Saturday 20 October 2012

எனது பதிவை காப்பி அடித்த பதிவர்



நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு காட்சியில் எனது கிணற்றைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் செய்ய ஓடி வருவார். ஆனால் வலையுலகில்  எனது பதிவு அப்படியே என்னிடம் உள்ளது. ஆனால் அதனை ஒருவர் அப்படியே  எடுத்து தனது பெயரில் பதிவில் போட்டுள்ளார்..

நான், நேற்று   19, அக்டோபர்.2012  அன்று காலை கூகிளில் நாம் உட்கொள்ளும் ஆங்கில மருந்துகளின் விவரம் என்ற பதிவினை (http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_19.html ) பதிவிட்டு இருந்தேன். பின்னர் எங்கள் பகுதி ரேசன் கடைக்கு சென்றுவிட்டு மற்ற வெளிவேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தேன். நல்ல வேளை அப்போது மின்வெட்டு இல்லை. வந்ததும்  வழக்கம் போல எனது பதிவினைத் திறந்து ஏதேனும் விமர்சனம் வந்து  இருக்கிறதா என்று பார்த்தேன். பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி. அதில் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கீழே கண்டுள்ள செய்தியினை தெரிவித்து இருந்தார்.


இன்று மின்சாரம் வந்தவுடன் கீழே குறிப்பிட்ட தளத்தில் கருத்திட்டேன்... உங்கள் தளத்திற்கு வந்து திடுக்கிட்டேன்... கவனிங்க சார்...

/// அனைவருக்கும் பயன் படும் பகிர்வு...

நண்பர்களிடம் பகிர்கிறேன்... நன்றி...

Google + நீங்கள் பகிர்ந்ததில் மூலம் உங்கள் தளம் தெரியும்... Followers ஆகி விட்டேன்... இனி தொடர்கிறேன்... நன்றி...

http://azifair-sirkali.blogspot.in/2012/10/blog-post_18.html ///

உடனே அவர்குறிப்பிட்ட தளத்திற்கு சென்று பார்த்தேன். அனுபவத்தில் யோசித்து யோசித்து நான் எழுதிய மேலே சொன்ன  கட்டுரையை அந்த வலைப் பதிவில் ஒரு பதிவர் , பெயர் Abdul aziz Abdul sathar  , தனது பெயரில் தான் எழுதியது போன்று போட்டுள்ளார். அவருடைய வலைத் தளத்தின் பெயர் “ சீர்காழி – azifair “ என்று இருந்தது. தலைப்பை சற்று மாற்றி கூகுளும் ஆங்கில மருந்துகளின் விளக்கங்கள் “ என்று வைத்துள்ளார். உள்ளே எனது தலைப்போடு நகல் மற்றும் ஒட்டு ( COPY AND PASTE )  முறையில் படங்களோடு  எனது கட்டுரையை போட்டுள்ளார். நன்றி என்று எனது பெயர் போட்டு  இருந்தாலும் பரவாயில்லை. கவனமாக எனது பெயரை நீக்கி உள்ளார். ஒரு பதிவரே இதுமாதிரி செய்து இருப்பது மிக்க வருத்தமாக உள்ளது. சீர்காழி என்ற பெய்ரில் உள்ள இந்த பதிவர் Abdul aziz Abdul sathar  என்பவர் அப்படியே எனது கட்டுரையை Face Book இலும் தனது பெயரில் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. இருந்தாலும் அவருடைய பதிவிற்கு சென்று அவருடைய Comment Box – இல் நாகரிகமாக

// நண்பரே! அனுபவத்தில் யோசித்து யோசித்து நான் எழுதிய இந்த http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_19.html கட்டுரையை அப்படியே எடுத்து தங்கள் வலைப் பதிவில்  உங்களது  பெயரில் நீங்கள்  எழுதியது போன்று போட்டுள்ளீர்களே இது நியாயமா?. நன்றி என்று எனது பெயர் போட்டு இருந்தாலும் பரவாயில்லை! Face Book இலும் பகிர்ந்து இருக்கிறீர்கள் போல் தெரிகிறது. உங்கள் இறைவன் மீது உண்மையான நம்பிக்கை உள்ளவராக இருப்பின் மனசாட்சிப்படி நடந்து கொள்ளவும்! //

கருத்துரை இட்டேன். அவர் இப்பொழுது வரை எனது கருத்தினை படிக்கவில்லை போல் இருக்கிறது. அவரது தளத்தில் எனது கட்டுரை அப்படியே உள்ளது. இது மாதிரி ஆசாமிகளை என்னவென்று சொல்வது. இது போல் எனது கட்டுரைகளை எத்தனை பேர் காப்பி எடுத்து தங்களது பெயரில் போட்டுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை!.

மூத்த பதிவராகிய திரு VGK ( வை.கோபாலகிருஷ்ணன் ) அவர்கள்

//ஐயா, மிக நல்ல பதிவு. இன்று கூகுள் மூலம் பலவிஷயங்களை அறிய முடிகிறது என்பது மிகவும் சரியே.
தாங்கள் கஷ்டப்பட்டு எழுதின பதிவை வேறொருவர் COPY + PASTE செய்துள்ளார் என்பது கேட்க மிகவும வருத்தமாகத்தான் உள்ளது. உங்களிடம் அனுபதி பெற்று அதனை அவர் வெளியிட்டு, அதில் உங்களின் பெயரையும் எழுதிநன்றிஎனப்போட்டிருந்தால் நாகரீகமாக இருந்திருக்கும்.//

என்று எனது பதிவின் பின்னூட்டத்தில் தெரிவித்தார்.

எனவே கஷ்டப்பட்டு யோசித்து யோசித்து எழுதும் நண்பர்களே உங்கள் பதிவுகளையும் ஒருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்!


37 comments:

  1. நானும் முகநூலில் எனது கவிதைகளை என் பெயர் இல்லாமல் போட்டிருந்தவர்களுடன் சண்டையிட்டேன் எனினும் திருந்தியதாக தெரியவில்லை. நம் ஆதங்கம் நம்மோடே முடிகிறது.

    ReplyDelete
  2. அந்த திருட்டு கழுதைகளை திருத்த முடியாது. திருத்தமுடியாத ஜென்மங்கள்

    ReplyDelete
  3. சொந்தமாக எதையும் சிந்தித்து எழுத முடியாதவர்கள் எதற்கு பதிவு எழுதுகிறார்கள்.
    நல்ல விடயங்களை பகிர விரும்பினால் யார் மூலத்தை எழுதினார்களோ அவர்களின் விபரத்தை போட்டு விட்டு எழுதலாமே.
    இந்த மாதிரி அறிவு திருட்டுகளை இந்த திருடர்கள் எப்போதுதான் நிறுத்த போகிறார்களோ தெரியவில்லை

    ReplyDelete
  4. "அதில் உங்களின் பெயரையும் எழுதி ”நன்றி” எனப்போட்டிருந்தால் நாகரீகமாக இருந்திருக்கும்"
    நாகரீகத்தையும் நேர்மையும் இந்தமாதிரி ஜென்மங்களிடம் எதிர்பார்க்க முடியாது.
    வார்த்தை கடுமையாக பாவித்திருக்கிறேன். எனக்கு வாழ்க்கையில் முன் ஏற்பட்ட இமாதிரியான சம்பவத்தினால் எனக்கு உங்களுக்கு ஏற்பட்ட வலி புரியும்.

    ReplyDelete
  5. முந்தைய பகிர்வில் கருத்திட்டதை மறுபடியும் இங்கே கருத்திடுகிறேன். பின்வரும் நண்பர்களுக்கும்... சில அறிவு(ஜி)ஜீவுகளுக்கும் உதவலாம்...

    http://tamilcomputercollege.blogspot.in

    இந்த தளத்தில் நிறைய உள்ளன... தேவைப்படுவதை பயன்படுத்திக் கொள்ளவும்...

    முக்கியமாக : இவை இரண்டும் மிகவும் உதவும்...

    (1) http://tamilcomputercollege.blogspot.in/2012/09/blog-post_19.html (திருடப்பட்ட பதிவுகளை கண்டுபிடித்து திருட்டு வலைப்பக்கங்களில் இருந்து நீக்குவது எப்படி?)

    (2) http://tamilcomputercollege.blogspot.in/2012/08/jquery-methord.html (பதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு (jQuery Method)...)

    (2) எளிதாக HTML-இல் சேர்க்கலாம்...

    நன்றி சார்...

    dindiguldhanabalan@yahoo.com
    9944345233

    ReplyDelete
  6. இப்படியும் சிலர்....

    நான் காலையில் தங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் படித்தீர்களா?

    ReplyDelete
  7. http://support.google.com/bin/request.py?contact_type=lr_dmca&product=blogger

    உள்ள படிவத்தை நிரப்பி submit செய்ய வேண்டும்


    ReplyDelete
  8. இது நிஜமாகவே கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். ஒரு பதிவு பிடித்த்திருந்தால் அது இன்னும் பலருக்கு சென்றடைய வேண்டும் என்று விரும்பினால் சம்மந்தப்பட்ட பதிவின் சுட்டியைத்தான் கொடுக்க வேண்டுமே தவிர இப்படி திருடி பதிவிடக்கூடாது. அது அடுத்தவரின் குழந்தைக்கு தன் பெயரை இன்ஷியலாக போடுவதை போல்.

    ReplyDelete
  9. இது நிஜமாகவே கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். ஒரு பதிவு பிடித்த்திருந்தால் அது இன்னும் பலருக்கு சென்றடைய வேண்டும் என்று விரும்பினால் சம்மந்தப்பட்ட பதிவின் சுட்டியைத்தான் கொடுக்க வேண்டுமே தவிர இப்படி திருடி பதிவிடக்கூடாது. அது அடுத்தவரின் குழந்தைக்கு தன் பெயரை இன்ஷியலாக போடுவதை போல்.

    ReplyDelete
  10. மறுமொழி > Sasi Kala said...

    // நானும் முகநூலில் எனது கவிதைகளை என் பெயர் இல்லாமல் போட்டிருந்தவர்களுடன் சண்டையிட்டேன் எனினும் திருந்தியதாக தெரியவில்லை. நம் ஆதங்கம் நம்மோடே முடிகிறது. //

    வலைபதிவை பிடித்த சாபம் இது. நீங்கள் சொல்வதுபோல் திருந்தமாட்டார்கள் போலிருக்கிறது. சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  11. Anonymous said... (1) (2)

    // அந்த திருட்டு கழுதைகளை திருத்த முடியாது. திருத்தமுடியாத ஜென்மங்கள் //

    //வார்த்தை கடுமையாக பாவித்திருக்கிறேன். எனக்கு வாழ்க்கையில் முன் ஏற்பட்ட இமாதிரியான சம்பவத்தினால் எனக்கு உங்களுக்கு ஏற்பட்ட வலி புரியும். //

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட வலியை நானும் இன்று உணர்கிறேன். நெஞ்சில் ஒரு முள் – இது டாக்டர் மு.வ அவர்களது நாவல் ஒன்றின் பெயர்.

    ReplyDelete
  12. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // முந்தைய பகிர்வில் கருத்திட்டதை மறுபடியும் இங்கே கருத்திடுகிறேன். பின்வரும் நண்பர்களுக்கும்... சில அறிவு(ஜி)ஜீவுகளுக்கும் உதவலாம்...//

    உங்கள் சேவை வலைப் பதிவர்களுக்கு அவசியம் தேவை. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said..

    தங்கள் வருகைக்கு நன்றி! தாங்கள் அனுப்பிய மின்னஞ்சலை காலையிலேயே பார்த்து விட்டேன். நேற்றிலிருந்தே அந்த பதிவரின் செயலால் கொஞ்சம் பதற்றம். (இப்போது சரியாகி விட்டது.) அதனால் உடன் பதில் போட முடியவில்லை.

    ReplyDelete
  14. மறுமொழி > தங்கராசா ஜீவராஜ் said..

    தங்கள் ஆலோசனைக்கு நன்றி! தங்கள் கருத்தினை யோசனை செய்கிறேன்..

    ReplyDelete
  15. இதுபோன்ற செயல்களுக்கு எதிராக எனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் அய்யா!

    ReplyDelete
  16. மறுமொழி > ரஹீம் கஸாலி said...

    உங்கள் அரசியல் கட்டுரைகளை படிப்பவன் நான். உங்கள் பதிவில் கருத்துரைகளை நான் போட்டதில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > வே.சுப்ரமணியன். said...

    உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


    ReplyDelete
  18. காப்புரிமை ஒன்றை பதிவில் புகுத்துவது நல்லது... தவறான செய்கை . நான் அந்த தளத்துக்கும் சென்று பார்த்தேன் . உங்கள் உழைப்பு அப்படியே திருடப் பட்டுள்ளது. இதனை கண்டிக்கிறேன். த.ம. ஒட்டு 2

    ReplyDelete
  19. என்னத்தச் சொல்ல... தன்னம்பிக்கை அற்றவனும். சொந்தமமாக எழுதும் திறமை அற்றவனும்தான் இந்த மாதிரிச் செயலில் ஈடுபடுவான் சார். என் கண்டனங்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  20. மறுமொழி > அருண்பிரசாத் வரிக்குதிரை said...

    சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > பால கணேஷ் said...

    மின்னல்வரிகள் கணேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  22. சுயமாக பதிவு எழுதமுடியாமல் பிறர் எழுதியதை படி எடுத்து பதிவு செய்யும் இவர்களுக்கும், மருத்துவமனையில் குழந்தை திருடுபவர்களுக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. நானும் என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  23. இதைவிட கேவலம் எதுவுமி்ல்லை!

    ReplyDelete
  24. தங்கள் மனநிலை புரிகிறது நண்பரே..

    ReplyDelete
  25. நானும் பலமுறை இதுபோன்ற அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம்

    பதிவுலகத் திருடர்கள் வாழ்க..
    http://www.gunathamizh.com/2012/03/blog-post_27.html

    என்று வாழ்த்திவிட்டுச் சென்றுவிடுவேன்.

    தேனீ சேமித்து வைத்த தேனைத் திருடலாம்
    ஆனால் தேனீயிடமிருக்கும் முயற்சியை யாரும் திருடமுடியாது என்பது என் புரிதல் நண்பரே..

    தங்களால் இன்னும் பல பயனுள்ள, இதைவிட சிறந்த கட்டுரைகளை வழங்கமுடியும்..

    தொடர்ந்து எழுதுங்க..

    ReplyDelete
  26. மறுமொழி > வே.நடனசபாபதி said...
    // சுயமாக பதிவு எழுதமுடியாமல் பிறர் எழுதியதை படி எடுத்து பதிவு செய்யும் இவர்களுக்கும், மருத்துவமனையில் குழந்தை திருடுபவர்களுக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. நானும் என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். //

    அய்யா நீங்கள் சொல்வதைப் போன்று மருத்துவமனையில் குழந்தைகளைத் திருடுபவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லைதான். தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > புலவர் சா இராமாநுசம் said...
    // இதைவிட கேவலம் எதுவுமி்ல்லை! //

    புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி > முனைவர்.இரா.குணசீலன் said... ( 1 )

    // தங்கள் மனநிலை புரிகிறது நண்பரே //

    ஒரு மாணவனின் மனநிலையை அறிந்து கொள்ளும் ஆசிரியரைப் போன்று எனது மன ஓட்டத்தையும் சரியாக சொல்லி விட்டீர்கள்! முனைவருக்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > முனைவர்.இரா.குணசீலன் said... ( 2 )

    // நானும் பலமுறை இதுபோன்ற அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் பதிவுலகத் திருடர்கள் வாழ்க..http://www.gunathamizh.com/2012/03/blog-post_27.html
    என்று வாழ்த்திவிட்டுச் சென்றுவிடுவேன். //

    // தங்களால் இன்னும் பல பயனுள்ள, இதைவிட சிறந்த கட்டுரைகளை வழங்கமுடியும்..//

    // தொடர்ந்து எழுதுங்க..//
    நீங்கள் குறிப்பிட்ட உங்கள் பதிவினையும் படித்தேன். உங்கள் கருத்துரையும் அனுபவமும் பதிவர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் ஆக இருக்கிறது. என்னை ஊக்கப்படுத்திய உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. வருகைக்கும் கருத்துரைக்கும் மீண்டும் நன்றி!






    ReplyDelete
  30. அன்புள்ள ஐயா,

    வணக்கம்.

    நம் போன்ற சிலருக்கு, கற்பனை இருந்தும், நாம் சொல்லத்துடிக்கும் அனுபவங்களும், காட்சிகளும், வர்ணனைகளும் ஏராளமாகவும் தாராளமாகவும் மனதில் இருந்தும்,

    நேரமின்மை
    உடல்நலமின்மை
    மனதில் மகிழ்ச்சியின்மை
    குடும்பப்பொறுப்புகள்
    சொந்தபந்தங்கள் வருகை
    விருந்தினர் வருகை
    தொடரும் மின்தடைகள்
    நெட்பிரச்சனைகள்
    கணினியில் கோளாறுகள்

    என பல்வேறு காரணிகள் நம்மைப் பதிவேதும் இட முடியாமல் தடுத்து வருகின்றன.

    இதுபோன்ற சூழ்நிலைகளில் தாங்கள் எவவளவோ
    சிரமங்களுக்கு இடையே பதிவிட்டும், அது பிறரால் இதுபோன்று MISUSE செய்யப்படுகிறது என்றால் அது கொடுமையிலும் கொடுமை தான்.

    தங்களின் வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

    இதைத் தடுப்பதற்கான மற்ற விஷயங்கள் நான் தங்களுக்குத் தொலைபேசியில் சொன்னபடி முயற்சித்துப்பாருக்கள், ஐயா.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  31. வருத்தமாகத்தான் உள்ளது.ஆயினும் என்னசெய்வது
    களையென்பது அனைத்திற்குள்ளும்
    நீக்கமற நிறைந்துதான் உள்ளது
    ஒன்று காத்துக் கொள்ள்ளமுயலவேண்டும்
    அல்லது காணாதுவிட்டுவிடவேண்டும்
    என்பது எனது கருத்து

    ReplyDelete
  32. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள திரு VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


    ReplyDelete
  33. மறுமொழி > Ramani said...

    கவிஞரின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


    ReplyDelete
  34. இன்று வரை அந்தப் பதிவர் அந்தப் பதிவை நீக்கவும் இல்லை, பதிலும் சொல்லவில்லை, வருத்தமும் தெரிவிக்கவில்லை என்பது கூடுதல் வேதனை!

    ReplyDelete
  35. ஹூம், வேதனை தான். அதிலும் இன்று வரையிலும் அவர் தன் வெட்கங்கெட்ட தனத்திற்காக மன்னிப்புக் கேட்கவில்லை. :( டிடி சொல்லி இருக்கிறாப்போல் தான் செய்ய இன்னொரு நண்பரும் வலியுறுத்தி இருந்தார். ஆனால் ஹெச்டிஎம்மெல்லில் போய்ச் செய்ய வேண்டாம் என்று சிலர் சொல்கின்றனர். ஆகவே ஒண்ணும் செய்ய முடியவில்லை. என்னோட பல பதிவுகள் காப்பி பண்ணப்பட்டிருக்கின்றன. :(

    ReplyDelete
  36. இங்கும் திருட்டா? வேதனை..

    ReplyDelete