Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Sunday, 22 May 2016

வங்கிக் கடனை திரும்பக் கட்ட வேண்டுமா?



’கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் தார்வேந்தன் இலங்கை இராவணன்’ என்று சொல்லுவார்கள். கம்பர் இவ்வாறு பாடவில்லை; இது ஒரு தனிப்பாடல் வரி என்பார்கள். நிற்க. இப்போதெல்லாம் கடன் கொடுத்தவர்கள்தான் கலங்கி நிற்கிறார்கள் என்பது புதுமொழி. ஆனாலும் வங்கிக் கடன் என்றாலே கொடுத்தவரும் கலங்குவதில்லை; வாங்கியவர்களில் கலங்காதவர்களும் உண்டு.

இருபது அம்சத் திட்டம்:

நான் வெளியூரிலிருந்து உள்ளூர் நகரக் கிளைக்கு பணிமாற்றல் பெற்று வந்த நேரம். பாரதப் பிரதமரின் 20 அம்சத் திட்டத்தின் கீழ்,சுயவேலை வாய்ப்பு என்ற பெயரில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரையின்படி அரசு வங்கிகளில் கடன் தொகை வழங்கிக் கொண்டு இருந்தார்கள். வழக்கம் போல அவரவர் ஏரியாக்களுக்கு ஒதுக்கப்பட்ட வங்கிகளுக்கு மக்கள் படையெடுப்பு. விண்ணப்ப பாரங்களை பூர்த்தி செய்து தருவதற்கென்றே கடைவீதியில் சிலர் கடை போட்டு, கூடவே ஸிராக்ஸ் மெசினும் வைத்து நல்ல வியாபாரம். சில சமயம் வங்கி சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரியாவிடில் வங்கி ஊழியர்களிடம் கேட்டு விண்ணப்ப பாரங்களில் எழுதுவார்கள். . இதில் அரசியல்வாதிகள் சிபாரிசுக் கடிதங்களும் உண்டு. வேலை வாய்ப்பு அலுவலகம், தாலுகா அலுவலகம், கட்சி ஆபிஸ், வங்கிகள் என்று அலைந்ததன் பலனாக, கிட்டத் தட்ட எல்லோருக்குமே கடன் தொகை கிடைத்தது எல்லாம் முடிந்து கடன் வாங்கிய ஒருவர் என்னிடம் கடைசியாக கேட்ட கேள்வி “ சார்! வங்கியில் வாங்கிய இந்தக் கடனை திரும்பக் கட்ட வேண்டுமா?” என்பதுதான்.

விவசாயி என்றால்..

இந்திய விவசாயி என்றால் நிறையபேரின் மனக்கண்ணில் வருவது ஏர் கலப்பையும், மேலாடை அணியாத விவசாயியும்தான். ஆனால் நடைமுறையில், வங்கிக்கடன் பெறுபவர்கள் அனைவருமே வசதியான விவசாயிகள்தான். இவர்கள் இலவச மின்சாரம், உர மான்யம், விதை மான்யம், கடன் தள்ளுபடி என்று எல்லா சலுகைகளும் பெறுவார்கள். அவர்கள் விவசாயத்திற்கு என்று டிராக்டர் வாங்குவார்கள். தாங்கள் வைத்து இருக்கும் நிலங்களில் பயன்படுத்துவது மட்டுமன்றி, மற்ற விவசாயிகளுக்கும்  இந்த டிராக்டரை மணிக்கு இவ்வளவு என்று வாடகைக்கும் விடுவார்கள்.. ஆனால் கடன் வசூல் என்று போனால் பணத்தை ஒழுங்காக கட்டுவது இல்லை.  காரணம் என்றேனும் ஒருநாள் ஆட்சியில் இருக்கும் அல்லது ஆட்சிக்கு வர இருக்கும் அரசியல் கட்சிகள், இந்த விவசாயக் கடனை எல்லாம், தள்ளுபடி செய்துவிடும் என்ற எதிர்பார்ப்புதான். ஒரு சாதாரண விவசாயியும், ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் இந்த விவசாயியும் ஒன்றா? என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஒருமுறை நாளிதழ் ஒன்றில் நான் கண்ட விளம்பர வாசகம் ‘இலவச மின்சாரம் மற்றும் பம்புசெட்டுடன் கூடிய விவசாய பண்ணைத் தோட்டம் விற்பனைக்கு’

விஜயமல்லையாக்கள்:
                                                                                                                                                                  
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், ப்ளாக் – என்று விஜயமல்லையாவைப் பற்றி விமர்சனம் வராத நாளே இல்லை எனும் அளவுக்கு செய்தி பரிமாற்றம் இருந்தது. ஒருவிதத்தில் வங்கி நடைமுறைச் சட்டத்தில், கடன் வழங்குவதில் உள்ள அரசியலையும், வசூல் விஷயத்தில் உள்ள பலவீனத்தையும் இவர்களால்தான் மக்கள் தெரிந்து கொண்டனர் எனலாம். இதில் குறிப்பாக சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுபோன்ற மல்லையாக்கள் உருவாக எல்லா அரசியல் கட்சிகளுமே காரணம் என்பதுதான். இது போன்ற ஆட்களிடம் கட்சி பேதமின்றி நன்கொடை தாராளமாக இருக்கும். எனவே இந்த விஜயமல்லையாக்கள் வங்கிக்கடன் பெறுவதற்கு எல்லா அரசியல் கட்சிகளுமே உதவும். இவர்களும் கிடைத்த வாய்ப்பை பெற்றுக் கொண்டு, சட்டத்தில் இருக்கின்ற, சந்து பொந்துகளில் நுழைந்து, வங்கிக் கடனை, வாராக் கடனாக (NPA) மாற்றி விட்டு ’பெப்பே’ காட்டி விடுகின்றனர். சிறிய கடன்காரர்கள் வகை தெரியாமல் முழிக்கிறார்கள். இவர்களிலும் மல்லையாக்கள் இருக்கிறார்கள். வங்கிகளில் வாராக்கடன் என்பது நாட்டிற்கு பொருளாதாரக் கேடு.

                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

Tuesday, 28 July 2015

பவுனுக்கு மூன்று மூட்டை நெல்



அந்த காலத்து பெரியவர்கள், அப்போது சிறுவனாக இருந்த என்னிடம் பேசும்போது “அந்த காலத்திலே பவுனு விலை …. … ” என்று இழுத்து அவர் காலத்து பெருமைகளை எல்லாம் பேசுவார்கள். அதில் பவுனு (தங்கத்தின்) விலை இந்த காலத்தை விட குறைவாக இருந்ததாகவும், விலைவாசிகள் எல்லாம் ரொம்பவும் குறைந்து மக்கள் எல்லோரும் சுபிட்சமாக இருந்ததைப் போலவும் சொல்லுவார்கள். அன்று சிறுவனாக இருந்த நான் இன்றுள்ள சிறுவர்கள் மத்தியில் பெரிசு ஆகி விட்டேன். எனக்கும் ’அந்தக் காலத்திலே’ என்று அவ்வப்போது சொல்லத் தோன்றும். எனது காலத்தில் 10 காசுக்கு ஒரு டீயும். (இங்கு காசு என்றால் பைசாவைக் குறிக்கும்) 15 காசுக்கு ஒரு தோசையும் சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

தங்கத்தின் விலை:

அந்த காலத்து பெரியவர்கள் அந்த காலத்து தங்கம் விலை குறைவாக இருந்தது என்று சொன்னாலும் நாளுக்கு நாள் அதன் விலை, இன்று வரை உயர்ந்து வருவதைக் காண்கின்றோம். இதனை கருத்தில் கொண்டு ” http://tthamizhelango.blogspot.com/2012/10/86.html தங்கம் விலை – 86 வருட பட்டியல். “ என்று ஒரு பதிவினை எழுதினேன். அப்போது கூகிளில் (GOOGLE) கிடைத்த ஒரு பட்டியலை இணைத்தேன்.
 ( அதற்கப்புறம் அதைப் பார்த்த பலர் , தங்கள் பதிவுகளிலும் வெளியிட்டுக் கொண்டனர் என்பது வேறு விஷயம் ). அந்த பதிவினைப் பார்க்காதவர்களுக்காக மீண்டும் அந்த பட்டியல் கீழே.
 
தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம்


இவரைப் பற்றி இந்த காலத்து பிள்ளைகளுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அறுபதிற்கு முன்பு பிறந்தவர்களுக்கு தெரிய வாய்ப்பு அதிகம். அந்தக் கால தமிழறிஞர். நான் இருக்கும் திருச்சிக்காரர். பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் நண்பர். பெரியாரைப் போன்றே சிக்கனமானவர். முத்தமிழ்க் காவலர் என்று அழைக்கப்பட்ட இவர் இந்தி எதிர்ப்பு கொள்கையில் தீவிரமானவர்; பெரியாரோடு சேர்ந்து போராட்டம் செய்தவர். சித்த மருத்துவம் தெரிந்தவர்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எழுதிய நூல்கள் பலவற்றை எனது அப்பா வைத்து இருந்தார். பள்ளிப் பருவத்தில் எல்லாவற்றையும் படித்து இருக்கிறேன். அவற்றுள் ”ஆறு செல்வங்கள்“  என்ற நூலும் ஒன்று. அதில்தான், அவர் ”எந்தப் பொருளும் விலை ஏறவில்லை. விலைவாசி அப்படியேதான் இருக்கிறது ‘ என்ற கருத்தினை முன் வைக்கிறார். அவர் சொல்வதை கேளுங்கள்.
(ஆறு செல்வங்கள், பக்கம் 31 – 33) நூலில் இருப்பதை அப்படியே தட்டச்சு செய்துள்ளேன். 



/// முன் வெள்ளியிலும் தங்கத்திலும் அச்சிடப்பெற்ற நாணயங்களின் உள் மதிப்பும் வெளி மதிப்பும் ஒன்றாகவே இருந்தன. காகிதப் பணம் அப்படியல்ல.அது பெருகப் பெருக அதன் மதிப்புக் குறையும். மதிப்புக் குறைய குறைய ஒரு பொருளுக்கு அதிக காகிதப் பணம் கொடுக்க வேண்டி வரும். அதைக் காண்பவர் பொருள்களின் விலை ஏறி விட்டதாகக் கூறுவர். இது தவறான கருத்து.

உண்மை என்னவெனில் 1931 முதல் இன்று வரை கடந்த 30 ஆண்டுகளாக எந்தப் பொருளும் விலை ஏறவில்லை என்பதே. அன்றைக்கும் பவுனுக்கு 3 மூட்டை நெல், இன்றைக்கும் பவுனுக்கு 3 மூட்டை நெல். பவுன் 15 ரூபாயாக இருந்த போது நெல் மூட்டை 5 ரூபாயாக இருந்தது. பின் பவுன் 30 ரூபாய் ஆனபோது நெல் ரூபா 10. பவுன் 45 ரூபா ஆனதும் நெல் ரூபாய் 15. பவுன் ரூபாய் 60 ஆனதும் நெல் ரூபாய் 20. இப்போது பவுன் 90 ஆனதும் நெல் ரூபா 30. பவுனுக்கு மூன்று மூட்டை நெல் அன்றும் விற்றது. இன்றும் விற்கிறது. இனியும் விற்கும். ///

அவர் கணக்குப்படி இன்று ஒரு பவுன் என்ன விலை என்பதையும், இன்று ஒரு பவுனுக்கு எத்தனை மூட்டை நெல் வாங்கலாம் என்பதையும் கணக்கிட்டுப் பாருங்கள்.  அவர் காலத்தில் அவர் போட்ட கணக்கு இன்று இல்லை எனத் தெரிய வரும். நியாயமாக அவர் கணக்குப்படி, மற்ற பொருட்களின் விலை உயர உயர நெல்லின் விலையும் உயர வேண்டும்: ஆனால் நெல்லின் விலையில் மட்டும் ஒரு தேக்கம். அதாவது குண்டூசி முதல் எந்த பொருட்களின் விலை உயர்ந்தாலும் , விவசாயத்தில் விளைந்த நெல் மட்டும் அந்த பொருட்களின் அளவுக்கு விலை உயரவில்லை. ஆனால் நெல் போன்ற உணவுப் பொருட்கள் விவசாயிகளிடமிருந்து , கை மாறிய பின் உணவகம் வந்து உணவாக விற்கப்படும்போது கொள்ளை விலையில் விற்கப் படுகின்றது. 

தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் சொல்லும் மேலும் சில புள்ளி விவரக் கணக்கை பாருங்கள்.

/// ஓர் ஏக்கர் நிலம் உள்ள உழவன் தன் நிலத்தில் 30 மூட்டை நெல் விளைவித்து, 15 மூட்டையைத் தன் செலவிற்கு வைத்துக் கொண்டு, மீதி 15 மூட்டை நெல்லை விற்று எல்லாப் பொருள்களையும் வாங்கினான். இன்றும் வாங்குகிறான், எது விலை ஏறியது? நெல்லையோ தங்கத்தையோ இணைத்துப் பார்க்கும் போது எப்பொருளும் விலை ஏறியதாகத் தெரியாது. காகிதப் பணத்துடன் இணைக்கும் போதுதான் எல்லாப் பொருளும் விலை ஏறியதாகத் தோன்றும். இது பொய்த் தோற்றம். உண்மை என்னவெனில் காகிதப் பணத்தின் மதிப்பு குறைந்து விட்டது என்பதே. அன்று நமது நாட்டில் 150 கோடி ரூபாய்க்குத் தங்கம் இருக்க, 300 கோடி ரூபாய்க்குக் காகிதப் பணம் இருந்து வந்தது. இன்று அதே தங்கத்திற்கு 2100 கோடி காகிதப் பணம் இருந்து வருகிறது. காகிதப் பணம் 1 க்கு 8 ஆகப் பெருகி விட்டதால் ஒரு காசுப் பொருளுக்கு 7 காசும். 1 அணாவுக்கு 7 அணாவும், 1 ரூபாய்க்கு 7 ரூபாய் காகிதமும் கொடுக்க வேண்டி இருக்கிறது. ///

கி.ஆ.பெ.வி. அவர்கள் தன் காலத்தில் இருந்தது போன்றே வரும் காலத்திலும் விவசாயத்திற்கு உரிய மரியாதை இருக்கும் என்ற நல்ல நம்பிக்கை காரணமாக சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகப் போய் விட்டது. விவசாய தொழில் நுட்பங்களும் மாறி விட்டன.

காரணம் என்ன?

 Chennai Gold Rate (Courtesy : http://www.livechennai.com/gold_silverrate.asp)

Date
Pure Gold (24 k)
Standard Gold (22 K)
1 grm
8 grms.
1 grm.
8 grms.
27/July/2015
2543.00
20344.00
2378.00
19024.00
26/July/2015
2542.00
20336.00
2377.00
19016.00
25/July/2015
2542.00
20336.00
2377.00
19016.00
24/July/2015
2507.00
20056.00
2344.00
18752.00
23/July/2015
2545.00
20360.00
2380.00
19040.00
22/July/2015
2522.00
20176.00
2358.00
18864.00
21/July/2015
2551.00
20408.00
2385.00
19080.00
20/July/2015
2569.00
20552.00
2402.00
19216.00
19/July/2015
2603.00
20824.00
2434.00
19472.00
18/July/2015
2603.00
20824.00
2434.00
19472.00

ஒரு குவிண்டால் ( QUINTAL ) என்பது 100 கிலோ கிராம் கொண்டது. இப்போது நெல்லிற்கு மத்திய அரசு கொள்முதல் விலை ஒரு மாதிரியாகவும் வெளி மார்க்கெட் விலை வேறு விதமாகவும் உள்ளது வெளிமார்க்கெட் நிலவரப்படி ஒரு மூட்டை (62 கிலோ)  ரூ 1250 ஆகும். இன்றைய நிலவரப்படி 22 காரட் - ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ 19024/= ஆகும். அதாவது கி.ஆ.பெ.வி காலத்தில், மூன்று மூட்டை நெல் கொடுத்து ஒரு பவுன் வாங்கிய விவசாயி இன்று 15 மூட்டை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமையில் இருக்கிறான். அப்படியானால் தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் சொன்ன ” பவுனுக்கு மூன்று மூட்டை நெல் அன்றும் விற்றது. இன்றும் விற்கிறது. இனியும் விற்கும்.” என்ற கணக்கு தவறா? அல்லது  நான் ஏதேனும் கணக்கில் தப்பு செய்து விட்டேனா என்பதை அன்பர்கள் தெரிவிக்கவும்.  

எனவே பொருட்களின்  விலைவாசியில் உயர்வு என்பது கண்கூடாகத் தெரிகிறது. எல்லா பொருட்களும் ஏறி விட்டது என்ற நிலையில், விவசாயிக்கு மட்டும் அவன் விளைவித்த நெல்லுக்கு உரிய விலை இந்தியாவில் இல்லை. அரசியல் ( அரிசி விலை உயர்ந்தால் ஓட்டு வங்கி வீழ்ந்து விடும் என்ற அச்சம் ) காரணமாக நெல்லின் விலையை ஏற்ற மறுக்கிறார்கள். எனவே இந்தியாவில் விவசாயம் என்பது லாபகரமான தொழில் இல்லை. விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டில் பிளாட்டுகளாக மாறிக் கொண்டு வருகின்றன. (இங்கேயும் விவசாயியின் நிலத்திற்கு உரிய விலையை ரியல் எஸ்டேட்  புரோக்கர்கள் தருவதில்லை ) எனவேதான் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகம் நடைபெறுகிறது.

                                              (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)