Sunday 12 October 2014

திருச்சி – டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி சாலை

நான் வங்கியில் பணியில் இருந்தபோது ஒரு நகரக் கிளையிலிருந்து நகரின் இன்னொரு பக்கம் இருந்த தென்னூர் கிளைக்கு மாற்றல் ஆனேன். அது திருச்சி தென்னூர் சாஸ்திரி சாலையில் இருந்தது. (அருகில் தில்லைநகர் )நான் அந்த கிளைக்கு மாறுதல் ஆவதற்கு முன்னரே அந்த சாலையில் அடிக்கடி வண்டியில் சென்று இருக்கிறேன். அப்போது அவ்வளவு போக்குவரத்து இல்லை. அவ்வாறு செல்லும் போதெல்லாம் “சாஸ்திரி சாலை என்பது, மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பெயரில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

சாஸ்திரி சாலை:

தென்னூர் கிளையில் சேர்ந்த பிறகுதான் அங்கிருந்த வியாபார நிறுவனங்களிலும், சில கடைகளிலும் இருந்த பெயர்ப் பலகைகளில் சாஸ்திரி சாலை  அல்லது S.S.சாலை என்று இருப்பதைக் கண்டேன். அதாவது சுவாமிநாத சாஸ்திரி சாலை என்ற பெயரை அவ்வாறு சுருக்கி எழுதி உள்ளனர். சுவாமிநாத சாஸ்திரி  என்பவர் யார் என்று என்னோடு பணிபுரிந்த நண்பர்களிடம் கேட்டதில் அவர்களுக்கும் தெரியவில்லை. தென்னூரும் அருகில் உள்ள தில்லைநகரும் டாக்டர்களும் கிளினிக்குகளும் நிரம்பிய பகுதியாகும். எனவே யாராவது ஒரு டாக்டர் பெயராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

அண்மையில் மூத்த பத்திரிகையாளர் கே.சி. லட்சுமி நாராயணன் அவர்கள் எழுதிய தலித்துகளும் பிராமணர்களும் என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அதில் சுவாமிநாத சாஸ்திரி அவர்களைப் பற்றிய குறிப்புகளைப் படிக்க முடிந்தது. அவர் ஒரு டாக்டர். மேலும் இண்டர்நெட்டில் தேடியதிலும் சில குறிப்புகள் கிடைத்தன. அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

சிறந்த காந்தியவாதி (ஹரிஜன சேவா சங்கம் )

மகாத்மா காந்தி அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்காக ஹரிஜன சேவா சங்கம் “ என்ற அமைப்பை தொடங்கினார். அதில் காங்கிரசார் பலர் இணைந்து கொண்டு சேவை செய்தனர். அவர்களுள் ஒருவர் திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி அவர்கள். இவர் திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும்,  திருச்சி ஜில்லா ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.

இவருடைய சொந்த ஊர் கும்பகோணம். இவருடைய தந்தையின் பெயர் வாசுதேவ சாஸ்திரி. தாயார் இலட்சுமி அம்மாள். இவர் சென்னையில் மருத்துவக் கல்லூரியில் படித்தபோதே காந்திய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராய் இருந்தார். திருச்சியில் இருந்தபோது ஹரிஜன சேவா சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தீண்டாமையை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். சொன்னதோடு இல்லாமல் திருச்சி தென்னூரில் மல்லிகைபுரம், சங்கிலிச்சேரி ஆகிய இரு தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் தனது மருத்துவமனையைக் கட்டினார். இவரை சிலர் சம்பாதிக்கத் தெரியாதவர் என்றும் பைத்தியம் என்றும் கிண்டல் செய்தனர். இவர் பிராமணர் என்பதால், இவருடைய உறவினர்கள் இவரை சாதிவிலக்கும் செய்தனர். ஆனால் டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் எதனைப் பற்றியும் கவலைப்படாது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் செய்தார்.

மேலும் சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, விதவைகள் மறுமணம் போன்ற சமூக சீர்திருத்தங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1921 இல் நடந்த ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 1930 இல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதால் இவரது மனைவி உட்பட குடும்பமே ஜெயிலுக்கு போனது. ஆஸ்பத்திரியில் தன்னிடம் வரும் நோயாளிகளை பார்க்கும்போதும் கூட ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்தார். 1934 இல் இவர் தொடங்கிய பத்திரிகையின் பெயர் “களிராட்டைஎன்பதாகும்.

