Sunday 16 October 2011

கலைஞர் கருணாநிதி மீண்டும் வருவாரா?


2011-ல் நடை பெற்ற தேர்தலில் தி.மு.க பெற்ற தோல்வி கலைஞர் கருணாநிதிக்கு ஒரு பாடமாக அமைந்து விட்டது. வெளிப்படையாக சில கருத்துக்களை அவரால் சொல்ல முடியா விட்டாலும், மனதிற்குள் எதனால் இந்த தோல்வி என்பது அவருக்கு தெரிந்தே இருக்கும். இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா ஒரு சமயம் தமிழக மக்கள் தந்த தோல்வியால் வெளியே வராமலேயே இருந்தவர்தான். எனவே வெற்றி என்பது யாருக்கும் நிரந்தரமல்ல.

எம்ஜிஆர் தனிக் கட்சி தொடங்கிய நாளிலிருந்த கருணாநிதி  எதிர்ப்பு அரசியல் இன்றும் தொடர்கிறது. எம்ஜிஆர் செல்வாக்காக இருந்த காலத்திலேயே கருணாநிதிக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கத்தான் செய்தது. அப்போது நடை பெற்ற தேர்தல்களிலும் திமு.கவுக்கென எம்.பி க்கள், எம்.எல்.ஏக்கள் கணிசமாக இருந்தனர்..

எமர்ஜென்சிக்குப் பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.இந்திரா காந்தியும் தனது தொகுதியில் தோல்வி அடைந்தார். பாராளுமன்றத்தில் நுழைய சந்தர்ப்பம் பார்த்து இருந்த போது தஞ்சாவூர் இடைத் தேர்தல் வந்தது.அப்போது தமிழ் நாட்டின் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவரிடம் இந்திரா அம்மையார் தஞ்சாவூர் இடைத்தேர்தலில் தானே நிற்கப் போவதாகவும்,எம்ஜிஆரின் ஆதரவு தேவையெனவும் கேட்டார். எம்ஜியாரும் ஆதரவு தருவதாக இருந்தார். அன்றைக்கு பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் (ஜனதா கட்சி) அவர்கள் எம்ஜிஆரிடம் ஏதோ சொல்ல, எம்ஜிஆர் பல்டி அடித்தார். இந்திரா காந்திக்கு ஆதரவு தரவில்லை. இதனால் அவர் தஞ்சாவூரில் போட்டியிடவில்லை.அப்போது இந்திரா காந்தி சொன்ன வாசகம் “கருணாநிதியை நம்பலாம்.எம்ஜிஆரை நம்பவேமுடியாது. இதனால் தமிழ் நாட்டில் காங்கிரசின் நிரந்தர கூட்டாளி அ.இ.அ.தி.மு.க என்ற நிலைப்பாடு மாறியது.காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி உருவாகியது. கருணாநிதியும் சந்தர்ப்பங்களை பயன் படுத்திக் கொண்டார்.இழந்து போன செல்வாக்கை தனது சாதுர்யத்தால் மீண்டும் ஏற்படுத்திக் கொண்டார்.

இப்போது மீண்டும் அதே போன்றதொரு இடைவெளி. இந்த இடைவெளி குடும்ப உறவுகளாலும், இவர்கள் பெயரைச் சொல்லி கட்சிக்காரர்கள் செய்த அளவுக்கு மீறிய அட்டகாசங்களாலும் ஏற்பட்ட வெற்றிடம். கண்டிக்க வேண்டியவற்றை இவரால் கண்டிக்க முடியவில்லை. தி.மு.க என்ற இயக்கத்திற்காக கருணாநிதிக்கும்,கலைஞர் கருணாநிதி என்ற தலைவருக்காக தி.மு.கவிற்கும்தொண்டர்கள்,அனுதாபிகள் வாக்களிப்பார்கள். ஆனால் கட்சியின் பெயரால் கட்சிக்காரர்கள்  செய்யும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தியை தூக்கிய அதே மக்கள்தான்  மீண்டும் நீங்கள் தான் எங்கள் பிரதமர் என்று கொண்டாடினர். ஆட்சிக்கு வரவே முடியாது கருதப்பட்ட திமுகவிற்கு ஆட்சி புரிய சந்தர்ப்பம் தந்தனர். ஜெயலலிதா வந்தால் ஆண்டவனாலும் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது என்றவர்கள்தான் இன்று அவரை மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளனர்.கருணாநிதி மீண்டும் வருவாரா இல்லையா என்பது அவரது கையில்தான் உள்ளது. ஏனெனில் அறிஞர் அண்ணா சொன்ன “எதையும் தாங்கும் இதயம்அவரிடம் உள்ளது.  

No comments:

Post a Comment