Friday 18 November 2011

பேருந்து நிலைய கழிப்பிடங்கள், உணவு விடுதிகள்

நாம் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருப்போம். பேருந்து ஒவ்வொரு ஊரையும் கடந்து சென்று கொண்டு இருக்கும். முக்கியமான ஒரு ஊரையோ அல்லது நகரத்தையோ அடையும் போது நம்மையும் அறியாமல் மூக்கை பொத்திக் கொள்வோம். அந்த ஊரின் பேருந்து நிலையத்தை நெருங்கி விட்டோம் என்பதற்கு அடையாளம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஊரின் பேருந்து நிலையமும் இந்த நிலைமைதான். அங்குள்ள கழிப்பிடங்களின் துர்நாற்றம் இவ்வாறு நம்மை மூக்கை பொத்தச் செய்கின்றன.

பேருந்து நிலையங்களில் இருக்கும் இலவச கழிப்பிடங்களைப் பற்றி சொல்ல வேண்டிய தில்லை. ஆண்கள் பெண்கள் என்ற எழுத்துக்களையோ அல்லது படங்களையோ காணமுடியாது. சுவர்கள் முழுக்க எரனியா ஆபரேஷன் , ஆண்மைக் குறைவு வைத்திய விளம்பரங்கள்தான். தப்பித் தவறி போய்விட்டால், அன்று முழுக்க குமட்டல்தான். கட்டணக் கழிப்பிடங்களில் தண்ணீர் வைத்து இருப்பார்கள். அவ்வளவுதான். மற்றபடி சுகாதாரத்தை தேட வேண்டும். பாசி படர்ந்த தரை,  ஓட்டை கதவுகள், உடைந்து போன குவளைகள் என்று வெறுப்பேற்றும் சமாச்சாரங்கள். மழைக் காலத்தில் கால் வைக்க முடியாது. உடல் ஊனமுற்றவர்கள் நிலைமை சொல்ல வேண்டியதில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் அனைத்து பேருந்து நிலையங்களிலும், அந்த கழிப்பிடங்களை ஒட்டியே பல உணவு விடுதிகள், டீக் கடைகள் அமைந்திருக்கும். அந்த கடைகளின் பின்புற ஜன்னல்கள் அல்லது அல்லது ஏசி மெஷின்களின் பின்புறம், கழிப்பிடங்களை ஒட்டியே அமைக்கப்பட்டு இருக்கும். சில இடங்களில் அந்த கடைகளுக்கும் கழிப்பிடங்களுக்கும் ஒரே குழாயில் தண்ணீர் வசதிக்காக இணைப்புகள் கொடுத்து  இருப்பார்கள். அந்த கடைகள் பெரும்பாலும் ஊராட்சி அல்லது நகராட்சிகளால் வாடகைக்கு விடப்பட்டவைகளாக இருக்கும். அந்தக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுபவர்கள் யாரும் அருவருப்பு  அடைவதாகத் தெரியவில்லை. அந்தக் கடைகளில் இருக்கும் உணவுப் பொருட்களினால் வரக்கூடிய நோய்களைப் பற்றி யாரும் கவலைப்பட்ட மாதிரியும் இல்லை. அந்த ஊர் சுகாதார
ஆய்வாளர்கள் என்ன ஆனார்கள்?

இனிமேல் புதிய பேருந்து நிலையங்களை அமைக்கும் புண்ணியவான்கள் இந்த விஷயங்களையும் கவனித்தால் நல்லது.

No comments:

Post a Comment