Saturday 8 February 2014

அன்னதானம் செய்ய அரசு கட்டுப்பாடு


கோயில் திருவிழா அல்லது ஊரில் ஏதாவது விஷேசம் என்றால் பல ஊர்களில் அன்னதானம் வழங்குதல் , நீர்மோர் அல்லது பானகம் கொடுத்தல் என்பது நடைபெறும். ஏற்பாடு செய்த சில மணி நேரங்களில், ஒரு இடத்தில் சாலை ஓரத்தில் இவை நடைபெறும். சிலசமயம் சிலர் மண்டபங்களில், சத்திரங்களில் பந்தி பரிமாறி அன்னதானம் செய்வதும் உண்டு. ஸ்ரீரங்கம், பழனி போன்ற பல முக்கியமான திருக்கோயில்களில், அரசே அன்னதானம் செய்ய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.  

அரசு விதிமுறைகள்;

கட்டுப்பாடுகள் இல்லாது இருந்தது. ஆனால் இப்போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் (2006ம் ஆண்டு) மற்றும் விதிமுறைகள்படி, தமிழக அரசு அன்னதானம் செய்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே இனிமேல் அன்னதானம் செய்ய விரும்புபவர்கள்,  அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு  அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே இவற்றை செய்ய வேண்டும்.

சென்ற மாதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்

// அன்னதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் பதிவு செய்து, உரிமம் பெற்ற பின்பே உணவு வழங்குதல் வேண்டும். உணவு தயாரிக்கப்படும் இடம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை தவிர்க்க வேண்டும் மற்றும் சமைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மூடி வைத்து பாதுகாப்பாக பரிமாற வேண்டும். சமையல் செய்பவர்கள், உணவுப் பொருட்களை பரிமாறி கையாள்பவர்கள் தொற்றுநோய் அற்றவர்களாக இருத்தல் மற்றும் தன்சுத்தம் பேணுபவர்களாக இருக்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் வழங்கும் உணவினால் ஏற்படும் உபாதைகளுக்கு தாங்களே பொறுப்பானவர்கள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள் //

என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், தகவல்கள் பெறுவதற்கும் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கும் மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவு பிரிவு) ஜமால் முகம்மது கல்லூரி அருகில், ரேஸ் கோர்ஸ் ரோடு, (ஆயுதப்படை எதிர்புறம், துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் வளாகம், டி.வி.எஸ் டோல்கேட், திருச்சி என்ற முகவரியில் அணுகலாம். என்றும் சொல்லி இருந்தார்.

நண்பர்களின் அன்னதானம்

ஆண்டுதோறும் எனது நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து சமயபுரம் கோயில்
கடைவீதியில் காலையில் குடிதண்ணீர் வழங்கல், சூடான பால் தருதல் மற்றும் அன்னதானம் செய்தல் முதலானவற்றை லைசென்ஸ் பெற்ற உணவு தயாரிப்பாளர்கள் மூலம் செய்து வருகின்றனர். இந்த அன்னதான நிகழ்ச்சிகள் பற்றியும் எனது வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.
 
எனவே அன்னதானம் பற்றிய அரசின் விதிமுறைகளை இன்னும் விவரமாகத் தெரிந்து கொள்வதற்காக, மேலே சொல்லப்பட்ட அலுவலகம் சென்றேன். அங்குள்ளவர்கள் நீங்கள் அன்னதானம் செய்ய இருக்கும் பகுதிக்கு (Area) என்று ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி இருக்கிறார். அவரோடு தொடர்பு கொள்ளுங்கள் “ என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பட்டியலையும், அவர்களது செல்போன் எண்களையும் காண்பித்தார்கள். நான் குறித்துக் கொண்டேன். சம்பந்தப்பட்ட அலுவலரோடு தொடர்பு கொண்டபோது, அன்னதான விண்ணப்பம் பற்றியும், பணம் கட்ட வேண்டிய சலான் பற்றியும், மற்ற விவரங்கள் குறித்தும் சொன்னார். மேலும் இதுபற்றி அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் ஒரு கூட்டம் நடக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

 
( படம் மேலே) தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு . தற்போது மத்திய அரசு, 2014–ம் ஆண்டு பிப்ரவரி 4–ந்தேதி வரை இருந்த காலக் கெடுவை, மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது.

பெரிய அமைப்பு அல்லது தொண்டு நிறுவனம் மூலம் அன்னதானம் செய்பவர்களுக்கு பெரும்பாலும் சிக்கல்கள் வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களே உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் (Licence) பெற்று இருப்பார்கள். அல்லது உரிமம் பெற்ற உணவு தயாரிப்பாளர்களை (Catering Service) ஏற்பாடு செய்து இருப்பார்கள். ஆனால் ஆர்வக் கோளாறு காரணமாக கோயில் திருவிழா, சிலரது பிறந்தநாள் விழா சமயங்களில் மன்றங்கள் சார்பாக, அனுமதி பெறாமல், அன்னதானம் செய்யும் நண்பர்களுக்கு  சிக்கல்கள் நேரிடலாம். எனவே பொதுவாக அன்னதானம் செய்ய விரும்புவோர் அதற்கான அரசுவிதி முறைகளைக் கடைபிடித்து, பொது சுகாதாரம் கெடாதபடி  செய்யவும். இல்லையேல் “ குளிக்கப் போய் சேறு பூசிய கதையாக , நல்லது செய்யப்போய் வீண் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடும்.
மேலும் அதிக விவரங்களுக்கு http://www.tnhealth.org/FoodSafety.htm 

 
(PICTURES: THANKS TO “GOOGLE ”) 

  



51 comments:

  1. இது வரவேற்க்கத்தக்க முடிவு தான் என்பது என் கருத்து. ஒரு வகையில் அன்னதானம் பலரின் பசியை போக்க உதவுகின்றது என்ற போதிலும் மக்களின் ஆரோக்கியமற்ற செயல்பாடுகளும், அன்னாதானம் வழங்குபவர்கள் வழங்கிய பின்பு அந்த இடத்தை அப்படியே போட்டு விட்டு நகர்ந்து பலருக்கும் பிரச்சனை வரக்கூடிய அசுத்த சூழ்நிலையை மாற்ற உதவும் என்றே நம்புகின்றேன்.

    ஒரு பயத்தோடு அக்கறையோடு அன்னதானம் வழங்குவார்கள் என்று நம்புவோம்.

    உங்கள் வட்டத்தில் உள்ள நண்பர்களின் பார்வைக்கு போய்ச் சேர மின் நூல் தளத்தை அறிமுகம் செய்யும் பொருட்டு, வெள்ளை அடிமைகள் இணைப்பை இங்கே பொருத்தி வைக்கின்றேன். நன்றி.

    http://freetamilebooks.com/ebooks/white-slaves/

    ReplyDelete
  2. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    சகோதரர் ஜோதிஜியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வது சரிதான்! அன்னதானம் செய்பவர்களால், இனி பொது சுகாதாரத்தில் பிரச்சினை வராது.
    இனிமேல் ஏனோ தானோ என்று யாரும் அன்னதானம் செய்ய மாட்டார்கள். அப்படி செய்ய இயலாதவர்கள், அதற்குண்டான பணத்தை கோயில் அன்னதானத்திற்கு நன்கொடையாக கொடுத்து விடலாம்.

    // உங்கள் வட்டத்தில் உள்ள நண்பர்களின் பார்வைக்கு போய்ச் சேர மின் நூல் தளத்தை அறிமுகம் செய்யும் பொருட்டு, வெள்ளை அடிமைகள் இணைப்பை இங்கே பொருத்தி வைக்கின்றேன். நன்றி.

    http://freetamilebooks.com/ebooks/white-slaves/ //

    நானும் இந்த தகவலை வலையுலம் சாராத ஏனைய வெளியுலக நண்பர்களிடமும் தெரிவிக்கின்றேன். நன்றி!

    ReplyDelete
  3. திருச்சி மாவட்ட கலெக்டர் சொன்னதையும் யோசிக்க வேண்டும்... அன்னதானம் செய்பவர்களும் இதை முதலில் அறிந்து முடிவெடிக்க வேண்டும்... இணைப்பிற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா.

    ஆலயத்தில்... அன்னதானம் வழங்கப்பட வேண்டிய விதிமுறைகளை அனைவருக்கும் விளங்கும்படி அறிவுறுத்தல் இடவேண்டும்.....இல்லாவிட்டால் இறுதியில் நீங்கள் சொன்னதுதான் நடக்கும்.....
    ///குளிக்கப் போய் சேறு பூசிய கதை”யாக , //// பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. [[[அன்னதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் பதிவு செய்து, உரிமம் பெற்ற பின்பே உணவு வழங்குதல் வேண்டும். உணவு தயாரிக்கப்படும் இடம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை தவிர்க்க வேண்டும் மற்றும் சமைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மூடி வைத்து பாதுகாப்பாக பரிமாற வேண்டும். சமையல் செய்பவர்கள், உணவுப் பொருட்களை பரிமாறி கையாள்பவர்கள் தொற்றுநோய் அற்றவர்களாக இருத்தல் மற்றும் தன்சுத்தம் பேணுபவர்களாக இருக்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் வழங்கும் உணவினால் ஏற்படும் உபாதைகளுக்கு தாங்களே பொறுப்பானவர்கள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள்]]

    அடிசுதுடா பம்பர் பரிசு...உணவு பாதுகாப்பு துறையிநறுக்கு. இவனுங்க பண்ற சுகாதரககட்டுப்பாடு காசு கொடுத்து சாப்பிடும் இடதிலேயே என்ன லட்சனம் இரு தெரியும்! எல்லா வியாதிகளின் பிறப்பிடமே நம் ஊர் ஹோட்டல்கள் -- சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் தவிர!

    கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்; கோவில்களுக்கு பஞ்சம் இல்லை; அன்ன தான் வேண்டுதலுக்கும் பஞ்சம் இல்லை. அனுமதி வாங்க பணம் தள்ளவில்லை என்றால் உங்க வேண்டுதால் ஊ..ஊ..தான்.

    ரொம்ப பிகு பண்ணினால், நீங்கள் தானம் கொடுப்போகும் சாம்பார் சாததை பொங்கலை பரிசோதனை செய்தது தான் அனுமதி கொடுப்பேன் என்பார்கள். நாமே தான் கோவில் மற்றும் சினிமா என்றால் அதிக பணம் கொடுக்க அஞ்சுவாதில்லையே!

    தெய்வகுத்தம் ஆகிவிடும் என்று லஞ்சம் கொடுத்தாவது மக்கள் அனுமதி பெறுவார்கள்.

    சட்டங்கள் மற்ற நாடுகளில் மக்களை வழி நடத்த...இங்கு அதில் உள்ள ஓட்டைகளை வைத்து மக்களை ஏமாற்ற!

    அரசு நல்ல எண்ணத்தில் தான் செய்கிறது. ஆனால் நடப்பது!
    அரசு நல்ல வண்டி தான் F.C செய்யணும் என்று சொல்க்ரார்கள்.
    நடப்பது என்ன?

    ReplyDelete
  6. நல்ல பதிவு.
    என் உறவினர் பல ஆண்டுகளாக அங்கு எதாவது தோப்பில் வருடம் ஒரு முறை அன்னதானம் செய்வார்.
    அவர்களிடம் இதை சொல்ல வேண்டும்.
    அனேகமாக இனிமேல் கடைகளில் வாங்கி வண்டிகளில் வைத்து கொடுத்து விட சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  7. லஞ்சம் கொடுத்து சாமியை குறுக்கு வழியிலே பாக்குறது;;;ஒரு தப்பு செய்து ஏன் நம் கடவுளை பகர்க்கவேண்டும்;; அப்படி கடவுள் உண்மையா தப்பு செய்தா இருந்தா கண்ணைக் குத்திடும் என்ற பயம் இருந்தா தெரிஞ்சே தப்பு செய்வீங்களா?

    லஞ்சம் கொடுப்பது தப்பு என்று நான் நினைக்கிறேன்); அதுவும் அவர் கண் முன்னாலே லஞ்சம் கொடுபது பெரிய தப்பு என்று நான் நினைக்கிறேன். எல்லோருரும் தெரியும் இது ஒரு ritual -அர்த்தம் இல்லாத சடங்கு ; புடிக்குதோ இல்லையோ நாமும் அதை செய்யணும்.

    ReplyDelete
  8. அன்னதானம் பற்றிய அரசின் விதிமுறைகளை எடுத்துரைத்தமைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  9. தமிழ் இளங்கோ சார்,

    நல்ல சட்டம்னு சொல்லலாம், ஆனால் சொல்ல மாட்டேன், ஏன் எனில் உணவுக்கட்டுப்பாட்டு துறை அந்த அளவு மோசமான ஒன்று, சென்னையில உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரியோட மல்லுக்கட்டுன அனுபவமே எனக்கு இருக்கு.

    உணவுக்கட்டுப்பாட்டு துறை எதாவது செய்றதா இருந்தா முதலில் காசுப்புடுங்கிட்டு கேவலமா உணவு தயாரிச்சு கொடுக்கும் உணவகங்களை தடுக்கட்டும், மாசம் ஒரு கடைக்கு இதான் ரேட்டுனு வச்சு வாங்குற நாதாரிகள் அன்னதானத்துக்கு மட்டும் ஸ்ட்ரிக்டா ரூல்ஸ் பேசுனா ,நானா இருந்தா உதைச்சுடுவேன்.

    எனக்கு பக்தியின் அடிப்படையில் அன்னதானத்தின் மீதே ஈடுபாடு இல்லை ,சாமி பேரு சொல்லாமல் செய்ய மக்கள் முன் வந்தால் நலம்.

    நான் சமீபத்திய தைப்பூச அன்னதானம் பற்றி கூட படம் எடுத்து வச்சிருக்கேன், ஆனால் அது அம்மையார் கட்சியினர் நடத்திய அன்ன தானம், எதுக்கும் இருக்கட்டுமேனு படம் எடுத்தேன் , இனிமே பயன்ப்படுத்திக்கலாம் அவ்வ்.

    ஹி...ஹி அம்மையார் படம் போட்டுட்டு அன்ன தானம் நடத்தினால் ஒருத்தன் கேள்விக்கேட்க மாட்டான் :-))

    ReplyDelete
  10. அறியாத தகவல்
    தங்கள் பதிவின் மூலமே அறிந்தேன்
    விரிவான பகிர்வும் இணைப்பும் அனைவருக்கும்
    பயன்படும்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி. அரசின் விதி முறைகள் பொது மக்கள் நலன் கருதித்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அரசு சார்ந்த அமைப்புக்கள் அவ்வாறு செய்கிறதா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும். அதுவும் அன்னதானத்தை ஆளும் கட்சியினர் செய்தால் அவர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்பது எழுதப்படாத சட்டம். எது எப்படியோ. இனி இதைப் படித்தபிறகு யாருக்கேனும் அன்னதானம் செய்ய ஆசை இருப்பின் விட்டுவிடுவார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு தானம் செய்வதை விட, அந்த பணத்தை அநாதை இல்லங்களுக்கும், வயது முதிர்ந்தோருக்காக நடத்தப்படும் இல்லங்களுக்கும் கொடுத்துவிடலாம்.

    ReplyDelete
  12. திருச்சி மாவட்ட கலெக்டர் சொன்னதையும் யோசிக்க வேண்டும்... அன்னதானம் செய்பவர்களும் இதை முதலில் அறிந்து முடிவெடிக்க வேண்டும்..

    ReplyDelete
  13. என் பெற்றோர்களுக்கு என்பது நடந்தது ஒரு புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலத்தில்; எல்லோரும் குடும்ப சகிதமாக வந்து இருந்தோம் இருந்தோம்--மகன் மகள் உள்பட. அன்னதானம் செய்தா நல்லது என்று எவனோ எங்க அப்பா கிட்டே சொல்லியிருக்கான்; அப்பாவும் செய்தார். அதில் சில சுவையான சம்பவங்கள்; அவை இந்த பதிவுக்கு தேவை இல்லை.

    ஆனால், இப்ப இந்த உணவு கட்டுப்பாடு அறிவிப்பிறக்கும் கோவிலில் நடக்கும் அன்னதானதானங்களுக்கும் தொடர்பு இருக்கு என்று தெரியுது!

    ReplyDelete
  14. இந்த மாதிரியான அரசு அறிவிபுகள் எல்லோருக்கும் போய்ச் சேருகிறதா.?இது தெரியாமல் எத்தனைபேர் அன்னதானம் செய்து மாட்டிக்கொள்ளப்போகிறார்களோ? வியாபார ரீதியாக இயங்கும் இடங்களில் இந்த அறிவிப்புகள் அனுஷ்டிக்கப் படவேண்டும் கண்காணிக்கப் படவேண்டும். ஆடிமாதக் கூழ் ஊற்றுவதும் இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு பணம் கொடுக்க வேண்டுமா.?நல்லதோர் பகிர்வு..

    ReplyDelete
  15. முன்னெச்சரிக்கை கொடுக்கும் நல்லதொரு பதிவு. தகவலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  16. பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.

    ReplyDelete
  17. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // திருச்சி மாவட்ட கலெக்டர் சொன்னதையும் யோசிக்க வேண்டும்... அன்னதானம் செய்பவர்களும் இதை முதலில் அறிந்து முடிவெடிக்க வேண்டும்... இணைப்பிற்கு நன்றி ஐயா... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!


    ReplyDelete
  18. மறுமொழி > 2008rupan said...

    கவிஞர் ரூபன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // வணக்கம் ஐயா. ஆலயத்தில்... அன்னதானம் வழங்கப்பட வேண்டிய விதிமுறைகளை அனைவருக்கும் விளங்கும்படி அறிவுறுத்தல் இடவேண்டும்.....இல்லாவிட்டால் இறுதியில் நீங்கள் சொன்னதுதான் நடக்கும்..... ///குளிக்கப் போய் சேறு பூசிய கதை”யாக , //// பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.//

    ஆலயத்தில் நடக்கும் அன்னதானத்திற்கு அறநிலையத்துறை வழிகாட்டுதல்கள் உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் அன்னதானம் செய்பவர்களில் நிறையபேருக்கு இப்படி ஒரு சட்டம் இருப்பதே தெரியாது. அவர்கள் உணவுப் பாதுகாப்பு சட்டம் என்றால் ஓட்டல் வியாபாரத்திற்கு மட்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம்தான் நண்பர்களிடம் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  19. மறுமொழி > நம்பள்கி said... ( 1 , 2, 3 )

    நம்பள்கி அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி!

    // சட்டங்கள் மற்ற நாடுகளில் மக்களை வழி நடத்த...இங்கு அதில் உள்ள ஓட்டைகளை வைத்து மக்களை ஏமாற்ற!
    அரசு நல்ல எண்ணத்தில் தான் செய்கிறது. ஆனால் நடப்பது!
    அரசு நல்ல வண்டி தான் F.C செய்யணும் என்று சொல்க்ரார்கள்.
    நடப்பது என்ன? //

    ஒரு சராசரி இந்தியனாக எல்லாவற்றையும் சமாளித்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டி உள்ளது.

    ReplyDelete
  20. மறுமொழி > Anonymous said... ( 1 )

    Anonymous அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    // அன்னதானம் பற்றிய அரசின் விதிமுறைகளை எடுத்துரைத்தமைக்கு நன்றிகள்..! //

    சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி > வவ்வால் said...

    வவ்வால் அவர்களின் அனுபவ பூர்வமான கருத்துரைக்கு நன்றி!

    // தமிழ் இளங்கோ சார், நல்ல சட்டம்னு சொல்லலாம், ஆனால் சொல்ல மாட்டேன், ஏன் எனில் உணவுக்கட்டுப்பாட்டு துறை அந்த அளவு மோசமான ஒன்று, சென்னையில உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரியோட மல்லுக்கட்டுன அனுபவமே எனக்கு இருக்கு. //

    உங்கள் கருத்துரைக்கு, உங்கள் கருத்துரையையே மறுமொழியாகத் தருகிறேன்!

    // ஹி...ஹி அம்மையார் படம் போட்டுட்டு அன்ன தானம் நடத்தினால் ஒருத்தன் கேள்விக்கேட்க மாட்டான் :-)) //

    ReplyDelete
  23. மறுமொழி > Ramani S said... ( 1 , 2 )

    கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  24. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா வே நடனசபாபதி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி. அரசின் விதி முறைகள் பொது மக்கள் நலன் கருதித்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அரசு சார்ந்த அமைப்புக்கள் அவ்வாறு செய்கிறதா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும். அதுவும் அன்னதானத்தை ஆளும் கட்சியினர் செய்தால் அவர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்பது எழுதப்படாத சட்டம். //

    எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடக்கும் விஷயம்.

    // எது எப்படியோ. இனி இதைப் படித்தபிறகு யாருக்கேனும் அன்னதானம் செய்ய ஆசை இருப்பின் விட்டுவிடுவார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு தானம் செய்வதை விட, அந்த பணத்தை அநாதை இல்லங்களுக்கும், வயது முதிர்ந்தோருக்காக நடத்தப்படும் இல்லங்களுக்கும் கொடுத்துவிடலாம். //

    நீங்கள் சொல்வது சரியான வழிகாட்டல்!

    ReplyDelete
  25. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > நம்பள்கி said... ( 4 )

    // என் பெற்றோர்களுக்கு என்பது நடந்தது ஒரு புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலத்தில்; எல்லோரும் குடும்ப சகிதமாக வந்து இருந்தோம் இருந்தோம்--மகன் மகள் உள்பட. அன்னதானம் செய்தா நல்லது என்று எவனோ எங்க அப்பா கிட்டே சொல்லியிருக்கான்; அப்பாவும் செய்தார்.//

    உங்களைப் பொருத்தவரை சரியோ! தவறோ! உங்கள் பெற்றோருக்கு எண்பது நடக்கும் போது அவர்களுடைய ஆத்ம திருப்திக்காக அந்த தலத்தில் செய்தது சந்தோஷமான காரியம்தான். வாழ்க்கையில் எல்லாமே ஒரு நம்பிக்கையில்தான் ஓடுகிறது.

    // அதில் சில சுவையான சம்பவங்கள்; அவை இந்த பதிவுக்கு தேவை இல்லை.//

    அந்த சுவையான சம்பவங்களையும் உங்கள் பதிவில் எழுதுங்கள்.

    // ஆனால், இப்ப இந்த உணவு கட்டுப்பாடு அறிவிப்பிறக்கும் கோவிலில் நடக்கும் அன்னதானதானங்களுக்கும் தொடர்பு இருக்கு என்று தெரியுது! //

    இந்த உணவுக் கட்டுப்பாடு சட்டம் மத்திய அரசு கொண்டு வந்து, மாநில அரசு செயல்படுத்துவது.



    ReplyDelete
  27. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா GMB அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

    //இந்த மாதிரியான அரசு அறிவிபுகள் எல்லோருக்கும் போய்ச் சேருகிறதா.?இது தெரியாமல் எத்தனைபேர் அன்னதானம் செய்து மாட்டிக்கொள்ளப்போகிறார்களோ? வியாபார ரீதியாக இயங்கும் இடங்களில் இந்த அறிவிப்புகள் அனுஷ்டிக்கப் படவேண்டும் கண்காணிக்கப் படவேண்டும்.//

    சட்டம் நல்ல சட்டம்தான். ஆனால் நடைமுறையில் கொண்டு வரும்போதுதான் சிக்கல் உருவாகிறது.

    // ஆடிமாதக் கூழ் ஊற்றுவதும் இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு பணம் கொடுக்க வேண்டுமா.?நல்லதோர் பகிர்வு.. //

    உணவு வழங்கல் என்று வரும்போது எல்லாவற்றிற்கும் இந்த சட்டம் பொருந்தும். ஆனால் உள்ளூர் அரசியல் செல்வாக்கைப் பொறுத்து இந்த சட்டம் செயல்படும் என்பதே உண்மை.

    ReplyDelete
  28. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // முன்னெச்சரிக்கை கொடுக்கும் நல்லதொரு பதிவு. தகவலுக்கு நன்றிகள். //

    திரு VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > விழித்துக்கொள் said...

    அன்புடையீர் வணக்கம்! தங்கள் வருகைக்கும், ஆங்கிலம் கற்பது பற்றிய தகவலுக்கும் நன்றி!

    ReplyDelete
  30. In Tirupathi, people cannot serve annadanam as and when, where and when, they like. Once upon a time, they could but nw, only the temple will and for that it has built a huge annadanam complex consisting of kitchen and many dining halls. Devotees may give their offerings in cash - by dropping in hundi positioned at various spots or paying through Vijaya Bank from anywhere in the world. Thus, the temple is always kept neat and clean.

    Hindus are a are a riotous lot in temples. They think God and cleanliness are separate. So, if you allow them to do what and where and when they like, they will go berserk caring little for hygienic.

    I attended the latest Vaikunta Ekadasi in Srirangam and I saw, to my dismay, the whole temple complex dirty with strewn left over food and leaves. No one cared. After serving annadanam, they felt sure they pleased Srirangam. I also attended last week Karuda Sevai in Thirunangur. Annadanam galore - every where any time - even to the midnight. I had to walk through food. More annadamam more waste. People waste the food. Take more than they need and keep left over even inside the temple.

    It is not sufficient to tell the devotees what and how to do, through Collector's directives. Simply say, No private annadanam please. Just offer your help for Annadanam by cash or kind - to the temple authorities who will conduct the Annadanam on festival days. They will also write the names of the sponsore on board in front of the dining halls - it is done in some temples.

    ReplyDelete
  31. புதிய தகவல். உணவகங்களுக்கான அறிவிப்பு பாராட்டத் தக்கது.
    ஓட்டல்களில் குறைபாடுகளை தெரிவிக்க சார்ந்த அதிகாரியின் போன் நம்பர் அல்லது முகவரி விவரத்தை தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும்.

    சிறிய அளவில் செய்யப்படும் அன்னதானத்திற்கெல்லாம்லாம் இந்த அளவுகோல்களை பயன்படுத்துவது சாத்தியமா என்று தெரியவில்லை. வவ்வால் சொன்னது போல அனுமதி கொடுப்பதில் ஊழல் லஞ்சம் என்ற நிலையையும் இது ஏற்படுத்தக் கூடும் .

    ReplyDelete
  32. எல்லாம் சரி. ஆனாலும் நூற்றுக்க்ணக்கான பேருந்துகள் போய்வரும் பேருந்து நிலையங்களின் அருகில் நடைபாதை உணவகங்களை நாம் எங்கும் பார்க்கலாம்.

    அதை எந்த ஒரு உணவுப் பாதுகாப்பு அதிகாரியும் கண்டு கொள்வதில்லை. அரசியல் வியாதிகளும் ஊழலும் ஒன்று சேரும் இடம்.

    கோபாலன்

    ReplyDelete
  33. தங்கள் தகவல் அடிக்கோடிட வேண்டிய ஒன்று. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டுமே. விழிப்புணர்வும் தொடர் நடவடிக்கைகளும் உரிய பலனைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கலாம். நானும் ஓய்வு பெற்ற ஒரு வங்கியாளன் என்ற முறையிலே உங்கள் சேவையையும் ஈடுபாட்டையும் வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. இளங்கோ ஐயா,

    …முன்பெல்லாம அன்னதானம் என்றால், வீட்டிலேயே சமைத்து கோவிலுக்கு கொண்டுசெல்வோம். ஆனால் இப்போது அப்படியில்லை பலர் hotel- ல் ஆடர் செய்கிறார்கள். வீட்டில் செய்யும்போது பயபக்தியுடன் கொஞ்சம் சிரத்தையெடுத்து செய்வோம். hotel- ல் அப்படி செய்வார்களா? எந்த விஷயமாக இருந்தாலும் ஒழுங்காக செய்ய வேண்டும், இல்லாவிடின் செய்யாமல் இருப்பதேமேல்.

    ReplyDelete
  35. மறுமொழி > குலசேகரன் said...

    சகோதரர் குலசேகரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // In Tirupathi, people cannot serve annadanam as and when, where and when, they like. Once upon a time, they could but nw, only the temple will and for that it has built a huge annadanam complex consisting of kitchen and many dining halls. Devotees may give their offerings in cash - by dropping in hundi positioned at various spots or paying through Vijaya Bank from anywhere in the world. Thus, the temple is always kept neat and clean. //

    நானும் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வங்கியில் பணிபுரிந்த நண்பர்களுடன் திருப்பதி சென்று இருக்கிறேன். அப்போது அங்குள்ள சுத்தம் பாராட்டும்படியாகவே இருந்தது. கோயில் அன்னதானமும் திருப்தியாகவே இருந்தது.

    // It is not sufficient to tell the devotees what and how to do, through Collector's directives. Simply say, No private annadanam please. Just offer your help for Annadanam by cash or kind - to the temple authorities who will conduct the Annadanam on festival days. They will also write the names of the sponsore on board in front of the dining halls - it is done in some temples. //

    நல்ல யோசனை!

    ReplyDelete
  36. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    மூங்கில் காற்று டி என் முரளிதரன் அவர்களுக்கு நன்றி!

    //புதிய தகவல். உணவகங்களுக்கான அறிவிப்பு பாராட்டத் தக்கது. ஓட்டல்களில் குறைபாடுகளை தெரிவிக்க சார்ந்த அதிகாரியின் போன் நம்பர் அல்லது முகவரி விவரத்தை தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும்.//

    நல்ல யோசனை! ஆனால் இரு சாரருமே இதனை விரும்பமாட்டார்கள்.

    // சிறிய அளவில் செய்யப்படும் அன்னதானத்திற்கெல்லாம்லாம் இந்த அளவுகோல்களை பயன்படுத்துவது சாத்தியமா என்று தெரியவில்லை. வவ்வால் சொன்னது போல அனுமதி கொடுப்பதில் ஊழல் லஞ்சம் என்ற நிலையையும் இது ஏற்படுத்தக் கூடும் //

    சட்டம் என்றாலே ஊழலும் உடன் வந்து விடுகிறது. எனினும் பொது சுகாதாரத்தில் முன்னிலும் கவனம் வரும்.

    ReplyDelete
  37. .மறுமொழி > K Gopaalan said...

    சகோதரர் K கோபாலன் அவர்களுக்கு நன்றி!

    // எல்லாம் சரி. ஆனாலும் நூற்றுக்க்ணக்கான பேருந்துகள் போய்வரும் பேருந்து நிலையங்களின் அருகில் நடைபாதை உணவகங்களை நாம் எங்கும் பார்க்கலாம். அதை எந்த ஒரு உணவுப் பாதுகாப்பு அதிகாரியும் கண்டு கொள்வதில்லை. அரசியல் வியாதிகளும் ஊழலும் ஒன்று சேரும் இடம்.//

    நம்நாட்டில் கழிப்பிட காண்ட்ராக்ட் முதல் எல்லாவற்றிலும் அரசியல் தலையீடுதான் அதிகம்.


    ReplyDelete
  38. மறுமொழி > M.Pari said...

    சகோதரர் M பாரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  39. மறுமொழி > குட்டிபிசாசு said...

    மைடியர் குட்டிபிசாசு அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // இளங்கோ ஐயா, ……முன்பெல்லாம அன்னதானம் என்றால், வீட்டிலேயே சமைத்து கோவிலுக்கு கொண்டுசெல்வோம். ஆனால் இப்போது அப்படியில்லை பலர் hotel- ல் ஆடர் செய்கிறார்கள். வீட்டில் செய்யும்போது பயபக்தியுடன் கொஞ்சம் சிரத்தையெடுத்து செய்வோம். hotel- ல் அப்படி செய்வார்களா? எந்த விஷயமாக இருந்தாலும் ஒழுங்காக செய்ய வேண்டும், இல்லாவிடின் செய்யாமல் இருப்பதேமேல்.//

    நல்ல முறையில் கேட்டரிங் சர்வீஸ் செய்பவர்களும் நாட்டில் இருக்கிறார்கள், அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  40. தம்பி முரளிதரன் கருத்தை வழிமொழிகிறேன் டீ கடைகளில்தூசுபட திறந்து வைத்து விற்கும்
    போண்ட போன்ற வற்றைத் தடுக்க வேண்டாமா?

    ReplyDelete
  41. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    // தம்பி முரளிதரன் கருத்தை வழிமொழிகிறேன் டீ கடைகளில் தூசுபட திறந்து வைத்து விற்கும் போண்டா போன்ற வற்றைத் தடுக்க வேண்டாமா? //

    அதிகாரி வீட்டு முட்டை அம்மி கல்லையும் உடைக்கும் என்பார்கள். அந்த அம்மி எது என்பதுதான் யாருக்கும் தெரியாது.





    ReplyDelete
  42. இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருப்பது நல்லதுதான். சில கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களில் காலை உணவு, மதிய மற்றும் இரவு உணவு தானங்களுக்கு இன்னின்ன தொகை என்று நிர்ணயித்து வைத்துள்ளனர். அதை செலுத்திவிட்டால் அன்றைய உணவு இவர்கள் சார்பாக வழங்கப்படும். அந்த நாளில், அந்த நேரத்தில் தானம் வழங்குபவர்களும் அங்கு இருந்து பரிமாறலாம். இம்முறையை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள திருத்தலங்களிலும் பின்பற்றலாம்.

    ReplyDelete
  43. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

    வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்

    ReplyDelete
  44. நல்ல தகவல்....

    இன்றைக்கு திருவரங்கத்தில் தைத் தேர். நான் பார்த்த வரை நீர்மோர்/பானகம் வினியோகமோ, இலவச உணவு வினியோகமோ இல்லை.....

    சரியாகக் கடைபிடித்தால் நல்லது. இதிலும் லஞ்சமும் அரசியல்வாதிகளின் ஆதிக்கமும் வந்துவிட்டால் இதிலும் விதிவிலக்குகள் வரக்கூடும்....

    ReplyDelete
  45. மறுமொழி> டிபிஆர்.ஜோசப் said...

    அய்யா டி பி ஆர் ஜோசப் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  46. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தகவலுக்கும் மற்றும் இணைய இணைப்புகளுக்கும் நன்றி!

    ReplyDelete
  47. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி!

    தாங்கள் சொன்னது போல, போல் திருக்கோயில்கள் உள்ள எல்லா ஊர்களிலும் எப்போதும் சரியாகவே நடைபெற்றால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete