Sunday 27 September 2015

வேலை வாய்ப்பு தேர்வுகளும் பயிற்சி வகுப்புகளும்



இப்போது பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களிலும், சனி அல்லது ஞாயிறு பத்திரிகைகளின் இடையில் வைக்கப்படும் விளம்பர நோட்டீசுகளிலும் மற்றும் சுவரொட்டிகளிலும் IBPS என்ற பெயர் அடிக்கடி வருவதைக் காணலாம்

IBPS என்றால்?

மத்திய அரசு, மத்திய அரசு சார்ந்த மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியில் சேருவதற்கு இந்த IBPS நடத்தும் CWE எனப்படும் COMMON WRITTEN EXAMINATION இல் தேர்வு ஆகி இருக்க வேண்டும். INSTITUTE OF BANKING PERSONNEL SELECTION என்பதன் சுருக்கமே IBPS என்பது. இது ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கான பணியாட்களைத் தேர்வுசெய்யும் தேர்வுகளை நடத்தும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, மத்திய நிதி அமைச்சகம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்க் மேனேஜ்மெண்ட், பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதன் ஆட்சிக்குழுவில் இருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் மத்திய அரசின் கட்டுபாட்டிற்குள் இருக்கும் பொது நிறுவனம் ஆகும்.

பயிற்சி வகுப்புகள்:

இப்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் IBPS தேர்வு சம்பந்தமாக மட்டுமல்லாது, I.A.S., U.P.S.C, மற்றும் T.N.P.S.C போன்ற தேர்வுகளுக்காவும் பல தனியார் பயிற்சி நிறுவனங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றன. பயிற்சிக் கட்டணமாக ஆயிரக் கணக்கில் வசூலிக்கின்றனர். வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே அவற்றில் சேர முடியும் . சில தொண்டு நிறுவனங்களும், அறக்கட்டளை அமைப்புகளும் இலவச பயிற்சி வகுப்புகள் தருகின்றன.

நான் இணைந்து  இருக்கும்  ஒரு அறக்கட்டளை சார்பாக . இப்போது IBPS CLERK, PRELIMINARY EXAM – 2015 எனப்படும் வங்கித் தேர்வுகளுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகளை 12.09.2015 சனிக்கிழமை முதல் நடத்தி வருகின்றனர். பயிற்சி வகுப்புகள், அனுபவம் மிகுந்த வங்கி அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் ஆகியோரால் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி முடிய வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள் நலன் கருதி பயிற்சிக் கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம்.

எனது பணி:

இந்த அறக்கட்டளைக்கான சில இணையதள (INTERNET) ஒருங்கிணைப்பு பணிகளை நான் செய்து தருவதாலும், வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன் என்பதாலும்,  என்னையும் வகுப்புகள் எடுக்கச் சொன்னார்கள். ஆனால் இது மாதிரியான பயிற்சி வகுப்புகள் எடுத்து எனக்கு பழக்கம் இல்லாததால் ஒத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும்  அவ்வப்போது இணையதளத்திருந்து  (INTERNET) இலவச தரவிறக்கம் ( FREE DOWNLOAD) செய்யப்பட்ட கையேடுகளை (Materials) எடுத்து தருவதாக ஒத்துக் கொண்டேன். நேற்று மாணவர்களுக்கு தரப்பட்ட, என்னால் தொகுக்கப்பட்ட தகவல் தொகுப்பு கீழே (எல்லோருக்கும் பயன்படும்)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
 
                                    அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பு .1

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்! அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளைத் தெரிந்து கொள்ள, கீழே உள்ள இணையதளங்கள் சென்று பார்க்கவும்.

EMPLOYMENT NEWS
இந்த இணையதளங்கள் வழியாக அரசு மற்றும் பொதுத்துறை வேலை வாய்ப்பு அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பயனுள்ள கட்டுரைகளையும், அரசு மற்றும் பொதுத்துறை சார்ந்த  போட்டித் தேர்வு முடிவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

E GOVT JOBS:
http://egovtjobs.in  இந்த இணையதளம் வழியாக அரசு, பொதுத்துறை மட்டுமன்றி TCS, MAHINDRA போன்ற தனியார் நிறுவன வேலை வாய்ப்பு அறிவிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம். Jobs By State, Jobs By Qualification, Jobs By Types மற்றும் IT Jobs என்பது இந்த இணையதளத்தின் சிறப்பம்சம் ஆகும்.

NAUKRI1234 & IBPS EXAM GURU  
இந்த இணையதளங்கள் வழியாகவும் அரசு, பொதுத்துறை மட்டுமன்றி, தனியார் நிறுவனம் மற்றும் தனியார் வங்கிகள் வேலை வாய்ப்பு அறிவிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் IBPS CLERK, IBPS PO, SBI CLERK, SBI PO போன்ற போட்டித் தேர்வுகளுக்கான Model papers, Practice Set Papers மற்றும் Current Affairs போன்றவற்றை உங்களது கணினியில் தரவிறக்கம் (Download) செய்து கொண்டு உங்கள் வீட்டிலேயே பயிற்சிகள் செய்து கொண்டு தயாராகலாம்.

அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பு இணையதளங்கள்:

NATIONAL PORTAL OF INDIA

UNION PUBLIC SERVICE COMMISSION

ALL INDIA CIVIL SERVICE COACHING CENTRE, CHENNAI.28

STAFF SELECTION COMMISSION, SOUTHERN REGION, CHENNAI

INSTITUTE OF BANKING PERSONNEL SELECTION

RAILWAY RECRUITMENT BOARD, CHENNAI

TAMILNADU GOVERNMENT PORTAL

TAMILNADU PUBLIC SERVICE COMMISSION, CHENNAI

அன்புடன் தி.தமிழ் இளங்கோ
வலைப்பதிவு - எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL 
http://tthamizhelango.blogspot.com Cell:  

                                                                      xxxxxxxxxxxxxxx
 
நமது வலைப்பதிவர் சகோதரி அபயா அருணா (நினைவுகள்) அவர்கள் வங்கித் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு வேண்டி  சில இணையதள இணைப்புகள் உள்ள வலைப்பதிவு ஒன்றை தனது வலைத்தளத்தில் http://abayaaruna.blogspot.in/2015/09/blog-post_19.html  எழுதியுள்ளார் என்பதனையும் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.


                          

Friday 25 September 2015

புதுக்கோட்டை அழைக்கின்றது!



வலைப்பதிவர்கள் சந்திப்பு, அடுத்தமாதம் புதுக்கோட்டையில்  11.10.2015 ஞாயிறு அன்று  நடக்கவிருக்கிறது வலைப்பதிவர்களில்  பலர் தத்தம் வலைப்பதிவுகளில் இந்த சந்திப்பிற்கு வரச் சொல்லி அழைக்கத் தொடங்கி விட்டனர். நானும் எனது பங்கிற்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகளை எழுதி உள்ளேன். பல நண்பர்கள் ஆடி வா, பாடி வா, ஓடி வா என்றெல்லாம் அவரவர் பாணியில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி அசத்தி விட்டனர். எனக்கு என்ன பண்ணுவது என்று கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. எனவே எனக்குத் தெரிந்த Microsoft Picture Manager, Paint மற்றும் Photoscape வித்தைகளைக் கொண்டு, கூகிளில் கிடைத்த  சில படங்களை மாற்றம் செய்து இங்கு அழைப்பு தந்துள்ளேன். நண்பர்கள் எப்போதும் போல ஆதரவு தர வேண்டுகிறேன். 
























Thursday 24 September 2015

கழிவறைக் கிறுக்கல்கள்




நான் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த நேரம். அரசு பள்ளி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த எனது நண்பன் ஒருவனைக் காண சென்று இருந்தேன். அவனிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, இடையில் கழிவறை செல்ல வேண்டி இருந்தது. அங்கே சுவற்றில் முதன்முதலாக சில கிறுக்கல்களைக் காண முடிந்தது. பெரும்பாலும் ஒரே ஆபாசம். சிலவற்றை அழித்து இருந்தார்கள். வார்டனை மறைமுகமாக திட்டியும், நடிகர் நடிகைகளைப் பற்றியும் கிறுக்கி இருந்தார்கள். அங்கிருந்து வந்தவுடன் நண்பனிடம் இதுபற்றி கேட்டேன். ”இதெல்லாம் இங்கு சகஜம்; வார்டனால் ஒன்றும் செய்ய முடியவில்லை; இப்போது யாரும் கண்டு கொள்வதில்லை” என்றான்.

கவிதை ஒன்று:

ஆசிரியர் மதுரை சரவணன் அவர்கள் மாணவர்களின் இந்த கிறுக்கல்கள் பற்றி http://veeluthukal.blogspot.in/2012/02/blog-post.html என்ற தனது பதிவினில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அதிலிருந்து சில வரிகள்.

கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
இன்னும் மாறாமல் அதே விதம்..
எத்தனை முறை வெள்ளையடித்தாலும்
கழிப்பறை சுவர்கள்
ஏதோ ஒரு மாணவனின்
மனக்குமுறலுக்கான
கிறுக்கலுக்காக
காத்துக்கிடக்கின்றன….

கல்லூரிக்கு சென்ற போதும் அங்கும் இப்படித்தான். கழிவறைகளில் ஆபாச கிறுக்கல்கள். பேராசிரியர்கள் – பேராசிரியைகள், நடிகர்-நடிகைகள், அரசியல்வாதிகள் என்று இஷ்டத்திற்கு அவர்களைப் பற்றி எழுதி இருப்பதைக் காணமுடிந்தது.

கழிவறைக் கிறுக்கல்கள் (Latrinalia)

இந்த கிறுக்கல்களை பொதுவாக பொதுக் கழிவறைகளில் அல்லது பொது குளியல் அறைகளில் மட்டுமே காணலாம். இவ்வாறு எழுதுவதை கழிவறைக் கிறுக்கல்கள் (Latrinalia) என்று சொல்கிறார்கள். உடம்பில் அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்வதைப் போல, மனதில் உண்டாகும் அரிப்பை போக்கிக் கொள்ள அல்லது தன்னுடைய இயலாமைக்கு வடிகாலாக சிலர் எழுதும் கிறுக்கல்கள்தான் இவை. சிலரின் மனக்குமுறல்களாகவும் இருக்கும். சிலரின் குறுங்கவிதைகளையும் இங்கே காணலாம். பெரும்பாலும் அவசரம் அவசரமாக சாக்பீசாலோ, கரித்துண்டினாலோ, அல்லது ஸ்கெட்ச் பென்சிலாலோ எழுதப்பட்ட குறுஞ்செய்திகள் (SMS என இவற்றை சொல்லலாம். சிலசமயம் சிறிய படங்களாகவும் இருக்கலாம். எழுதுபவரின் மனநிலையைப் பொறுத்தது.

லட்சுமிகாந்தன்:

இதே பாணியில்தான் அந்நாளில் சினிமா நடிகர் நடிகைகளின் அந்தரங்கத்தைப் பற்றி பொய்யாகவும், இருப்பதை மிகைப் படுத்தி எழுதியும் ஒரு பத்திரிகை வந்தது. பத்திரிகையின் பெயர் ‘இந்துநேசன்’. இதனை மஞ்சள் பத்திரிகை என்று சொன்னார்கள். இதன் ஆசிரியர் லட்சுமிகாந்தன். இதற்கும் வாசகர் கூட்டம் இருந்தது. பத்திரிகையை வாங்கியதும் மறைத்து வைத்துக் கொள்வார்கள்; மறைத்தே படிப்பார்கள். ஒருநாள் இந்த லட்சுமிகாந்தன்  கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தமிழ் சினிமா பிரபலங்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு அந்நாளில் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ என்று பிரபலமாக பேசப்பட்டது.

பொது இடங்களில்:

தினமலர் தரும் செய்தி இது:

திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலக கழிவறை கதவுகளில் ஆபாச படங்கள், வாசகங்களை சிலர் கிறுக்கி வைத்துள்ளதால், அங்கு செல்பவர்கள் முகத்தை சுளிக்கும் நிலை உள்ளது. … … … இந்த கழிவறை கதவுகளின் உள்புறம் சிலர், ஆபாச படங்கள் வரைந்தும், வாசகங்கள் எழுதியும் வைத்துள்ளனர். முகம் சுளிக்க வைக்கும் இந்த செயல், கழிவறை செல்வோருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.ஆர்.ஓ., அலுவலகம் அருகே உள்ள ஆண்கள் கழிவறை கதவுகளில், ஆபாச படங்கள், வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், மொபைல்ஃபோன் எண்களை எழுதி வைத்து, அதன் கீழ் பெண்களின் பெயரை எழுதி வைத்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரசு அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். - (நன்றி: தினமலர் – 27 பிப்ரவரி 2012)

இப்போதும் ஒவ்வொரு ஊர் பஸ் ஸ்டாண்டிலும், பொதுக் கழிவறைகளில் (கட்டணக் கழிப்பிடங்களிலும்) இந்த மாதிரியான கிறுக்கல்களைக் காண முடியாவிட்டாலும் சிறுசிறு பிட்டு நோட்டீசுகளை ஒட்டி இருப்பதைக் காணலாம். எல்லாம் மூல பவுத்திரம், எரனியா, ஆண்மைக்குறைவு சிகிச்சை பற்றியவை. டாக்டரின் பெயர், செல்போன் எண்களோடு இருக்கும். இவர்கள் உண்மையிலேயே டாக்டர்கள்தானா என்று சொல்ல முடியாது. இது ஒருவகை உளவியல் தந்திரம். காசு பார்க்கும் யுக்தி எனலாம்.
           

                                              ( PICTURE COURTESY: GOOGLE IMAGES)