தொண்டின் நினைவாக:

டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் செய்த ஹரிஜன சேவையைப் பாராட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் தங்கத்தினால் ஆன நூல் நூற்கும் தக்ளியையும், தங்க பதக்கத்தையும் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

1961 இல் திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டு பந்தலுக்கு டாக்டர் சுவாமிநாத சாஸ்திரியின் பெயர் காமராஜரின் உத்தரவுப்படி வைக்கப்பட்டது.

சாஸ்திரிக்கு பெரியார், காமராஜர், சத்தியமூர்த்தி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், கல்கி, எஸ்.எஸ்.வாசன், சதாசிவம் ஆகியோருடன் நல்ல தொடர்பு இருந்தது.

1887இல் பிறந்த டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் சிறைவாசத்தின் போது ஏற்பட்ட காசநோயின் காரணமாக 1946 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 19 ஆம் நாள் மரணம் அடைந்தார் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் விடுதலை பத்திரிகையில் அவரது சேவையைப் பாராட்டி டாக்டர் சுவாமிநாத சாஸ்திரியின் வாழ்க்கை, மக்கள் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழும் “ என்று குறிப்பிட்டு, ஒரு தலையங்கம் எழுதினார்.  

சாஸ்திரி அவர்களின் தொண்டினை நினைவு கூறும் வண்ணம், அவர் வசித்த தென்னூர் பகுதியில் உள்ள ஒரு நீண்ட சாலைக்கு (திருச்சி கோகினூர் தியேட்டரிலிருந்து தென்னூர் மேம்பாலம் வரை (சிப்பி தியேட்டர் இருக்கும் சாலை)  சுவாமிநாத சாஸ்திரி சாலை என்று பெயர் சூட்டப்பட்டது. திருச்சிராப்பள்ளியை திருச்சி என்றும், புதுக்கோட்டையைப் புதுகை என்றும் ஊர்ப் பெயர் முதலானவற்றை சுருக்குவது வழக்கம். அதே போல டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி சாலையின் பெயரை மக்கள் குறிப்பிடும் போது சாஸ்திரி சாலை என்றும் கடைக்காரர்கள் S.S.சாலை என்றும் சுருக்கிவிட்டார்கள்.

( இந்த பதிவினில் டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி அவர்களது படத்தினை வெளியிட ஆசைப்பட்டேன். எவ்வளவோ முயற்சி செய்தும் கிடைக்காதது எனக்கு பெரிய குறைதான்.)

நன்றி! இந்த கட்டுரையை எழுத துணை நின்றவை:
தலித்துகளும் பிராமணர்களும் நூலாசிரியர் கே.சி. லட்சுமி நாராயணன்
தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கட்டுரை
ஆசிரியர் வெ.கோபாலன்
Chitti recollects... An Article  





36 comments:

  1. எனக்கும் அந்த சாலைப் பெயர் தெரியும்
    நானும் இத்தனை நாள் லால் பகதூர் அவர்களைத்தான்
    என நினைத்துக் கொண்டிருக்கிறேன்

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  2. ஆஹா, மிகவும் அருமையான புதுமையான, இதுவரை அறியாததோர் செய்தி ஐயா, இது.

    >>>>>

    ReplyDelete
  3. நான் மாதாமாதம் ஒருமுறையாவது அந்த மிகப்பெரிய அகலமான நீண்ட சாஸ்திரி சாலையில் என் மனைவியுடன் பயணித்து வருகிறேன், நேற்றுகூட சென்று வந்தேன்.

    புதிதாக மாற்றப்பட்டுள்ள எங்கள் BHEL மருத்துவமனையின் ஒரு பிரிவு அங்குதான் தில்லைநகர் 7வது கிராஸில் செயல்பட்டு வருகிறது. அதற்குச்செல்ல இந்த சாஸ்திரி ரோடு வழியாகச்செல்வதே எங்களுக்கு மிகவும் எளிதாக உள்ளது.

    நானும் இதுவரை அது நம் லால் பகதூர் சாஸ்திரி அவர்களைக்குறிப்பிடுவதாகத் தான் இருக்கும் என நினைத்திருந்தேன்.

    >>>>>

    ReplyDelete
  4. ஒரு மிகச்சிறந்த காந்தியவாதியை, சொந்த பந்தங்களின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேயும், ஹரிஜன மக்களுக்கு இலவச மருத்துவசேவைகள் செய்துள்ள மகத்தான மனிதரைப்பற்றி வெகு அழகாகச் சொல்லி புரிய வைத்துள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  5. அவருடைய படத்தோடு வெளியிட நினைத்து தாங்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை நானும் அறிந்தவன் என்ற முறையில், பதிவிடும் முன்பு தாங்கள் செய்துவரும் சிரத்தையான பல முயற்சிகளை நன்கு அறிய முடிந்தது.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள், அன்பான இனிய நல்வாழ்த்துகள். இந்தப் பதிவுக்கும் பகிர்வுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

    [ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தெருக்களின் ஒரிஜினல் பெயர்களை அவரவர் செளகர்யங்களுக்காக மாற்றிடும் போது, சரித்திர உண்மைகள் யாருக்கும் தெரியாமலேயே போய்விடக்கூடும் ஆபத்துகள் உள்ளன என்பதற்கு தங்கள் இந்தக் கட்டுரையே சாட்சியாகும்.]

    மீண்டும் நன்றிகள் ஐயா.

    அன்புடன் VGK

    ReplyDelete
  6. அறியாத ஒரு அருமைத் தலைவரை அறிமுகப்படுத்தி தெரியவைத்தமைக்கு மிக்க நன்றி சார்...

    ReplyDelete
  7. எந்த காரணத்திற்க்காக அந்த தியாகியின் பெயர் வைக்கப் பட்டதோ அது நிறைவேறவில்லை ,சுருக்கமாய் எழுதக்கூடாது சட்டம் கொண்டு வரணும் போலிருக்கே !
    த ம 2

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா.
    அறியாத தகவல் தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. சுவாமிநாத சாஸ்திரி பற்றி அறிந்து கொண்டேன் ஐயா
    இவரைப் போல் தன்னலமற்ற சேவை செய்தவர்கள் எண்ணற்றவர்க்ளை நாம் மறந்தே போனோம் ஐயா
    தங்களின் முயற்சியால் சாஸ்திரியின் சேவை வெளிப்பட்டுள்ளது
    தங்களின் பணி பாராட்டிற்கு உரியது ஐயா நன்றி

    ReplyDelete
  10. டாக்டர் டி.வி.சுவாமிநாத அவர்கள் பற்றிய அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி! நாட்டுக்கு உழைத்த இத்தகைய நல்லோர்கள் பற்றி வருங்கால சந்ததிகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் பெயரை தெருக்களுக்கு சூட்டுகின்றார்கள். ஆனால் நாமோ அதை சுருக்கி அவர்களை மறக்கடித்துவிடுகிறோம்.நான் கூட இப்படி பெயர் சுருக்குவதுபற்றிய எனது ஆதங்கத்தை ஒரு பதிவில் எழுதியிருந்தேன். (http://puthur-vns.blogspot.com/2012/01/blog-post.html) நேரம் இருப்பின் அதை படிக்கவும்

    ReplyDelete
  11. தம ஐந்து
    இப்படி ஒரு அற்புதமான மனிதரைப் பற்றி அறிந்துகொண்டது மகிழ்வு...
    உண்மையிலேயே ரொம்ப பெரிய மனிதர்...

    ReplyDelete
  12. எனக்கும் இது புதுத் தகவல்... நன்றி !

    ReplyDelete
  13. மறுமொழி >

    மறுமொழி > Ramani S said...

    கவிஞர் அய்யாவிற்கு வணக்கம்! நலமா அய்யா?

    // எனக்கும் அந்த சாலைப் பெயர் தெரியும் நானும் இத்தனை நாள் லால் பகதூர் அவர்களைத்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி //

    எல்லோருமே அந்த சாலை மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பெயரில்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.


    ReplyDelete
  14. பெயர்களைச் சுருக்கி எழுதுவதால் பெயரிடப்பட்டவர் மறக்கப்படுகிறார்.

    ReplyDelete
  15. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 , 2, 3 )

    அய்யா V.G.K அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // ஆஹா, மிகவும் அருமையான புதுமையான, இதுவரை அறியாததோர் செய்தி ஐயா, இது.//

    நான் அந்த புத்தகத்தைப் படிக்கும் வரை எனக்கும் உண்மை தெரியாது . எனக்கும் புதிய செய்திதான்.

    // புதிதாக மாற்றப்பட்டுள்ள எங்கள் BHEL மருத்துவமனையின் ஒரு பிரிவு அங்குதான் தில்லைநகர் 7வது கிராஸில் செயல்பட்டு வருகிறது. அதற்குச்செல்ல இந்த சாஸ்திரி ரோடு வழியாகச்செல்வதே எங்களுக்கு மிகவும் எளிதாக உள்ளது. //

    திருச்சி தெப்பக்குளம் அருகே இருந்த, பெல் மருத்துவமனையை எங்கே கொண்டு சென்று இருப்பார்கள்? அல்லது மூடி விட்டார்களா? என்று அந்த பக்கம் செல்லும்போது யோசித்ததுண்டு. தில்லைநகருக்கு மாற்றலான விஷயம் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  16. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 4 )

    // அவருடைய படத்தோடு வெளியிட நினைத்து தாங்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை நானும் அறிந்தவன் என்ற முறையில், பதிவிடும் முன்பு தாங்கள் செய்துவரும் சிரத்தையான பல முயற்சிகளை நன்கு அறிய முடிந்தது. தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள், அன்பான இனிய நல்வாழ்த்துகள். இந்தப் பதிவுக்கும் பகிர்வுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.//

    ஆம் அய்யா! ரொம்பவும் முயற்சி செய்தேன். டாக்டர் சுவாமிநாத சாஸ்திரியின் குடும்ப வாரிசுகள் யாரென்று கண்டறிந்து, அவ்ர்களிடம் வாங்கி அவருடைய படத்தை எப்படியும் வலைப்பதிவில் வெளியிட வேண்டும்.

    ReplyDelete

  17. மறுமொழி > J.Jeyaseelan said...

    கருத்துரை தந்த, தம்பி புதுகை சீலன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > Bagawanjee KA said...

    சகோதரர் பகவான்ஜீ கே.ஏ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > ரூபன் said...

    அய்யா வணக்கம்! தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )

    அன்பு ஆசிரியருக்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > Mathu S said...

    கருத்துரை தந்த ஆசிரியருக்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி> ரிஷபன் said...

    எழுத்தாளர் ரிஷபன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  23. சுவாமிநாத சாஸ்திரி அவர்களைப் பற்றிய செய்திகள் புதியவை! பகிர்வுக்கு மிக்க நன்றி! தேவையில்லாமல் பெயர்களை சுருக்குவது வரலாற்றுக் குழப்பத்தை உருவாக்கும் என்பதையும் புரியவைக்கிறது பதிவு! நன்றி!

    ReplyDelete
  24. அன்புள்ள திரு.தமிழ் இளங்கோ அய்யா அவர்களுக்கு,
    வணக்கம். திருச்சி – டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்களைப் பற்றி தெரியாத செய்திகள் பலவற்றை யாவரும் தெரிந்து கொள்ள செய்ததது மிகவும் பாராட்டுக்குரியது.

    இவர் திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், திருச்சி ஜில்லா ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். மேலும் இவர் பிராமணர் என்பதால், இவருடைய உறவினர்கள் இவரை சாதிவிலக்கும் செய்தனர். ஆனால் டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் எதனைப் பற்றியும் கவலைப்படாது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் செய்தார்.

    சுதந்திரத்திற்கு முன்பே 1946 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 19 ஆம் நாள் மரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிப்பதாகவே உள்ளது.அவரின் நினைவில் சாலையின் பெயர் வைக்கப்பட செய்தியை அனைவரின் நெஞ்சிலும் நிலைக்கச்செய்த பெருமை தங்களைச் சேரும்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
  25. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // டாக்டர் டி.வி.சுவாமிநாத அவர்கள் பற்றிய அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி! நாட்டுக்கு உழைத்த இத்தகைய நல்லோர்கள் பற்றி வருங்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் பெயரை தெருக்களுக்கு சூட்டுகின்றார்கள். ஆனால் நாமோ அதை சுருக்கி அவர்களை மறக்கடித்துவிடுகிறோம்.//

    எல்லா இடத்திலும் இந்த பெயர் சுருக்கும் கூத்து நடைபெறுகிறது. பெயர்ப் பலகைகளிலும் , அரசாங்க ஆவணங்களிலும் முழுப் பெயரையும் எழுத வேண்டும் என்று ஆணையிட வேண்டும்.

    //நான் கூட இப்படி பெயர் சுருக்குவதுபற்றிய எனது ஆதங்கத்தை ஒரு பதிவில் எழுதியிருந்தேன். (http://puthur-vns.blogspot.com/2012/01/blog-post.html) நேரம் இருப்பின் அதை படிக்கவும் //

    நீங்கள் சுட்டிய மேலே சொன்ன பதிவினை மீண்டும் படித்தேன், அய்யா! அதில் நான் பதிந்த கருத்துரை –

    // என்ன பெயர் வைத்தாலும், எப்படித்தான் அழைத்தாலும் ஒவ்வொன்றிற்கும் ஒரு வரலாறு உண்டு. அதனை மறைக்க முயன்றாலும் உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் என்பதே உண்மை. //


    ReplyDelete
  26. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // பெயர்களைச் சுருக்கி எழுதுவதால் பெயரிடப்பட்டவர் மறக்கப்படுகிறார். //

    அய்யா G.M.B அவர்களின் மேலான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete

  27. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி > manavai james said...

    அன்புள்ள ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு,
    வணக்கம்! தங்களது அன்பான நீண்ட கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  29. சுவாமிநாத சாஸ்திரி பற்றிய தகவல் புதிது ஐயா! தன்னலமற்ற இப்படிப்பட்ட மிக அற்புதமான மனிதரைப் பற்றி எங்களுக்கு அறிய உதவிய உங்களுக்கு மிக்க நன்றி ஐயா!

    எப்படி இந்தப் பதிவும், தங்களது முதைய பதிவும் விடுபட்டது என்பது ஃப்ளாகருக்கே வெளிச்சம்....ஆம் அது பல சமயங்களில் பழைய இடுகைகளையே காட்டுகின்றது!

    ReplyDelete
  30. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரர் V. துளசிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // சுவாமிநாத சாஸ்திரி பற்றிய தகவல் புதிது ஐயா! தன்னலமற்ற இப்படிப்பட்ட மிக அற்புதமான மனிதரைப் பற்றி எங்களுக்கு அறிய உதவிய உங்களுக்கு மிக்க நன்றி ஐயா! //

    இந்த தன்னலமற்ற மனிதரைப் பற்றி அறிந்து கொள்ள இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டனவே என்பதை நினைக்கும்போது வருத்தமாகவே இருக்கிறது.

    // எப்படி இந்தப் பதிவும், தங்களது முதைய பதிவும் விடுபட்டது என்பது ஃப்ளாகருக்கே வெளிச்சம்....ஆம் அது பல சமயங்களில் பழைய இடுகைகளையே காட்டுகின்றது! //

    எனக்கும் ப்ளாக்கர் டேஷ் போர்டில் அடிக்கடி பிரச்சினைதான். எனவே பெரும்பாலும் தமிழ்மணம், தமிழ்வெளி மற்றும் தேன்கூடு தளங்களில் பதிவுகளை பார்ப்பேன்.




    ReplyDelete

  31. எனது ‘என்ன பெயரில் அழைக்கலாம் எப்படி அழைக்கலாம்?’ என்ற பதிவை (http://puthur-vns.blogspot.com/2012/01/blog-post.html) படித்து கருத்திட்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  32. சுவாமிநாத சாஸ்திரி அவர்களின் உன்னத சேவைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
    இப்படிபட்டவர்களை தெரிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. நல்ல தகவல்களை ஆர்வத்தோடு தேடி எடுத்துத் தந்தமைக்கு மிக நன்றி.
    தெரியாத தகவல்களே இவை
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  34. மறுமொழி > வே.நடனசபாபதி said...
    அய்யா அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  35. மறுமொழி > கோமதி அரசு said...

    // சுவாமிநாத சாஸ்திரி அவர்களின் உன்னத சேவைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இப்படிபட்டவர்களை தெரிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள். //

    டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்களது தியாகம் மறக்கப்பட்டது போன்று நாட்டுக்காக உழைத்த நிறைய தியாகிகள் மறக்கப்பட்டு வருவது வருத்தமான விஷயம்தான். சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  36. மறுமொழி > kovaikkavi said...

    // நல்ல தகவல்களை ஆர்வத்தோடு தேடி எடுத்துத் தந்தமைக்கு மிக நன்றி. தெரியாத தகவல்களே இவை
    இனிய வாழ்த்து.//

    பாராட்டு தெரிவித்த சகோதரி கவிஞர், வேதா. இலங்காதிலகம். அவர்களுக்கு நன்றி





    ReplyDelete