Thursday 29 August 2013

அலெக்ஸ் அம்மாள் சீட்டு


அப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம். நாங்கள் வசித்த திருச்சி டவுன் பகுதியில் ஒரே பரபரப்பு.  மக்கள் எல்லோரும் சீட்டுப் பணம் கட்ட முண்டியடித்துக் கொண்டு ஓடினார்கள். பேப்பரில் விளம்பரம் கிடையாது. ஒரு பிட் நோட்டிஸ் கிடையாது. எப்படி இந்த செய்தி முளைத்தது, யார் வந்து சொன்னார்கள் என்று அறிந்து கொள்ளவும் முடியவில்லை.அங்கங்கே ஒருவருக்கு ஒருவர் சொல்லி திருச்சி முழுக்க செய்தி பரவி பரபரப்பு அதிகமாகியது. இந்த சீட்டை நடத்தியவர் அலெக்ஸ் என்ற பெண்மணி. எனவே எல்லோரும் அலெக்ஸ் சீட்டு “ என்றே அழைத்தார்கள்.

இது பாத்திர சீட்டோ ஏலச் சீட்டோ அல்லது குலுக்குச் சீட்டோ கிடையாது. இது ஒரு புது மாதிரியான சீட்டு. தமிழ்நாட்டிலேயே திருச்சியில்தான் தொடக்கம் என்று நினைக்கிறேன். ஒரு பொருளுக்கு அந்த பொருளின் விலையை விட மிகமிகக் குறைவாக ஒரு விலையைச் சொல்லி ( மூன்றில் ஒரு பங்கு ) பணம் கட்டச் சொல்லுவார்கள். பணம் கட்டிய நாளிலிருந்து சில நாள் கழிந்ததும் பணம் கட்டிய ரசீதைக் காட்டியதும் அந்த பொருளைத் தந்துவிடுவார்கள். மேற்கொண்டு எதுவும் கட்ட வேண்டாம். அப்போதுதான்  ஸ்டீல் சேர், ஸ்டீல் ஈசி சேர், ஸ்டீல் பீரோ, ஸ்டீல் கட்டில் என்று புதிதாக மக்களிடம் பரவலாகிக் கொண்டிருந்த சமயம். அந்த பொருட்களோடு  பேன், டேபிள் பேன், சைக்கிள், ரேடியோ போன்றவற்றையும் அலெக்ஸ் அம்மாள் சீட்டில் தந்தார்கள். ஆரம்பத்தில் நடுத்தர மக்கள்தான் இதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். அதிக சீட்டுகள் சேர்ந்தார்கள்.

ஆரம்பத்தில் ஒருவாரத்தில் பொருட்கள் கிடைத்தது. அவ்வாறு வாங்கியவர்கள் மேற்கொண்டும் வாங்க பல சீட்டுகளை கட்டினார்கள். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் கட்டினார்கள். நாளுக்கு நாள் நிறையபேர் சேர்ந்தார்கள். பின்னர் ஒருவாரம் என்பதை பதினைந்து நாட்கள் கழித்துதான் என்று சொன்னார்கள்.எங்கள் வீட்டில் என் அம்மா ஸ்டீல் ஈசி சேருக்கு பணம் கட்டி, சரியாக பதினைந்துநாள் கழித்து வாங்கினார்கள். ( இன்னும் அந்த சேர் எங்கள் அப்பாவிடம் இருக்கிறது ) எனது நண்பனின் வீட்டில் இரண்டு ஸ்டீல் சேர்கள் வாங்கினார்கள்.

ஒருநாள் நானும் எனது நண்பனும் அந்த சீட்டு ஆபிஸ் இருக்கும் இடத்தைப் பார்க்க நடந்தே சென்றோம். அலெக்ஸ் அம்மாளின் சீட்டுக் கம்பெனி அப்போது திருச்சி தில்லை நகரில் இருந்தது. அப்போதுதான் திருச்சி தில்லைநகர் உருவாகி இருந்த நேரம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். மெயின் ரோட்டில் வரிசையாய்  தென்னங் கன்றுகள். இடத்தைக் கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமாய் இல்லை. அலெக்ஸ் சீட்டு என்றவுடனேயே வழி சொன்னார்கள். ஒரு பெரிய வீட்டில் அந்த சீட்டுக் கம்பெனி இருந்தது. உள்ளே செல்ல முடியாதபடி மக்கள் வரிசை. சீட்டு முடிந்து பொருட்களை வாங்கியவர்கள் கை ரிக்சாவிலும், தட்டு ரிக்சாவிலும் ஏற்றிக் கொண்டு இருந்தனர். சீட்டுப் பணம் கட்ட ஒரு பெரிய வரிசை. வெளியே இருந்தபடியே ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தோம். அலெக்ஸ் அம்மாள் கல்லூரி ஆசிரியை போன்ற மேக்கப் மற்றும் கெட்டப்பில் இருந்தார்.

கொஞ்சநாள் சென்றதும் காருக்கு சீட்டுப் பணம் கட்டலாம் என்று சொன்னார்கள். பணம் கட்டிய நாளிலிருந்து  ஒரு மாதமோ இரண்டு மாதமோ ( சரியாக நினைவில் இல்லை ) கழித்து கார் கிடைக்கும் என்றார்கள். நிறையபேர் கார் வாங்கும் ஆசையில் பல சீட்டுகளைக் கட்டினார்கள். மாதச் சம்பளம் வாங்குபவர்களும், அதிகாரிகளும், வசதி படைத்தவர்களும் என்று நிறையபேர் பணம் கட்டினார்கள்.


ஒருநாள் பணம் கட்டியவர்களுக்கு ஸ்டீல் சேர், ஸ்டீல் ஈசி சேர், ஸ்டீல் பீரோ, ஸ்டீல் கட்டில் போன்றவற்றை சரியாகத் தரவில்லை என்று கலாட்டா. சீட்டுக் கம்பெனி மூடப்பட்டதாக தகவல் வந்தது. பணம் கட்டியவர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். நாளிதழ்களில் செய்தியும் பலரது பேட்டியும் வந்தன. சிலர் போலீசில் சொன்னார்கள். விசாரித்ததில் அலெக்ஸ் அம்மாள் வெளிநாடு சென்று விட்டதாக சிலரும் சென்னைக்கு போய்விட்டதாவும் சொன்னார்கள். ஒன்றும் நடக்கவில்லை..

இதில் வேடிக்கை என்னவென்றால் அதே பெண்மணி சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு அதே கம்பெனியை தொடங்கினார். நான் படித்து முடிந்ததும் வங்கி வேலையில் சேர்ந்து இருந்த நேரம். எனது அந்த நண்பன் பொன்மலை ரெயில்வேயில் இருந்தான். அவன் அலெக்ஸ் அம்மாளிடம் பணம் கட்டும்போது என்னையும் அழைத்துச் சென்றான். ஏற்கனவே அந்த அம்மாள் மோசடி செய்து இருப்பதால் வேண்டாம் என்று தடுத்தேன். அவனோ “ஆரம்பத்தில் ஓட மாட்டார்கள். கொஞ்சநாள் கழித்துதான் ஓடுவார்கள் “ என்று சொல்லிவிட்டு ஏதோ ஒரு பொருளுக்கு பணம் கட்டினான். நான் கடைசிவரை அதில் சேரவில்லை. நாங்கள் அந்த சீட்டுக் கம்பெனிக்கு போனபோது முன்பு இருந்த கூட்டம் இல்லை. அலெக்ஸ் அம்மாள் அதே  கல்லூரி ஆசிரியை போன்ற மேக்கப் மற்றும் கெட்டப்பில் இருந்தார். பத்துவருடத்திற்கு முன்பு இருந்த இளமை இல்லை. ஆனாலும் தைரியமான லேடிதான். இந்தமுறை போன தடவை ஏமாந்த மக்கள் முந்திக்கொண்டு போலீஸ் ஸ்டேசன் சென்றனர். அலெக்ஸ் அம்மாள் கம்பெனி இழுத்து மூடப்பட்டது. ஆனால் யாருக்கும் எதுவும் திரும்பவும் கிடைக்கவில்லை.

இப்போது விதம் விதமான சீட்டுக்கள். விதம் விதமான மோசடிகள். எல்லாவற்றிற்கும் இந்த உலகில் இடம் உண்டு.



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 
  

Thursday 22 August 2013

மாகாளிக்குடி (சமயபுரம்) உஜ்ஜயினி மாகாளி



விக்கிரமாதித்தன் கதைகள் படிப்பது என்றால் நேரம் போவதே தெரியாது. பள்ளிக்கூட விடுமுறையில் எங்கள் அம்மாவின் கிராமம் சென்று இருந்தபோது அங்கு கிடைத்த பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள் படித்தேன். அன்றிலிருந்து விக்கிரமாதித்தன் என்றால் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. பின்னாளில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மாகாளிக்குடியில் உள்ள காளி கோயில் சிலை விக்கிரமாதித்தன் வைத்தது என்று ஒருகதை சொன்னார்கள். அன்றிலிருந்து அங்கு போய்வர எண்ணி, இப்போதுதான் முடிந்தது.

கடந்த திங்கட் கிழமை (19.08.2013) சமயபுரத்தில் நண்பர்கள் நடத்திய அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதானம் முடிந்ததும் நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, அருகில் மாகாளிக்குடி என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் சென்று வந்தேன். சமயபுரத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம். எனவே அங்கிருந்து நடந்தே சென்று வந்தேன்.


மாகாளிக்குடியும் விக்கிரமாதித்தனும்.

உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தனுக்கு பட்டி என்ற மந்திரி. இருவரும் இணைபிரியாத நெருங்கிய நண்பர்கள்.. ஒருமுறை தேவலோகத்தில் நாட்டியத்தில் சிறந்தவள் ரம்பையா ஊர்வசியா என்ற சர்ச்சை எழுந்தது. யாராலும் தீர்ப்பை சொல்ல முடியவில்லை. நாரதரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் சிறந்து விளங்கும் விக்கிரமாதித்தன் தேவலோகம் அழைத்து வரப்படுகிறான். சரியான தீர்ப்பைச் சொன்ன விக்கிரமாதித்தனுக்கு பல பரிசுப் பொருட்களோடு, முப்பத்திரண்டு பதுமைகள் உள்ள சிம்மாசனம் ஒன்றையும் தந்து  ஏறிய சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள்  வாழ்கஎன்று வரம் தந்து அனுப்பி வைக்கிறான். பூலோகம் வந்து நடந்தவற்றை பட்டிக்கும் மற்றவர்களுக்கும் சொல்கிறான். இதைக் கேட்ட பட்டி தனது புத்திக் கூர்மையினால் காளியின் அருளால், தனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழும் வரம் வாங்கி விடுகிறான். இதனால் மந்திரி பட்டிக்கு முன்பே விக்கிரமாதித்தன் இறந்து போகும்படி வரங்கள் அமைந்து விடுகின்றன.. இதனால் இருவரும் கவலை அடைகின்றனர். தீவிர யோசனைக்குப் பின் மந்திரி பட்டி  ஆறு மாதம் சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆள்வது.. பின்னர் சிம்மாசனத்தை விட்டு இறங்கி காடாள்வதுஎன்ற யோசனை சொல்கிறான். இதனால் இரண்டாயிரம் வயது விக்கிரமாதித்தனுக்கும் வந்து விடும்.

இந்த “காடாறு மாதம்; நாடாறு மாதம் “ முறைப்படி வருகையில் ஒருதடவை இந்த மாகாளிக்குடி என்ற இடத்திற்கு விக்கிரமாதித்தன் வருகிறான். கூடவே அவனுடைய நண்பனும் மந்திரியுமான பட்டி மற்றும் வேதாளம்.கூடவே தான் எப்போதும் வணங்கும் உஜ்ஜயினி காளியின் விக்கிரகம். இங்கு தங்கி காடு ஆறுமாதம் முடிந்து நாடு திரும்பும் போது விக்கிரகத்தை எடுக்கும்போது எடுக்க முடியவில்லை. விக்கிரமாதித்தன் கனவில் வந்த காளி, தான் இந்த ஊரிலேயே இருந்து கொள்வதாகச் சொல்ல, அவனும் அப்படியே ஒரு கோயில் ஒன்றைக் கட்டி விட்டுச் செல்கிறான்.

இதுதான் இந்த கோயிலுக்காகச் சொல்லப்படும் கதை. நமது நாட்டில் ராமாயணம், மகாபாரதம், விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவற்றில் வரும் கதை மாந்தர்களை பல கோயில்களின் தல புராணத்தோடு இணைத்துச் சொல்லும் வழக்கம் இருந்து வருகிறது.  இந்த உஜ்ஜயினி மாகாளியை இங்குள்ளவர்கள், உச்சி மாகாளி என்றும் உச்சினி மாகாளி என்றும் அழைக்கின்றனர்.


மாகாளிக்குடி கோயில் படங்கள்:

கோயிலுக்குள் சென்றபோது எடுத்த புகைப்படங்களை இங்கே
தருகின்றேன்.

படம் (மேலே) சம்யபுரம் கோயில் அருகே உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் தோரண வாயில்.





படம் (மேலே) காளியம்மன் கோயில் வாயில் அருகே உள்ள அறிவிப்புப் பலகை


.படம் (இடது) காளியம்மன் கோயில் நுழைவு வாயில்          




படம் (மேலே)  நுழைவு வாயில் மேலே உள்ள காளியின் உருவச் சிலை


படம் (மேலே)  நுழைவு வாயில் இடப்பக்கம் உள்ள ரிஷப சிற்பம்.
 
படம் (மேலே)  நுழைவு வாயில் வலப்பக்கம் உள்ள ரிஷப சிற்பம்.




படம் (மேலே)  நுழைவு வாயில் உட்பக்கம்


படம் (இடது)  மந்திரி பட்டி (ஸ்ரீ களுவன்) மற்றும் ஸ்ரீ வேதாளம் சன்னதி


படம் (மேலே)  ஸ்ரீ மதுரை வீரன் சன்னதி

படம் (மேலே) கோயிலின் ஒரு மூலை


படம் (மேலே) ஸ்ரீ கருப்பண்ணசாமி  சன்னதி


படம் (மேலே) ஸ்ரீ கருப்பண்ணசாமி  சன்னதி மேல் உள்ள சிலை


படம் (மேலே) கோயிலின் இன்னொரு  மூலை

நான் மாகாளிக்குடியில் உள்ள காளி சிலை விக்கிரமாதித்தன் வைத்தது என்பதால், காளி கோயில் பெரிய கோயிலாக இருக்கும் என்று என்ணினேன். ஆனால் அதற்கு மாறாக சிறிய கோயிலாகத்தான் உள்ளது.   

 













Tuesday 20 August 2013

சமயபுரத்தில் நண்பர்களின் அன்னதானம் (2013)



இந்த கட்டுரையை ஒரு விளம்பரம் கருதியோ அல்லது சுய தம்பட்டத்திற்காகவோ எழுதவில்லை. இந்த காலத்தில் இதுபோன்ற அன்னதான காரியங்களில் அதிக சிரத்தை எடுத்து  குழுவாக யாரும் முன்வந்து செய்வதில்லை. இங்கு யாரிடமும் யாரும் போய் நன்கொடை வாங்கவில்லை. திரு A.கலைச் செல்வம்  அவர்களோடு இணைந்த, இந்த குழுவில் உள்ளவர்கள் மட்டும் அவரவர்கள் விருப்பப்பட்டு கொடுப்பதை வைத்து அன்னதானம் ஒரு ஆத்ம திருப்திக்காக செய்யப்பட்டு வருகிறது. சிலர் பணம் மட்டும் தருகிறார்கள். சில நண்பர்கள் உடல் உழைப்பைத் தருகின்றனர். எனவே அந்த நல்ல இதயங்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் அதிக படங்களோடு இந்த பதிவை பதிந்துள்ளேன். 

திருச்சி நகரப் பகுதியில் உள்ள கிளைகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் சிலர் நண்பர்களுடன் இணைந்து கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ஆவணி மாதத்தில் ஒருநாள் இந்த அன்னதானம் செய்து வருகின்றனர். இதனை ஆரம்ப காலத்தில் தனியாக தொடங்கி வைத்தவர் திரு A.கலைச் செல்வம் அவர்கள்.(படத்தில் இருப்பவர்) இவர் திருமயம் அருகே உள்ள சிறுகூடல் பட்டி அருகே உள்ள அரிபுரம் என்ற ஊர்க்காரர். நான் ஸ்டேட் வங்கியிலிருந்து, விருப்ப ஓய்வில் வந்த பின்னர் இந்த நண்பர்களோடு இணைந்துள்ளேன்.   இந்த நற்பணியில் என்னை இணைத்து வைத்தவர் என்னோடு பணிபுரிந்த திரு V சங்கர் (ஸ்ரீரங்கம்) அவர்கள். இருவருக்கும் நன்றி!  ( மேலும் அதிக விவரங்களுக்கு  http://tthamizhelango.blogspot.com/2012/08/blog-post_13.html )

இந்த ஆண்டும் சென்ற ஆண்டைப் போலவே நேற்று (19.08.2013 ) அருள்மிகு கருப்பண்ணசாமி மதுரைவீரன் சாமி கோயில்கள் வாசல் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கோயில் பரம்பரையினர் வழிவந்த திரு.ராதாகிருஷ்ணன் (படத்தில் இருப்பவர்) அவர்கள் சென்ற ஆண்டைப் போலவே நேற்றும் , கோயில் இடத்தில் அன்னதானம் செய்ய அனுமதி வாங்கித் தந்தார். இந்த கோயில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே கடைத் தெருவில் உல்ளது. ( முன்பெல்லாம் சமயபுரத்தில்  திருமண சத்திரங்களை வாடகைக்கு எடுத்து அங்கு உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டன.)

