Saturday 26 December 2015

சிம்புவின் கழிவறைப் பாடல்



இப்போது கொஞ்ச நாட்களாகவே நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு சிம்பு பாடிய ஒரு பாடலை எல்லோரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். போயும் போயும் இந்த பாடலை கேட்பதா என்று எனக்கு அதில் கேட்க ஆர்வம் இல்லை. அய்யா ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் பகிர்ந்த ஒரு பதிவை வைத்து “ தடை செய்ய வேண்டிய சிம்பு-அனிருத் பாடல்” என்ற பதிவைப் படித்தவுடனேயே (http://valarumkavithai.blogspot.com/2015/12/blog-post_82.html ) அது எப்பேர்பட்ட பாடல் என்பதனைப் புரிந்து கொண்டேன். ஆனால் இப்போது சிம்புவுக்கு ஆதரவாக சிலர் விடும் அறிக்கைகளைப் பார்க்கும் போது பாடலை முதலில் கேட்டுவிட்டு, அப்புறம் எழுதலாம் என்பதால் YOUTUBE இல் இந்த பாடலைக் கேட்டேன்

கழிவறைக் கிறுக்கல்கள்
 
மூன்று மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய “கழிவறைக் கிறுக்கல்கள்http://tthamizhelango.blogspot.com/2015/09/blog-post_54.html என்ற எனது பதிவினில்,

/// இந்த கிறுக்கல்களை பொதுவாக பொதுக் கழிவறைகளில் அல்லது பொது குளியல் அறைகளில் மட்டுமே காணலாம். இவ்வாறு எழுதுவதை கழிவறைக் கிறுக்கல்கள் (Latrinalia) என்று சொல்கிறார்கள். உடம்பில் அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்வதைப் போல, மனதில் உண்டாகும் அரிப்பை போக்கிக் கொள்ள அல்லது தன்னுடைய இயலாமைக்கு வடிகாலாக சிலர் எழுதும் கிறுக்கல்கள்தான் இவை. சிலரின் மனக்குமுறல்களாகவும் இருக்கும். சிலரின் குறுங்கவிதைகளையும் இங்கே காணலாம். பெரும்பாலும் அவசரம் அவசரமாக சாக்பீசாலோ, கரித்துண்டினாலோ, அல்லது ஸ்கெட்ச் பென்சிலாலோ எழுதப்பட்ட குறுஞ்செய்திகள் (SMS என இவற்றை சொல்லலாம். சிலசமயம் சிறிய படங்களாகவும் இருக்கலாம். எழுதுபவரின் மனநிலையைப் பொறுத்தது.///

என்று எழுதி இருந்தேன். 

சிம்புவின் ‘பீப்’ பாடல் 

ஆனால் சிம்புவின் ‘பீப்’ பாடல் என்பது கழிவறையோடு முடிந்து இருந்தால் பரவாயில்லை. கழிப்பறைக்கு வெளியேயும் நாற்றமடிக்கத் தொடங்கியதால்தான் இந்த பிரச்சினை. இந்த பாடலில் அவர் யாரையோ நினைத்து, ஒரு கோபத்தோடு பாடுவதாகவே தெரிகிறது. அந்த சொல்லை மறைப்பதற்கு ‘பீப்’ ஒலி வருகிறது என்கிறார்கள்; ஆனால் காதில் அந்த ‘பீப்’பையும் மீறியே என்ன சொல்லி திட்டுகிறார் என்பது தெரிகிறது. தண்ணி அடித்துவிட்டு ஒருவன் நடுரோட்டில் ஆபாசமாக கத்திக் கத்தி, திரும்பத் திரும்ப , ஆவேசமாக திட்டும் காட்சியை நினைவு படுத்தியது.

/// இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது, "'பீப் பாடல்' வெளியானது பற்றி பலரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்பாடலை முதலில் நான் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. நானும் அனிருத்தும் இணைந்து பல்வேறு தளங்களில் சுமார் 150 பாடல்களை தயார் செய்து வைத்திருக்கிறோம். அதில் இருந்து ஒரு பாடலை திருடி வெளியிட்டு இருக்கிறார்கள்

முதலில் அப்பாடல் ஏதாவது ஒரு படத்திலோ, ஆல்பத்திலோ இடம்பெறவில்லை. அது இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அப்பாடல் குறித்து ஒரு சிலர் நன்றாக இருக்கிறது என்றும், பலரும் அதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நான் ஒரு கேள்வி கேட்கிறேன்... அதே இணையத்தில் தானே போர்ன் (ஆபாச வீடியோ) வீடியோக்களும் இருக்கிறது. தேவை என்றால் தானே போய் பார்க்கிறீர்கள். அதேபோல் தான் பாடல் பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள்.

