Monday 30 October 2017

சோவியத் புரட்சி நூற்றாண்டு - கூட்டம்



நேற்று முன்தினம்(28.10.17 – சனிக் கிழமை) மாலை, திருச்சி ஹோட்டல் அருண் – மாக்ஸி ஹாலில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வயல் மாதந்திரக் கூட்டம், சோவியத் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டம் நடைபெற்றது.

நான் மேலே சொன்ன த.மு.எ.க.ச மற்றும் வயல் எதிலும் உறுப்பினர் கிடையாது. சிறப்பு சொற்பொழிவாளரான ஆசிரியர் நா. முத்துநிலவன் அய்யா அவர்கள், வாட்ஸ்அப்பில் கூட்டத்திற்கான அழைப்பிதழை அனுப்பி இருந்தார்.  நானும் சென்று இருந்தேன். வீட்டை விட்டு கிளம்பும் முன் மழை. கொஞ்சம் விட்டதும் ஆட்டோவில் சென்று வந்தேன்.

கூட்டம் துவங்கும் முன் எடுக்கப்பட்ட படங்கள்.(கீழே)
(மேலே இடையாற்று மங்கலம் ஆசிரியர் அ.சவரிமுத்து அவர்களுடன் நான்)

கூட்டம் துவங்கிய பின்

 
புதுக்கோட்டை கவிஞர் – ஆசிரியர் நா. முத்துநிலவன் அய்யா அவர்கள் ‘வீழ்வோம் என்று நினைத்தாயோ?” என்ற தலைப்பினில் சிறப்புரை ஆற்றினார். ஜார் மன்னர் காலம் தொடங்கி சோவியத் புரட்சி நடந்த 1917 நவம்பர் வரையில் நிகழ்ந்த நிகழ்வுகளை நன்கு விவரமாக எடுத்துரைத்தார்; மேலும் இரண்டாம் உலகப்போர், ஹிட்லரின் பாசிச வெறி மற்றும் அவனது கடைசி நாட்கள், இந்தியாவில் நுழைந்துள்ள கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் பண மதிப்பிழப்பு மற்றும் ஜீ.எஸ்.டியால் மக்களுக்குண்டான இன்னல்கள் பற்றியும் தனக்கே உரிய நடையில் விளக்கினார்.
(படம் மேலே) – ஆசிரியர் நா. முத்துநிலவன் அவர்கள்.

Monday 16 October 2017

என் மனம் தொட்ட கண்டசாலா பாடல்கள்



அப்போதுதான் எங்கள் வீட்டிற்கு புதிதாக ஒரு புஷ் ( BUSH ) டிரான்சிஸ்டரை அப்பா வாங்கி வந்தார். நான் அப்போது கல்லூரி மாணவன். அதனை வாங்கி வந்ததிலிருந்து மறக்க முடியாத அந்த இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் பழைய தமிழ் திரையிசைப் பாடல்களை கேட்பதுதான் எனது பொழுது போக்கு. கல்லூரி பாட சம்பந்தமான குறிப்புகள் எடுக்கும் போது கூட, இந்த டிரான்சிஸ்டர் பாடிக் கொண்டே இருக்கும். ( அப்புறம் வந்தது பிலிப்ஸ் பெரிய ரேடியோ ) 

எப்போதும் அமைதியான குரல்தான்

அன்றைய இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் பெருமையை எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொண்டே இருக்கலாம். ( அந்த ஒலி பரப்பு இப்போதும் உண்டா என்று தெரியவில்லை. டீவி வந்த பிறகு வானொலி கேட்பதே இல்லை ) அப்போதெல்லாம் அடிக்கடி ”பாடியவர் கண்டசாலா” என்று சொல்லி அவரது பாடல்களை ஒலிபரப்புவார்கள்; இவரே பல பாடல்களுக்கு இசையமைத்தும் பாடியும் இருக்கிறார். பெரும்பாலும் சோகப் பாடல்கள் அல்லது தத்துவப் பாடல்களாகவே இருக்கும். அந்த சோகத்திற்கு தகுந்தாற் போலவே அவரது குரலும் இழைந்தோடும். இன்னும் காதல் பாடல்களையும் அதே நளினத்தோடு அமைதியாகவே பாடியிருப்பார். அதிலும் நான் பிறப்பதற்கு முன்பு வந்த,  பார்த்திராத பழைய காலத்து படங்களில் வந்த பாடல்களாக இருக்கும்.

கண்டசாலா பாடல்களை நான் ரசித்தாலும், அவரைப் பற்றிய முழு விவரம் எனக்குத் தெரியாது. அப்போது பத்திரிகைகளிலும் அவ்வளவு விவரமாக எழுத மாட்டார்கள். அதிலும் இவர் ஒரு தெலுங்கு இசையமைப்பாளர் என்று மட்டும் அப்போது கேள்விப் பட்டு இருக்கிறேன்.

(இப்போது வீட்டுக்கு வீடு டீவி வந்து விட்டாலும், முன்புபோல கண்டசாலா பாடல்களை கேட்க முடிவதில்லை. எம்.கே.டி பாகவதர் பாட்டையே ஒலி பரப்புவதில்லை: அப்புறம் மற்றவர்கள் பற்றி என்ன சொல்வது?)

வாழ்க்கைக் குறிப்புகள் (நன்றி கூகிள்)

முழுப்பெயர்: கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ் ( பிறப்பு 4 டிசம்பர் 1922 இறப்பு 11 பிப்ரவரி 1974 ) – தெலுங்கு பிராமணர் - பிறந்த ஊர்: சௌட்டா பள்ளி (ஆந்திரா) - தந்தையின் பெயர்: சூரய்யா கண்டசாலா – தாயாரின் பெயர்: ரத்தம்மா – விசாகப்பட்டினத்தில் இசைக் கல்லூரியில் பயின்றவர் – வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு 18 மாதம் சிறைவாசம் பெற்றவர் – நல்ல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் – தெலுங்கு, தமிழ் மட்டுமன்றி கன்னடம், மலையாளப் படங்களிலும் பின்னணி பாடி இருக்கிறார். – தெய்வபக்தி நிரம்பிய தனிப் பாடல்களையும் பாடி இருக்கிறார் ஐக்கிய நாட்டு சபையில் பாடும் வாய்ப்பு பெற்றவர் -  திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் – இந்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம் இவருக்கு வழங்கப் பட்டுள்ளது. – கண்டசாலாவுக்கு சாவித்திரி, சரளாதேவி என்று இரண்டு மனைவிகள்; எட்டு குழந்தைகள். - கண்டசாலாவை பாராட்டும் வகையில் 2003 இல் இந்திய தபால்துறை இவருடைய படத்துடன் தபால்தலை வெளியிட்டுள்ளது.

தும்மலப்பள்ளியிலுள்ள கலாக்ஷேத்திரத்தில் கண்டசாலாவுக்கு சிலை வைக்கப் பட்டுள்ளது.
  
நான் ரசித்த பாடல்களில் சில

அமைதி இல்லாதென் மனமே
என் மனமே
அமைதி இல்லாதென் மனமே
என் மனமே

( படம்: பாதாள பைரவி ( 1951 ) -  பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்கள்; கண்டசாலா & P.லீலா இசை: கண்டசாலா )

காதலே தெய்வீகக் காதலே

( படம்: பாதாள பைரவி ( 1951 ) - பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்கள்; கண்டசாலா & P.லீலா இசை: கண்டசாலா )
xxxxxxxxxxxxx

ஓ … தேவதாஸ் ..
ஓ … … பார்வதி.
.
( படம்: தேவதாஸ் ( 1953 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்கள்; கண்டசாலா & ஜிக்கி - இசை: C.R.சுப்புராமன்)

துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே

( படம்: தேவதாஸ் ( 1953 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்: கண்டசாலா - இசை: C.R.சுப்புராமன்)

உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலை ஏது நாம் காணும் சுகமே மாயம்
அலையும் நீர் மேவும் குமிழாதல் போல
ஆவதும் பொய்யாவதெல்லாம்
ஆசையினாலே
அரச போகமும் வைபோகமும்
தன்னாலே அழியும்
நாம் காணும் சுகமே மாயம்
உலகே மாயம்…

( படம்: தேவதாஸ் ( 1953 ) -  பாடல்: கே.டி.சந்தானம் – பாடியவர்: கண்டசாலா - இசை: C.R.சுப்புராமன்)
xxxxxxxxxxxxxx

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

( படம்: கள்வனின் காதலி ( 1955 ) -  பாடல்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – பாடியவர்கள்; கண்டசாலா & P.பானுமதி - இசை: கண்டசாலா )
xxxxxxxxxxxxxxxx

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

( படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ( 1956 ) -  பாடல்: மருதகாசி – பாடியவர்: கண்டசாலா - இசை: தட்சிணா மூர்த்தி)
xxxxxxxxxxxxxxx

உல்லாசம் தேடும்
எல்லோரும் ஒருநாள்
சொல்லாமல் போவார்
அல்லாவிடம் 

( படம்: தெனாலிராமன் ( 1956 ) -  பாடல்: தமிழ் மன்னன் – பாடியவர்: கண்டசாலா - இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி)
xxxxxxxxxxxxxx

ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது

( படம்: எங்க வீட்டு மஹாலக்ஷ்மி ( 1957 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்கள்; கண்டசாலா & P.சுசீலா - இசை: மாஸ்டர் வேணு )
xxxxxxxx

ஆஹா இன்ப நிலாவினிலே,
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே 
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

( படம்: மாயா பஜார் ( 1957 ) -  பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்கள்; கண்டசாலா & P.லீலா இசை: கண்டசாலா )

நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது

( படம்: மாயா பஜார் ( 1957 ) -  பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்கள்; கண்டசாலா & P.லீலா இசை: கண்டசாலா )
Xxxxxxxxxx

கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்....
ஓதும் தென்றல் முன்னால் வரும்
இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்

( படம்: மஞ்சள் மகிமை( 1959 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்கள்; கண்டசாலா & P.சுசீலா - இசை: மாஸ்டர் வேணு )

ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
 அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே

( படம்: மஞ்சள் மகிமை( 1959 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்கள்; கண்டசாலா & P.சுசீலா - இசை: மாஸ்டர் வேணு )
xxxxxxxxx

முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒன்னுக்குள் ஒன்னாக 

( படம்: அன்புச் சகோதரர்கள் ( 1973 ) -  பாடல்: கண்ணதாசன் – பாடியவர்: கண்டசாலா - இசை: கே.வி.மகாதேவன் )
Xxxxxxxxxxxxxx

எங்குமே ஆனந்தம்
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்

( படம்: பலே ராமன் ( 1957 ) -  பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்; கண்டசாலா - இசை: T.A. கல்யாணம் ) இந்த பாடலைக் கண்டு கேட்டு களிக்க இங்கே கீழே திரையில் ‘க்ளிக்’ செய்யவும்
( Courtesey https://www.youtube.com/watch?v=pYQUU3SsFCw )

                                            (All Pictures and Video Courtesy : Google )

                                                               XxxxxxxxxxxX

  அனைவருக்கும் எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்!

Saturday 14 October 2017

அண்டனூர் சுரா எழுதிய முத்தன் பள்ளம் - விமர்சனம்



தோழர் ஆசிரியர் அண்டனூர் சுரா ( இயற்பெயர் சு.ராஜமணிக்கம்) அவர்கள், வீதி இலக்கிய அமைப்பு புதுக்கோட்டை வழியே எனக்கு அறிமுகம் ஆனவர். அவருடைய நூல்கள் எதனையும் நான் இதற்கு முன்னர் படித்ததில்லை. இவருடைய ’முத்தன் பள்ளம்’ என்ற நாவலை, அண்மையில் கந்தர்வகோட்டையில் நடைபெற்ற இந்தநூலின் வெளியீட்டு விழாவில் வாங்கி இப்போதுதான் படித்து முடித்தேன்.

எந்தவகை நூல்?


”இதற்கு முன்பு என்னால் எழுதப்பட்ட பல நாவல்களைச் சுக்கு நூறாகக் கிழித்து ஒன்றாகக் குவித்து அதிலிருந்து சில துண்டுகளைப் பொறுக்கி முத்தன் பள்ளம் என்கிற இந்த வரலாற்று நாவலை முடித்திருக்கிறேன்” – என்று இந்நூலாசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இந்த நூலைப் படித்து முடித்த பின்னர் இதனை,  வரலாறு என்ற, அந்த ஒரு பார்வையிலேயே அடக்கி விட முடியவில்லை என்பதே உண்மை. நூலினை  நல்ல முறையில் அச்சிட்டு, பார்த்தவுடனேயே புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணும் விதமாகவும் வெளியிட்ட மேன்மை பதிப்பகம் பாராட்டுக்குரியது.