அருள்மிகு கருப்பண்ணசாமி மதுரைவீரன் சாமி கோயில்கள்கோயில் படங்கள (கீழே)











முதலில் காலையில், சமயபுரம் கோயில் வரும் பக்தர்களுக்கு பன் ரொட்டியும் காபியும் தரப்பட்டது. பின்னர் அன்னதானமாக காலை எட்டு மணி அளவில்  பக்தர்களுக்கு இட்லியும் சாம்பாரும் வழங்கப்பட்டது. அனைவரும் மகிழ்வுடன் வாங்கிச் சாப்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து தந்தவர் திரு ரகுநாதன் ( ஸ்ரீ கோகுல் சமாஜ் ட்ரஸ்ட், தெப்பகுளம், ஸ்ரீரங்கம் )அவர்கள். 

அன்னதான காட்சிகளின் படங்கள் (கீழே) 


















 








 அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயில் வாசல்களில் எடுத்த படம் (கீழே)



சமயபுரத்தில் அன்னதானம் முடிந்ததும் நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, அருகில் மாகாளிக்குடி என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் சென்று வந்தேன். ( இது பற்றி தனியே ஒரு பதிவு எழுதுவதாக இருக்கிறேன் )

Saturday 17 August 2013

நித்திய கல்யாணி ( கல்லறைப் பூக்கள் )



நான் எனது தொடக்கக் கல்வியை கிறிஸ்தவ மெஷினரி நடத்தும் ஒரு பள்ளியில் படித்தேன். அந்த பள்ளியில் ஒரு சிறிய தோட்டம். தோட்டத்திற்குள் வாசலில் வெள்ளை மற்றும்  இளஞ் சிவப்பு நிறங்களில் அல்ங்கார வண்ணபூக்கள். பள்ளியில் அவற்றை கல்லறைப் பூக்கள் என்று சொன்னார்கள்.. சிலர் இதனை சுடுகாட்டுப் பூ என்றும் சொன்னார்கள்.( பின்னாளில் இதன் பெயர் நித்திய கல்யாணி என்று தெரிந்து கொண்டேன் ) எங்கள் பள்ளிக்கு அடுத்து இருந்தது கிறிஸ்தவர்கள் கல்லறை. பள்ளிக்கும் கல்லறைக்கும் நடுவில் ஒரு சுவர் மட்டுமே. சுவரை ஒட்டி வரிசையாக நெட்டிலிங்க மரங்கள். சில சமயம் நானும் எனது நண்பர்களும் அவற்றின் மீது ஏறி அருகிலுள்ள கல்லறையை எட்டிப் பார்ப்போம். அங்கு இந்த பூச்செடிகள் அதிகம் இருந்தன.


கல்லறைப் பூக்கள் பெயர்க் காரணம்:

இந்து மதத்தில் இறந்தவர்களைப் புதைத்தவுடன் மண்போட்டு மேடாக்கி மண்சமாதி செய்து விடுவார்கள். பால் ஊற்றும் சடங்கின்போதோ அல்லது 16 - ஆம் நாள் காரியத்தின் போதோ அந்த சமாதியின் தலைமாட்டில் ஒரு மரக்கன்றை நட்டு வைப்பார்கள். தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு கல்லறையிலும் மரம் வைப்பதில்லை. பெரும்பாலும் இந்த கல்லறைப் பூக்கள் செடியைத்தான் அதிகம் வைத்தனர். பெரும்பாலும் மண்ணால் அமைந்த கல்லறைகளிலும், கல்லறை தோட்டங்களிலும் இந்த செடிகள் அழகாக பூத்துக் குலுங்குவதைக் காணலாம். (இப்போது கல்லால் அல்லது சிமெண்டினால் கட்டுகிறார்கள்) எனவே நம்நாட்டு மக்கள் இந்த நித்தியகல்யாணிப் பூக்களை கல்லறைப் பூக்கள் அல்லது சுடுகாட்டுப் பூக்கள்  என்று அழைக்கின்றனர்.


எங்கள் வீட்டில்:

எங்கள் வீட்டு மனையில் முன்புறம் பின்புறம் இரண்டிலும் இடம் விட்டு வீடு கட்டியுள்ளோம். முன்புறம், சில மாதங்களுக்கு முன்பு,  அழகுக்காக இந்த நித்திய கல்யாணிச் செடிகளை நட்டுவைத்தேன். அவை பலவாகி அடம்பலாக இருந்தன. அந்த செடிகளில்  வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு வண்ணப் பூக்களை அழகாக பூத்துக் குலுங்கின. ஒருநாள் இரவு எங்கள் வீட்டுநாய் “ஜாக்கி  ரொம்பவும் வித்தியாசமாக குரைத்துக் கொண்டே இருந்தது. வெளி விளக்கைப் போட்டுவிட்டு வெளியே எட்டிப்பார்த்தால் ஜாக்கி அந்த செடிகளைப் பார்த்தே குரைத்துக் கொண்டிருந்தது. அங்கே சுமாரான நீளமுள்ள பெரிய நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்தபடி இருந்தது. நித்தியகல்யாணி செடிகளின் நெருக்கத்தில் அது செடிகளோடு செடியாய் இருந்தது. உடனே வீட்டில் இருந்த ஒரு மூங்கில்கழியை எடுத்து செடியை அலசியபோது அது ஓடி விட்டது. ( இந்த மூங்கில்கழி, கிராமத்து உறவினர் ஒருவர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்திருந்த போது எங்களுக்காக வாங்கித் தந்தது). அடுத்தநாள் நித்தியகல்யாணி செடி ஒன்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை வெட்டிவிட்டேன்.




 
( எங்கள் வீட்டில் அப்போது இருந்த நித்திய கல்யாணி செடிகள் பூக்களுடன்) 


சில குறிப்புகள்:       

கல்லறைப் பூக்கள் எனப்படும் நித்தியகல்யாணியின்  பிறப்பிடம் மடகாஸ்கர் தீவுகள் ஆகும். இதற்கு Catharanthus roseus என்று பெயர். பின்பு அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியது. நித்தியகல்யாணி, சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, மதுக்கரை, மறுக்கலங்காய் என்று தமிழில் அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் இது அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இந்த நித்திய கல்யாணி செடியிலிருந்து இரத்தப் புற்றுநோய்க்கான மருந்தும் சில ரசாயனப் பொருட்களும்  தயாரிக்கப்படுகின்றன.. இதனால் இதனை வியாபார நோக்கிலும் சில் இடங்களில்அதிக அளவில் பயிரிடுகிறார்கள். இது எல்லா இடங்களிலும் தானாகவே வளரும். எனவே அதிக முயற்சியோ செலவோ இல்லாமல் லாபம் பார்க்கலாம். பாட்டி வைத்தியத்திலும் இதன் பயன்பாடு உள்ளது. (தகவலுக்கு நன்றி: விக்கிபீடியா )


ஒரு கேள்வி:

சுடுகாட்டுப் பூ, கல்லறைப்பூ என்று பெயரைச் சொல்லும்போது என்னவோ போல் இருக்கிறதே? வீட்டில் அழகுக்காக இதனை வைக்கலாமா? நமது நாட்டில் பல விஷயங்கள் மூடநம்பிக்கையின் காரணமாக இப்படித்தான் பார்க்கப்படுகின்றன. ஒப்பு உவமை இல்லாத ஒப்பிலியப்பன், உப்பு உணவு இல்லாத உப்பிலியப்பன் ஆக்கப்பட்டான். இந்த செடிக்கு இங்கிலீஷ்காரன் ஒரு பெயர் வைத்தான். ந்ம்ம ஊரில் நித்தியகல்யாணி ( தினமும் பூத்து குலுங்குவதால் ) என்றார்கள். அதன் அழகையும் பயன்பாட்டையும் நாம் பார்ப்போம். எனது கவிதை ஒன்று இங்கே

 
கல்லறைப்பூக்கள் (கவிதை)

நேற்றுவரை உன்னோடு - நெருங்கி
இருந்தவர்கள் எல்லோரும்
இன்று எங்களை மட்டும் 
விட்டுச் சென்றனர் கண்ணீரோடு!
கவலைப் படாதே மனமே!
அவர்களும் வருவார்கள்! 
ஒருநாள் அன்போடு!
நாங்கள் என்றும் உன்னோடு!