Saturday 5 April 2014

மீள் பதிவு: எனது பெரியார் நினைவு!




அன்று நான் பள்ளிச் சிறுவன். அப்போது நாங்கள் குடியிருந்த பகுதி திருச்சியில் காவிரி கரையோரம் இருந்த சிந்தாமணி என்னும் பகுதியாகும். அப்போது காவிரியில் வெள்ளப்பெருக்கு வரும் போதெல்லாம் எங்கள் பகுதியினுள் தண்ணீர் வந்து விடும். ஒருமுறை அவ்வாறு தண்ணீர் வந்து விட்டது. அப்போது மாலை நேரம். எல்லோரும் பெரியார் வெள்ளப்பகுதி மக்களை பார்க்க வந்து இருப்பதாகச் சொல்லி ஓடினார்கள். என்னைப் போன்ற சிறுவர்களும் ஓடினோம். ஒரு வேன். உள்ளே கருப்பு சட்டையுடன் வெண் தாடியுடன் நல்ல நிறத்தில் ஒரு பெரியவர். அவர்தான் பெரியார். அருகில் அவர் ஆசையாய் வளர்த்த குட்டி நாய். பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோரும் வணக்கம் சொன்னோம். சிறுவர் சிறுமியர் யாராக இருந்தாலும் ஒவ்வொருவரையும்  என்ன படிக்கிறீங்கஎன்று கேட்டார். சிறுவர்களாக இருந்தாலும் அவர் மதிப்பு கொடுத்தார். அன்றுதான் நான் பெரியாரை முதன் முதல் பார்த்தது. (அதாவது ஐம்பது வருடங்களுக்கு முன்). அதன் பின் பெரியவர்கள் சொல்ல பெரியாரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

அப்போதெல்லாம் திருச்சியில் எந்த அரசியல் கூட்டம் நடந்தாலும் டவுன் ஹால் மைதானத்தில்தான் நடைபெறும். விவரம் தெரிய ஆரம்பித்து பெரியவன் ஆனதும் டவுன்ஹால் கூட்டங்களுக்கு சென்று வருவேன். டவுன் ஹாலில் பெரியார் பேசுகிறார் என்றால் செல்வது வழக்கம். பெரியாரின் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் திராவிடர் கழக பாடல்களை இசைத்தட்டின் மூலம் ஒலி பெருக்கியில் வைத்துக் கொண்டு இருப்பார்கள். அப்போது ஒலித்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் அவர்தான் பெரியார் பார் அவர்தாம் பெரியார் என்ற பாடல்தான். அந்த பாடலை கம்பீரமாக சீர்காழி கோவிந்தராஜன் கணீரென்ற குரலில் பாடி இருக்கிறார். பாடல்கள் முடிந்ததும் பெரியார் வரும்வரை கருப்புச் சட்டை அணிந்த பேச்சாளர்கள் பேசிக் கொண்டு இருப்பார்கள். கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் கருப்புச் சட்டை இல்லாமல் வர மாட்டார்கள்.பெரியார் மேடையில் பேசும்போது தெளிவாக நன்கு புரியும்படி பேசுவார். மேலும் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசுவார்.அவர் பேசி முடிக்கும் வரை அந்த இடமே அமைதியாக இருக்கும்.

திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் படிக்கும்போது அவர் பற்றிய நூல்களை, அவரது கருத்துரைகளை  நிறைய படித்தேன். காசு விஷயத்தில் மிகவும் சிக்கனம் பார்த்த பெரியார், இந்த கல்லூரி கட்ட ரூபாய் ஐந்து லட்சமும்  9.65 ஏக்கர் நிலத்தினையும் அரசுக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த கல்லூரியை அரசே தொடங்கியதால் கல்விப் பயன் அடைந்தோர் அதிகம். முதல் தலைமுறையாக கல்லூரிப் படிப்பை தொடங்கி முடித்தவர்கள் இந்த கல்லூரியில் அநேகர்.  பெரியார் ஒரு  நாத்திகர், பிராமணர்களை திட்டினார் என்ற பிம்பத்தினை மட்டுமே பலரும் காட்டுகின்றனர். அவர் சொன்ன, செய்த சீர்திருத்தங்களை சொல்வதில்லை. அம்பேத்காரை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்தவர் அவர். பெரியாரின் வரலாறு, அவர் செய்த தொண்டு இன்றைய தலை முறையினருக்கு தெரியவில்லை. யாரும் அவர்களுக்கு சொல்வதில்லை. அவர் நினைத்து இருந்தால் தமிழ் நாட்டின் முதலமைச்சராகவே வந்து இருக்க முடியும். கடைசி வரை பதவி ஆசை என்பதே இல்லாது வாழ்ந்த தொண்டு மனிதர் அவர்.

நான் திராவிடர் கழக உறுப்பினர் கிடையாது. அதே போல அவரது கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டவனும் இல்லை. பெரியார் செய்த தொண்டினால் பலன் அடைந்தவன். பெரியார் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்ற மன நிறைவைத் தவிர வேறொன்றும் எனக்கில்லை. இன்று பெரியார் மறைந்த தினம். ( டிசம்பர், 24, 1973 ). அதன் எதிரொலிதான் இந்த கட்டுரை.

      அவர்தாம் பெரியார்! பார்
     அவர்தாம் பெரியார்!
     அன்பு மக்கள் கடலின் மீதில்!
     அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்!
     அவர்தாம் பெரியார்!

     மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு!
     வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு!
     மிக்க பண்பின் குடியிருப்பு!
     விடுதலைப் பெரும்படையின் தொகுப்பு!
     அவர்தாம் பெரியார்! பார்
     அவர்தாம் பெரியார்!

           - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (புகழ் மலர்கள்)


(குறிப்பு: நான் திராவிடர் கழக உறுப்பினரோ, பிராமண எதிர்ப்பாளரோ அல்லது நாத்திகனோ கிடையாது. மேலும் எந்த கட்சி அனுதாபியும் இல்லை. “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை உடையவன். என்னைப் பற்றிய இவை அனைத்திற்கும் மேலே விடைகள் உள்ளன. வலைப் பதிவுகள் பக்கம் நுழைந்த நேரம். அப்போது வேறொரு பதிவில் டிசம்பர், 24, 2011 அன்று எழுதிய கட்டுரை இது. சில நண்பர்களுக்காக மீண்டும் இதனை இங்கு வெளியிட்டுள்ளேன்)



14 comments:

  1. நன்றி, இளங்கோ. பெரியார் இல்லாவிடில் நம்மில் அநேகர் மலம் ஆள்ளிக்கோண்டுதான் இருந்திருப்போம்.

    ReplyDelete
  2. பெரியார் என்ற ஒருவர் இல்லையேல், இன்று நாம் எங்கே. கணினியில் உரையாடிக் கொண்டா இருப்போம், கந்தசாமி ஐயா சொல்வதுபோல்தான், நமது வாழ்க்கையும் அமைந்திருக்கும்.

    ReplyDelete
  3. நாத்திகனோ ,ஆத்திகனோ பெரியாரின் பெருந்தொண்டை மறக்கவோ ,மறுக்கவோ இயலாது !
    த ம 1

    ReplyDelete
  4. அவரவர் மன பிம்பம் பொறுத்து, ஏற்றுக் கொள்ளும் தகவல்கள் மூளையில் பதியலாம்...

    பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் படித்தது உட்பட, நீங்கள் பல வாய்ப்பு கிடைத்ததில் கொடுத்த வைத்தவர்...

    ReplyDelete
  5. கொடுத்து வைத்தவர்...

    சிறு பிழை... அதனால்...

    ReplyDelete
  6. ஒரு நண்பரின் திருமணத்துக்குப் பெரியார் வந்திருந்தார். திருச்சி கிஅ பெ உயர் நிலைப் பள்ளி வளாகம் என்று நினைவு. 1960-களின் பின் பாதி அவரைப் பார்த்திருக்கிறேன் நல்லநிறம் குட்டையான உயரம் வெண்தாடி இதுவே நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
  7. முன்னரே படித்திருந்தாலும் மீண்டும் படித்தேன்....

    அவர் சொன்ன பல நல்ல விஷயங்களை கடைப்பிடிக்காது விட்டு விட்டார்கள்.

    ReplyDelete
  8. கருத்துரை தந்த

    அய்யா பழனி.கந்தசாமி,
    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார்,
    பெப்பின்,
    சகோதரர் பகவான்ஜி கே.ஏ,
    சகோதரர் திண்டுக்கல் தனபாலன்,
    பெரியவர் அய்யா G.M.B,
    சகோதரர் வெங்கட் நாகராஜ்

    அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  9. பல இடங்களில் வாசித்தாலும் நல்ல கருத்துகள் எங்கிருந்தாலும் ஏற்க முடியும்.
    நல்ல பதிவு.
    இனிய வாழ்த்து. (5 பங்கனி இலங்கை போய் 25 வந்தேன்).
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com/2014/04/04/4-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-4/

    ReplyDelete
  10. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதுபோல் ஆதாரங்களோடு தான் பேசுவார். திரும்பத் திரும்ப வெளியிடவேண்டிய நல்ல பதிவு இது. எத்தனை முறை வேண்டுமானாலும் மீள் பதிவிடலாம். திரும்பவும் பதிவிட்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  11. கருத்துரை தந்த, கோவைக்கவி சகோதரி வேதா. இலங்காதிலகம் மற்றும் அய்யா வே.நடனசபாபதி இருவருக்கும் நன்றி!

    ReplyDelete
  12. யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது பொது அறிவுக்கும் புத்திக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.
    சாதி மத பேதங்களும் சகுன சாத்திரங்களும் பாவம் பாமர மக்களை மூடநம்பிக்கைக் குழிக்குள் வீழ்த்தி விட்டது. இவை மாறினாலொழிய நாட்டில் சமத்துவம் மலராது, என்ற பெரியாரின் கொள்கை வயப்பட்டவன் நான்.
    இன்றும் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடையே பகுத்தறிவு சிந்தனைகளை விதைத்து வருபவன். ஆனாலும் “ எத்தனை பெரியார் பிறந்தால் என்ன இப்படித்தான் நாங்க இருப்போம்” என்று ஏனோ படித்தவர்களும் ஆசை, அச்சம் காரணமாக மூட நம்பிக்கைகளில் மூழ்கியே கிடக்கிறார்களே அய்யா. என்று தணியும் இந்த மூட நம்பிக்கை மோகம்?.

    ReplyDelete
    Replies
    1. பாவலர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete