Wednesday 29 November 2017

வலைப்பதிவர்கள் ஆலோசனை - முதற் கூட்டம்



சென்ற ஞாயிறு (26.11.17) அன்று, ‘வலைப்பதிவர்கள் திருவிழா’ நடத்துவது சம்பந்தமாக, ஒரு ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. இந்த சந்திப்பு பற்றி அங்கே வந்திருந்த, வலைப்பதிவர்கள், குறிப்பாக புதுக்கோட்டை நண்பர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள், இந்த சந்திப்பினை, அவரவர்  ஃபேஸ்புக்கில் (Facebook) புகைப்படங்களாக பகிர்ந்து கொண்டனரே அன்றி விவரமாக எழுதிடவில்லை. ‘வரலாறு முக்கியம்’ என்பதனால் நாமே பதிவு செய்து விடுவோம் என்ற ஆர்வம் காரணமாக, வலைப்பதிவு நண்பர்கள் பகிர்ந்த படங்களோடு, நான் எடுத்த படங்களையும் கலந்து இங்கு ஒரு பதிவு. 

நகர்மன்ற வளாகத்தில்

வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய ஆலோசனை கூட்டம், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நடைபெறும் நகர்மன்ற வளாகத்தில், ஞாயிறு (26.11.17) பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கும் என்று ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார். இங்கு நான் திருச்சியில் இருந்து கிளம்பும்போதே வானம் இடி, மின்னல் என்று சிறு தூறலோடு வரவேற்பு தந்து கொண்டு இருந்தது. நான் மதியம் இரண்டு மணிக்கெல்லாம் அங்கு சென்று விட்டேன். நண்பர்கள் வருவதற்குள் ஒருமுறை புத்தகத் திருவிழாவை ஒரு வலம் வந்து விடுவோம் என்று சென்று வந்தேன். சற்று நேரத்தில் முனைவர் ஜம்புலிங்கம், கஸ்தூரி ரங்கன் மற்றும் கரந்தை ஜெயக்குமார் மூவரும் வந்தார்கள்.

(படம் மேலே) முனைவர்  பா. ஜம்புலிங்கம், கஸ்தூரி ரங்கன் மற்றும் கரந்தை ஜெயக்குமார்.

 கூட்டம் தொடங்கியது
 
(படம் மேலே)  கூட்டம் துவங்கியபோது – இடமிருந்து வலம் > மீரா செல்வகுமார், ஷேக் தாவூத் பஷீர் அலி, இந்துமதி, கீதா, தென்றல் சாய் , தி.தமிழ் இளங்கோ, நா.முத்துநிலவன், கரந்தை ஜெயக்குமார், பா.ஜம்புலிங்கம் மற்றும் கஸ்தூரி ரங்கன்

(படம் கீழே) Picture Courtesy https://www.facebook.com/karanthaijayakumar
 
வலைப்பதிவு நண்பர்கள் நிறையபேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், சிலரே வந்து கலந்து கொண்டனர். கூட்டம் துவங்க இருந்த நேரத்தில், மழை பெய்யத் தொடங்கியது. எனவே இந்த ஆலோசனை கூட்டம், அங்கு இருந்த புதுக்கோட்டை நாணயவியல் கழக கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. 

கலந்துரையாடல்

ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் கூட்டத்தினை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர், புதுக்கோட்டை கணிணித் தமிழ்ச் சங்கம் நடத்திய, இணையத் தமிழ் பயிற்சி ஒருநாள் முகாம் நடத்த உதவிய, மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி (MOUNT ZION COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY) நிர்வாகத்தினர், முற்பகல் நிகழ்ச்சிக்கு இடமும், உணவும் (Sponsor) தந்திட முன்வந்து இருப்பதாக தெரிவித்தார். அப்போது அங்கு வலைப்பதிவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் வைத்துக் கொள்ளலாம் எனவும், மதிய உணவுக்குப் பிறகு, புதுக்கோட்டை நகரில் உள்ள ஒரு அரங்கில் பொதுமக்களும் கலந்து கொள்ளும் வண்ணம் ( சிறப்பு போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல், சிறப்பு சொற்பொழிவாளர் உரை என்று) பிற்பகல் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்ளலாம் எனவும் சொன்னார். மேலும் மேலே சொன்ன அதே கல்லூரி நிர்வாகத்தினரிடம் காலை நிகழ்ச்சிக்குப் பிறகு, அங்கிருந்து வலைப்பதிவர்களளை, அவர்களது கல்லூரி பேருந்திலேயே மதிய நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வர கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பொதுவாக, வலைப்பதிவில் எழுதுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றியும், ஃபேஸ்புக் பக்கம் பலர் சென்று விட்டது குறித்தும் பலரும் ஆதங்கம் தெரிவித்தனர். ஃபேஸ்புக்கில் எழுதுவதற்கும் வலைப் பக்கம் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டினையும், வலைப்பக்கத்தில் எழுதுவதால் கிடைக்கும் அனுகூலங்கள் குறித்தும் மற்ற நண்பர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று, ஆசிரியர் திரு கஸ்தூரி ரங்கன் அவர்கள் தெரிவித்தார். 

மற்றவர்கள் கருத்தும் ஏறக்குறைய, இரண்டு நாட்கள் நடத்துவதை விட ஒரேநாளில் முற்பகல் வலைப்பதிவர்கள் சந்திப்பு பிற்பகல் ஏனைய நிகழ்ச்சிகள் என்றே இருந்தன. மேலும் புதுக்கோட்டையில், அடுத்த வருடம் ( 2018 இல்) இந்த வலைப்பதிவர் திருவிழா நடத்துவது எனவும்,  இன்னொரு ஆலோசனை கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வலைப்பதிவர் திருவிழாவிற்காக  முன்பு போலவே புதிதாக வலைத்தளம் தொடங்குதல், வங்கி கணக்கு மூலம் நிதி திரட்டல், விழாமலர் வெளியிடுதல் ஆகிய செயல்பாடுகளும் இருக்கும்
.  
கூட்டம் முடிவதற்கும் மழை விடுவதற்கும் சரியாக இருந்தது. அப்போது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகளை மேற்பார்வையிட, அங்கு வந்த கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா அவர்களுடன் நண்பர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். 

கஸ்தூரி ரங்கன் அவர்களது ஃபேஸ்புக்கிலிருந்து) Pictures Courtesy : https://www.facebook.com/kasthurirengan74?hc
 
(படம் மேலே) புத்தகத் திருவிழா மேடையில் 

(படம் மேலே) கூட்டத்தின் போது

Devatha Tamil – கீதா அவர்களது ஃபேஸ்புக்கிலிருந்து
 






(படம் மேலே) தென்றல் சாய், கவிஞர் தங்கம் மூர்த்தி, இந்துமதி மற்றும் கீதா
                                                      .xxxxxxxxxxxxx.  .xxxxxxxxxxx.

தொடர்புடைய எனது பிற பதிவுகள்

வலைப்பதிவர் சந்திப்புசில ஆலோசனைகள் http://tthamizhelango.blogspot.com/2017/11/blog-post_20.html
 
வலைப்பதிவர்கள் சந்திப்பும் ஆதங்கமும் http://tthamizhelango.blogspot.com/2015/10/blog-post_60.html


33 comments:

  1. விளக்கம் நன்று விடயங்கள் மகிழ்ச்சி தருகின்றது.
    வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள மாவட்டத்துக்கு நீங்கள் சொந்தக்காரர் என்பதால் உங்கள் வருகையை எதிர்பார்த்தேன்.

      Delete
  2. தகவல் பகிர்வுக்கு நன்றி. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. நூற்கண்காட்சியில் உங்களையும், பிற நண்பர்களையும் கண்டதில் மகிழ்ச்சி. ஆலோசனைக்கூட்ட நிகழ்வுகளைப் பகிர்ந்த விதம் அருமை. நன்றி.

    ReplyDelete
  4. பல சமயம் ஏன் சென்னையில் பணிச்சூழல் அமையவில்லை என்று நினைத்துக் கொள்வதுண்டு. முக்கியமான கூட்டங்கள் சந்திப்புகள் எளிதாக இருந்து இருக்குமே என்று. இந்தப் படங்களைப் பார்த்து பேசாமல் வாழ்க்கை சொந்த ஊர்ப்பக்கம் இருந்து இருக்கலாமோ? என்று தோன்றுகின்றது. மகிழ்ச்சியான கூட்டமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜோதிஜி அவர்களின் மகிழ்வான கருத்துரைக்கு நன்றி.

      // ... பேசாமல் வாழ்க்கை சொந்த ஊர்ப்பக்கம் இருந்து இருக்கலாமோ? என்று தோன்றுகின்றது ... //

      நல்ல யோசனைதான். இப்போதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை. உங்கள் பணி ஓய்வுக்குப் பிறகு புதுக்கோட்டைப் பக்கம் வந்து, அமைதியாக செட்டில் ஆகி விடலாம்.

      Delete
  5. படங்களுடன் விரிவாகப் பதிவிட்டமைக்கு நல்வாழ்த்துக்கள் தற்சமயம் சென்னையில் இருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை பதிவர் விழாவில் அவசியம் சந்திப்போம் வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரமணி அய்யா அவர்களுக்கு நன்றி.

      Delete
  6. பதிவர் சந்திப்பு நல்லன தரும். பதிவுலகம் முன்னேற, பலமடைய வாய்ப்புத் தரும்.
    முகநூல் தேவை தான், அது வலைப்பூச் செய்திகளைப் பதிவிட மட்டும்.

    வலைப்பூ சிறக்க பதிவர் சந்திப்புத் தேவை. அவ்வேளை இப்படிப் பல கதைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  7. பல இடங்களில் பதிவர் சந்திப்பு நிகழ்தல் வேண்டும் என்று நினைப்பவன் நான் மாநிலத்தின் மையப்பகுதியில் திருச்சியிலோ தஞ்சையிலோ வலைப் பதிவர் சந்திப்பு நடந்தால் நல்லதுஎன் பதே என் எண்ணம் சந்திப்புக்கு வருபவர்களிடம் பணம்வசூல் செய்வது அவசியம் செலவு நினைத்தே பல பதிவர்களும் அக்கறை காட்டுவதில்லை என்றே நினைக்கிறேன் பதிவர் விழாவில் அனைவரும் சமம் என்னும் எண்ணம்வெளிப்பட வேண்டும் இவை என் கருத்தே கரந்தையில் ஜெயக்குமாரின் பள்ளியில் நடத்தலாம் என்பதும் என் ஆலோசனை

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி. அவர்களின் கருயத்துரைக்கு நன்றி. சுருங்கச் சொன்னாலும், பல்வேறு விஷயங்களையும் முன்னிறுத்தி சொன்னீர்கள்.

      Delete
  8. மீண்டும் ஒரு வெற்றித் திருவிழாவுக்கான தொடக்கமே களை கட்டி விட்டது.வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அய்யா வணக்கம்.
    எனக்கென்னவோ ஆலோசனைக் கூட்டம் நம்பிக்கையூட்டுவதாக இல்லை! உசுப்பேத்தி உசுப்பேத்தி... கூட வந்து நிற்காமல் வேடிக்கை பார்ப்பவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது? புத்தகவிழா முடிந்து விரிவாக என் வலைப்பக்கத்தில் எழுதுவேன்..
    முன்னோட்டமாகத் தாங்கள் எழுதியதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் ஆதங்கமான கருத்துரைக்கு நன்றி.

      பொதுவாகவே எந்த ஒரு அமைப்பிலும் ( அது கட்சியாக இருந்தாலும், தொழிற்சங்கமாக இருந்தாலும், குடியிருப்போர் நலச் சங்கமாக இருந்தாலும் ) ஒரு சிலரே அதற்கான காரியங்களில் முன்னெடுப்பு செய்கிறார்கள். மற்றவர்கள் தங்களால் ஆன காரியங்களைச் செய்கிறார்கள். பெரும்பாலும் இதுபோன்று பொதுநலத்தில் அக்கறை கொண்டு முன்னிற்பவர்கள் மனதில் ‘நானேதான் செய்ய வேண்டுமா?, போன்ற சலிப்பான எண்ணங்கள் வருவது இயல்புதான். இருந்தாலும் தயையும் கொடையும் பிறவிக் குணம் என்பதைப் போல, பொதுநல சிந்தனை உள்ளோர் இதற்காக விலகி விடுவது இல்லை.

      உங்களைப் போன்றவர்கள், வலையுலகின் மீது அக்கறை கொண்டு இயங்குவதால்தான், வலையுலகு உயிர்ப்புடன் இருக்கிறது என்பதே எனது கருத்து. உங்களுக்கு உங்கள் ஊரில் இருக்கும் நன்மதிப்பு, செல்வாக்கு நீங்கள் சார்ந்து இருக்கும் அரசியல் கொள்கைக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை, என்பது ஔவையார் வாக்கு.

      நீங்கள் உங்கள் வலைப்பக்கம் எழுதப்போகும் கட்டுரையை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

      Delete
  10. மீண்டும் அந்த பொன்னாள் வந்தால் மகிழ்வேன்.

    படம் பார்க்கவே மனசு உற்சாகம் கொள்ளுதுண்ணே

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  11. ஊக்கம் தரும் பதிவு சகோ புதிதாய் வருபவர்களுக்கு படங்களுடன் பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  12. சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவின் வாழ்த்துகளுக்கு நன்றி.

      Delete
  13. விழா சிறக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி

      Delete
  14. A good number of participants. Who are the young men in other photos - who, you didn't introduce?

    //சென்ற ஞாயிறு (26.11.17) அன்று, ‘வலைப்பதிவர்கள் திருவிழா’ நடத்துவது சம்பந்தமாக, ஒரு ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. //

    அதாவது இனிவரப்போவதுதான் வலைபதிவர்கள் திருவிழா. இப்போது நடந்தது அதை எப்படி நடாத்துவது என்பதற்கான ஆலோசனைக்கூட்டம் என்று எடுக்கலாமா?

    Like in Government, they will constitute a sub-committee to examine the recommendations of the Committee. And after the sub-committee has submitted its findings, another sub-committee will be set up to go through the findings. Cycle-within-cycle is the general habit of the Government. But they may be having reasons. To evade taking or delaying action to cheat the trade unions.

    I think I will definitely hurt you if I continue like this. My experience is that Tamil bloggers are very sensitive people. So, I call it a day -) Take it easy.

    ReplyDelete
  15. அன்பர் P.விநாயகம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    // A good number of participants. Who are the young men in other photos - who, you didn't introduce? //

    முதலில் நான் எடுத்த புகைப்படங்களை மட்டுமே வைத்து ப்ளாக்கர் டேஷ் போர்டில் எழுதி இருந்தேன். அதில் எனக்கு அறிமுகமான பெயர் தெரிந்தவர்களை மட்டும் குறிப்பிட்டு இருந்தேன். பிற்பாடு Preview பார்க்கும் போது, இன்னும் சில படங்கள் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது; எனவே மற்ற நண்பர்களின் ஃபேஸ்புக் பதிவுகளில் இருந்து படங்களை அவசரம் அவசரமாக தரவிறக்கம் செய்து இணைக்க வேண்டியது ஆயிற்று. மற்றபடி ஏதும் காரணம் இல்லை.

    // அதாவது இனிவரப்போவதுதான் வலைபதிவர்கள் திருவிழா. இப்போது நடந்தது அதை எப்படி நடாத்துவது என்பதற்கான ஆலோசனைக்கூட்டம் என்று எடுக்கலாமா? //

    நீங்கள் சொல்வது சரிதான் அய்யா. இன்னொரு ஆலோசனைக் கூட்டமும் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது.

    // Like in Government, ……. //

    தங்களது அனுபவத்தில் கண்ட அரசாங்க நடைமுறையை சொன்னதற்கு நன்றி அய்யா.

    // I think I will definitely hurt you if I continue like this. My experience is that Tamil bloggers are very sensitive people. So, I call it a day -) Take it easy.//

    இங்கு நீங்கள், வருத்தப் படும்படியாக எதுவும் சொல்லி விடவில்லை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //தங்களது அனுபவத்தில் கண்ட அரசாங்க நடைமுறையை சொன்னதற்கு நன்றி அய்யா.//

      பொதுவாக எல்லாருக்கும் தெரிந்ததுதான் நான் எழுதியது. எடுத்துக்காட்டாக ஏழாம் சம்பளக்குழு அறிக்கையை சமர்ப்பித்தவுடன் அரசு, அதை பரிசீலிக்க ஒரு குழவை அமைத்தது. அக்குழுவின் பரிசீலனைகளின் எவற்றை ஏற்கலாம்; எவற்றத்தள்ளலாமென பரிசீலிக்க இன்னொரு குழுவை அமைத்ததது. அதன்பின்னர் இறுதிக்குழுவின் அறிக்கைகளை அமல்படுத்துவதற்கு முன் அனாமலி குழு என்றொன்றை அமைத்து. அது இப்போது பரிசீலனைத்தரத்தர, ஒவ்வொன்றாக அமல்படுத்திவருகிறது. ஆக இப்படி பத்தாண்டுகளுக்கு மேலாகும். This is called delay tactics. Govt has its reasons.

      அதைப்போல இங்கே முதற்கூட்டம், அடுத்தடுத்த ஆலோசனைக்கூட்டங்கள் எல்லாம் முடிந்து பதிவர் கூட்டம் எப்போது நடக்குமென்று எவருக்குமே இப்போது தெரியாது.

      பதிவர் கூட்ட்த்திற்கு வேண்டியது - எங்கே எப்போது - அந்த வெனியூ வை எப்படி புக் பண்ணலாம்; ஆக வேண்டிய பண்ச்செலவு - எத்தனை பேர் எதிர்ப்பார்க்கப்படுகிறார்கள் போன்ற லாஜிஸ்ட்க்ஸ். பின்னர் முக முக்கியமானது, வெறும் அரட்டை அரங்கமாகப் போயிவிடாமலிருக்க - அஜென்டா போயின்ட் தீட்டப்பட்டு அங்கீகரிக்கப்படவேண்டும். அஜன்டா லிஸ்ட் முன்னரே பதிவர் கூட்டத்திற்கு தெரியவேண்டும். அப்போதுதான் முன் தயாரிப்புடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

      ஒரு மாதிரிக்கு ஒரு லிஸ்ட்.

      1. ஏன் பதிவெழுகிறீர்கள்? அதனால் எந்த இலக்கை அடைய விரும்புகிறீர்கள்?
      2. பதிவுகளை பல பிரிவுகளில் எழுதுகிறோம்; மருத்துவம், பயணம், வெறும் அனுபவங்கள். இப்படி பல பிரிவு பதிவர்களுக்குள் என்ன ஒற்றுமை இருக்கலாம்?
      3. மருத்துவ சம்பந்தமான பதிவுகளிலோ, அல்லது வரலாறு போன்றவைகளிலோ எழுதுபவர்களுக்கு சான்றுகள் கொடுக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி வேண்டுமா? அல்லது போகிற போக்கில் அடிச்சிவிட்டுப் போய்விடலாமா? பதிவு ஒரு சமூகக்கடமையா? இல்லை வெறும்பொழுது போக்கு சாதனம் தனிநபருக்கு மட்டுமா? எடுத்துகாட்டாக, ஒருவர் எய்ட்ஸ் நோயிலிருந்து விடுதலை அடைந்தார் என நான் எழுதலாமா? சான்று கேட்டால் நான் பார்த்தேன் பொத்திக்கிட்டு போ என்று மட்டுமெ சொல்லலாமா?
      5. அரசியல் சார்ந்த பதிவுகளில் ராடிக்கல் வேறுபாடுள்ள பதிவர்கள் எப்படி இணைய முடியும்? அவரகளுக்குள் என்ன வகையான சந்திப்புகள் நிகழவேண்டும்?
      6. பின்னூட்டமிடுவோரை எப்படி நேர்கொள்வது? எல்லாப்பின்னூட்டங்களும் ஆஹா..ஒஹோ சரிதான் என்று சொல்லும் போது மகிழும் உள்ளம் மாற்றுக்கருத்துள்ளோரை எப்படி நேர்கொள்வது? எப்படிப்பட்ட வகையான தமிழை பயன்படுத்தி பதில் சொல்வது? அறிவு ஜீவி இங்கே வராதே என்று திட்டலமா? அல்லது நீங்க்ள் சொல்வது உங்க்ளைப் பொறுத்தவரை சரி. ஆனால் என்னால் ஏற்க முடியவில்லை எனலாமா? அதாவது எழுதும் மொழி ஒரு பயிற்சியாக இருக்க வேண்டும் பதிவர்களுக்கு. அதை யார் தருவது? ஏன் இங்கே பயிற்சி பட்டறைக்கும் வழியிருக்க கூடாது? தமிழாசிரியர் ஓய்வு இங்கே இருக்கிறாரே? அவரேன் இம்முயற்சியை முன்னெடுக்கக் கூடாது?
      பதிவாளர்களுக்கு ஆயிரம் மனிதர்களுக்குள் ஆயிரதோர் வேறுபாடான சிந்தனைகள் இருக்கும் என ஏன் நினைவுபடுத்தக்கூடாது.
      7. தங்கள் பெயரை வெளியிட விரும்பாமல் பின்னூட்டக்கருத்துக்களையிடுவோருக்கு வசதியாக இணையத்தில் வச்தியை கூகுலும் வர்ட்பிரசும் செய்து கொடுக்க, அப்படி இடுவோரை விரட்டுவது ஏன்? அவர்க்ளைத்திட்டுவது ஏன்/ பெண்கள் தங்கள் பெயர்களை இட விரும்புவரோ என சிந்திக்க ஏன் பல பதிவர்கள் மறுக்கிறார்கள்? பெயரைக் காட்டு இல்லாவிட்டால் நீ கோழையென்றால், அப்படி பெயரைக்காட்டிவிட்டால் எழுதிய கருத்து மாறிவிடுமா என ஏன் சிந்திக்க முடியவில்லை?

      6 ம் 7ம் காட்டுவது என்னவென்றால், பதிவர்கள் பொறுப்புணர்ச்சியுள்ளோர், இல்லாதார் என இருவகை. முன்னவருக்குத்தான் இக்கூட்டம். மற்றவர்களுக்கேன்? அவர்கள் எவர் சொல்லையும் கேட்கமாட்டார். ஆக, நான் வைத்த குறிப்புக்களை பதிவர் கூட்டத்தில் போட ஒரு மாதிரி.

      8. ஒரு இடதுசாரி சிந்தனையாளரின் பதிவில் ஒரு பெயரில்லா ஒருவர் அபத்தமாகவும் ஆபாசமாகவும் பின்னூட்டமிட்டுவருகிறார் என்ற அப்பதிவர் வருத்தப்படுகிறார். இப்படிப்பட்ட நெகட்டிவி பெயரில்லா பின்னூட்டப்பிரச்சினைக்குத் தீர்வென்ன?
      9. பெண்பதிவர்களுக்கென்று சில தனி பிரச்சினைகள் இருக்கலாம். அதை ஆலோசிக்கலாம்.
      இதைப்போல பல குறிப்புக்களை முன்னரே தீட்டுங்கள். இதற்காக இரு ஆலோசனைக்கூட்டங்கள் போதும்.

      நான் ஆங்கில பதிவர். I am voluntarily out.

      Delete
  16. சிறப்பாக நடக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
    திரு பசுபதி அவர்கள் தம் தளத்தில் பற்பல தமிழ் வல்லுனர்களைப் பற்றி செறிதான தகவல்களை தந்து வறுகிறார். ஆனால் அவற்றைப் படித்து கருத்திடுவோர் மிகவும் சொற்பம். போதுமான ஆதரவு இன்றி அவர்தம் முயற்சிகள் பலனற்று போகின்றன. அனைவரையும் இத்தளத்தை தினமும் படிக்க வேண்டுகிறேன். நன்றி
    http://s-pasupathy.blogspot.com/
    -பாபு

    ReplyDelete
    Replies
    1. Ponmalai Babu அவர்களின் கருத்துரைக்கு நன்றி. திரு.பசுபதி அவர்களது வலைத்தளமும் அடிக்கடி செல்வதுண்டு. ஆனால் கருத்துரை ஏதும் தந்ததில்லை. ( Ponmalai Babu - என்ற உங்களது பெயரினை பொன்மலை பாபு அல்லது பொன்மாலை பாபு - எப்படி எடுத்துக் கொள்வது என்று சொல்லவும்)

      Delete
  17. விழா சிறக்கட்டும். படங்களும் அங்கு பகிரப்பட்ட கருத்துக்களை மிக அழகாக வழக்கம் போல் தொகுத்துக் கொடுத்தது சிறப்பு

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் இருவரின் கருத்துரைக்கும் நன்றி.

      Delete