்றும் வார இதழ்) 


Friday 11 November 2016

கறுப்பு பணமும் ஏற்கனவே உள்ள சட்டங்களும்.



நமது இந்தியாவின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், திடீரென்று ஒருநாள் இரவு (08.11.2016) ” இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது” என்று . டீவியில் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறார். அந்த நொடியில், இந்தியாவே பரபரப்பாகி விட்டது. மோடியின் இந்த திட்டத்தை ஆதரித்தவர்களும் எதிர்த்தவர்களும் என்று வழக்கம்போல இரு அணியாக பிரிந்து விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள்:

இந்த தடாலடி நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள், நடுத்தர ஏழை எளிய மக்களே. ஆனால் ” இந்த கஷ்டங்கள் எல்லாம் சில நாட்களில் சரியாகி விடும். நாட்டு நலனுக்காக இதனை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் “ என்பது மோடியின் திட்டத்தை ஆதரிப்பவர்கள் சொல்லும் வாதம்.

‘கரன்சி சர்ஜிக்கல் அட்டாக்’ என்ற தலைப்பில் ‘தினகரன்’ நாளிதழ் எழுதியுள்ள தலையங்கத்தில் உள்ள தகவல்கள் இவை.

// பிரதமரின் இந்த அதிரடி அறிவிப்பால், இந்தியா முழுவதும் மக்கள் பீதியிலும், அதிர்ச்சியிலும் உறைந்தனர். உடனே தங்களிடம் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஏடிஎம்மில் டிபாசிட் செய்ய குவிந்தனர். சாதாரண மக்கள், பாமரர்கள், ஏழைகள் தான் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததால், ரூ.500 ஒற்றை நோட்டை வைத்துக்கொண்டிருந்தவர்கள், ஓட்டலில் உணவு சாப்பிடவோ, வேறு அத்தியாவசிய பொருட்கள் வாங்கவோ முடியாமல் திண்டாடினர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள் தங்கள் பணத்தை எப்படி மாற்றுவது, தங்களுக்கு தேவையான பொருட்களை எப்படி பெறுவது என்ற குழப்பத்திலும், பயத்திலும் நிம்மதி இழந்தனர்.

பெட்ரோல் பங்க், ரயில் நிலையம், விமான நிலையத்தில் ரூ.500, ரூ.1000 நவ.11 நள்ளிரவு வரை செல்லும் என்று அறிவித்திருந்தாலும் அங்கும் அவர்கள் நோட்டுகளை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர். பாதி பெட்ரோல் பங்க்குகள் சில்லரை இல்லாததால் மூடிவிட்டனர். சில இடங்களில் ரூ.500க்கும் பெட்ரோல் போட்டுக்கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்தினர். இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இவர்கள் ஒரு புறம் என்றால், ஏழைகள் கையில் சில்லரையாக இருந்தால் பாதுகாப்பது சிரமம் என்று ரூ.500 நோட்டாக மாற்றி வைத்திருந்தனர். அவர்களுக்கு இந்த அறிவிப்பு பேரிழப்பாகவே இருந்தது. தங்கள் அன்றாட தேவைக்கு அத்தியாவசிய பொருள் வாங்க தங்களது ஒற்றை நோட்டை மாற்ற படாதபாடு பட்டுவிட்டனர்.//
(நன்றி: தினகரன் 10.11.2016)

இது மாதிரியான மக்கள் பாதிப்புகள் இல்லாமல், இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாதா என்பது பலரது கேள்வி.

ஏற்கனவே உள்ள சட்டங்கள்:

ரூ 20000/= இற்கு மேலுள்ள பண பரிவர்த்தனைகள், காசோலை மூலமாகவே நடைபெற வேண்டும் என்பது விதி. இதிலும் தொடர்ச்சியான பட்டுவாடா மற்றும் சரக்குகளை கையாளும்போது உண்டான வாடகை அல்லது குத்தகை போன்றவற்றிற்கு ரூ35000/= வரை அனுமதி உண்டு.

// Section 40A(3)(a) of the Income-tax Act, 1961 provides that any expenditure incurred in respect of which payment is made in a sum exceeding Rs.20,000/- otherwise than by an account payee cheque drawn on a bank or by an account payee bank draft, shall not be allowed as a deduction.
However if payment is being made for plying, hiring or leasing goods carriages then Limit for these section is Rs 35000/-,instead Of 20000/-  //

அண்மைக் காலமாக, வங்கியில் டெபாசிட் செய்வதில் அதிக கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் தங்கநகை வியாபாரம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் பான் எண் ( PAN ) கட்டாயமாக்கப் பட்டுள்ளது. சிறு வியாபாரிகளுக்கு TIN என்பது கட்டாயம். ஆனால் எத்தனைபேர் உண்மையான விவரங்களை கொடுத்துள்ளனர் என்று தெரியாது. ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என்று அறிவிப்பு வந்தவுடன், நள்ளிரவிலும் நகைக்கடைகளில் பலரும் குவிந்தனர் என்பது செய்தி. இதில் இந்த வியாபாரிகளுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

பொதுவாகவே, நமது இந்தியர்களுக்கு, பணத்தை கைநிறைய வாங்குவது, ஆசை தீர அடுக்கி வைத்துப் பார்ப்பது என்பதில் அதீதமான ஆர்வம் அதிகம் இருப்பதை மறுக்க முடியாது. இன்னும்,  இந்த காலத்தில் ‘செக் மோசடி’ என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. மேலும் வருமானவரிச் சட்டம் என்பது மக்களுக்கு கடுமையானதாக, சுமையாகவே உள்ளது; எளிதானதாக இல்லை. இதனாலும் மக்கள் நேரிடையான பணபரிவர்த்தனைகளையே (CASH TRANSACTIONS) விரும்புகின்றனர். கறுப்புப் பணம் உண்டாக இதுவே முக்கிய காரணம்.

மோடியின் அதிரடி:

என்னதான் சட்டங்கள் இருந்தாலும், நடைமுறைப் படுத்தும் முறையில் நேர்மை, கண்டிப்பு இருந்தாலொழிய அவை சாத்தியம் இல்லை. மேலும் நமது நாட்டில் அரசியல் குறுக்கீடு என்பது பற்றி சொல்ல வேண்டியது இல்லை. எனவே சட்டங்களை அமுல்படுத்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை எண்ணி மோடி நிர்வாகம் இந்த அதிரடியில் இறங்கி இருக்கலாம்.

எனினும் எதிர்பார்த்தற்கு மாறாக நடுத்தர ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். (Misfire) இவற்றைத் தவிர்க்க கள்ள நோட்டுகள் என்ற காரணம் காட்டி இரண்டு மாதங்களுக்கு முன்னரே, ATM செண்டர்களில் 500 ரூபாய், 1000 ருபாய் நோட்டுகளை வைப்பதை தடுத்து விட்டு, 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் வைத்து, ATM இல் பணம் எடுப்பதை கட்டுப்படுத்தி இருக்கலாம். மேலும் கம்பெனி அல்லாத ஊழியர்களுக்கு (கட்டிட தொழிலாளர்கள் போன்றவர்கள்) சம்பள பணமாக  கொடுப்பவர்கள் நூறு ரூபாயாக மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் சட்டம் போட்டு இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் இவ்வளவு நிலைமை வந்து இருக்காது.

பாதிக்கப் பட்ட, சாதாரண நடுத்தர வர்க்கத்தில்  நானும் ஒருவன் என்பதனால், இன்னும் நிறைய எழுதலாம். இப்போதைக்கு இதுபோதும் என்று நினைக்கிறேன்.

தொடர்புடைய எனது முந்தைய பதிவுகள்:

ரூ500 ரூ1000 நோட்டுகள் செல்லாது http://tthamizhelango.blogspot.com/2016/11/500-1000_9.html

2000 ரூபாய் நோட்டு http://tthamizhelango.blogspot.com/2016/10/2000_23.html  

ஐநூறு, ஆயிரம் என்றால் நம்பர் வேண்டுமாம் http://tthamizhelango.blogspot.com/2015/11/blog-post_22.html  
 
ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது ( எனது 101 ஆவது பதிவுhttp://tthamizhelango.blogspot.com/2013/06/101.html