Monday 27 August 2012

சர்க்கஸ் - பழைய நினைவுகள்


போகின்ற போக்கைப் பார்த்தால் வருகின்ற தலை முறையினருக்கு சர்க்கஸ் என்றால் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே போய்விடும் போல் இருக்கிறது. விலங்குகள வதை தடை சட்டம், குழந்தை தொழிலாளர் தடை சட்டம் போன்றவற்றை எதிர்கொள்ள முடியவில்லை என்று,  பல சர்க்கஸ் கூடாரங்கள் காலியாகி விட்டன.

ஊருக்குள் சர்க்கஸ்:

ஊருக்குள் சர்க்கஸ் வந்து விட்டதன் அடையாளம். டும் டும் “ என்று பேண்ட் வாத்திய சத்தம். யானை, ஒட்டகம் என்று சில மிருகங்களோடு ஒரு சின்ன ஊர்வலம். கூடவே கோமாளி வேடம் அணிந்த ஒருவர் விளம்பர நோட்டீஸ்களை கொடுத்துக் கொண்டே செல்வார். வேடிக்கை பார்த்துக் கொண்டே நாங்களும் (சின்ன வயதில்தான்) கொஞ்ச தூரம் செல்வோம். திருச்சியில் அப்போது பெரும்பாலும் சர்க்கஸ் கீழபுலிவார்டு (முருகன் டாக்கீஸ் ) சாலையில் உள்ள டாக்டர் மதுரம் விளையாட்டு மைதானத்தில்தான் நடைபெறும். (இப்போது சர்க்கஸ் போலவே அந்த மைதானமும் பழைய நிலைமையில் இல்லை. அது மார்க்கெட் லாரிகள் நிறுத்தும் இடமாக மாறி விட்டது.) மேலும் அந்த மைதானம், காவிரி ஆற்றுக்கு அருகாமையில் இருந்தபடியானால் யானைகள், ஒட்டகம் போன்றவற்றை குளிப்பாட்ட அழைத்து வருவார்கள். அவைகள் ஆற்றில் குளிக்கும் போது வேடிக்கை பார்ப்பதற்கென்றே ஒரு கும்பல் நின்று கொண்டே இருக்கும்.

சர்க்கஸ் கூடாரம்:

சர்க்கஸ் கூடாரம் நன்கு பெரிதாக அடைக்கப்பட்டு இருக்கும். கூடாரத்தின் பல இடங்கள் கிழிந்துபோய் ஒட்டு போட்டு இருப்பார்கள். உள்ளேயிருந்து மேலே கூடாரத்தைப் பார்த்தால் சில இடங்களில் பெரிதாக இருக்கும் ஓட்டை வழியே ஆகாயம் தெரியும்.. வாசலில் பல்வேறு வண்ணக் கொடிக் கம்பங்களைக் காணலாம். கூடாரத்தின் பக்கவாட்டில், கூண்டு வண்டிகளில் அடைககப் பட்டிருக்கும் சிங்கங்களின் உறுமல், வெளியே கட்டப்பட்டு இருக்கும். குதிரைகளின் கனைப்பொலி இவைகளைக் கேட்கலாம். ஒட்டகங்கள் நின்று கொண்டு அல்லது படுத்துக் கொண்டு அசைபோட்ட வண்ணம் இருக்கும். யானைகள் தும்பிககையை ஆட்டியபடி அசைந்து கொண்டே நின்று கொண்டு இருக்கும். எல்லா விலங்குகளும் கட்டிப் போட்டுதான் இருக்கும். அந்த இடத்திலிருந்து மிரு்கங்களின் சாண வாடை வந்து கொண்டே இருக்கும். எங்களைப் போன்ற சிறுவர்கள் உள்ளே வந்து விடாதபடி காவலாளி ஒருவன் வாசலிலேயே விரட்டிக் கொண்டு இருப்பான்

சர்க்கஸ் காட்சிகள்:

பாம்பே சர்க்கஸ், இந்தியன் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ் என்று பிரபலமான யாவும் திருச்சியில் சர்க்கஸ் காட்சிகளை நடத்தி உள்ளனர். திருச்சியில் உள்ள யாரேனும் ஒரு முக்கிய புள்ளியை வைத்து சர்க்கஸ் நிகழ்ச்சியின் முதல்நாளை தொடங்குவார்கள். பெரும்பாலும் மாலை நேரம்தான் சர்க்கஸ் காட்சிகள் தொடங்கும். விடுமுறை நாட்களில் மட்டும் பிற்பகல் காட்சியோடு இரண்டு காட்சிகள். வெளியூர்க்காரர்களுக்கு வசதி. என்ன இருந்தாலும் மாலை நேரம் தொடங்கி  இருட்டில் பிரகாசமான விளக்குகள் மத்தியில் நடைபெறும் சர்க்கஸ் காட்சிகள்தான் ரசிக்க நன்றாக இருக்கும்.

சர்க்கஸ் கூடாரத்தில் உள்ளே குறைந்த கட்டணத்தில் காலரிகளும், அதிக கட்டணத்தில் சர்க்கஸ் அரங்கத்தை ஒட்டி நாற்காலிகளும் இருக்கும். சர்க்கஸ் சாகசக் காட்சிகளை சொல்லுவதைவிட நேரில் பார்த்தால்தான் அதன் அருமை தெரியும். வண்ண வண்ண கொடிகளுடன் குதிரைகள், ஒட்டகங்கள், யானைகள், அழகு மங்கையர், சித்திரக் குள்ளர்கள் என்று அணிவகுப்பு. அதன் பின்னர் காட்சிகள் தொடங்கும்.  




குதிரைகள் ஓடுதல், தடைகளை தாண்டுதல், குதிரைவீரர்கள் சாகசம் ; பெரிய பெரிய கிளிகளின் ( பலூனை துப்பாக்கியால் சுடுதல் போன்ற) சாகசங்கள் நடைபெறும். சர்க்கஸ் ரிங் மாஸ்டர் சிங்கம், புலிகளை நாற்காலியில் உட்கார வைப்பார். சிங்கத்தின் ஆவென்று திறந்த வாயில் ஒருவர் தலையை வைத்து எடுப்பார். கரடி சைக்கிள் ஓட்டும். பெரும்பாலும் துஷ்ட மிருகங்கள் காட்சிகளின்போது பாதுகாப்பிற்காக இரும்பு வேலியை வட்டமாக அகலமாக அமைத்து விடுவார்கள். யானைகள் சாகசத்தின் போது அவைகள் நாற்காலியில் உட்காரும், பந்து விளையாடும் , ஒரு பயில்வான் வயிற்றின் மீது இருக்கும் பலகையில் ஏறி நடக்கும் முதலான காட்சிகள் நடைபெறும். இடையிடையே சர்க்கஸ் கோமாளிகள், சித்திரக் குள்ளர்கள் சிரிப்பு மூட்டுவார்கள்.  ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று பாரில் தொங்குதல், ஊஞ்சலில் ஆடுதல் உடம்பை வில்லாய் வளைத்தல், கத்தியை விழுங்குதல், ஒருவரை நிற்க வைத்து ஒருவர் அவரைச் சுற்றி கத்தியை வீசுதல் நடைபெறும். மரணக்கூண்டு எனப்படும் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்வார்கள்.

சில நினைவுகள்:

சிறுவயதில் கார்லோ கல்லோடி (Carlo Callodi)  எழுதிய பினாச்சியோ ( Pinocchio ) ஒரு மரப்பாவையின் கதை என்ற நூலை தமிழில் படித்து இருக்கிறேன். அதில் வரும் சர்க்கஸ் சம்பவங்கள் மறக்க முடியாதவை. எம்ஜிஆரும் சரோஜாதேவியும் நடித்த “ பறக்கும் பாவை “ என்ற படம் முழுக்க முழுக்க சர்க்கஸ் கலைஞர்கள் கதைதான். நாகேஷ் செய்யும் காமெடி வயிறு குலுங்க வைக்கும். அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சர்க்கஸ் கோமாளியாக குள்ளக் கமல் வேடத்தில் ( தந்திரக் காட்சி) நடித்துள்ளார்

( ALL PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )



குலமகள் ராதை என்று ஒரு படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தது. அதில் சர்க்கஸ் ஊஞ்சல் ஆட்டத்துடன் ஒரு பாடல். கருத்தாழம் மிக்க பாடல். இதோ ..... ...

இரவுக்கு ஆயிரம் கண்கள்
பகலுக்கு ஒன்றே ஒன்று (2)
 

அறிவுக்கு ஆயிரம் கண்கள்
உறவுக்கு ஒன்றே ஒன்று (2)    (இரவுக்கு)

கணக்கினில் கண்கள் இரண்டு
அவை காட்சியில் ஒன்றே ஒன்று (2)
 

பெண்மையின் பார்வை ஒரு கோடி
அவை பேசிடும் வார்த்தை பல கோடி (2)  (இரவுக்கு)

அங்கும் இங்கும் அலைபோலே
தினம் ஆடிடும் மானிட வாழ்விலே (2)
 

எங்கே நடக்கும் எது நடக்கும்
அது எங்கே முடியும் யாரரிவார் (2)    (இரவுக்கு)

-         பாடல்: கண்ணதாசன் (படம்: குலமகள் ராதை)














22 comments:

  1. /திருச்சியில் அப்போது பெரும்பாலும் சர்க்கஸ் கீழபுலிவார்டு (முருகன் டாக்கீஸ் ) சாலையில் உள்ள டாக்டர் மதுரம் விளையாட்டு மைதானத்தில்தான் நடைபெறும்.//

    அந்த நாள் .... ஞாபகம் ..... நெஞ்சிலே ....
    வந்ததே!

    இந்த நாள் .... அன்று போல் .... இன்பமாய் ...
    இல்லையே .....

    அது ஏன் ..... ஏன் நண்பரே !!

    உங்கள் பாணியில் ”உயர்ந்த மனிதன்” என்ற சிவாஜி படத்திலிருந்து. எனக்கு மிகவும் பிடித்தமான படம். பலமுறை பார்த்த படம்.

    ReplyDelete
  2. சர்க்கஸ் நடைபெறுகிறது என்பது பற்றி, ஆகாயத்தில் வானவில் போல இரவினில் லைட் அடித்தூக் காட்டிக்கொண்டே இருப்பார்களே!

    பகலில் ராக்ஷஸ பலூன்களை பறக்க விடுவார்களே!

    அதைப்பார்க்கவே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!

    விளம்பரம் என்றால் அதுவல்லவோ விளம்பரம்.

    ReplyDelete
  3. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் என் அலுவலகத்திலிருந்து, என்னை ஹைதராபாத்துக்கு, 15 நாட்கள் ”அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு” அனுப்பியிருந்தார்கள்.

    அதுசமயம் அங்குள்ள ராமோஜிராவ் [Film City] திரைப்பட நகரத்திற்குச் சென்று ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம்.

    பல புகைப்படங்கள் எடுத்து வந்தேன். அருமையான இடம். கிட்டத்தட்ட சர்க்கஸ் போலவே தான். மிருகங்கள் மட்டும் அதிகம் இல்லை. சர்க்கஸ் போலவே சிறுவயதினரின் ஆடல் பாடல் அபூர்வமான சாகஸங்கள் அனைத்தும் பார்த்து மகிழ்ந்தேன்.

    சினிமா என்பது எப்பேர்பட்ட பொய்யான மாய உலகம் என்பது அங்கு போய் வந்தால் தான் புரியும்.

    சண்டைக்காட்சிகள் எப்படி எடுக்கப்படுகின்றன. குதிரையை ஒருத்தி ஓட்ட பல வீரர்கள் அவளைத் துரத்துவது போன்ற காட்சிகள் எப்படி படமாக்கப்படுகின்றன என்பது போன்ற பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

    உள்ளே செல்லக்கட்டணம் ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு ரூ, 1000 [ஆயிரம்]. ஆனால் 1000 ரூபாய் கொடுப்பது worth தான் என்பது அங்கே போய் வந்தால் மட்டுமே புரியும்.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அன்புடன்,
    VGK

    ReplyDelete
  4. 'சந்திரலேகா' படத்தில் வந்த சர்க்கஸ் காட்சிகளை சொல்லலையே. அதில் எல்லா வித்தைகளையும் பார்க்கலாம்.
    சகாதேவன்

    ReplyDelete
  5. REPLY TO வை.கோபாலகிருஷ்ணன் said... (1,2,3 )

    VGK அவர்களுக்கு வணக்கம்! பதிவர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தும், வெளிப்படையான மனதுடன் (Strraight forward – ஆக) இருக்கும் நீங்கள்தான் உண்மையில் “ உயர்ந்த மனிதன்”.
    // சர்க்கஸ் நடைபெறுகிறது என்பது பற்றி, ஆகாயத்தில் வானவில் போல இரவினில் லைட் அடித்தூக் காட்டிக்கொண்டே இருப்பார்களே! பகலில் ராக்ஷஸ பலூன்களை பறக்க விடுவார்களே! அதைப் பார்க்கவே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! விளம்பரம் என்றால் அதுவல்லவோ விளம்பரம். //
    நீங்கள் குறிப்பிட்ட இந்த நினைவுகளை எப்படி மறந்தேன்? உங்கள் நினவூட்டலுக்கு நன்றி!
    // 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் என் அலுவலகத்திலிருந்து, என்னை ஹைதராபாத்துக்கு, 15 நாட்கள் ”அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு” அனுப்பியிருந்தார்கள். அதுசமயம் அங்குள்ள ராமோஜிராவ் [Film City] திரைப்பட நகரத்திற்குச் சென்று ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். பல புகைப்படங்கள் எடுத்து வந்தேன். //
    இந்த நினைவுகளை படங்களோடு ஒரு பதிவாகப் போடுங்கள். நன்றாக இருக்கும். மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.





    ReplyDelete
  6. REPLY TO … சகாதேவன் said...

    // 'சந்திரலேகா' படத்தில் வந்த சர்க்கஸ் காட்சிகளை சொல்லலையே. அதில் எல்லா வித்தைகளையும் பார்க்கலாம்.
    சகாதேவன் //

    தங்கள் முதல் வருகைக்கு நன்றி! “ சந்திரலேகா ” வை ரசித்த தலைமுறைக்கு அடுத்துப் பிறந்த தலைமுறை நான். எனவே எனக்கு அந்த படம் ஞாபகம் வரவில்லை. நினைவூட்டலுக்கு நன்றி! நேரம் கிடைக்கும் போது உங்கள் வலைப் பக்கம் வருகிறேன்.



    ReplyDelete
  7. தி.தமிழ் இளங்கோ சார்,

    உங்கள் சர்க்கஸ் மலரும் நினைவுகள் அருமை.

    ஆனால் சர்க்கஸ் என்பது தேவை இல்லை. கரடியோ, யானையோ ,சிங்கமோ மனிதனை மகிழ்வூட்டப்பிறக்கவில்லை, காட்டில் சுந்திரமாக இருக்க வேண்டியவைகளை பிடித்து வந்து அதனை சைக்கிள் ஓட்ட, பந்து விளையாட, நெருப்பு வளையத்தில் பாய என குட்டியாக இருக்கும் போதே ப்யிற்சி என்றப்பெயரில் எத்தனை வதைகள் கொடுத்திருப்பார்கள்.

    தவறாக பயிற்சியில் செய்தால் அடி கிடைக்கவே செய்யும், இதெல்லாம் மனிதர்களின் சிறிது நேர பொழுதுப்போக்கிற்காக தேவையா?

    அன்னை ஓர் ஆலயம் படத்திலயே சர்க்கஸுக்காக விலங்குகளைப்பிடிப்பது தவறு என்று காட்டியிருப்பார்கள்.

    ReplyDelete
  8. இப்போதும் சர்கஸ் கம்பெனிகள் செயல்படுகின்றனவா இளங்கோ சார் (TM 1)

    ReplyDelete
  9. அருமையான அலசல் சார்...

    பிடித்த பாடல்...


    பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

    ReplyDelete
  10. REPLY TO …. வவ்வால் said...

    // உங்கள் சர்க்கஸ் மலரும் நினைவுகள் அருமை.
    ஆனால் சர்க்கஸ் என்பது தேவை இல்லை. //

    எனது மலரும் நினைவுகளைப் பற்றி பாராட்டிய வவ்வால் சாருக்கு நன்றி! சர்க்கஸ் தேவையா இல்லையா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் ஒரு காலத்தில் மனித குலத்திற்கு யானைப் படை, குதிரைப் படை தேவைப் பட்டது. சென்ற நூற்றாண்டு வரை பயன்பட்ட மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் இப்போது படிப்படியாக குறைந்து விட்டன. சர்க்கஸ் தேவையா? இல்லையா? என்று தனியாக ஒரு தலைப்பில்தான் எழுத வேண்டும்.

    ReplyDelete
  11. REPLY TO ……..வரலாற்று சுவடுகள் said...

    // இப்போதும் சர்க்கஸ் கம்பெனிகள் செயல்படுகின்றனவா இளங்கோ சார் (TM 1)//

    தம்பியின் வருகைக்கு நன்றி! ஆங்காங்கே சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நாட்டில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. முன்புபோல் விலங்குகள் காட்சிகள் இல்லை என்று கேள்விப் பட்டேன்.


    ReplyDelete
  12. நான் சர்க்கஸ் ரசிகன்
    கிராமத்தில் நடைபெறும் சிறுசர்க்கஸ் முதல்
    ஆசியாவின் மிகப்பெரிய என விளம்பரத்துடன் வரும்
    ஜெமினி சர்க்கஸ் வரை அனைத்தையும் தவறாது
    பார்த்து விடுவேன்
    பழைய நினைவுகளில் மூழ்கச் செய்து போனது
    தங்களின் அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. REPLY TO …….. திண்டுக்கல் தனபாலன் said...

    // அருமையான அலசல் சார்...//

    திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி! உங்கள் ஊரில் நடக்கும் திருவிழா, பொருட்காட்சிகளைப் பற்றி படங்களுடன் ஒரு பதிவைப் போடவும்.

    ReplyDelete
  14. REPLY TO …….. Ramani said...

    // நான் சர்க்கஸ் ரசிகன் ...... பழைய நினைவுகளில் மூழ்கச் செய்து போனது தங்களின் அருமையான பதிவு ..... //

    கவிஞர் ரமணி அவர்களே! நீங்கள் ஒரு சர்க்கஸ் ரசிகன் என்பதில் மகிழ்ச்சி! பதிவை பாராட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
  15. அழகிய நினைவூட்டல் சார்! குலமகள் ராதை, பறக்கும் பாவை இவ்விரு படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை! அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் அவர்களின் நடிப்பை ரசித்துள்ளேன் சார்!, பினாச்சியோ புத்தகத்தின் குறிப்பிறகு நன்றி சார்! எனது சிறு வயதில் 10 வருடங்களுக்கு முன்பு தாங்கள் குறிப்பிட்ட சில நிகழ்வுகளோடு ஒரு சர்க்கஸ் பார்த்திருக்கிறேன் சார்! சில விஷயங்களை நினைவுக்கு கொண்டு வர வைத்தது சார்!

    ReplyDelete
  16. நல்ல பகிர்வு. நான் சிறு வயதில் ஜெமினி சர்க்கஸ் பார்த்திருக்கிறேன். அதுவும் விஜயவாடாவில் - “ஜெமினி அம்மாயிலு, ஜெமினி அப்பாயிலு” என்று தெலுங்கில் சொல்வார்கள் அறிமுகம் போது.

    இனிய நினைவுகளை மீட்டெடுத்த பகிர்வு. வாழ்த்துகள்.

    எங்க நம்ம பக்கம் காணோமே சில பதிவுகளாய்!

    ReplyDelete
  17. REPLY TO …. … யுவராணி தமிழரசன் said...
    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நேரம் கிடைக்கும்போது பழைய தமிழ் திரைப் படங்களையும் பாருங்கள். அவற்றின் பாடல்களையும் கேளுங்கள்.

    ReplyDelete
  18. REPLY TO …. … வெங்கட் நாகராஜ் said...

    // இனிய நினைவுகளை மீட்டெடுத்த பகிர்வு. வாழ்த்துகள்.
    எங்க நம்ம பக்கம் காணோமே சில பதிவுகளாய்! //

    சகோதரரின் வருகைக்கு நன்றி! கொஞ்ச நாட்களாகவே வலைப் பதிவில் பதிவுகளை படிக்க மட்டுமே நேரம் கிடைத்தது. எல்லோருக்கும் கருத்துரைகள் எழுத முடியாத சூழ்நிலை எனக்கு அமைந்து விட்டது. உங்களை மறக்க வில்லை.

    ReplyDelete
  19. சர்க்கஸ் பற்றி சரம் சரமாய் நினைவலைகள்.. அருமை.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  20. REPLY TO இராஜராஜேஸ்வரி said...

    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete