Monday 7 November 2011

கலைஞர் கருணாநிதி குறளோவியத்திற்கு தடை!


கோட்டூர்புரத்தில் உள்ள நூலகத்தை மாற்றி ஆஸ்பத்திரி கொண்டு வரப் போகிறார்கள் என்றவுடன் குதி குதியென்று குதித்தார்கள். இப்போது ஒன்றுமே சத்தம் இல்லை. கோர்ட்டில் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மேல் சபை ஒழிப்பு தீர்மானம் கொண்டு வரப் பட்டது. கருணாநிதிக்கு வேண்டிய தமிழ்ப் புலவர்கள் அறிவு ஜீவிகளூக்கு இடமில்லையா என்று சலசலத்தார்கள்.  இதே போல்தான் தலைமைச் செயலகம் மாற்றம் என்றவுடன் ஏதோ உலகமே புரண்டது போல கூப்பாடு எழுந்தது. கொஞ்ச நாள்தான். அப்புறம் உள்ளாட்சி தேர்தல் வந்தவுடன் எல்லோரும்  தோளில் துண்டை போட்டுக் கொண்டு போய் விட்டார்கள். சமச்சீர் கல்வி விஷயத்தில்  சிலர் உச்ச நீதி மன்றம் வரை துரத்திக் கொண்டே சென்றதால் ஏதோ தப்பியது. தமிழ் நாட்டில் வேறு எந்த வேலையும் இல்லாமல் கருணாநிதியையே நினைத்து கொண்டு காரியங்கள் நடை பெறுகின்றன. என்ன காரணம்?

ஒரு சமயம் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்டில் உச்ச கட்டத்தில் இருந்தது. அப்போது நன்றாக பேசும் மேடைப் பேச்சா ளர்களுக்கு நல்ல கூட்டம். காங்கிரஸை விட தி.மு.க.வில்மேடைப் பேச்சாளர்கள் அதிகம். ஒரு சோடாவையோ அல்லது ஒரு சிங்கிள் டீயையோ குடித்து விட்டு மணிக் கணக்கில் பேசிக் கொண்டு இருப்பார்கள். காமராஜரையும், கக்கனையும், சம்பத்தை யும், பக்தவச்சலத்தையும் பற்றி அப்படி விமர்சிப்பார்கள். கண்ணதாசன் மேடைகளில் படாதபாடு பட்டார். அதன் எதிரொலிதான் இன்றைய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் கடுமையான விமர்சனம்.

எம்ஜிஆருக்குப் பின் இப்போது ஜெயலலிதாவை முன்னிறுத்தி கருணாநிதி எதிர்ப்பு அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் கருணாநிதியின் அரசியல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர் களாக அல்லது பழி வாங்கப் பட்டவர்களாக இருந்திருப்பார்கள். .அந்த வெறுப்பில் கருணாநிதியின் பெயரை தமிழ் நாட்டிலிருந்து நீக்கி விட்டால் தங்கள் பகையும் பழி வாங்கும் உணர்ச்சியும் தீர்ந்து விட்டதாக நினைக்கிறார்கள். அதற்கு ஜெயலலிதா மூலம் தங்கள் நப்பாசையை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். இவர்கள்  சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று நினைப் பவர்கள்.

இதைப் போன்ற காரியங்கள் எம்ஜிஆர் ஆட்சியிலும் நடந்தன. அப்போது கருணாநிதி குறளோவியம் எழுதிக் கொண்டு இருந்தார். கருணாநிதி திருக்குறளுக்கு உரை எழுதுவதா? பார்த்தார்கள். எம்ஜிஆர் காதில் போட்டார்கள். உடனே அவரும் திருக்குறளுக்கு ஏற்கனவே நிறைய உரைகள் இருக்கின்றன. புதிதாக யாரும்  எழுத வேண்டியதில்லை என்று சட்டம் கொண்டு வரப்படும் என்றார். நல்லவேளை அந்த பைத்தியகார காரியத்தை அவர் செய்யவில்லை ஒருவேளை எம்ஜிஆர் அதனை சட்டமாக்க சட்டசபையில் முயற்சி செய்திருந்தால் கூட நிறைய பேர் கை தூக்கி இருப்பார்கள். கருணாநிதி எம்.எல்.சி ஆக மேல் சபையில் இருந்த நேரம். எம்ஜிஆருக்கு வெண்ணிற ஆடை நிர்மலாவை மேல் சபையில் எம்.எல்.சி ஆக்க வேண்டும் என்று ஒரு ஆசை. யாரோ ஒரு புண்ணியவான் நிர்மலாவின் இன்கம் டாக்ஸ் விஷயத்தை கிளறி கோர்ட்டுக்குப் போக அவர் மேல் சபைக்கு போக முடியவில்லை. இதற்கு எல்லாம் காரணம் கருணாநிதி என்று எம்ஜிஆர் நினைத்தார். வெண்ணிற ஆடை நிர்மலா எம்.எல்.சி ஆக நுழைய முடியாத ஒரு மேல் சபை தேவையா? அந்த சபையையே தமிழ்நாட்டில் இல்லாது செய்தார் எம்ஜிஆர். கருணாநிதியும் எம்.எல்.சி பதவியை இழந்தார்.

கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது, இன்னும் அவருக்கென்று
உள்ள  ஒரு செல்வாக்கையே காட்டுகிறது. செல்வாக்கு இல்லை என்றால், அவரைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?


No comments:

Post a Comment