Sunday 2 October 2011

அரசியல்வாதிகளுக்கு இவ்வளவு வீடுகள் தேவையா?


முன்பெல்லாம் அரசியல்வாதி என்றால் சொந்த ஊரில் ஒரு வீடு வைத்து இருப்பார்.வீட்டின் முற்றத்தில் ஒரு கொட்டகை. வந்து போகிறவர்களுக்காக போட்டு இருப்பார்கள்..வீட்டின் முன் அவர் இருக்கும் கட்சி கொடிக்கம்பம் இருக்கும்.ஆனால் இப்போதோ செய்தி தாள்களை புரட்டினால்,டிவி செய்திகளைப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வீடுகளைப் பற்றியும்,வளைத்து போட்ட இடங்களைப் பற்றியும் வராத நாளே இல்லை.அதிலும் மிரட்டல் அரசியல் வேறு. ஸ்டாம்ப் கலெக்‌ஷன்,பழைய நாணயங்கள் கலெக்‌ஷன் போல வீடுகள் கலெக்‌ஷன் பலருக்கு ஹாபியாக உள்ளது. இதில் கட்சி பேதமே கிடையாது.

ஒரு மனிதன் வாழ ஒரு வீடு போதாதா?வாடகைக்கு வீடு தேடும் போது ஒரு சமையலறை,ஒரு ஹால்,ஒரு பெட் ரூம், தண்ணீர் வசதி இருந்தால் போதும் என்றுதான்  நினைக்கிறார்கள். பலர் இவ்வளவு கூட எதிர்பார்ப்பதில்லை. வீதியோரம் படுத்து வாழ்க்கை போராட்டத்தினை  எதிர் கொள்பவர்கள் உள்ளனர்.ஆனால் இந்த அரசியல்வாதிகள் வளைத்துப் போடும் இடங்கள் எத்தனை? பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கிறார்கள் என்றால் கூட இவ்வளவு தேவையில்லை. தசரத மகா ராஜாவுக்கு பெண்டாட்டிகள் ஆயிரம் பேர் என்று ஒரு கதை உண்டு. அந்த கதையிலும் கூட அவன் ஆயிரம் பெண்டாட்டிகளுக்கும் ஆயிரம் வீடுகள் கட்டியதாக தெரியவில்லை. புரண்டு புரண்டு படுத்தால் கூட எத்தனை நாளைக்கு எத்தனை வீடுகளில் புரள முடியும்.

சில வருடங்களுக்கு முன்னர் கேள்விபட்ட செய்தி. அவர் பெரிய புள்ளி. பரந்த சாம்ராஜ்யம் அவருடையது. பினாமிகளின் பெயரில் பல்வேறு இடங்களில் வாங்கிப் போட்டார்.அவருக்கு வீடு வாசல் அம்புகள் என்று ஏராளம், ஏராளம். அவர் இருந்தவரை அவரிடம் அடி பணிந்து இருந்தவர்கள், அவர் மண்டையை போட்டவுடன் பினாமி சொத்துக்களை அப்படி அபபடியே அமுக்கிக் கொண்டனர். இறந்து போன அந்த பெரிய புள்ளியின் மனைவியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.அந்த பெரிய புள்ளி கஷ்டப்பட்டது, ராப் பகலாய் தூக்கமின்றி சம்பாதித்தது எல்லாம் பினாமிகளுக்குத்தான் போனது.ஆக பினாமிகள்  அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்என்றுதான் இருப்பார்கள்.

ஊர் ஊராய் வளைத்துப் போட்டவர்களை உள்ளே தள்ளும்போது அவர்கள் இருக்கப் போவது ஒரு நாளாக இருந்தாலும்- பத்துக்கு பத்து அளவுள்ள அறைக்குள்தான். அதில்தான் டாய்லெட் எல்லாம்.அத்தனை வீடுகள் இருந்து என்ன பயன். அனுபவிக்க முடிவதில்லை.

பட்டினத்தார்க்கு ஞானத்தை காட்டிய ’’காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே!’’ என்ற வரிகள்தான் இப்போது நினைவுக்கு வருகின்றன.







No comments:

Post a Comment