தேசாந்திரியின் குறிப்புகள்

இந்தியாவிற்கு, சீனாவிலிருந்து வந்த யுவான்சுவாங் மற்றும் இத்தாலியின் வெனீஸ் நகரிலிருந்து  வந்த மார்க்கோபோலோ என்ற யாத்திரிகர்கள் இருவரும் இந்தியாவில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பயணக் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளனர். இவர்களைப் போலவே, இந்த நூலாசிரியரும், ஒரு தேசாந்திரியாக, ஒவ்வொரு நாளும், தான் கண்ட, கேட்ட நிகழ்வுகளை ஒரு வரலாற்றுப் பின்னணியோடு இந்த நாவலை எழுதி இருக்கிறார் எனலாம். ஏனெனில் அண்டனூர் சுரா அவர்கள் தான் பிறந்து வளர்ந்து பணிபுரியும் கந்தர்வகோட்டை பகுதி மக்களோடு ஒன்றாகக் கலந்து விட்டவர்

ஆண்ட்ராய்டும் போக்கிமானும்

பொதுவாக புதிதாக, ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு  பயணம் செய்யும்போது வழியில் உள்ளவர்களை கேட்டுத் தெரிந்து கொண்டோ அல்லது கைகாட்டி பலகைகளின் வழிகாட்டுதலோடு செல்வார்கள். இது ஸ்மார்ட்போன் காலம். அதிலும் ஆண்ட்ராய்டு காலம். எனவே  இந்த நூலின் கதாநாயகன் தனது செல்போனில், ஆண்ட்ராய்டில் உள்ள போக்கிமான் என்ற விளையாட்டை கந்தர்வகோட்டையில் தொடங்கி கூகிள் வழிகாட்ட நடைப்பயணமாக வந்து, தான் எதிர்பாராத முத்தன் பள்ளத்தில் முடிக்கிறான்.

கந்தர்வகோட்டை காந்திசிலை முக்கம் > இடுகாடு சாலை > திறக்கப்படாத பேருந்து நிலையம் > அக்கச்சிப்பட்டி > மல்லிகைநத்தம் எனப்படும் பெரியகோட்டை – சொக்கம்பட்டி > ஒட்டப்பாலம் > வேலாடிப்பட்டி > மஞ்சம்பட்டி > வெள்ளாளவிடுதி > வலச்சேரிப்பட்டி > வேளாண்மைப் பண்ணை > கால்ஸ் மதுபானத் தொழிற்சாலை > கல்லாக்கோட்டை > அலும்பில் எனப்பட்ட அம்புக்கோயில் > முத்தன் பள்ளம்  - இதுதான் அந்த வழித்தடம். அவ்வாறு பயணப்பட்டு வரும்போது இடையில் உள்ள ஊர்களின் பெயர்க் காரணம், வரலாறு, ஊர் மக்களின் பழக்க வழக்கங்கள், அரசியல் என்று பலவற்றையும் தனது அனுபவங்களோடு சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

// கண்டராதித்தன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டை கண்டவராதித்தன் கோட்டை என அழைக்கப்பட்டு இன்று கந்தர்வகோட்டை என்றாகியிருக்கிறது // (இந்நூல் பக்கம்.19)

// அக்கச்சிப்பட்டி …. …. மன்னன் கண்டவராதித்தன் அக்காவிற்கு சீதனமாகக் கொடுத்த ஊர் என்பதால் அவ்வூருக்கு அப்படியொரு பெயர் ‘அக்கா ஆட்சி பட்டி’ // (இந்நூல் பக்கம்.44)

// வெள்ளாளவிடுதி வேளாண்மைப் பண்ணை … …. கந்தர்வகோட்டை பகுதியில் பொதுவுடமைக் கட்சிகள் ஆழமாகக் காலூன்ற காரணமாக இருந்த பண்ணையாக அது இருந்தது. ஆண்களுக்கு சம்பளம் நூறு, பெண்களுக்கு சம்பளம் இருபது ரூபாய் என ஏற்ற இறக்கத்துடன் இருந்த காலக்கட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம் கொடுத்த பண்ணை அது. // (இந்நூல் பக்கம்.75)

கந்தர்வகோட்டை காந்திசிலை முக்கத்தில் பேசிய பிரபல தலைவர்கள், காந்திசிலை, காந்தி மண்டபம், அம்பேத்கர், இந்திராகாந்தி சிலைகள் அமைய பாடுபட்டவர்கள் பெயர்கள், துப்புரவுப் பணியில் காண்ட்ராக்ட் விட்டு அந்த பணியாளர்களை சுரண்டுபவர்கள், கால்ஸ் மதுபானத் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் – என்று நிறையவே தகவல்கள்.

பதாகை அரசியல்

இந்த நூல் முழுக்க இவர் சுட்டிக்காட்டும் மற்றும் நையாண்டி பண்ணும் ஒரு விஷயம் மக்களிடையே பரவிக் கிடக்கும் ‘ப்ளக்ஸ் பேனர்’ எனப்படும் விளம்பர மோகம்தான். இந்த ப்ளக்ஸ் பேனரை இப்போதெல்லாம் பதாகை என்று என்று பலரும் குறிப்பிடுகிறார்கள். இவரும் மற்றவர்களைப் போலவே ‘ப்ளக்ஸ் பேனரை பதாகை என்ற அர்த்தத்திலேயே சொல்லி இருக்கிறார்.

// ஒரு பதாகை காமராசரை நாடாராக்கி யிருந்தது. இன்னொன்று பெரியாரை நாயக்கராகக் காட்டியது. இதைவிடவும் ஒரு பதாகை புதிதாக நிறுத்தப் பட்டிருந்தது. தேவேந்திரகுல வேளாளர் என்கிற பதாகை அது. அதில் தேவநேயப் பாவாணரின் கம்பீரம் தெறிக்கும் மீசையுடன் பழனி முருகனும் இருந்தார்கள். இப்பதாகை பலரும் கவனிக்கும் படியாக இருந்தது. // (இந்நூல் பக்கம்.26)

// என்ன சண்டை …. எவனாவது மண்டபத்தில் தேவை வைப்பான். இவன்க ப்ளெக்ஸ்ல உன் பேரப் போடலை, என் பேரப் போடலைனு அடிச்சிக்கிறுவான்க. …. இவன்களெ வெட்டிக் கொத்தி ஆக்கி படைக்கணும். // (இந்நூல் பக்கம்.63)

இந்நூலில் வழியில் காணும் சிமெண்டால் ஆன விளம்பரப் பலகைகளையும் பதாகைகள் என்றே ஆசிரியர் குறிப்பிடுகிறார் 

(பதாகை என்றால் எனக்கு அந்தக்கால ராஜாராணி, புராணக் கதை திரைப்படங்களிலும், இக்கால கோயில் திருவிழாக்களிலும் ஊர்வலத்தின் முன்னால் தூக்கி வரப்படும் துணியால் ஆனவையே நினைவுக்கு வரும். ‘“தூக்கிச் செல்வதற்கு வசதியாகக் கம்புகளில் கட்டப்பட்ட, வாசகங்கள் தாங்கிய செவ்வக வடிவத் துணி” – என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பொருள் சொல்லுகிறது))

கதைக்குள் கதை

அந்த காலத்து விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராஜன் கதைகள் ஆகியவற்றில் கதைக்குள் கதைகளாக நிறையவே கதைகள் வரும். அதனைப் போலவே இந்த நாவலிலும்,  திருக்காட்டுப்பள்ளியிலிருந்து முத்தன் பள்ளத்திற்கு குடியேறிய பாட்டன் கதை உருவாகி இடையிடையே முத்தரையர்கள், தொண்டைமான்கள் மற்றும் குடிமக்களின் சமூகநிலை பற்றிய சுவையான செய்திகள் சொல்லப்படுகின்றன. 

அம்புநாட்டில் அறுத்துக்கட்டும் பழக்கம் அதாவது விதவை மறுமணத்திற்கு தடை. மீறுபவர்களுக்கு தண்டனை இந்த தடையை மீறிய ஒரு ஜோடிக்கு அளிக்கப்பட்ட தண்டனையையும் நேர்ந்த கொடுமைகளையும் ஓரிடத்து சொல்லக் காணலாம்.

காதலுக்காக மன்னர் அல்லது பிரபு  பட்டத்தையும் அதிகாரத்தையும் துறந்தவர்கள் பற்றிய வரலாற்றினை இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் கேள்விப்பட்டது உண்டு. இதேபோன்று, ஆஸ்திரேலிய பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்ட, புதுக்கோட்டை சமஸ்தானத்து ராஜ மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான், அந்த பெண்ணுக்காக மன்னர் பட்டத்தையும், உறவுகளையும், ஜாதி பட்டத்தையும் துறந்து இருக்கிறார். இதனை ஒரு சிறுகதை போல இங்கே அழகாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
   
// கல்லாக்கோட்டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் ஒன்று இருக்கிறது. தொண்டைமான் காலத்து மாரியம்மன் கோயில் அது. அக்கோயிலுக்குள் சாதி மதம் கடந்து கோயிலுக்குள் சென்று வழிபடும் அதிகாரத்தை புதுக்கோட்டை சமஸ்தானம் கொடுத்திருந்தது. தலித் மக்கள் ஜமீன்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக இருந்தார்கள். ஜமீன் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனையும், அக்கோயிலும் சேரி மக்களால் கட்டப்பட்டதால் அரண்மனைக்குள் நுழைந்து மன்னனை சந்திக்கும் அதிகாரமும், கோயிலுக்குள் நுழையும் உரிமையும் அவர்களுக்கு கிடைத்திருந்தன //  (இந்நூல் பக்கங்கள் .87 - 88)

( இந்த நூலின் பல இடங்களில் கள்ளர், தொண்டைமான், முத்தரையர் என்று குறிப்பிடும் நூலாசிரியர், மேலே சொன்ன தகவலில் தலித், சேரிமக்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டதற்குப் பதிலாக, இன்ன பிரிவினர் என்று வெளிப்படையாக சொல்லி இருந்தால், பின்னாளில் அம்மக்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் எழுதுபவர்களுக்கு துணையாக இருக்கும் )

முத்தன் பள்ளம் என்ற ஊர்

இந்த ஊரைப் பற்றிய பதிவுகளை, இந்நூலின் இரண்டாம் பகுதியினுள்,ஒரு வண்டித்தடம் அளவிற்கே உள்ள பாதை, பாம்புகள் நெளியும் தண்ணீர்க்காடு மற்றும் இருபுறமும் காட்டுவேலி, இந்த பாதையைக் கடக்கும் வரை அவ்வூர் பள்ளிச் சிறுவர், சிறுமியர் படும்பாடு, பாம்பு கடித்தவரை மந்திரிப்பதற்காக, கயிற்றுக் கட்டிலில் தூக்கிச் செல்லும் அவ்வூர் மக்கள் – என்று சொல்லோவியங்களாக செதுக்கியுள்ளார்.. கூடவே பாட்டன் முத்தாயி காதல் கதை.

இந்த நாவலைப் படிக்கையில் நானும் இண்டர்நெட்டில் இந்த பாதையை விக்கிமேப்பில் (Wikimapia) தொடர்ந்து வந்தேன். நூலில் குறிப்பிடப்படும் பல ஊர்கள் அந்த விக்கிமேப்பில் குறிக்கப்பட வில்லை.. எனவே அந்தந்த ஊர் ஆர்வலர்கள் தங்கள் ஊர் பெயர்களை விக்கிமேப்பியாவில் இடம் பெறச் செய்ய வேண்டும். ஊராட்சி ஒன்றியங்கள் வெளியிட்ட கிராமப் பெயர்களிலும் முத்தன் பள்ளம் பற்றி ஒரு செய்தியும் இல்லை. கந்தர்வகோட்டை பகுதியையைச் சேர்ந்த எனது உறவினர், இந்த ஊருக்கு கல்லாங்கோட்டைக்கு சென்று அங்கிருந்து கொஞ்சம் தொலைவில் உள்ளடங்கிய இந்த ஊருக்கு நடந்தோ அல்லது இருசக்கர வாகனத்திலோ செல்ல வேண்டும்: பஸ் வசதி அதிகம் இல்லை என்றார்.

எனக்குத் தெரிந்து ’முத்தன் பள்ளம்’ போன்ற கிராமங்கள் தமிழ்நாட்டில் நிறையவே உண்டு. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த நிலை. ஓட்டு வாங்கும் அரசியல்வாதிகளும் பணிபுரியும் அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் மனசாட்சியுடன் நடந்து கொண்டாலேயே நிறைய பிரச்சினைகள் தீர்ந்து விடும்

நூலின் பெயர்: முத்தன் பள்ளம்  / வகை: நாவல்
ஆசிரியர்:  அண்டனூர் சுரா

நூலின் விலை: ரூ 150  பக்கங்கள்: 212

பதிப்பகம்: மேன்மை வெளியீடு, 5/2 பெர்தோ தெரு, இராயப்பேட்டை, வி.எம்.தெரு,(கில் ஆதர்ஷ் பள்ளி அருகில்) சென்னை 600014 தொலைபேசி: 044 2847 2058


தொடர்புடைய எனது பிற பதிவு: