Showing posts with label கியாஸ்க். Show all posts
Showing posts with label கியாஸ்க். Show all posts

Monday, 28 October 2013

ஸ்டேட் வங்கியின் கியாஸ்க் சேவை




அண்மையில் P ராஜா என்ற தம்பி எழுதிய  காசுக்காக தனது சேவையை தாரை வார்த்த (State Bank Of India) பாரத ஸ்டேட் பாங்க்!!  http://www.uzhavan.com/2013/10/state-bank-of-india.html என்ற  பதிவினைப் படிக்க நேர்ந்தது. அதில் வங்கியில் பணம் கட்டுவது சம்பந்தமாக ஸ்டேட் வங்கியைப் பற்றி எழுதி இருந்தார்.கட்டுரையின் இறுதியில்

// ஆதலால் இனிமேல் பாரத ஸ்டேட் பாங்க் வங்கிக்கு 10000 குறைவாக கொண்டு சென்றால் அதற்கு உண்டான Transfer Charges Amount -யையும் கொண்டு செல்லுங்கள் நண்பர்களே!! //

என்று எழுதி இருந்தார். இதற்கு பதில் எழுதுவதோ அல்லது வங்கிக்கு ஆதரவாகக் கொடி பிடிப்பது  எனது வேலை இல்லை. என்றாலும் நான் ஒரு முன்னாள் ஊழியன் என்ற முறையிலும். ஸ்டேட் வங்கியில் மட்டுமே கட்டண்ம் வசூலிப்பது போன்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் அந்த பதிவு உருவாக்கி விடக் கூடாது என்பதாலும் அவரது பதிவில் நான் எனது கருத்துரையை

// தம்பிக்கு! நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்! உங்களுக்கு ஸ்டேட் பாங்கியில் எந்த கிளையில் கணக்கு இருக்கிறதோ அந்த கிளையிலோ அல்லது அதற்குண்டான சேவை மையத்திலோ பணம் கட்ட கட்டணம் கிடையாது. பத்தாயிரம் வரை சேவை மையத்தில் மட்டுமே கட்ட வேண்டும். ஆனால் வேறு ஒரு கிளையில் உள்ள கணக்கிற்கு பணம் செலுத்துவதற்கு மட்டுமே கட்டணம் வாங்குகிறார்கள்.. அடுத்த கிளையில் உள்ள கணக்கிற்கு கட்டணம் என்பது  எல்லா வங்கியிலும் உள்ள நடைமுறைதான். //

என்று பதிவு செய்தேன்.

எனது அனுபவம்:

எனது பெற்றோர் தனியே ஒரு வாடகை வீட்டில் இருந்து வருகிறார்கள். வீட்டின் சொந்தக்கார அம்மாள் இருப்பது சென்னையில். வாடகைப் பணத்தை சென்னையில் உள்ள சிண்டிகேட் வங்கிக்கு அவர்கள் கணக்கிற்கு அனுப்பச் சொன்னார்கள். அப்போது எங்கள் பகுதியில் அந்த வங்கியின் கிளை இல்லை. கொஞ்சம் தொலைவில் உள்ள பொன்மலை என்ற இடத்திற்குச் செல்லவேண்டும். அங்கு பணம் கட்டச் சென்றேன். வேறு ஊர் கிளை கணக்கு என்பதால் கட்டணம் வசூல் செய்தார்கள். மேலும் எப்போது அங்கு சென்றாலும் ரெயில்வே தொழிலாளர்களின் கூட்டம். ஒரு சிறு தொகையைக் கட்டுவதற்குள் அரைநாள் சென்றுவிடும். இதே தொகையை ஒரு வங்கி கணக்கின் மூலம் இன்னொரு வ்ங்கிக்கு NEFT முறையில் பரிமாற்றம் (TRANSFER)  செய்தால் கட்டணமும் குறைவு. நேரமும் மிச்சம். எனவே திருச்சியில் ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றில் எனக்கு இருக்கும் கணக்கிலிருந்து, வீட்டு சொந்தக்காரர் சென்னையில் கணக்கு வைத்து இருக்கும் சிண்டிகேட் வங்கிக்கு NEFT முறையில் வாடகையை அனுப்பி வருகிறேன். அதிகத் தொகையை அனுப்பும் முறைக்கு NEFT / RTG  என்று பெயர். இந்த முறை எல்லா வங்கிகளிலும் உண்டு. கட்டணம் என்பது எல்லா  வங்கியிலும் ஒரே மாதிரி சீராக இல்லை என்பது பெரிய குறைபாடுதான். எனது ஆலோசனை என்னவென்றால் முடிந்தவரை பண பரிமாற்றத்தை தவிருங்கள் என்பதுதான்.

ஸ்டேட் வங்கியின்   கியாஸ்க் சேவை (SBI KIOSK BANKING):  


ஸ்டேட் வங்கியில் இப்போது SBI KIOSK BANKING   என்று தனியார் மூலம் (OUT SOURCING) ஒரு சேவையை தொடங்கி உள்ளனர். கியாஸ்க் ( KIOSK ) என்றால்  விற்பனை ஸ்டால்  என்று பொருள்படும். டீ ஸ்டால், நியூஸ் பேப்பர் ஸ்டால் என்று ஒரு சிறிய இடத்தில் வங்கியின் வர்த்தகத்தை செய்தல். இந்த சேவையில் உள்ள சில அம்சங்கள்  வருமாறு:

'No Frill SBI Accounts' எனப்படும் சேமிப்பிக் கணக்கை இங்கு தொடங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance) வைக்கத் தேவையில்லை. க்ணக்கைத் துவங்க கைரேகை மட்டுமே போதும். கணக்கில் ரூபாய் ஐம்பதாயிரம் வரை மட்டுமே கணக்கில் அதிக பட்சமாக வைத்துக் கொள்ளலாம். செக் புத்தகம் கிடையாது. பாஸ் புத்தகம் கிடையாது. கணக்கைத் துவங்கியதற்கு ஒரு அடையாள அட்டை மட்டுமே. கணக்கில் பண பரிமாற்றம் (Cash Transactions) மட்டுமே. அதிகபட்சம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே. கணக்கு வைத்து இருப்பவர் மட்டுமே இதனைச் செய்ய முடியும். சேமிப்பு கணக்கில் இருக்கும் கையிருப்பிற்கு வட்டி உண்டு. கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு இலவசமாக ரூபாய் பத்தாயிரத்திற்கு விபத்து இன்சூரன்ஸ் பாலிசி (Personal Accident Insurance Policy) உண்டு.

மேலும் அனைத்து வகையான வங்கி கணக்குகளையும் (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, ரெக்கரிங் டெபாஸிட், பிக்ஸட் டெபாஸிட் ) தொடங்கலாம்.

கணக்கில் வரவு வைத்தல் (அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம். இதற்கு கட்டணம் கிடையாது. ஆனால் மற்ற கிளையின் கணக்குகளுக்கு பணம் கட்ட  தனியே சேவைக் கட்டணம் என்று உண்டு. இங்கு உள்ள படத்தில் விவரம் காண்க.)

 
( மேலே உள்ள CASH REMITTANCE CHARGE  உங்களின் HOME BRANCH  கணக்குகளுக்கு பொருந்தாது. மற்ற கிளை கணக்குகளுக்கு மட்டுமே ) 
கணக்கில் பணம் எடுத்தல் (அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம்)
மற்ற கிளைகளுக்கு பண பரிமாற்றம். (அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம்)
கடன் வழங்குதல் (அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம்)

(இப்போது ஒருநாளைக்கு அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது )

எங்கள் பகுதியில் உள்ள SBI KIOSK BANKING காலை ஒன்பது மணி முதல் இரவு ஏழு மணி வரை உண்டு.
'No Frill SBI Accounts' தேவைப்படாதவர்கள் தமது கணக்குகளை எப்போதும் போல வீட்டுக்கு அருகில் உள்ள SBI கிளையிலேயே தொடங்கிக் கொள்ளலாம்.

தினமலர் செய்தி:

ஸ்டேட் வங்கியின்   இந்த கியாஸ்க் சேவை குறித்து தினமலர்
( திருப்பூர் ) தந்த செய்தியின் சுருக்கம் வருமாறு.

// சுலபமாகவும், எளியமுறையிலும், எவ்வித முதலீடும் இன்றி, கணக்கு துவங்கும் "கியாஸ்க்' வங்கி திட்டத்தை ஸ்டேட் பாங்க் அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க, அடையாள ஆவணங்கள் மற்றும் முதலீட்டு பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால், வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்கள் வங்கி மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்வது இல்லை. ஆகவே, வங்கி சேவையை சுலபமாக்கி, அனைத்து தர மக்களும் வங்கி மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள வசதியாக, ஸ்டேட் பாங்க் "கியாஸ்க்' திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது.


இதில், நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வங்கியில் இருந்து பணம் எடுக்கவும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை டெபாசிட் செய்யும் வசதி உள்ளது. இரவு 7.00 மணி வரை இந்த புதிய வகை வங்கிகள் செயல்படும். மேலும், வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை வாடிக்கையாளர்களின் இடத்துக்கே சென்று பண பரிமாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் ஆவணங்கள் இன்றி, கைரேகையை மட்டும் பதிவு செய்து வங்கி கணக்கு துவங்கலாம். இனி, எழுதப்படிக்கத் தெரியாத கிராமப் புறங்களை சேர்ந்தவர்களும் வங்கி சேவையை பயன்படுத்தலாம்.


புதிதாக கணக்கு துவங்குவோருக்கு, ஒரு வாரத் துக்கு பின், அடையாள அட்டை வழங்கப் படும். ஏ.டி.எம்., கார்டு, செக் புக், பாஸ் புக் வழங்கப்படுவதில்லை.கைரேகை வைத்து பதிவு செய்தால் மட்டுமே வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கை திறக்க முடியும். முதலீடு ஏதும் இல்லாமல் இலவசமாக வங்கி கணக்கு துவங்கப்படுகிறது. ஆரம்ப நிதி மற்றும் குறைந்த பட்ச இருப்புத்தொகை தேவை யில்லை. இருப்பு தொகையை வாடிக்கை யாளர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். குறைபட்சமாக 30, 50, 100 ரூபாய் கூட, இத்திட்டம் மூலம் சேமிப்பு கணக்கில் செலுத்தலாம். வழக்கமாக எஸ்.பி.ஐ., வங்கியில் சேமிக்க வழங்கப்படும் வட்டியே இத்திட்டத் திலும் வழங்கப்படும்.இம்முறையான வங்கி கணக்கில் இருந்து, அனைத்து எஸ்.பி.ஐ., கிளைக் கும் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இம்மையத்தில் கணக்கு இல்லாதவர்களும், இங்கு பண முதலீடு செய்து கொள்ளலாம். //



சரியா தவறா?

இப்போது அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பளம், இலவச மானியங்கள், சுய உதவிக் குழுவின் செயல்பாடுகள், பண பரிமாற்றம் அனைத்தையும் அரசு வங்கிகள் மூலமாகவே நடைமுறைப் படுத்தி வருகின்றனர். எனவே வங்கிகளின் வேலைச் சுமையை குறைக்கவும் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் பல வங்கிகள் இந்த முறையைக் கையாளுகின்றன. தனியார் வங்கிகளில் யாரும் கேள்வி கேட்பதில்லை. இந்த முறையில் உள்ள சேவைக் குறைபாடு மற்றும் சேவைக் கட்டணம் குறித்து எம்எல்ஏ ஆகவும் எம்பி ஆகவும் இருக்கும் அரசியல்வாதிகளாகிய மக்கள் பிரதிநிதிகள்தான் குரல் எழுப்ப வேண்டும்.

( குறிப்பு: இந்த பதிவுக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கும் மற்றும் SBI KIOSK BANKING  பொறுப்பை ஏற்று நடத்தும் நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பொதுமக்களில் நானும் ஒருவன் என்ற முறையில் எனக்குத் தெரிந்த சில தகவல்களை நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பரிமாறிக் கொண்டேன் அவ்வளவுதான்.) 



கட்டுரை எழுத உதவி செய்த இணைய தளங்கள்: (நன்றியுடன்)