(புத்தகத் திருவிழா என்றால் திரும்பத்
திரும்ப என்ன எழுதுவது என்று தெரியவில்லை. எனவே இந்த பதிவைப் படிக்கும் போது சலிப்பு
ஏற்பட்டால் ( அதாவது Bore அடித்தால்) மன்னிக்கவும்)
சென்றவாரம், புதுக்கோட்டை புரவலர், கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா
அவர்கள் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா –
2017 இற்கான அழைப்பிதழை அனுப்பி இருந்தார். அவருக்கு நன்றி. நேற்று தொடங்கிய தொடக்க
விழாவிற்கு என்னால் செல்ல இயலவில்லை. புதுக்கோட்டை ஃபேஸ்புக் நண்பர்கள் பலரும் தொடக்க
விழாவை சிலாகித்து, வண்ணப் படங்களுடன் எழுதி இருந்தனர். எனவே இன்று (25.11.17 – சனிக்கிழமை),
முற்பகல் 11.00 மணி அளவில் திருச்சி – கே.கே.நகரிலிருந்து புறப்பட்டு புதுக்கோட்டைக்கு
பஸ்சில் சென்றேன். பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த, வழக்கமாக நான் உணவருந்தும்
விடுதியில் மதிய உணவை முடித்துக் கொண்டு, புத்தகத் திருவிழா நடைபெ றும் நகர்மன்றம் சென்றேன்.
நகர்மன்றத்தில்
ஒருமுறை வீதி – இலக்கிய கூட்டத்தில் பூமணி எழுதிய ஒரு நூலினைப்
பற்றி, மறைந்த ஆசிரியர் குருநாதசுந்தரம் (வலைப்பதிவரும் கூட) அவர்கள் விமர்சனம் செய்து
இருந்தார். ஆனால் எனக்கு நூலின் பெயர் மறந்து விட்டது; இதே நூலினைப் பற்றி கவிஞர் மீரா
செல்வகுமார் அவர்களும் சொல்லி இருந்த படியினால், அவரிடமே செல்போனில் தொடர்பு கொண்டு
கேட்ட போது அவர் ‘அஞ்ஞாடி’ (காலச்சுவடு வெளியீடு) என்று சொன்னார். இந்த நூலும் கிடைக்கவில்லை.
– பொதுவாகவே எல்லா புத்தகத் திருவிழாவிலும், பதிப்பாளர்கள், அவர்களது எல்லா வெளியீடுகளையுமே
எடுத்து வருவதில்லை; ( சென்னை மட்டும் விதிவிலக்கு என்று நினைக்கிறேன்) அவற்றை கொண்டு
வந்து விட்டு, மறுபடியும், மூட்டை கட்டிக் கொண்டு போவதில் உள்ள சிரமம்தான் காரணம் என்பதை
புரிந்து கொள்ள முடிந்தது
.
ஒருசில நூல்கள் மட்டும்
(படம் மேலே – நக்கீரன் முகவர் திரு காஜா மொய்தீன் ( சக்சஸ்
புக் ஷாப் ) அவர்களது அரங்கில், நூல் ஒன்றை வாங்கிய போது)
எனவே இருப்பதில் வாங்கிக் கொள்வோம் என்று ஒரு சில புதிய நூல்களை
மட்டும் வாங்கினேன். என்னதான் இனிமேல் எந்த புத்தகமும் வாங்கக் கூடாது என்று நினைத்தாலும்,
நான் பாட்டுக்கு புத்தக வாசிப்பில் உள்ள ஆர்வம் காரணமாக வீட்டு நூலகத்திற்கு புத்தகங்கள்
வாங்கிக் கொண்டே இருக்கிறேன். எனக்குப் பிறகு இவை என்ன ஆகுமோ என்று தெரியவில்லை.
நான் இன்று வாங்கிய நூல்கள்:
வணக்கம் – வலம்புரி ஜான் (நக்கீரன்,
சென்னை வெளியீடு)
தேவதைகளால் தேடப்படுபவன் – கவிஞர்
தங்கம் மூர்த்தி ( படி, சென்னை வெளியீடு )
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
– அசோகமித்திரன் (காலச்சுவடு, நாகர்கோவில்)
குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன்
(கிழக்கு பதிப்பகம், சென்னை)
தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி?
– ம.வெங்கடேசன் (கிழக்கு பதிப்பகம்)
பறையன் பாட்டு – தலித்தல்லாதோர் கலகக்
குரல் – தொகுப்பாசிரியர் கோ.ரகுபதி (தடாகம், சென்னை வெளியீடு)
மேயோ கிளினிக் – நீரிழிவைச் சமாளிப்பது
எப்படி? – மரியா கொலாசோ கிளவெல் (தமிழில் மருத்துவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர் – அடையாளம்,
புத்தாநத்தம் வெளியீடு)
படங்கள் கீழே ( சில அரங்குகளில் எடுத்த படம்)
ஒவ்வொரு அரங்காக சுற்றி வந்த போதும் எனக்கு தெரிந்த முகமாக யாரும்
இல்லை. ஒருவேளை மாலையில் சென்று இருந்தால் பார்த்து இருக்கலாம்.
நாணயவியல் கழகம்
புத்தக அரங்குகளை விட்டு வெளியே வந்த போது,, ‘இளங்கோ சார் … இளங்கோ
சார்’ ‘ என்று யாரோ அழைப்பது கேட்டு திரும்பினேன். ஃபேஸ்புக் நண்பர், திரு ஷேக் தாவூத்
பஷீர் அலி (புதுக்கோட்டை நாணயவியல் கழக செயலர்) அவர்கள் தான் அழைத்து இருந்தார். உடனே அவரது மேற்பார்வையில் இருந்த உலக பணத்தாள், காசுகள் மற்றும் தபால்தலை
கண்காட்சி அரங்கிற்கு சென்று வந்தேன். இங்குள்ள நிறைய சேகரிப்பு மற்றும் குறிப்புகளுக்கு
பாராட்டுகள்.










