Wednesday 3 October 2012

திரைப் படம் - பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS)



நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம். எங்கள் வீட்டிற்கு அருகில் பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையில் தச்சு வேலை செய்த ஒரு கிறிஸ்தவ பெரியவர் இருந்தார். ஒருநாள் அவரோடு பேசிக் கொண்டு இருந்தபோது அவர் பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS)  பட காட்சிகள் பற்றி பிரமிப்போடு சொன்னார். அன்றிலிருந்து அந்த படத்தை பார்க்க ஆவலாக இருந்தேன். பெரியவனாகி கல்லூரி சேர்ந்த பிறகுதான்  அந்த வாய்ப்பு அமைந்தது. அப்போதெல்லாம் ஆங்கிலப் படங்களை திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிளாஸா தியேட்டரில் போடுவார்கள். (இன்னொரு தியேட்டர் சிங்காரத் தோப்பு அருகே உள்ள கெயிட்டி) பிளாஸா தியேட்டரில் ஒரு மாலை வேளை பத்து கடடளைகள் (THE TEN COMMANDMENTS) படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படம் பார்த்த திருப்தி இல்லை. ஏனெனில் படம் ஆரம்பம் முதல் முடியும் வரை தியேட்டருக்குள் ஆட்கள் வருவதும் போவதுமாக வாசல் கதவுகளை திறந்தும் மூடியும் படத்தை ரசிக்க முடியாமல் செய்து விட்டார்கள். காரணம், தியேட்டருக்கு அருகில் வெளியூர் பேருந்து நிலையம் இருந்ததுதான். அப்புறம் திருச்சியில் டிஜிடல் தொழில் நுட்பத்துடன் ஏசி தியேடடர்கள் வந்தன. இருக்கின்ற தியேட்டர்களில் சிப்பியில் படம் பார்த்தால் அருமையாக இருக்கும். அந்த தியேட்டரில் இந்த படத்தை ரசித்துப் பார்த்தேன். அந்த படத்தின் காட்சிகளை அந்த பெரியவர் ஏன் அவ்வளவு பிரமிப்பாக சொன்னார் என்று அப்போதுதான்  தெரிந்தது. அதன்பிறகு சிப்பி தியேட்டரில் அந்த படத்தையும் பென்ஹர்  (BENHUR) படத்தையும் இரண்டு தடவை  பார்த்து இருக்கிறேன். இப்போது இந்த தியேட்டரை மூடி விட்டார்கள். வருத்தமான விஷயம்தான்.

படத்தின் கதையும் காட்சிகளும்:

எகிப்தை ஆண்ட மன்னன் பாரோவான் என்று அழைக்கப்பட்டான்.. ஒரு பாரோவான் எகிப்து தேசமானது எகிப்தியர்களுக்கே சொந்தம என்றும், அங்கு இருக்கும் இஸ்ரவேலர்கள் என்ற எபிரேய மக்கள் எகிப்தியர்களின் அடிமைகள் என்றும் சட்டம் வகுத்து கொடுமை செய்கிறான். அது மட்டுமல்லாது எபிரேயர்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை எல்லாம் கொல்ல உத்தரவிடுகிறான். ஒரு இஸ்ரவேல் தாய் தான் பெற்ற ஆண் குழந்தையை மூன்று மாத காலம் மறைத்து வளர்க்கிறாள்; பின்னர் மன்னனுக்கு பயந்து கோரையால் செய்த ஒரு பெட்டியில் வைத்து நைல் நதியில் விடுகிறாள். அந்த குழந்தையின் அக்காள் (சிறுமி) அந்த பெட்டி செல்லும் திசையிலேயே நாணல் புதர்களில் மறைந்தவாறு யாரும் அறியாவண்ணம் தொடர்ந்து செல்கிறாள். அந்த பெட்டி எகிப்து மன்னனின் மகள் தனது தோழியருடன்  குளிக்கும் பக்கம் செல்கிறது. அடிமைகளாக இருந்த தனது பணிப்பெண்களை விட்டு பெட்டியை கரைக்கு கொண்டுவரச் செய்த இளவரசி அந்த குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறாள். தோழிகள் மன்னனின் சட்டத்தை நினைத்து பயப்படுகின்றனர். எனவே இளவரசி அந்த குழந்தையை ரகசியமாக வளர்க்க ஒரு தாதியை ஏற்பாடு செய்ய சொல்லுகிறாள். இதனைக் கண்ட அந்த சிறுமி ஒன்றும் தெரியாதவள் போல் சென்று தான் உதவுவதாகச் சொல்லி தனது தாயையே வளர்ப்புத்தாய் ஆக்கி அவர்களோடு இருந்து கொள்கிறாள். அந்த குழந்தைக்கு மோசஸ் ( நீரிலிருந்து எடுக்கப்பட்டவன் என்று பொருள் ) என்று பெயரிட்டு வளர்க்கின்றனர்.

