Thursday 24 November 2011

தாம்பரமும் வேண்டாம்! ராயபுரமும் வேண்டாம்! எழும்பூரே இருக்கட்டும்!


                      (Egmore - Photo thanks to Wikipedia)
எழும்பூர் ரெயில் நிலையம் என்பது ஆங்கிலேயர் காலத்து பழமையான ஒன்று. ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chis Holm) என்ற ஆங்கிலேயர் கட்டிட 
வரைபடத்தை அமைத்துக் கொடுக்க, சாமிநாதப் பிள்ளை என்ற தமிழர் கட்டினார். எழும்பூர் ரெயில் நிலையமானது, சென்னையின் எல்லா பகுதி மக்களும் வந்து செல்ல சாலைப் போக்குவரத்து கொண்டது. தமிழ் நாட்டின் தென் மாவட்ட அனைத்து ரெயில்களும் வந்து போகின்றன.

ஆனால் இப்போது இனிமேல் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரெயில்கள் அனைத்தும் எழும்பூருக்குப் பதில் தாம்பரத்திலிருந்து கிளம்பும் என்றும், அதற்கான மாற்றம் செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாம்பரத்திற்கு பதில் தங்கள் பகுதியில் உள்ள ராயபுரத்திற்கு கோரிக்கை வைக்கிறார்கள். இரண்டுமே வேண்டாம். இருக்கின்ற எழும்பூர் ரெயில் நிலையத்தையே இன்னும் அகலப்படுத்தி மாற்றம் செயதால் போதும்.

எழும்பூர் ரெயில் நிலையத்தில், இப்போதுதான் சில வருடங்களுக்கு
முன்னர் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்தார்கள். பராமரிப்பு நடந்த சமயம் எழும்பூர் ரெயில் நிலையம் பல நாட்கள் பூட்டியே இருந்தது. அப்போது எழும்பூர் இல்லாமல் பொதுமக்கள் எத்தனை கஷ்டம் அடைந்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். மேலும் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், துறைமுகம் இவற்றை மையப்படுத்தியே சென்னை நகர் வளர்ந்தது. பல அலுவலகங்கள், சென்னை உயர்நீதி மன்றம், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள் அமைந்தன.. எல்லா தரப்பு மக்களும் வந்து போகவும், தங்கவும் வசதியான நிலையம் எழும்பூர் ரெயில் நிலையம் ஆகும்.

தாம்பரம் நிலையத்தில் எல்லா ரெயில்களையும் நிறுத்துவது என்பது சென்னை பயணத்தின் பாதியிலேயே பொது மக்களை இறக்கிவிடுவது போலாகும். கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை என்பது போல சிலர், ராயபுரத்திலிருந்து ரெயில்களை இயக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ராயபுரம் என்பது எவ்வளவு நெருக்கடியான பகுதி என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் புயல், மழைக் காலங்களில் சொல்லவே வேண்டாம். ராயபுரம் கொண்டு சென்றால் அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே வசதியாக இருக்கும். இதனால் எழும்பூர் நெரிசல் ஒன்றும் தீரப் போவது இல்லை. மேலெழுந்த வாரியாக எழும்பூர் ரெயில் நிலையத்தை மாற்றாதே என்று போராடுவது போல காட்டிக் கொண்டு தாங்கள் வசிக்கும் வட சென்னைக்கு மாற்ற கோரிக்கை வைக்கிறார்கள். இவர்களோடு ஊர்க்காரர்கள் என்ற முறையில் சில அரசியல்வாதிகளும் சேர்ந்துள்ளனர் . அவர்கள் ராயபுரம் ரெயில் நிலையத்தை மேம்படுத்தச் சொல்லி   போராடலாம். அதனை விடுத்து, அனைத்து ரெயில் பயணிகள் நலன் என்ற பெயரில் அனைத்து ரெயில்களையும் தங்கள் பகுதியிலிருந்து தான்  இயக்க வேண்டும் என்பது சரியா?. இவர்களைப் பார்த்து அப்புறம் தாம்பரம் பகுதி மக்கள் தங்கள் பகுதியிலிருந்துதான் அனைத்தும் என்று தொடங்கி விடுவார்கள். மற்ற பகுதி மக்களும் சும்மா இருப்பார்களா? அவர்கள் பங்கிற்கு ஆங்காங்கே போராட்டம்தான்.

எனவே தாம்பரமும் வேண்டாம், ராயபுரமும் வேண்டாம். இருக்கின்ற எழும்பூர் ரெயில் நிலையத்தையே மேம்பாடு செய்தாலே போதும். எல்லோருக்கும் நல்லது. எழும்பூரே இருக்கட்டும். இதில் அரசியல் வேண்டாம்.

8 comments:

  1. //ராயபுரம் கொண்டு சென்றால் அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே வசதியாக இருக்கும். இதனால் எழும்பூர் நெரிசல் ஒன்றும் தீரப் போவது இல்லை. மேலெழுந்த வாரியாக எழும்பூர் ரெயில் நிலையத்தை மாற்றாதே என்று போராடுவது போல காட்டிக் கொண்டு தாங்கள் வசிக்கும் வட சென்னைக்கு மாற்ற கோரிக்கை வைக்கிறார்கள். இவர்களோடு ஊர்க்காரர்கள் என்ற முறையில் சில அரசியல்வாதிகளும் சேர்ந்துள்ளனர் . அவர்கள் ராயபுரம் ரெயில் நிலையத்தை மேம்படுத்தச் சொல்லி போராடலாம். அதனை விடுத்து, அனைத்து ரெயில் பயணிகள் நலன் என்ற பெயரில் அனைத்து ரெயில்களையும் தங்கள் பகுதியிலிருந்து தான் இயக்க வேண்டும் என்பது சரியா?. இவர்களைப் பார்த்து அப்புறம் தாம்பரம் பகுதி மக்கள் தங்கள் பகுதியிலிருந்துதான் அனைத்தும் என்று தொடங்கி விடுவார்கள்.//
    இளங்கோ,

    நீங்கள் சொல்வது சரியே, இந்த செய்தியை ரிப்போர்ட்டரில் படித்த போது ஆஹா ஒரு பதிவுக்கு மேட்டர் சிக்கிடுச்சுனு நினைச்சேன், அப்படியே மறந்தும் போச்சு!

    ஆனால் தாம்பரம் என்பது முன்னர் இருந்தே ஒரு குறிப்பிடத்தக்க இரயில் முனையமாக செயல்ப்பட்டு வருகிறது. தாம்பரம்-ராமேஷ்வாரம் ரயில், விழுப்புரம், அப்புரம் மயிலாடுதுறை ரயில் எல்லாம் இயங்கி வருகிறது. ஆனால் எழும்பூர் ரயில்கள் அனைத்தும் தாம்பரத்திலிருந்து என மாற்றாமல் தாம்பரத்திலிருந்து என புதிய ரயில்கள் துவக்கலாம்.

    மேலூம் தாம்பரத்திருக்கு அந்த பக்கம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதையும் கவனிக்க வேண்டும், விரைவில் விரிவாக ஒரு பதிவு போடுகிறேன்.

    ReplyDelete
  2. //வவ்வால் said...//
    வணக்கம் வவ்வால் சார்! தாம்பரமா? ராயபுரமா? தாங்கள் தாம்பரம் பக்கம்தான் என்று தெரிகிறது. சுவையாகவும்,நகைச்சுவையாகவும்,புள்ளி விவரங்களோடு எழுதுபவர் நீங்கள்.சீக்கிரம் தங்கள் பதிவினைத் தரவும். வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  3. எழும்பூர்தான் சரி என்பது பொரும்பாலோர்
    கருத்தாகும்
    தங்கள் வலையைத் தமிழ் மணம் ஓட்டுப்
    பட்டையில் இணைக்கலாமே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. //புலவர் சா இராமாநுசம் said...//

    புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! தங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி! ஆரம்பத்தில் ஒரு வலைப் பதிவைத் தொடங்கி அதில் தமிழ் மணம் ஓட்டுப் பட்டையை நிறுவும்போது மொத்தப் பதிவும் செயல்படாமல் போய்விட்டது.அந்த பயத்தில் இந்த வலைப் பதிவில் தமிழ் மணம் ஓட்டுப் பட்டையை இணைக்கவில்லை.அவர்கள் எளிமைப் படுத்தினால் நல்லது.

    ReplyDelete
  5. //புலவர் சா இராமாநுசம் said...

    எழும்பூர்தான் சரி என்பது பொரும்பாலோர்
    கருத்தாகும்
    தங்கள் வலையைத் தமிழ் மணம் ஓட்டுப்
    பட்டையில் இணைக்கலாமே!//

    புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! அசரிரீ போன்ற தங்கள் வார்த்தை யின்படி ஒரு வழியாக எனது பதிவில் தமிழ் மணம் ஓட்டுப் பட்டையை இணைத்து விட்டேன். எல்லாம் தங்கள் ஆசீர்வாதம்!

    ReplyDelete
  6. அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
    தங்கள் என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete
  7. ஹலோ பாஸ்....

    வட இந்தியா செல்லும் ரயில்கள் இட பற்றாக்குறை காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து போவதற்கு தான் தென் மாவட்ட ரயில்களை தாம்பரம் மார்ற்ற போவதாக சொன்னார்கள்.. அந்த வட இந்திய ரயில்களை ராயபுரத்திலிருந்து புறப்பட வைக்கலாமே என்றுதான் போராட்டமே தவிர தென் மாவட்ட ரயில்களை அல்ல...தென் மாவட்ட ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தான் போக வேண்டும் என்று தான் போராட்டமே..

    சரியாக பத்திரிக்கை படிக்காமல் பதிவு ஏன் தான் எழுதுகிறீர்கள்....

    ReplyDelete
  8. //Anonymous said...
    ஹலோ பாஸ்....// அவர்களுக்கு வணக்கம்!
    //இந்த அமைப்பின் நோக்கம் குறித்து விளக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளான டாக்டர்.ஜெயச்சந்திரன், போஸ், மாரிமுத்து ஆகியோர், "" ராயபுரத்தில் மூன்றாவது முனையத்தை உருவாக்கினால், தற்போது எழும்பூரிலிருந்து வடக்கே இயக்கப்படும் ரயில்களை ராயபுரத்திலிருந்து இயக்கலாம். இதனால் சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் நெரிசல் குறையும். எழும்பூரிலிருந்து வடக்கே செல்லும் தாதர், கயா, கவுஹாத்தி, காக்கிநாடா உள்ளிட்ட ஏழு ரயில்கள் ராயபுரம் வழியாக தான் செல்கின்றன. அதனை ராயபுரத்திலிருந்தே இயக்கலாம்'' என்றனர்.// ( தினமலர் செய்தி )

    தாம்பரத்தில் புதிய டெர்மினலை தொடங்கி, தென் மாவட்டங்கள் செல்லும் அனைத்து ரெயில்களையும் அங்கிருந்து இயக்க வேண்டும் என்பது தென்னக ரெயில்வேயின் புதிய திட்டம். அந்த திட்டத்தையே ( புதிய டெர்மினலை ) ராயபுரத்திற்கு மாற்ற வேண்டும் என்பதுதான் ராயபுரம் பகுதி மக்கள் கோரிக்கை. போராட்டக்காரர்களின் அறிக்கைகளை ந்ன்கு கவனித்துப் பார்த்தால் இது தெரிய வரும். உண்மையில் ராயபுரத்தை விரிவு செய்த பின்னர் ராயபுரம் தொடங்கி எழும்பூர் வரை ரெயில் பாதைகளை அகலப்படுத்த கோரிக்கை வைப்பார்கள். எழும்பூர் ரெயில் நிலையம் என்பது துணை டெர்மினலாக நாளடைவில் மாறிவிடும். இதனையே நான்

    //மேலெழுந்த வாரியாக எழும்பூர் ரெயில் நிலையத்தை மாற்றாதே என்று போராடுவது போல காட்டிக் கொண்டு தாங்கள் வசிக்கும் வட சென்னைக்கு மாற்ற கோரிக்கை வைக்கிறார்கள். இவர்களோடு ஊர்க்காரர்கள் என்ற முறையில் சில அரசியல்வாதிகளும் சேர்ந்துள்ளனர் . //

    என்று குறிப்பிட்டு எழுதியுள்ளேன். தங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete