Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Thursday, 1 March 2018

நம்பிக்கையே வாழ்க்கை.



அன்பு நண்பர்களுக்கு வணக்கம்! இன்று எனக்கு பிறந்தநாள் (01.03.1955). வயது 63 முடிந்து 64 தொடங்கியுள்ளது. நான் உயிரோடு இருக்கிறேனா என்பதனையே, இன்று கண் விழித்த பிறகுதான் நிச்சயம் செய்து கொண்டேன். ஏனெனில், 10 நாட்களுக்கு முன்னர் (19.02.18 திங்கட் கிழமை - காலை 9.15 மணி அளவில் எனக்கு கடுமையான மூச்சுத் திணறலும் மயக்க நிலையும் ஏற்பட்டு, ஆபத்தான நிலைமையில்,  ஒரு மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டேன். அங்கு உடனடியாக எனக்கு வேண்டிய முதலுதவிகளை நன்றாகவே செய்து காப்பாற்றி விட்டார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர், எனக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும்,  உடனடியாக இதய அறுவை சிகிச்சை (Open Heart Surgery) செய்ய வேண்டும் என்றும் சொல்லி 23.02.18 வெள்ளியன்று டிஸ்சார்ஜ் செய்தார்கள்; வீட்டுக்கு சென்றுவிட்டு ஒருவாரம் கழித்து ஆபரேஷனுக்காக வரச் சொன்னார்கள். 

(நான் ஏற்கனவே வலது முழங்கையில் வந்த பெரிய கட்டிக்கு ஒரு அறுவை சிகிச்சை, அப்புறம்  ‘appendix’ ஆபரேஷன்  மற்றும் அண்மையில் விபத்து காரணமாக இடது குதிகாலில் அறுவை சிகிச்சை – என்று மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவன். எனவே மீண்டும் அறுவை சிகிச்சையா என்று எனக்குள் ஒரு நடுக்கம்) 

வீட்டுக்கு வந்தவுடன், எதற்கும் இன்னொரு டாக்டரிடம் (Second Opinion) கேட்டுக் கொள்ளலாம் என்று, (27.02.18 செவ்வாய்க் கிழமை) மூத்த அனுபவம் வாய்ந்த M.D.,D.M – Cardiologist ஒருவரிடம் சென்று முழு விவரத்தையும், எனது பயத்தினையும் சொன்னோம். அவரது மருத்துவ மனையில்,  எனக்கு ECG Scan, BP, Urine மற்றும் Blood சோதனைகள், Echo Test மற்றும் Tread Mill Test ஆகியவை செய்யப்பட்டன
.
அதன் பிறகு மாலை 4.30 அளவில் டாக்டர் எங்களை அழைத்தார். அப்போது அவர் // இதற்கு முன்பு நீங்கள் பார்த்த, மருத்துவ மனையில் கொடுத்துள்ள CD மற்றும் ரிப்போர்ட்டுகள் அடிப்படையில் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருக்கின்றன. இதய அறுவை சிகிச்சை (Bypass surgery) செய்து கொள்வதா வேண்டாமா என்பது குறித்து நீங்கள்தான் முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் இதய அறுவை சிகிச்சை செய்து விட்டதாலேயே, எல்லாம் சரியாகி விட்டது என்று யாராலும் Guarantee தர முடியாது. யாரும் சொல்லவும் மாட்டார்கள், அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் RISK மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவை இருக்கத்தான் செய்யும் // என்று சொன்னார். மேலும் இங்கு செய்த சோதனைகளிலும், உங்களுக்கு இதயத்தில் பிரச்சினைகள் இருப்பதாகவே காட்டுகின்றன என்று சொன்னார்.

நான் எனது கருத்தாக // டாக்டர் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள பயமாக இருக்கிறது; முடிந்தவரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமலேயே மருந்துகளை எடுத்துக் கொள்ளவே விரும்புகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதன்படியே செய்கிறேன் // என்று தெரிவித்தேன்.
                                                                                                                                                        
உடனே டாக்டர் // அப்படியானால், நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளுவதில் மற்றும் பழக்க வழக்கங்களில், நீங்கள் கட்டுப்பாடுடன் இருந்து கொள்ள வேண்டும்; இந்த முறையிலும் Guarantee கிடையாது. RISK இருக்கத்தான் செய்யும் // என்று சொன்னார். மேலும் டாக்டர் என்னிடம் எந்த மாதிரியான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி எப்படி எல்லாம் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, முப்பது நாட்களுக்கு மருந்துகள் எழுதி கொடுத்துவிட்டு 15 நாட்கள் கழித்து வரச் சொல்லி இருக்கிறார்.

நானும் 27.02.18 செவ்வாய்க் கிழமை இரவிலிருந்து அவர் கொடுத்த மருந்தையே எடுத்து வருகிறேன். எல்லாம் இறைவன் செயல் மற்றும் அருள் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையே வாழ்க்கை.

( இன்று (01.03.18) எனது ஃபேஸ்புக் பக்கம் நான் எழுதியது இது.

Monday, 3 April 2017

முதுமை ஒரு சாபம்



அன்று மாலை, எனது அப்பாவை ( வயது 91.) ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று இருந்தேன். அங்கு வந்திருந்த நண்பர் அப்பாவைப் பற்றிய நலன் விசாரித்தார்.அப்போது அந்த நண்பர் ‘ வயதானால் பெரியவர்கள் மீண்டும் ஒரு குழந்தையாக மாறி விடுகிறார்கள்” என்றார். நான் அவருக்கு மறுமொழியாக ‘உண்மைதான். ஆனால் மனித வாழ்வில் முதுமை ஒரு சாபம்” என்றேன்.. அவரும் ”ஏன் அப்படி சொல்லுகிறீர்கள்?” என்று வினவ, நானும் ‘மற்ற உயிரினங்கள் நோயுற்றாலோ அல்லது முதுமை அடைந்தாலோ அவற்றை உணவாக உண்ணும் உயிரினங்கள் அவற்றின் உயிரைப் போக்கி இவ்வுலக கஷ்டத்திலிருந்து  விடுவித்து விடுகின்றன. ஆனால் மனிதன் முதுமை அடையும்போது படும் துன்பங்கள் சொல்லி முடியாது.” என்றேன் 

முதுமை என்பது

ஒருவர் 60 வயதை கடந்து விட்டாலேயே அவரை முதியவர்  என்று அழைக்கிறார்கள். பத்திரிகைகளிலும் அவ்வாறே குறிப்பிடுகின்றனர். இன்னும் கூடுதலாக மூத்த குடிமக்கள் ( Senior Citizens ) என்றும் அழைக்கிறார்கள். ஆனால் இன்றைய நவீன மருத்துவம் மற்றும் மருந்துகள் காரணமாக 60 வயதைக் கடந்தாலும் 90 வயதுக்கு மேலும் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்தவர்களையும், வாழ்பவர்களையும் நான் பார்த்து இருக்கிறேன்.

முதுமையில் படும் கஷ்டங்கள்

ஆனாலும் முதுமை என்ற நோய் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக, வாழ்க்கையின் கடைசி அத்தியாயமாக இருக்கிறது. சிலருக்கு அறுபதில் வரலாம். அல்லது அறுபதிற்கு மேலும் வரலாம். பட்டிமன்றத்தில் வேண்டுமானால் முதுமை ஒரு வரம் என்று வாதாடலாம். ஆனால் நடைமுறையில் முதுமை என்பது ஒரு வரமல்ல; அது ஒரு சாபமே. சாபம் யார் கொடுத்தது என்றுதான் தெரியவில்லை. உள்ளம் இளமையாக இருந்தாலும், தளர்ச்சியின் காரணமாக உடல் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது. ஞாபக மறதியும், நோய்களும், வீண் பயமும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.. நேற்றுவரை அதிகார தோரணையில் இருந்தாலும், இன்று கையில் காசு பணம் பவிசு என்று இருந்தாலும், பார்த்துக் கொள்ள ஆள் இருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் அடுத்தவர் துணையின்றி எதனையும் செய்ய முடியாத நிலைமை. நம்மால் மற்றவர்களுக்கு வீண் தொந்தரவு என்ற கவலை என்று சொல்லிக் கொண்டே போகலாம். 

எனது அப்பா

எனது அம்மா, அப்பா ( ரெயில்வே ஓய்வு ) இருவரும். வாடகைக்குப் பிடித்த, ஒரு தனிவீட்டில் வசித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனது அம்மா ( 78 ) இறந்த பின்பும் தனியாகவே எனது தந்தை 90 வயது வரை நன்றாகவே தனது வேலைகளைத் தானே செய்து கொண்டும் தனியாகவும் அதே வீட்டில்  இருந்தார். என்னோடு அல்லது எனது தங்கை வீட்டிற்கு வந்து இருந்து கொள்ளுங்கள் என்று அழைத்த போதும் வரவில்லை. இப்போது முதுமை ஆட்கொண்டு, கடுமையான பல கஷ்டங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் அடைந்ததால், எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம். அவருக்கு இன்னும் தனியாக இருக்கவே விருப்பம். ( அவருக்கு 91 வயது முடிந்து 92 ஆவது வயதும் முடிய இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது ).இனிமேல் மருந்து மாயம் எதுவும் அவரிடம் செல்லாது. இருக்கும் வரை கவனித்துக் கொள்ள வேண்டும். அவரைப் பார்த்துக் கொள்ள வேறு யாரும் இல்லாததால் நானே அருகில் இருக்கும்படியான சூழ்நிலை

எனது மனைவி காலையில் வேலைக்கு சென்றால் மாலையில்தான் திரும்புவார். வேலை வாய்ப்பு கோச்சிங் கிளாஸ் சென்று வரும் எங்களது மகனும் அப்படியே. இவர்கள் இருவரும் திரும்ப வரும் வரையிலும் நான் எங்குமே செல்ல முடியாது. எனது அப்பாவிற்கு நான் அருகிலேயே இருக்க வேண்டும். கால் மணிக்கு ஒருமுறை அவரை டாய்லெட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ( நண்பர்களும் உறவினர்களும், எனது தந்தைக்கு disposable diapers போட்டுவிடச் சொல்லுகிறார்கள்.) மீதி நேரமெல்லாம் ஒன்று சேரிலேயே உட்கார்ந்து இருப்பார் அல்லது தரையில் பாயிலேயே படுத்து இருப்பார். தூங்குகிறாரா அல்லது விழித்து இருக்கிறாரா என்றே தெரியாது. திடீரென்று 40 வருடத்திற்கு முந்தைய சங்கதியை நேற்று நடந்தது போல் சொல்லுவார். இந்தநிலையில்,நானும் ஒரு சீனியர் சிட்டிசன்.  இப்போது அவர் அடைந்து கொண்டு இருக்கும் துன்பங்கள், அவரையும் அறியாமல் அவர் செய்யும் தவறுகள் மற்றும் அவரால் எங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவற்றை சமாளித்த விதம் யாவற்றையும் இப்போது இங்கே சொல்வது சரியாக இருக்காது  ( எனது நண்பர்கள் பலர் அவரை நல்ல ஹோம் ஒன்றில் சேர்க்கும்படி சொல்லுகிறார்கள். திடீர் இடமாற்றம் எனது தந்தைக்கு எப்படி ஒத்துப் போகும் என்று யோசனையாகவும் உள்ளது..)

கிராமப்புறமும் நகர்ப்புறமும்

எனக்குத் தெரிந்து கிராமத்தில் இருக்கும் தள்ளாத முதியவர்கள் ஒவ்வொரு நாளையும் எளிதாகவே கழித்து விடுகிறார்கள் என்பது எனது அபிப்பிராயம். அங்கு அவர்கள் யாருக்கும் தொந்தரவு தராத வகையில் ஒரு திண்ணையிலோ, அல்லது ஒரு கொட்டகையிலோ அல்லது ஒரு தோப்பிலோ  சுதந்திரமாக இருந்து கொண்டு காலத்தைக் கழித்து விடுகிறார்கள். எனது பெரியப்பா ஒருவர், தனது கிராமத்து வீட்டு கொல்லைப் புறத்தில் கோமணம் ஒன்றைக் கட்டிக் கொண்டு பகல் முழுக்க அங்கேயே இருப்பார். யாரேனும் வந்தால் அல்லது ஏதேனும் எடுப்பதற்கு என்றால் இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு வருவார். என்னுடைய தாத்தா தனது கடைசி காலத்தை திண்ணையிலேயே முடித்தார். இப்படியே கிராமத்து உறவுகள் பலர்.

பெரும்பாலும் கிராமத்தில் பெரியவர்களைக் கவனித்துக் கொள்ள என்று தனியே ஒரு ஆள் தேவைப் படுவதில்லை. வீட்டில் இருப்பவர்களும், அவ்வப்போது சுற்றி இருப்பவர்களும் தேவைப்படும் சமயத்தில் முதியவருக்கு தேவையான உதவிகளை செய்கிறார்கள். நடக்க முடிந்தவர்கள் ஒரு ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு நடமாடுவார்கள். தங்கள் வயது நண்பர்களைச் சந்திக்கும் போது தங்கள் முதுமையை மறந்து விடுகிறார்கள்.. ( இதையேல்லாம் யோசித்து, அப்பா ரிடையர்டு ஆனதுமே, எனது அம்மாவையும் அப்பாவையும், எங்கள் சொந்த ஊருக்கோ அல்லது அம்மா வழி சொந்தங்கள் இருக்கும் ஊருக்கோ சென்று விடுங்கள்; அங்கே நல்ல வசதியுடன் வீடு ஒன்றை கட்டிக் கொள்ளலாம் என்று சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை )
 ஆனால் நகர்ப்புறத்தில் முதியவர்கள் வாழ்க்கை என்பது இதனிலிருந்து மாறுபட்டு விடுகிறது. ஒரு வராண்டாவிலோ அல்லது ஒரு அறையிலோ ஒரு குறுகிய வட்டத்தில் மன அழுத்ததுடனேயே முடிந்து விடுகிறது.

முதியோர் இல்லம்

ஒரு காலத்தில் முதியோர் இல்லத்தில், பெற்ற பிள்ளைகளே தங்கள் தாய் தந்தையரை சேர்த்தல் என்பது விமர்சனத்திற்கு உள்ளாக்கப் பட்டது. பாவச் செயலாகக் கருதப் பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அது தவிர்க்க இயலாத ஒன்றாக கருதப் படுகிறது. கிராமத்தில் அவர்களைத் தனியே விட்டுவிட்டு  சொந்த வேலைகளைப் பார்க்க நாம் சென்று விடலாம். ஆனால் நகர்ப்புறத்தில் அவ்வாறு விட்டு விட்டு செல்ல முடியாது. அவர்களைக் கவனித்துக் கொள்ள என்று தனியே ஒருவர் வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு துயரமான கதை உண்டு. நகர்ப் புறத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் படிக்க சென்று விடுகிறார்கள். இப்போது பெற்றோரை விட்டு விட்டு வெளிநாடு சென்று விடுகிறார்கள். அப்போது வீட்டில் இருக்கும் முதியவர்களைக் கவனிக்க ஆள் தேவைப் படுகிறது. இது மாதிரியான சந்தர்ப்பங்களில் முதியோர் இல்லம் என்பது பாதுகாப்பானதாக தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. (இந்த முதியோர் இல்லம் குறித்து தனியே ஒரு பதிவை எழுத வேண்டும்).

இந்த முதியோர் இல்லம் குறித்து இணையதளத்தில் தேடியபோது பல சுவாரஸ்யமான தகவல்கள். பல முதியோர் இல்லங்கள் கருணை இல்லங்களாக நன்கொடை எதிர்பார்த்து நடத்தப் படுகின்றன. சாதாரண கட்டணம் பெற்றுக் கொண்டு, ஒரு ஹாஸ்டல் போன்று நடக்கும் இல்லங்களும் உண்டு; கார்ப்பரேட் கணக்காக அபார்ட்மெண்ட் ஸ்டைலில் அதிகக் கட்டணம் பெற்றுக் கொண்டு நடக்கும் இல்லங்களும் உண்டு. 

முதியோர் இல்லம் என்றவுடன், வலைப்பதிவர் நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள் ’கனவில் வந்த காந்தி’ என்ற தொடர்பதிவு ஒன்றினை எழுதச் சொன்னபோது, நான் எழுதிய தொடர் பதிவும், அதிலுள்ள கேள்வியும் பதிலும் நினைவுக்கு வந்தது.
( http://tthamizhelango.blogspot.com/2014/11/blog-post_17.html கில்லர்ஜியின் கனவில் வந்த காந்தி – தொடர் பதிவு.  )

// 4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
முதியோர்கள் அனைவருக்கும் உண்ண உணவும் உடுக்க உடையும் இலவசமாக வழங்கப்படும். மூன்று வேளையும் அரசாங்கமே உணவளிக்கும். உணவு மற்றும் தங்கும் விடுதிகள் நாடெங்கும் தொடங்கப்படும். இதற்காக கையில் காசோ அல்லது அடையாள அட்டையோ தரப்பட மாட்டாது. வேண்டியதை எந்த விடுதியில் வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். தங்கிக் கொள்ளலாம். //

                                                          xxxxxxxxxxxxxxxx

தொடர்புடைய எனது பிற பதிவுகள்:
                                                                                                                                                         

வாக்கிங் ஸ்டிக் மனிதர்கள்

http://tthamizhelango.blogspot.com/2013/12/blog-post_30.html

                                                                                                                                   

கருணைக் கொலையும் முதுமக்கள் தாழியும்

http://tthamizhelango.blogspot.com/2013/10/blog-post_16.html

 


Saturday, 23 January 2016

கொதிநீர் காயமும் தீ ரண சஞ்சீவியும்



நாம் என்னதான் கவனமாக இருந்தாலும், முன்னெச்செரிக்கை நடவடிக்கையோடு செயல்பட்டாலும், சில விஷயங்கள் நடந்து விடுகின்றன. இதைத்தான் நமது முன்னோர்கள் வருவது வந்தே தீரும்; நடப்பது நடந்தே தீரும் என்று சொன்னார்களோ என்னவோ. திருவள்ளுவரும் , ஒரு கட்டத்தில்,

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.  _ ( திருக்குறள் 380 )

என்று சொல்லி ஒதுங்கி விட்டார்.

கொதிநீர் காயம்:

எங்கள் பகுதியில் குடிநீர் சப்ளை சரியாக இல்லை. அப்படியே வந்தாலும் ஒரே கலங்கல். எனவே பலரும் குடிநீருக்காக மட்டும் ‘மினரல்’ தண்ணீருக்கு தாவி விட்டனர். நாங்களும் ஆரம்பத்தில் வாங்கிப் பார்த்தோம். காசு கொடுத்தும் பிரயோசனம் இல்லை. குடித்தால் தண்ணீர் தாகம் கட்டுவதில்லை; ஒரே கசப்பு உணர்வு. ஒரு தம்ளருக்கு மேல் குடிக்க முடிவதில்லை. எனவே கொஞ்சதூரம் (புதுக்கோட்டை சாலைக்கு அருகிலுள்ள) ஒரு ஏரியாவிற்கு போய்) 20 லிட்டர் ’வாட்டர் கேனில்’ அங்குள்ள குழாயில் காவிரி தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். இந்த குழாய் திருச்சி – சிவகங்கை – ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் குடிநீர்க்குழாயிலிருந்து இணைக்கப்பட்டது ஆகும்.

பொங்கலுக்கு முதல்நாள் இந்த பழைய ’வாட்டர் கேன்’ - எப்படியோ விரிசல் ஆகிவிட்டது. எனவே பொங்கலன்று புதிய கேன் ஒன்றை வாங்கி முதலில் கொதிநீர்விட்டு சுத்தம் செய்துவிடுவோம் என்று கேனில் கொதீர்நீிர் ஒரு செம்பு விட்டு , மூடிவிட்டு மாறிமாறி இரண்டு கைகளாலும் குலுக்க ஆரம்பித்தேன். அவசரத்தில் எப்போதும் கேனில் போடும் உள்மூடியை போடாமல் குலுக்கியதால், வெளிமூடி வழியே வழிந்த கொதிநீர் இரண்டு கைகளிலும் மேற்புறம், உள்புறம் பட்டு கொப்பளித்து விட்டன. உடனே குளிர்ந்த குழாய் நீரை விட அப்போதைக்கு எரிச்சல் அடங்கியது. 

ஸ்ரீரங்கம் கடைவீதி:

அடுத்த இரண்டு நாட்கள் ஒரே எரிச்சல். பொங்கலை முன்னிட்டு (மருந்துக்கும்) கடைகள் இல்லை. கை விரல்களைப் பார்த்து விட்டு, யாரும் நம்மை தப்பாக நினைத்து விடக் கூடாதே என்று வெளியில் அதிகம் செல்ல வில்லை. அப்போது ,இதே போன்ற கொதிநீர் அனுபவத்தை, நமது வலைப்பதிவர் சகோதரர் வெங்கட்நாகராஜ் அவர்களின் மனைவி சகோதரி ஆதி வெங்கட் அவர்கள் தனது வலைப்பதிவில் ஒரு மூலிகை எண்ணெயைப் பற்றி சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது. அவரது தண்ணில கண்டம்!!!! http://kovai2delhi.blogspot.in/2015/03/blog-post.html என்ற வலைப்பதிவில் குறிப்பிட்ட மூலிகை எண்ணெய் ( ஸ்ரீரெங்கா தீ ரண சஞ்சீவி) பெயரைத் தெரிந்து கொண்டு, சென்ற ஞாயிறன்று, ஸ்ரீரங்கம் கடைவீதி சென்றேன். ஒவ்வொரு கடையாகக் கேட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள ஒரு ஆங்கில மருந்துக் கடையில் வாங்கினேன். வீட்டிற்கு வந்து அந்த ’ ஸ்ரீரெங்கா தீ ரண சஞ்சீவி’யைத் தடவியதில் கைகளில் குணம் தெரிய ஆரம்பித்தது. இப்போது கைகள் நன்றாக இருக்கின்றன; பாதிக்கப்பட்ட இடத்தில் தோல் உரிந்து புதியதோல் வர ஆரம்பித்து விட்டது. தகவல் தந்த சகோதரிக்கு நன்றி!

விளம்பரம் அல்ல:

இந்த பிரச்சினையால், முன்புபோல் உடனுக்குடன் அதிகம் கருத்துரைகள், பதிவுகள் எழுதல்லை. அப்படியும் முடிந்தவரை பார்ப்போம் என்று, கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்தால் வீட்டில் எல்லோரும் திட்டுகிறார்கள். எப்படியோ அடுத்த (இந்த) கட்டுரையை வெளியிட்டு விட்டேன்.

இந்தக் கட்டுரையை எழுதியதில் எனக்கு  எந்தவிதமான விளம்பர எண்ணமும் கிடையாது, இந்த மூலிகை எண்ணெய் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே கிடைக்கும் என்று எண்ணினேன். ஆனால் பல ஊர்களிலும், ஆங்கில மற்றும் தமிழ் மருந்து கடைகளில் கிடைப்பதாகத் தெரிகிறது. கைகளில் கொதிநீர் பட்டவுடன் ஆளாளுக்கு ஒரு ஆலோசனை சொன்னார்கள். எங்களது பெரியம்மா பையன் (அண்ணன் – வயதில் மூத்தவர்) ஒரு ஹோமியோபதி கிரீமை சொன்னார். நான் எப்போதுமே ஆங்கில வைத்தியம்தான் பார்ப்பேன். சுளுக்கு, கைகால் மூட்டு வலி போன்றவைகளுக்கு பாரம்பரிய வைத்தியமுறையை நாடுவதுண்டு. காயம் பெரிதாக இல்லாததால், இந்த மூலிகை எண்ணெயைப் பயன்படுத்தினேன்.

Sunday, 17 May 2015

உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள் (டாக்டர் M.K.முருகானந்தன்) - மின்நூல் விமர்சனம்



       TODAY - 2015 - 17 May - World Hypertension Day



எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் உள்ள மின் நூலகத்தில் (E LIBRARY) மின்நூல்கள் பலவற்றை டவுன்லோடு செய்து வைத்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது அவற்றை படிப்பது வழக்கம். எனக்கு இரத்த அழுத்தம் (PRESSURE) இருப்பதால், டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள் எழுதிய உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள்  என்ற மின்நூலினை அண்மையில் எடுத்து படித்தேன். டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள் அவர்கள் ஒரு சிறந்த டாக்டர். மூத்தவர். நிறைய படித்தவர். நிறைய கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். எனவே அவரது நூலைப் பற்றிய எனது விமர்சனம் என்பதே தவறு. எனினும் தற்போதைய வழக்கப்படி வாசகர்களுக்கு தெரிய வேண்டி நூல் விமர்சனம் என்றே சொல்ல வேண்டியதாயிற்று. அந்த நூலைப் பற்றிய சில குறிப்புகள் இங்கே.

டாக்டர் M.K.முருகானந்தன்



நூலாசிரியர் டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள் பற்றி வலையுலகில் அறிமுகம் தேவையில்லை. இலங்கை குடும்ப மருத்துவரான இவரது மருத்துவக் கட்டுரைகள் படிக்கும் அனைவருக்கும், இவரது ஹாய் நலமா? என்ற வலைத்தளம்
( http://hainallama.blogspot.in ) தெரிந்த ஒன்று. மேலும் முருகானந்தன் கிளினிக் ( https://hainalama.wordpress.com) என்ற வலைத்தளத்திலும் மருத்துவம், இலக்கியம், அனுபவம் என பல்வேறு தலைப்புகளில் எழுதி வருகிறார்.

நூலைப் பற்றி:

இந்த நூலில், நூலின் ஆசிரியர் டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள், இரத்த அழுத்தம் (PRESSURE) என்பது, தலைச்சுற்று, தலைவலி, களைப்போ சோர்வோ எந்தவித அறிகுறிகளற்ற நோய் என்று குறிப்பிட்டு , இந்நோயை ‘அமைதியான கொலையாளி ( Silent Killer) என்று எச்சரிக்கை செய்கிறார். ஆயினும் கடுமையான தலைவலி, மூக்கில் இரத்தம் வடிதல், பார்வை மங்குதல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்றவை பிரஸர் அதிகமானதின் அறிகுறியாகும்;மேலும் எந்தெந்த வயதினில் இந்த நோய் தீவிரம் அடைகிறது, என்று சொல்லிவிட்டு, இந்நோய் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள பரிசோதித்துக் கொள்வதே (குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு அவசியம்)  நல்லது என்கிறார். இந்நோயை மருத்துவத் துறையில் உயர் இரத்த அழுத்தம் (HYPERTENSION) என்று சொல்கிறார்கள்.

இந்த நூலில்

1.கவனத்தில் எடுக்க வேண்டிய நோய், 2.உலகளாவிய பிரச்சனை,
3.தொடர்ச்சியான கணிப்பீடும் கண்காணிப்பும் அவசியம், 4. அளவிடுவது எப்படி?,  5.உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்,  6. வேறு நோய்களின் விளைவான உயர் இரத்த அழுத்தம்,  7.உயர் இரத்த அழுத்தத்தைப் புரிந்து கொள்ளல்,  8.உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல்,  9.உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள்,  10.உயர் இரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தாவிடின் என்ன நடக்கும்?,  11.பெண்களும் உயர் இரத்த அழுத்தமும்

என்ற தலைப்புகளில் டாக்டர் இந்த உயர் இரத்த அழுத்தத்தைப் பற்றி விரிவாக கூறுகிறார்.

பிரஸரை அளப்பதற்கு முன் கடைபிடிக்க வேண்டியவை;

தானாக ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், வேறு நோய்களின் காரணமாக ஏற்படும் உயர் இரத்த அழுத்தம்;

யார் யாருக்கு இந்த நோய் வரும்?;

இரத்த அழுத்தம் என்றால் என்ன?; வருவதற்கான காரணங்கள் என்ன/; அதனைக் கட்டுப்படுத்தும் முறை;

சாதாரண இரத்த அழுத்தம் என்பது 120/80 mm Hg. – இது 140/90 க்கு மேல் உயர்ந்தால் உயர் இரத்த அழுத்தம் (HYPERTENSION); 120/80 இற்கும் 139/89 இற்கும் இடையில் இருந்தால் அது முன் உயர் இரத்த அழுத்தம் (PRE HYPERTENSION); 130/85 என்றால் டாக்டரை பார்த்தல் அவசியம், 140/90 இற்கு மேற்பட்டால் டாக்டர் மேற்பார்வையில் சிகிச்சை அவசியம் வேண்டும்;

உயர் இரத்த அழுத்தம்  குறைப்பதற்காக உடல் எடையைக் குறைத்தல் சம்பந்தப்பட்ட தகவல்கள்; உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகள்;


புகைபிடித்தலால் வரும் தீமைகள்;
மாரடைப்பிற்கான காரணங்கள்
உயர் இரத்த அழுத்த நோயிற்கான மருந்துகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகள்; பெண்களுக்கான ஆலோசனைகள்;

என்று பலவிதமான தகவல்களை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நூலின் இறுதியில், உங்கள் இரத்த அழுத்தத்தையும், உங்கள் எடையையும், நீங்கள் உபயோகிக்கும் மருந்துகளையும் ஒரு பதிவேட்டில் ஒழுங்காகக் குறித்து வைப்பது அவசியம்.   என்று சொல்லும் டாக்டர், ஒரு உதாரண அட்டவணையையும் தந்துள்ளார்.

பிரஸர் எனப்படும் இரத்தஅழுத்த நோயைப் பற்றி அறிந்து கொள்ள, அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய

இலங்கைத் தமிழ் மக்களின், எழுத்தாவணங்கள், தகவல் களஞ்சியங்கள், நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள் என்று  பலவற்றை நூலகம்(NOOLAHAM FOUNDATION) என்ற நிறுவனம் தொகுத்து வைத்துள்ளது, அந்த நிறுவனத்தின் www.noolaham.org  என்ற இணையதளத்தில் இந்த நூலினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.                                                                  
நூலகம் > குறிச்சொற்கள் > நுட்பவியல்> 610 மருத்துவமும் நலவியலும் > உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள் (6.68 MB) (PDF வடிவம்)

நூலின் பெயர்:
உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள்
நூலாசிரியர்:
டாக்டர் M.K.முருகானந்தன் M.B.B.S (Cey), D.F.M (SL), M.C.G.P (SL)
பக்கங்கள்: 41
நூல் வெளியீடு: (நூலகம் / மின்நூல்)