மோசஸ் எகிப்தியனாக வளர்ந்தாலும்  பெரியவனாகும்போது தான் ஒரு எபிரேயன் என்று தெரிந்து கொள்கிறான். இவனைப் பற்றிய உண்மை தெரிந்த மன்னன் மோசஸை கொல்ல ஆணையிடுகிறான். மோசஸ் தப்பி வேறு ஒரு நாட்டிற்கு சென்று அங்கு ஒரு பெண்ணை மணம்புரிந்து வாழ்கின்றான். தன்னை கொல்ல உத்தரவிட்ட மன்னன் இறந்ததும் மீண்டும் எகிப்து வந்து அடிமைகளாக இருக்கும் தனது இன மக்களைச் சந்திக்கிறான். அப்போது எகிப்தில் அந்த மன்னனுக்குப் பிறகு வந்த இளவரசன் ஆட்சியில் இருக்கிறான். அவனிடமிருந்து மோசஸ் தனது இஸ்ரவேல் இன மக்களை மீட்டுச் செல்கிறான். கடவுளின் ஆணைப்படி தனது மக்களுக்காக பத்து கட்டளைகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளை பெறுகிறான். ஆனால் அவனது மக்கள் அவற்றை உதாசீனப்படுத்த மோசஸ் கோபம்கொண்டு அவற்றை உடைக்கிறான்.. 


எகிப்து தேச மன்னனின் அரண்மனை, அடிமைகள் கடுமையாக உழைத்து பிருமாண்டமான கட்டடங்களை அமைத்தல், மோஸஸ் செய்யும் அற்புதங்கள், தனது மக்களை மோஸஸ் மீட்டுச் செல்லும்போது எகிப்து மன்னன் தனது படைகளுடன் அவர்களைத் துரத்தும் காட்சி, இஸ்ரவேல் மக்களுக்காக மட்டும் செங்கடல் இரண்டாகப் பிளந்து வழிவிடும் காட்சி, மோஸஸ் இறைவனிடம் பத்துக் கட்டளைகள் பெறும் காட்சிகள் அனைத்தும் கதை நடக்கும் இடத்திற்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. இன்றைக்கு இருக்கும் தொழில் நுட்பம் இல்லாத அன்றைய கால கட்டத்தில் இன்றும் ரசிக்கும் வண்ணம் படம் எடுத்து இருக்கிறார்கள். இது உண்மையிலேயே பெரிய விஷயம்தான்.

திரைப்படத்தின் மற்ற விவரங்கள்:


இந்த பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS) என்ற  திரைப்படத்தை டைரக்ட் செய்தவர் Cecil B. Demile . அவரும் Henry Wilcoxo என்பவரும் இணைந்து  அதிக பொருட் செலவில் தயாரித்து இப் படத்தை வெளியிட்டுள்ளனர். படத்தினை விநியோகம் செய்தவர்கள் புகழ்பெற்ற பாரமவுண்ட் பிக்சர்ஸ் (PARAMOUNT PICTURES) இதில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருவரும் அந்த படத்தோடு ஒன்றி கதாபாத்திரமாகவே மாறி நடித்துள்ளனர். மோஸஸ் வேடத்தில் Charlton Heston சிறப்பாக நடித்தார். ( இவரே பென்ஹர் படத்திலும் நடித்து இருக்கிறார்) எகிப்து தேச பாரோ மன்னன் RAMESES .II வேடத்தில் கம்பீரமாக நடித்தவர் Yul Brynner. இவரது கம்பீரமான முகபாவங்கள், உடல் அசைவுகள் இன்றும் என் கண் முன் நிற்கின்றன. எகிப்து ராணியாக காதல், உருக்கம என்று நடித்தவர்  Anne Baxter. மோஸசின் மனைவியாக Yvonne De Carlo நடித்து இருந்தார். மற்றும்  Debra Paget என்ற நடிகையும்  John Derek  மற்றும் Edward G. Robinson  ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இசை  அமைத்துத் தந்தவர்  Elmer Bernstein. சினிமாடோக்ராபி  Loyal Griggs. எடிட்டிங்   Anne Bauchens.

                   (THE TEN COMMANDMENTS  திரைப்பட டைரக்டர் Cecil B. Demile )


விருதுகள் பலவற்றை  பெற்றுள்ள, இந்த திரைப் படம் வெளியிடப்பட்டு 56 ஆண்டுகள் ஆன போதும்,  இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புள்ளதாகவே உள்ளது. படம் வெளியான தேதி: அக்டோபர் 5, 1956.


       
( ALL PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 










34 comments:

  1. ஆண்டுகள் பல என்றாலும் அழியாத கதை பற்றிய தங்கள் விளக்கமும் படங்களும் அருமை.

    ReplyDelete
  2. இருமுறை பார்த்திருந்தாலும் மறுமுறை படத்தின் சிறப்புக்களை படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது... மிக்க நன்றி சார்...

    ReplyDelete
  3. REPLY TO …….Sasi Kala said...

    ஆம். நீங்கள் சொன்னதைப் போல ஆண்டுகள் பல என்றாலும் அழியாத கதைதான். இந்த திரைப் படமும் அவ்வாறே. சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!


    ReplyDelete
  4. REPLY TO ……. திண்டுக்கல் தனபாலன் said...

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் இது. தங்கள் வருகைக்கு நன்றி!


    ReplyDelete
  5. அருமை. மிக அருமையான பதிவு தான்.
    பட இணைப்புகளும், கதை விளக்கமும் மிகவும் சூப்பரோ சூப்பராகத் தந்துள்ளீர்கள்.

    பிளாஸா தியேட்டரையும் சிப்பி தியேட்டரையும் அநியாயமாக மூடிவிட்டார்கள். அதுபோலவே நம் ஊரில் இருந்த ராஜா டாக்கீஸ் + பிரபாத் டாக்கீஸ் நான் எவ்வளவு படங்கள் பார்த்திருக்கிறேன்.

    இப்போது ராஜ டாக்கீஸ் என்ற பெயரில் பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளது. ;(((((

    இந்த குறிப்பிட்ட படத்தை நான் என் சிறுவயதில் பார்க்க ஆசைப்பட்டும் வீட்டில் யாரும் அனுமதிக்கவும் இல்லை. நான் போய் வர காசு தரவும் இல்லை. அந்தக்குறையை நீங்கள் இப்போது தீர்த்து வைத்து விட்டீர்கள். நன்றியோ நன்றிகள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  6. REPLY TO ….. வை.கோபாலகிருஷ்ணன் said...
    திரு VGK அவர்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி! பள்ளி பருவத்திலிருந்தே இந்த படத்தை பார்க்க ஆசைப்பட்டு கடைசியில் கல்லூரி மாணவனாக ஆன பின்புதான் என்னால் படம் பார்க்க முடிந்தது. அன்றைய சூழ்நிலை அப்படி. திருச்சியில் கிட்டதட்ட எல்லா தியேட்டர்களையும் மூடி விட்டார்கள் என்பது வருத்தமான செய்திதான்.

    ReplyDelete
  7. இப்படம் பற்றி நான் இட்ட பதிவைப் பார்க்க: http://dondu.blogspot.in/2010/09/blog-post_898.html

    அன்புட்ன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. REPLY TO ……. dondu(#11168674346665545885) said...

    டோண்டு ராகவன் அவர்களுக்கு வணக்கம்! எனது பதிவை வெளியிடுவதற்கு முன்னர் இதே தலைப்பில் அல்லது இதே கருத்தில் வேறு யாரேனும் பதிவு எழுதி இருக்கிறார்களா என்று கூகிள் மூலம் பார்த்துக் கொள்வேன். அதேபோல் பார்த்தபோது உங்கள் பதிவினையும் பார்வையிட்டுளேன். உங்கள் பாணியில் நீங்கள் எழுதியதோடு விமர்சனங்களுக்கும் உங்கள் பாணியிலேயே பதில் தந்துள்ளீர்கள். தங்களின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  9. நானும் இந்தப் படத்தைப் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கிறேன்
    ஆயினும் இத்தனைத் தகவல்கள் தெரியாது
    விரிவாக முக்கியக் காட்சிகளுடன் விரிவாகப் பதிவினைத்
    தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. REPLY TO ……. Ramani said...
    கவிஞரின் கருத்துரைக்கு நன்றி! இந்த படத்தை முதன் முதல் பார்ர்க்கும் எவரும் பிரமித்துத்தான் போவார்கள்.


    ReplyDelete
  11. படங்களுடன் அருமையான இடுகை..அந்த நாளில் வீட்டில் பார்க்க விடவில்லை(ஆங்கிலப்படம் என்றாலே ஏதோ ஆபாசம் என்று வீட்டுப்பெண்கள் நினைப்பார்கள்:) அன்றுஅப்பா மட்டும் பார்த்துவிட்டுவந்து கதை சொன்னார். அருமையான படத்தைப்பி்றகு பார்த்தேன் நினைவுகள் மறுபடி சுழல்கிறது!!

    ReplyDelete
  12. நானும் பார்த்து ரசித்த மறக்கமுடியாத படம்!

    ReplyDelete
  13. REPLY TO ……. ஷைலஜா said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  14. REPLY TO ……. குட்டன் said...
    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  15. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_7.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
  16. அருமையான படத்தைப்பற்றி சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  17. REPLY TO … … .. திண்டுக்கல் தனபாலன் said...
    சகோதரரின் தகவலுக்கு நன்றி! இங்கு திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான தொடர் மின்வெட்டு காரணமாக வலைப் பதிவுகள் பக்கம் எட்டிகூட பார்க்க முடியவில்லை.

    ReplyDelete
  18. REPLY TO … … .. இராஜராஜேஸ்வரி said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! உங்கள் வலைப்பதிவை படிக்கும்போதெல்லாம் உங்கள் பதிவுகளில் உள்ள பெரிய பெரிய படங்களைப் போன்று எனது பதிவிலும் பதிய வேண்டும் என்ற நீண்டநாள் ஆசை இந்த பதிவின் மூலம்தான் நிறைவேறியது.

    ReplyDelete
  19. திரும்பவும் படத்தைப் பார்த்தது போன்ற பிரமிப்பு தங்களது பதிவை படித்ததும் ஏற்பட்டது. வாழ்த்துக்கள்! திருச்சியில் 1960 ல் புனித வளவனார் கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்தபோது பிளாஸா தியேட்டரில் ஆங்கிலப் படங்கள் அநேகம் பார்த்திருக்கிறேன். அந்த தியேட்டர் இப்போது மூடப்பட்டுவிட்டது அறிந்து வருத்தமே.

    ReplyDelete
  20. REPLY TO … … Mohan P said...

    தங்கள் வருகைக்கு நன்றி! ( உங்கள் Profile இல் சரியான விவரம் கொடுத்தால் நல்லது )

    ReplyDelete
  21. REPLY TO … வே.நடனசபாபதி said...

    நீங்களும் எங்கள் திருச்சியில் படித்தவர் என்றதும் மிக்க மகிழ்ச்சி! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  22. சிறப்பான பகிர்வின் மூலம் மீண்டும் நினைவு கொள்கின்றோம்.

    ReplyDelete
  23. REPLY TO ……. மாதேவி said...

    சகோதரியின் அன்பான கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  24. அன்பின் தமிழ் இளங்கோ - பட விமர்சனம் நன்று - விளக்கமாக கதையினக் கூறும் விதம் நன்று - படங்கள் அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  25. REPLY TO … … cheena (சீனா) said...
    அன்பின் ”வலைச்சரம்” சீனா அவர்களுக்கு வணக்கம்! படத்தின் பிரமாண்டம்தான் என்னை இந்த கட்டுரையை எழுத வைத்தது. தங்கள் பாராட்டிற்கு நன்றி!


    ReplyDelete
  26. THE TEN கோம்மண்ட்மேன்த்ஸ், நானும் சிப்பியில் பார்த்திருக்கிறேன் ,அருமையான படம் .

    ReplyDelete
  27. மறுமொழி > அஜீம்பாஷா said...

    // THE TEN கோம்மண்ட்மேன்த்ஸ், நானும் சிப்பியில் பார்த்திருக்கிறேன் ,அருமையான படம் //
    .
    சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! அந்த அருமையான சிப்பி தியேட்டரை மூடி விட்டார்கள். அந்த தியேட்டரில் படம் பார்த்த அந்த இனிமையான நாட்கள் இனி வராது.




    ReplyDelete
  28. அருமையான இந்த பதிவு, இன்றைய வலைச்சரத்தில்
    வாழ்த்துக்கள்.

    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_26.html

    ReplyDelete
  29. வணக்கம்

    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரிhttp://blogintamil.blogspot.com/2013/12/blog-post_26.html?showComment=1388023369804#c6732373831674887856

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  30. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  31. இன்றைய ( 26.12.2013 ) வலைச்சரத்தில் எனது வலைப் பதிவை அறிமுகப்படுத்திய , இந்தவார, வலைச்சர ஆசிரியை சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு நன்றி!

    நான் இன்று ( 26.12.2013 ) அதிகாலையிலேயே திருக்கடையூர் சென்று விட்டு, இப்பொழுதுதான் வீடு திரும்பினேன். இந்த தகவலை எனக்கு செல்போன் மூலம் முதன் முதல் எனக்குத் தெரியப்படுத்திய மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி! மேலும் எனது பதிவினில் வந்து சேதி சொன்ன வலைச்சர ஆசிரியை கோமதி அரசு அவர்களுக்கும், சகோதரர் ரூபன் அவர்களுக்கும், சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள்!






    ReplyDelete
  32. பத்துக்கட்டளைகள் பற்றிய உஙகள் விளக்கமும் படங்களும் அருமை இப்பணி தெடர்க தங்கள் தொலைபேசி எண் கிடைத்தால் உரையாடல்மூலம் வாழ்த்துவேன்
    எனது எண் 9034281538

    ReplyDelete