நான் எனது வீட்டின் படுக்கையறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரம் நான் யாருக்கும் அளிக்கவில்லை. என்னைக் கேள்வி கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து "நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள்" என்று கேட்டால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  /// 

இது சிம்பு என்கிற சிலம்பரசன் தந்த பதில் (நன்றி தி இந்து (தமிழ்) தேதி: டிசம்பர்,12,2015)

கழிவறைக் கிறுக்கலும், குடிகாரன் பேச்சும் அத்தோடு சரி. ஆனால் சிம்புவின் ‘பீப்’ பாடலை அர்த்தம் புரியாமலேயே சிறுவர்களும், அர்த்தம் தெரிந்தே வாலிபர்களும் பொதுவில் ஒலிபரப்ப சாத்தியம் அதிகம். சமுதாயத்தில் மோசமான பின்விளைவுகளை விளைவிக்கக் கூடிய பாடல் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழன் சிம்பு :

இப்போது சிம்புவின் பாடலுக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன. T. ராஜேந்தரும், உஷா ராஜேந்தரும் தங்கள் மகனுக்காக பரிந்து பேசுவதிலாவது அர்த்தம் உள்ளது. அதிலும் ஒரு ’தைரிய லட்சுமி’ சிம்புவை தமிழன் என்பதற்காக பழி வாங்குகிறார்கள் என்று கொதித்தெழுகிறார். (சிலம்பரசன் என்ற அழகான அவரது தமிழ்ப் பெயரை  சிம்புவாக மாற்றிக் கொண்டது அவரது சொந்த விஷயம்) தமிழ், தமிழன் என்று எதற்கெடுத்தாலும் வர்ணம்பூசும் வேலை. இன்னும் சிலர் சிம்புவுக்கு ஆதரவு என்ற பெயரில், மேலும்மேலும் அவருக்கு சிக்கல் உண்டு பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். விளம்பரத்திற்காக இப்படிப் பேசும் இவர்களை என்னவென்று சொல்வது.? பொதுவில் நாகரிகமாகப் பேசவேண்டும் என்பதற்காக, எந்த வார்த்தைகளை எப்படிப் பேசவேண்டும் என்பதற்கு தமிழில் ‘இடக்கரடக்கல்’ என்று ஒரு மரபே உண்டு.. ஆனால் சிம்பு பயன்படுத்தியது இந்த இடக்கரடக்கல்லிலும் வராத பச்சை என்பது வெளிப்படை. இன்னும் சிலர் பழைய தமிழ் சினிமாப் பாடல்களில் எழுதவில்லையா என்று கேட்கிறார்கள். ஆனால் யாரும் இதுபோல் பச்சையாக பாட்டு வடிவில் இசையோடு எழுதவில்லை என்பதே உண்மை.  

சட்டப்படி நடவடிக்கை:

ஆரம்பத்திலேயே சம்பந்தப்பட்டவர்கள், இந்த பாடல் பற்றிய பிரச்சினை தொடங்கியவுடனேயே, வருத்தம் தெரிவித்து விட்டு பாடலை நீக்க முயற்சி செய்து இருக்கலாம். இதில் ஒருவர் புத்திசாலி. நான் இசை அமைக்கவில்லை என்று சொல்லி விட்டார். இன்னொருவர் வீரத்தமிழன். அதனை விட்டு விட்டு, ஆமாம் நான்தான் செய்தேன் என்றதும், இதில் என்ன தப்பு என்று அவருக்காக சிலர் தூபம் போட்டதிலும் பிரச்சினை வேறுமாதிரி வளர்ந்து விட்டது. எனவே சட்டப்படி என்ன நடவடிக்கை என்பதனை நீதிமன்றம்தான் இனி முடிவு செய்யும். (அபராதம் மட்டும் விதித்து விட்டுவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.) பார்ப்போம்.

19 comments:

  1. ஓரத்திலன்றி - வழி நடுவே கிடக்கின்றது நாற்றக் குப்பை..

    ஒதுங்கிச் செல்வதை விட ஒதுக்கித் தள்ளுவது அவசியம்..

    ReplyDelete
  2. இந்த பிரச்சனையே வலுவில்லாதது.இதை வேறு காரணத்துக்காக இதை ஊதி பெரிதாக்கிவிட்டார்கள்.

    ReplyDelete
  3. இந்தப் பாடலுக்கு ஆதரவு தொனிக்கும் வகையில் சிம்புவின் தாய் தந்தையரைத் தவிர்த்துப்பதிவு ஒன்றும் படித்தேன் நான் அந்தப் பாடலைக் கேட்கவில்லை. ஆபாச வார்த்தைகள் கொண்டது என்று புரிகிறது ஆதரவு தொனிக்கும் பதிவில் ஆபாச வார்த்தைகள் பலதும் சாதாரணமாகப் பேசப் படுபவைதான் என்பது போல் இருந்ததுதிரு துரை ராஜுவுடன் உடன் படுகிறேன் ஒதுக்கித் தள்ளுவது அவசியம்

    ReplyDelete
  4. இந்தப் பாடல் பற்றி பல எதிர்ப்புகள் வரும் வரை இந்த பாடலை நான் கேட்கவில்லை. பின் என் நண்பர் ஒருவர் மொபைலில் போட்டுக் காண்பித்தார். அதிர்ந்து போய்விட்டேன். குறைந்தது ஒரு 20 முறையாவது அந்த வார்த்தை பல்லவியிலேயே முதல் வரியிலேயே வருகிறது. அதற்குமேல் அந்த பாடலை கேட்கவில்லை. அதற்குப் பின் நல்ல கருத்துக்கள் எல்லாம் அந்த பாடலில் வருவதாக ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டிருக்கிறது. நான் முழுப் பாடலையும் கேட்காததால் அதுபற்றி எனக்கு தெரியாது. இது மோசமான முன் உதாரணம்.
    கெட்ட வார்த்தை பேசியதால் ஒரு குடும்பம் எப்படி பாதிப்புக்குள்ளானது என்று எனது நண்பரின் மகன் ஒரு குறும்படம் எடுத்தார். ஆனால், இங்கு கெட்ட வார்த்தை பேசுவது சாதாரணமாகிவிடும் போல இருக்கிறது. நாடு எங்கேயோ போகிறது.
    த ம 2

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    இவனுடைய படத்தை ஓடவிடாமல் தடைசெய்ய வேண்டும். நானும் கேட்டேன் இந்தப்பாடலை.. ஆரம்ப கட்டத்திலே கெட்ட வார்த்தை வருகிறது... முற்றாக தடை செய்வோம் பாடலை... த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. சிம்புவின் தராதரம் தெரிந்துவிட்டது. அவரை கைது செய்ய தனிப்படை வைத்து தேடுவது ஓவராகத் தான் தெரிகிறது.சட்டத்தால் அவருக்கு பாதிப்பு ஏதும் இருக்காது என்றே பலரும் கூறுகிறார்கள். என்றாலும் ஒரு தார்மீக மன்னிப்பை கோரி இருக்கலாம்.நிறைய வேலை இருக்கிறது ஒதுக்கித் தள்ளுவோம்.

    ReplyDelete
  7. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம். எல்லோரும் இது பற்றி எழுதினால் அவருக்கு இலவச விளம்பரம் கொடுத்தது போல் ஆகிவிடும். எனவே இது பற்றி இனி பேசாமல் தவிர்த்துவிடுவது நல்லது.

    ReplyDelete
  8. இதுவரை நான் இப்பாடலை கேட்கவில்லை. இருப்பினும் இவை போன்றவை கண்டிக்கத்தக்கவையே.இப்பாடல் மட்டும்தான் இவ்வாறாக உள்ளதா? இவ்வாறான பாடல் இதுவரை வேறு யாருமே பாடவில்லையா? வேறு நிகழ்வுகளை திசை திருப்புவதற்காக இப்பாடல் ஒரு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளப்பட்டு பெரிதாக்கப்பட்டுள்ளதா என்று சிந்திக்கவேண்டியுள்ளது.

    ReplyDelete
  9. இப்போது இந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போய்விட்டதால் இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இங்கே விவாதிக்க முடியாது. ஆனால் இந்த விஷயம் ஊதிப் பெரிதாக்கப்படவேண்டும் என்கிற நோக்கம் இங்கே பலருக்கு வெவ்வேறு காரணங்களுக்காக இருந்திருக்கலாம். ஆனால் இதற்காக இவர்கள் கைக்கொண்ட விஷயம் மிகவும் அருவெறுப்பானது. ஆபாசமானது.
    இணையத்தில் ஆபாசம் இல்லையா, போர்ன் இல்லையா என்றெல்லாம் அபத்தமாய்க் கேள்வி கேட்க இங்கே ஆட்கள் இருக்கிறார்கள். இணையத்தில் ஆபாசம் இருக்கிறதுதான். ஆனால் அதனை வெளிப்படையாக லட்சக்கணக்கான பொதுமக்கள் தேடிப்பிடித்துப் பார்க்கும் விதமாகவும், கேட்கும் விதமாகவும் எடுத்து எல்லார் மத்தியிலும் பந்தி வைப்பதற்கு பிரபலமான சினிமாக்காரர்கள் முனைந்து செயல்படுகிறார்களா? என்பதுதான் கேள்வி.
    அப்படி செயல்பட்டதனால்தான் இது பிரச்சினைக்குரியதாயிருக்கிறது.
    சிம்பு என்பவர் கோடிக்கணக்கான ரூபாய்கள் கொடுத்து ஒரு சினிமாவுக்கு ஒப்பந்தம் செய்யப்படும் கதாநாயகர்.
    இதனை மறந்துவிட்டு இணையத்தில் இல்லாத ஆபாசமா? யாரும் சொல்லாததை, யாரும் பேசாததையா சிம்பு பாடிவிட்டார்? என்று கேள்வி கேட்கும் 'மேதைகளை' எந்த வகையில் புகழ்வது என்று தெரியவில்லை. சிம்புவை விடவும் பெர்வர்டட் கூட்டமாக இவர்களைத்தான் சொல்லவேண்டும்.

    புகழ்வெளிச்சத்தில் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் நம்மை ஆதரிப்பதற்கும் சிலர் அல்லது பலர் இருப்பார்கள் என்ற எண்ணம் பல பிரபலமானவர்கள் மத்தியில் பரவலாக எழுந்துவருகிறது என்பதற்கு சிம்பு விவகாரம் மட்டுமல்ல, இன்னொரு விவகாரமும் இங்கு வெளிச்சத்தில் இருக்கிறது.
    இம்மாதிரியான தவறுகள் கண்டிக்கவும் தண்டிக்கவும் பட்டால்தான் சமூகம் ஒரு ஆரோக்கியமுள்ள சமூகமாக இருக்கும். இல்லாவிட்டால் புழுத்து நாறிப்போன ஒரு சமூகமாகத்தான் இது விளங்கும். இரண்டாவது சமூகமாக முழுக்கவும் மாற்றவேண்டும் எனபதற்காகத்தான் பலர் இங்கே காரியமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

    ReplyDelete
  10. பாடலே உறுத்துகிறதா? இல்லை பாடலில் அச்சொல் மட்டுமே உறுத்துகிறதா? பாடலே உறுத்துகிறதென்றால், பக்தி பாடல்கள் மட்டும்தான் யூ ட்யூபிலோ, தொலைக்காட்சியிலே, விழாக்களின் ஒலிபெருக்கிகளிலோ கேட்கபடவேண்டும். அஃதாவது பக்தி முற்றிய சமூகமாக மாறவேண்டும். ஐ எஸ் எஸ் ஐ, தாலிபான் போன்ற இயக்கங்கள் அதைத்தான் செய்ய விழைகின்றன. ஒரு வேறுபாடு: அவர்கள் பாடல்களோடு நிற்கவில்லை; மேலும், செய்யும் முறையும் தவறு. மற்றபடி வேறுபாடில்லை. அமுதவ‌ன் சார் நம்மை ஆஃப்கானிஸ்தாக்கோ சிரியா பாலைவனத்துக்குகோ கூட்டிச்செல்கிறார். அவர் சொல்லையே வைத்துச்சொன்னால்: நாம்தான் அவரிடமிருந்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

    சிலம்பரசனின் விளக்கம் அருமை. தமிழ் இளங்கோ சாரின் கழிப்பறை வாசகங்கள் பற்றியவையும் சரியே. ஆனால் அவர் அவற்றை மேலும் ஆராயப் புகவில்லை. வாயில்படி வரை சென்றவர் கதவைத்தட்ட மறக்கிறார் ஏனோ?

    அவை செக்ஸுவல் ஃபென்டாசி வகையைச் சார்ந்தவை. ஆண்-பெண் இருபாலரின் வளர்ச்சிப்பருவத்தில் அஃதொரு ஒரு படிக்கல். பெண்கள் செய்யாததற்குக் காரணம் சமூகத்தின் ஆணதிக்கப் பார்வை. தன் உடல் மற்றும் மனோவாசைகளை வெளியில் காட்டக்கூடா என்ற‌ சமூக விதி பெண்ணுக்கு. ஆணுக்கில்லை. எனவே கழிப்பறை வாசகங்கள் ஆண்களால் எழுதப்படுகின்றன‌. வெறும் வாசங்களாக இல்லாமல பேச்சுக்களிலும் உண்டு; அதன் பெயர் லாக்கர் ரூம் டாக். பெண்களிடையும் இந்த டாக் உண்டு. காரணம், பேச்சு காற்றோடு போய்விடுவதால்.

    மனோவியலாளர் சொல்வதே நான் மேலே எழுதியது. நத்திங் ஒரிஜனல்! லாக்கர் ரூம் டாக், கழிப்பறை வாசகங்கள்; பேச்சுக்கள், மனத்தடி கற்பனைகள் (செக்சுவல் ஃபென்டாஸீஸ்) - அவசியமானவை. தாலிபானால், ஐ எஸ் எஸையால் வெளித்தெரிபவைகளை மட்டுமே தண்டிக்க முடியும். அமுதவன் சார் போன்றோரால் கேட்கும் பாடலகளைத்தான் தடுக்கமுடியும். கேட்கமுடியாதவைகளை மாற்ற முடியா. அது போதுமே என்பவர் வரும் என் பின்னூட்டங்களையும் படிக்கவேண்டும்.

    எச்சமூகம் இவற்றைத் தடுக்க முயல்கிறதோ, அச்சமூகம் இவற்றின் தெறிப்புக்களை எதிர்நோக்க வேண்டும். குடும்பப்பெண்கள் நிம்மதியாக வாழ விலைப்பெண்டிர் இருந்தாக வேண்டும் - குறிப்பாக புலம்பெயர்ந்து பிழைப்பைத்தேடி வந்து வாழும் இளைஞர் கூட்டம் இருக்குமிடத்தில் பெண்கள் ஒற்றையடி பாதை செல்லக்கூடா. இரவில் தனியே நடமாடக்கூடா. சோழிங்கநல்லூரில் ஒரு சென்னைப் பொறியாளர் பாலியல் கொடுமைக்காளாகி கொல்லப்பட்ட கதை தெரிந்ததே. கொலையாளிகள் வடமாநில இளைஞர்கள். ஒற்றையடிப்பாதை. இரவு. பசித்திருந்த விலங்கு வந்த மானின் மேல் பாய்ந்தது!

    கொன்றது சரியென்றேன்று ப்ரவுனி பாயிண்ட்ஸ் தேடாதீர். இளைஞர்களைத் தண்டித்துவிட்டோம் எனாதீர். அவர்கள் தப்பிக்கமுடியா எனச்சொல்லி அமர்ந்து விடாதீர்.

    ஏனென்றால், நான் சொன்னது இப்படியிருந்தால் அப்படியாகும் என்பதே. தண்டித்து விட்டால் என்றும் நின்று நிலவும் வாழ்க்கை உண்மைகள் அழிந்துவிடா. வாழ்க்கை ஓடும். வாழ்க்கை கசப்பான உண்மைகளையும் என்றும் சுமர்ந்துகொண்டே ஓடும். எனவேதான் காவிரிபூம்பட்டிணத்தில் இந்திரவிழா. இன்று இல்லை. எனவே இரகசியமாக பாலியல் தொழிலாளிகள் பெருக அவர்களைத் தேடுவோரும் பெருக, பக்தி என்ற பகல்வேசமும் முக்காடு போட்டுக்கொண்டு இரவில் கதவைத் தட்டுகிறது.

    இங்கு சிலம்பரசன் எப்படி வருகிறார் என்பதை அடுத்த மடலில் சொல்கிறேன். முதலில் இது வர‌ட்டும்.

    ReplyDelete
  11. இதைப்பற்றி எழுத விரும்பவில்லை நண்பரே
    தமிழ் மணம் 6

    ReplyDelete
    Replies
    1. எழுதுங்க ஜீ..உங்களுக்குத்தான் கோர்வையா இருக்கே...!

      Delete
    2. நண்பர் திரு. பழனி அவர்களுக்கு... நான் 2 பதிவுகள் எழுதி கிழித்து இருக்கிறேன் நண்பரே..

      Delete
  12. உங்க சரியான கருத்து.
    கெட்ட வார்த்தைகளை தமிழில் பாடி பணம் சம்பாதித்து புகழ்பெறவிரும்பிய சிலம்பரசன் என்ற தமிழ்ப் பெயரை சிம்புவாக மாற்றியவருக்கு தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர், தமிழச்சி வீரலட்சுமி ஆதரவு :)
    அமுதவன் ஜயா சொன்னதும் சரியான கருத்து.

    ReplyDelete
  13. இதைப் பற்றி பதிவு போடுவதை கூட தவிர்த்து இருக்கலாம் !

    ReplyDelete
  14. மேலே கருத்துரைகள் (Comments) தந்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி!

    நண்பர் கே.பகவான்ஜீ அவர்கள் சொன்னதைப் போல ” இதைப் பற்றி பதிவு போடுவதை கூட தவிர்த்து இருக்கலாம் ! “ அது என்னவோ அந்த பாடலைக் கேட்டவுடன், சிறுவர்கள் மத்தியில் இந்த பாடல் பிரபலம் ஆகும்போது, இதன் விளைவு எப்படி இருக்கும் என்று நினைத்தபோது, ஏற்பட்ட கோபமே இந்த பதிவு. அய்யா வே.நடனசபாபதி அவர்கள் “இது பற்றி இனி பேசாமல் தவிர்த்து விடுவது நல்லது.” என்று சொன்னதற்கு இணங்க நான் மறமொழிகள் ஏதும் இட்டு தொடரவில்லை.

    இருப்பினும் அனானிமஸ் நண்பர்களின் வேண்டாத விவாதங்களைத் தவிர்க்கும் பொருட்டு மீண்டும் எனது பதிவில் Comments Moderation வைத்துள்ளேன். தாங்கள் சொல்லும் நியாயமான கருத்தில் தயக்கம் இல்லை, வெளிப்படையானது என்று அனானிமஸ் நண்பர்கள் கருதினால், தங்கள் அடையாளத்துடனேயே (With Google Account) சொல்வதில் தயக்கம் ஏன்? என்றூ தெரியவில்லை.

    ’பின்னூட்டம் எழுதுவது’ http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_27.html என்ற எனது பதிவினில் நான் எழுதிய கருத்துரை இது.
    // அனானிகள் (ANONYMOUS) என்று ஒரு வகையினர். GOOGLE இல் கணக்கு இல்லாத இவர்களால், கருத்துரைகள் மட்டுமே தர இயலும். இவர்கள் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட முகமூடி பதிவர்கள் போன்றே இருக்கும். உற்சாகமான பின்னூட்டங்களையும், கருத்துரையின் முடிவில் பெயர் தருபவர்களும் உண்டு.

    இன்னும் சிலர். இவர்களுக்கு GOOGLE இல் கணக்கு இருக்கும். BLOGGER என்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு உலாவுவார்கள். அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள, தன்விவரங்கள் (PROFILE) போய் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. ABOUT ME என்று வெறுமனே இருக்கும். இந்த போலி ப்ளாக்கர்கள் சிலர் தேவையற்ற கருத்துரைகளைத் தந்து நம்முடன் மல்லு கட்டுவார்கள். இவர்களோடு வாதம் செய்வது என்பது காற்றோடு சண்டை போடுவதற்கு சமானம்.
    ஜாதி, மதம், அரசியல், ஆன்மீகம் அல்லது இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் என்று எழுத ஆரம்பித்தால் போதும், இந்த முகமூடிகள், அனானிகள், போலிகள் வந்து குதித்து விடுவார்கள். //

    ReplyDelete
    Replies
    1. இப்போது Comment Moderation ஐ எடுத்து விட்டேன். (Comment Moderation ? Never); ஆனாலும் கருத்துரை இடுபவர்களூக்கு கூகிள் கணக்கு வேண்டும். (Who can comment? User with Google Accounts)

      Delete
  15. ஐயா! இதை ஒதுக்கித் தள்ளிவிடுவது நல்லது. ஏனென்றால் நம் நாட்டில் பல நல்ல திட்டங்கள் வர வேண்டும். நமக்கும் பல வேலைகள் இருக்கின்றது...இதைப் பற்றிப் பேசி இப்போது இதன் தாளிப்புச் சத்தம் அடங்கிவருகின்றது என்று நினைக்கின்றோம்..ஏனென்றால் வேறு முளைத்துவிட்டது போலும்...இதுதான் நம் நாட்டின், தமிழகத்தின் நிலைப்பாடு...

    ReplyDelete
  16. இப்பதிவைத் தவிர்த்திருக்கலாம் ஐயா
    தம+1

    ReplyDelete