Saturday 21 December 2013

காம்ரேடுகளும் ஆட்டோ கட்டணமும்



மாஸ்கோவில் மழை பெய்தால் மாம்பலத்தில் குடை பிடிப்பவர்கள் “ என்று கம்யூனிஸ்டுகளைப் பற்றி மாஜினி என்ற எழுத்தாளர் ரெங்கசாமி கிண்டலாகச் சொன்னாலும் அதன் உண்மை என்னவென்றால் பொதுமக்கள் நலனுக்காக எப்போதும் போராடத் தயராக இருப்பவர்கள் என்பதுதான். ஆனாலும் அந்த காம்ரேடுகள் எதிர்த்து போராட முன்வராத விஷயம் ஆட்டோ கட்டணம்தான்.  ஏனோ நம்மூர் ஆட்டோ கட்டணத்தைப் பற்றி கண்டு கொள்வதே கிடையாது. இந்த இடத்தில் காம்ரேடுகளின் சைக்காலஜி எல்லோருக்கும் தெரிந்ததுதான். சங்கத்து ஆள எவண்டா அடிச்சவன் “ என்று போராடும் இடத்தில் இருப்பதுதான். இருந்தாலும் பொது மக்களுக்காக காம்ரேடுகள் தமிழ்நாடு முழுக்க ஆட்டோ கட்டணம் பற்றி ஒரு முடிவினைச் சொல்லலாம்.

அண்மையில் கண் டாக்டர் ஒருவரைப் பார்க்க மாலை தஞ்சாவூர் சென்று இருந்தேன். திரும்புவதற்கு தாமதமாகி விட்டது. திருச்சி வந்தபோது இரவு 11 மணி. நான் செல்ல வேண்டிய K K  நகர் பகுதிக்கு பஸ் இல்லை. ஷேர் ஆட்டோக்களும் இல்லை. முன்பு நைட் சர்வீஸ் பஸ் இருந்தது. இப்போது அதுவும் இல்லை. எனவே ஆட்டோவை நாட வேண்டி இருந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து K K  நகர் செல்ல ஆட்டோ கட்டணம் 180 ரூபாய் தர வேண்டி இருந்தது. இதற்கு டவுன் பஸ் கட்டணம் 5 ரூபாய்தான் ஆகும். தஞ்சாவூரிலிருந்து திருச்சி வருவதற்கு அரசு பஸ் (எக்ஸ்பிரஸ்) கட்டணம் 31 ரூபாய்.


                                                  Picture (above) thanks to : THE HINDU

சென்னையில் ஒரு வழியாக ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து விட்டார்கள். இருந்தாலும் எவையெவை மீட்டர் கட்டணப்படி ஓடும் ஆட்டோக்கள், பாதியிலேயே ஆட்களை இறக்கிவிடும் ஆட்டோக்கள் என்று தெரியவில்லை. வாக்கு வாதம் மிஞ்சினால்  சங்கத்து ஆள எவண்டா அடிச்சவன் “ என்று செல்போன் உபயத்தில் குவிந்து விடுவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் தெரிந்த ஆட்டோக்காரர்களும் இப்படித்தான் செய்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் ஏதேதோ பட்டியல் வாசிக்கிறார்கள்.எங்களைப் போன்ற புறநகர்வாசிகளுக்கு ஆட்டோகாரர்கள் தயவு அதிகம் தேவை. எனவே ஒன்றும் சொல்வதில்லை. நாட்டில் ஓடும் பல ஆட்டோக்கள் போலீஸ்காரர்களின் மனைவிகள் பெயரில் அல்லது அந்த அம்மணிகளின் பினாமிகள் பெயரில்தான் இருக்கின்றன என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் இன்னும் ஆட்டோ கட்டணம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. பொதுநலன் குறித்து அக்கறை உள்ள தொண்டு நிறுவனங்கள் யாராவது இதற்கு ஒரு வழக்கு போட்டால் தேவலை.

                                                    Picture (above) thanks to : INDIATIMES

( இந்த கட்டுரையை MS WORD இல் டைப் செய்யும்போது கோவையில் புதிய ஆட்டோ மீட்டர் கட்டண முறை வருகிற ஜனவரி 1–ந் தேதி முதல் அமுல்படுத்துவது என்று  ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு செய்துள்ளதாக செய்தி வாசித்தேன்.)




43 comments:

  1. கோவையிலேயே ஜனவரி 1–ந் தேதியா...? ம்...

    ReplyDelete
  2. இளங்கோ!!
    கேள்வி என்ன மதுரை மண்ணனிடமா கேட்ட்டீர்கள்?
    இதை விட கொடுமை..நான் என் நண்பன் உடன் திருவனந்தபுறம் சென்றேன்.;
    அவனும் ஒரு கஞ்சி வெள்ளம் (ஆனால், என்னை விட தமிழில் கெட்டிக்காரன்).

    என் சூட் கேசை நான் தான் பஸ்ஸில் இருந்து இறக்கினேன்.சிறியது தான்; இருந்தாலும், நான் தூக்கினாலும் அவன் தூக்கினாலும் அவனுக்கு கூலி கொடுக்கவேண்டுமாம! இது என்ன நாடா இல்லை காடா?

    நான் கொடுக்கமாட்டேன், என் பெட்டியை தூக்குவதற்கு என்று சொன்னாலும்,, என் நண்பன் பணம் கூலி [தூக்காத பெட்டிக்கு) கொடுத்தான்! இல்லாவிட்டால் பஸ் நிலையத்தை விட்டு வெளியில் செல்ல முயயதாம்!

    மறுபடியும், இது என்ன நாடா இல்லை காடா?

    நம் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கம்- அவர்களை ஒப்பிடும் போது!
    பெட்டிடியை

    ReplyDelete
  3. சென்னையில் ஆட்டோ கட்டணம் அரசுதான் முடிவெடுத்தது.ஆட்டோக்கார அண்ணாச்சிகள் இன்னும் நடைமுறைபடுத்தவில்லையே இன்னும் பழையபடி தான் தொடர்கிறது.மனசாட்சியுள்ள சிலபேர் மட்டுமே நிர்ணயித்த கட்டணத்தில் வசூலிக்கிறார்கள்.

    ReplyDelete
  4. கோவைக்கு வருகிறதா, நல்ல விஷயம் தான்!!

    ReplyDelete
  5. ந்ம்பள்கி சொல்வது உண்மை. எனது கேரள நண்பர்கள் சொன்னதுண்டு. இருப்பினும் தமிழகத்துக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் வாங்கிக்கொடுத்த கெட்டபெயர் நீங்குவதற்கு பலகாலம் ஆகும். ந்ண்பர்கள் மதுரைக்கு வந்துபாருங்கள். குறைந்த கட்டணம் 40 ரூபாய். 3 கிலோ மீட்டருக்கு 70 ரூபாய். எல்லாம் இலவசத்தில் கிடைத்தும் இவர்களுக்குமட்டும் என்ன பிரச்னையோ.

    கோபாலன்

    ReplyDelete
  6. எனக்கு உங்கள் அனுபவங்கள் ஒரு பாடம் ஐயா!

    அங்கு வந்தபோதெல்லாம் உறவினரின் சொந்த வண்டிப்பயணம்
    அல்லது வாடகைக்கு வண்டி வைத்து ஊர் சுற்றிப் பார்த்ததே...

    இனி வருங்காலத்தில்தான் இவற்றை எதிர்கொள்ளும் நிலை உருவாகலாம்!
    எதற்கும் இப்படி உங்கள் பகிர்வுகளை மனதில் பதிந்து வைத்துக்கொள்கிறேன்.

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    த ம.4

    ReplyDelete
  7. ஆட்டோ கட்டணம் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது ஐயா. முறைப்படுத்தப் படவேண்டும்.
    அடுத்த முறை தஞ்சை வரும்பொழுது, என்னை அலைபேசியில் அழையுங்கள் ஐயா.தங்களைக் காண வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். அவசியம் அடுத்த முறை வரும் பொழுது, தெரியப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன்
    எனது அலைபேசி எண்
    94434 76716

    த.ம.5

    ReplyDelete
  8. சென்னையில் பாதி ஆட்டோக்கள் இன்னும் பழைய முறைப்படி தான் வசூலிக்கிறார்கள் சார். திருச்சி KK Nagarல் உள்ள LIC colonyலிருந்து Jnction இல் உள்ள KPN Travelக்கு இரவு 9.க்கு இரு நூறு கேட்டு Rs. 150 க்கு பயணித்தோம். என்ன செய்வது. ஸ்டாண்டு ஆட்டோ தான். ஆனாலும்......

    ReplyDelete
  9. ஐயா, வணக்கம்.

    ஆம் ஐயா. லோக்கலாக எங்கு செல்ல வேண்டும் என்றாலும் ஆட்டோவையே நம்பும் நமக்கு, நாளுக்கு நாள் அவர்கள் ஏற்றும் ஆட்டோக்கட்டணமும் மிகவும் சுமையாகத்தான் உள்ளது.

    பெட்ரோல் விலை அடிக்கடி ஏறிவருவதால் இந்த ஆட்டோக்காரர்களுக்கு மட்டும் ஒரே குஷி தான்.

    பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் ஏறுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு லிட்டருக்கு அந்த வண்டி ஒரு 40 கிலோமீட்டர் ஓடும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த 40 கிலோமீட்டர் பயணத்தில் அவர் வெவ்வேறு பயணிகளுடன் ஒரு 10 பயணங்களுக்குக் குறையாமலாவது செய்வார்கள் என்பது நிச்சயம்.

    ஒவ்வொருவரிடமும் பெட்ரோல் விலை ஏறிவிட்டதாகச் சொல்லி ரூ 5 அல்லது ரூ 10 அல்லது ரூ 20 வீதம் [அவர்கள் பயணம் செல்லும் தூரத்திற்குத்தகுந்தாற்போல ] கூடுதலாக வசூல் செய்து விடுகிறார்கள்.

    ஆக, பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ 5 ஏறினால், அதே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஏற்றத்தால் இவர்களுக்கு, சராசரியாக ரூ 10*10=100 கிடைத்து விடுகிறது என்பதே உண்மை.

    மினிமம் சார்ஜ் என்று சொல்லி 1 கிலோமீட்டருக்கும் குறைவாக உள்ள தூரத்திற்கே ரூ. 40 வரை வாங்கி விடுகிறார்கள்.

    பெட்ரோல் விலை ஏற்றத்தால் பொது மக்களுக்குத்தான் பாதிப்பே தவிர ஆட்டோக்காரர்களுக்கும், டாக்ஸி காரர்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் கிடையாது.

    பெங்களூர், டெல்லி போன்ற பெரிய நகரங்களில் மீட்டர்படி கணக்கிட்டு வாங்கிக்கொள்கிறார்கள். அது நம்ம ஊர் கட்டணத்தை விட மிகவும் மலிவாகவே உள்ளன.

    பகிர்வுக்கு நன்றிகள். ஐயா.

    ReplyDelete
  10. //சென்னையில் ஒரு வழியாக ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து விட்டார்கள்.//

    கட்டணத்தை நிர்ணயம் செய்துய்விட்டார்களே தவிர அதை பெரும்பாலோர் கடைபிடிப்பதில்லை. சென்ற வாரம் சென்னை கோயம்பேடு பேருந்து நிலயத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள என் வீட்டிற்கு வர முடியுமா என ஒரு ஆட்டோ ஓட்டுனரை கூப்பிட்டபோது அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் 63.40 ஆக இருக்க, அவர் கேட்டதோ ரூபாய் 200! அதுவும் காலை10 மணிக்கு! இன்னொருவரோ கொஞ்சம் தள்ளுபடி செய்து ரூபாய் 180 எனக் கேட்டார். நான் என்ன முனிவரா சாபம் கொடுக்க. தகராறு ஏதும் செய்யாமல் சிறிது நேரம் காத்திருந்து மாநகரப் பேருந்தில் 7 ரூபாய் கொடுத்து வந்தேன்.

    சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. அதற்கு தேவை இன்னொரு அவசரநிலை(Emergency) சட்டம் அல்லது இராணுவ ஆட்சி. ஆனால் பொதுமக்களின் வயிற்றெரிச்சல் இவர்களை நிம்மதியாக வாழவிடாது என்பது நிச்சயம்.

    ReplyDelete
  11. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    // கோவையிலேயே ஜனவரி 1–ந் தேதியா...? ம்... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி! கோவையில் என்ன கட்டணம் சொல்லப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

    ReplyDelete
  12. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    // ஆட்டோ ராஜ்ஜியம் ..! //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > நம்பள்கி said...
    // இளங்கோ!! கேள்வி என்ன மதுரை மண்ணனிடமா கேட்ட்டீர்கள்? //

    நம்பள்கி சார்! மதுரை மன்னனிடம் கேள்வி கேட்டு இருந்தால் கையில் ஒரு சிலம்பாவது மிஞ்சி இருக்கும்.

    // இதை விட கொடுமை..நான் என் நண்பன் உடன் திருவனந்தபுறம் சென்றேன்.; அவனும் ஒரு கஞ்சி வெள்ளம் (ஆனால், என்னை விட தமிழில் கெட்டிக்காரன்). என் சூட் கேசை நான் தான் பஸ்ஸில் இருந்து இறக்கினேன்.சிறியது தான்; இருந்தாலும், நான் தூக்கினாலும் அவன் தூக்கினாலும் அவனுக்கு கூலி கொடுக்கவேண்டுமாம! இது என்ன நாடா இல்லை காடா?
    நான் கொடுக்கமாட்டேன், என் பெட்டியை தூக்குவதற்கு என்று சொன்னாலும்,, என் நண்பன் பணம் கூலி [தூக்காத பெட்டிக்கு) கொடுத்தான்! இல்லாவிட்டால் பஸ் நிலையத்தை விட்டு வெளியில் செல்ல முயயதாம்! //
    // மறுபடியும், இது என்ன நாடா இல்லை காடா?

    நம்பள்கி சார்! இது கொடுமையிலும் கொடுமைதான் சார்! தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // நம் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கம்- அவர்களை ஒப்பிடும் போது! பெட்டிடியை //

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை
    தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...

    // சென்னையில் ஆட்டோ கட்டணம் அரசுதான் முடிவெடுத்தது.ஆட்டோக்கார அண்ணாச்சிகள் இன்னும் நடைமுறைபடுத்தவில்லையே இன்னும் பழையபடி தான் தொடர்கிறது.மனசாட்சியுள்ள சிலபேர் மட்டுமே நிர்ணயித்த கட்டணத்தில் வசூலிக்கிறார்கள். //

    சிலர் அரசு உத்தரவுப்படி நடந்தாலும் மற்றவர்கள் விட மாட்டார்கள். கவிஞர் கவியாழி கண்ணதாசன் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி > கோவை ஆவி said...
    // கோவைக்கு வருகிறதா, நல்ல விஷயம் தான்!! //
    ஜனவரி ஒன்றிற்குப் பிறகு நீங்கள்தான் சொல்ல வேண்டும். சகோதரர் கோவை ஆவி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete

  16. மறுமொழி > K Gopaalan said...
    // ந்ம்பள்கி சொல்வது உண்மை. எனது கேரள நண்பர்கள் சொன்னதுண்டு. இருப்பினும் தமிழகத்துக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் வாங்கிக்கொடுத்த கெட்டபெயர் நீங்குவதற்கு பலகாலம் ஆகும். ந்ண்பர்கள் மதுரைக்கு வந்துபாருங்கள். குறைந்த கட்டணம் 40 ரூபாய். 3 கிலோ மீட்டருக்கு 70 ரூபாய். எல்லாம் இலவசத்தில் கிடைத்தும் இவர்களுக்குமட்டும் என்ன பிரச்னையோ.//

    சகோதரர் கே கோபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! கெட்ட பெயரோ நல்ல பெயரோ, ஆட்டோ வந்தது முதல் இதே நிலைமைதான்.


    ReplyDelete
  17. மறுமொழி >இளமதி said...

    // எனக்கு உங்கள் அனுபவங்கள் ஒரு பாடம் ஐயா!
    அங்கு வந்தபோதெல்லாம் உறவினரின் சொந்த வண்டிப்பயணம்
    அல்லது வாடகைக்கு வண்டி வைத்து ஊர் சுற்றிப் பார்த்ததே... //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! எல்லா சந்தர்ப்பத்திலும் வாடகை வண்டி வைத்துக் கொள்ள முடியாது.

    // இனி வருங்காலத்தில்தான் இவற்றை எதிர்கொள்ளும் நிலை உருவாகலாம்! எதற்கும் இப்படி உங்கள் பகிர்வுகளை மனதில் பதிந்து வைத்துக்கொள்கிறேன்.//

    // பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா! //

    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    சகோதரர், ஆசிரியர் கரந்தை ஜெயகுமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // அடுத்த முறை தஞ்சை வரும்பொழுது, என்னை அலைபேசியில் அழையுங்கள் ஐயா.தங்களைக் காண வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். அவசியம் அடுத்த முறை வரும் பொழுது, தெரியப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன் //

    நானும் உங்களைக் காண ஆவலாக இருக்கிறேன். சந்தர்ப்பம் அமையும் போது நானே வந்து உங்கள் பள்ளியில் சந்திக்கிறேன். நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    // சென்னையில் பாதி ஆட்டோக்கள் இன்னும் பழைய முறைப்படி தான் வசூலிக்கிறார்கள் சார். //

    அவர்களைத் திருத்தவே முடியாது. அதனால்தான் பகலில் அவர்களுக்கு சரியாக சவாரி அமைவதில்லை. எனவே ஸ்கூல் ட்ரிப்பிற்கு அவசரம் அவசரமாக சென்று வருகிறார்கள். பெற்றோர்களிடம் முன் பணம் வாங்கியே ஒழிகிறார்கள்.

    // திருச்சி KK Nagarல் உள்ள LIC colonyலிருந்து Jnction இல் உள்ள KPN Travelக்கு இரவு 9.க்கு இரு நூறு கேட்டு Rs. 150 க்கு பயணித்தோம். என்ன செய்வது. ஸ்டாண்டு ஆட்டோ தான். ஆனாலும்...... //

    இரவு 9 மணி ஆகி விட்டாலே இந்த பகுதியில் அவர்கள் சுறுசுறுப்பு ஆகி விடுவார்கள்.

    ReplyDelete
  20. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்.! தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி! நன்கு விரிவாகவும், புள்ளி விவரத்தோடும் கருத்துரை சொன்னமைக்கு நன்றி!

    // பெட்ரோல் விலை அடிக்கடி ஏறிவருவதால் இந்த ஆட்டோக்காரர்களுக்கு மட்டும் ஒரே குஷி தான். //

    // பெட்ரோல் விலை ஏற்றத்தால் பொது மக்களுக்குத்தான் பாதிப்பே தவிர ஆட்டோக்காரர்களுக்கும், டாக்ஸி காரர்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் கிடையாது.//

    உண்மைதான். பாதிப்பு நமக்குத்தான்.

    ReplyDelete
  21. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா வே நடனசபாபதி அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி!

    // சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. அதற்கு தேவை இன்னொரு அவசரநிலை(Emergency) சட்டம் அல்லது இராணுவ ஆட்சி. ஆனால் பொதுமக்களின் வயிற்றெரிச்சல் இவர்களை நிம்மதியாக வாழவிடாது என்பது நிச்சயம். //

    பல ஆட்டோக்கள், ஓட்டுநர்களுக்கு சொந்தமானவை இல்லை. உரிமையாளர்கள் எதேனும் வட்டம், மாவட்டமாக இருப்பார்கள். அல்லது அவர்களுக்கு வேண்டியவர்களாக இருப்பார்கள். ஆட்டோவை வாடகைக்கு ஓட்டுபவர்கள்தான் அதிகம்.

    இரவுநேரத்தில் நிறைய மினிபஸ் விட்டால் இந்த அடாவடித்தனம் ஒழியும். அல்லது எல்லா ஆட்டோக்களையும் ஷேர் ஆட்டோவாக அறிவித்து விடலாம். நீங்கள் கூட இந்த ஆட்டோ கட்டணம் பற்றி பதிவு ஒன்றை எழுதியதாக ஞாபகம்.

    ReplyDelete
  22. ஆட்டோக்கள் பெட்ரோலில் ஓடுவதால் ஆட்டக்காரர்களுக்கு கட்டுப்படியாவதில் சிரமம் உள்ளது.அதனால் ஏமாந்தால் ஒரே பயணத்தில் அதிக அளவு சம்பாதித்துவிட நினைகிறார்கள். வை.கோ அவர்கள் சொன்னது போல ஆட்டோ ஒரு லிட்டருக்கு 40 கி.மீ புது ஆட்டோகூட தர வாய்ப்பில்லை. ட்ராபிக் நெரிசலில் பெட்ரோல் அதிகம் செலவாகும். இது மட்டுமேயன்றி வாகன பராமரிப்பு செலவும் உண்டு. போலீஸ்காரர்களின் தொல்லையும் உண்டு.ஆட்டோக்காரர்கள் அதிக காசு வாங்குகிறார்கள் என்றால் அவர்கள் லட்சாதிபதிகளாக அல்லவா மாறி இருக்க வேண்டும். ஆட்டோ ஒட்டி முன்னுக்கு வந்தவர்களை எனக்கு தெரிந்து பார்த்தது இல்லை

    பணம் படைத்தோர் பலர் எவ்வளவு பணமனாலும் கவலைப் படாமல் ஆட்டோக்காரர்கள் கேட்டதை கொடுத்துவிடுகிறார்கள். ஒரு நாளைக்கு அது போல் இரண்டு மூன்று சவாரி கிடைத்தால் கூட போதும் என்று நினைத்து உறுமீன்வருமளவு காத்திருக்கிறார்கள் .
    பெரும்பாலான ஆட்டோக்காரர்களின் பேச்சு நடத்தை எல்லாம் அடாவடித்தனமாக இருப்பதும் உண்மை.ஒரு சில நல்லவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
    அதிக பணம் டீசலில் இயங்கும் ஷேர் ஆட்டோக்களில் கிட்டத்தட்ட பஸ் கட்டணத்துக்கு சமமாகவே இருக்கிறது. ஷேர் ஆட்டோக்கள் அதிகரிப்பு கால் டாக்சி கள் ஆட்டோக்கரர்களின் ஆதிக்கத்தை குறைக்கின்றன. என்றாலும் அவசர் தேவைக்கு பல இடங்களில் ஆட்டோவை நம்பி இருப்பதைத் தவிர வேறு வழி இல்லாத சூழ்நிலை உள்ளது. இதை அவரால் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் முரட்டுத் தனமானவர்களின் தொழிலாக இது கருதப்படுவதால் பலர் இத்தொழிலுக்கு வருவதில்லை

    ReplyDelete
  23. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    // ஆட்டோக்கள் பெட்ரோலில் ஓடுவதால் ஆட்டக்காரர்களுக்கு கட்டுப்படியாவதில் சிரமம் உள்ளது.அதனால் ஏமாந்தால் ஒரே பயணத்தில் அதிக அளவு சம்பாதித்துவிட நினைகிறார்கள். வை.கோ அவர்கள் சொன்னது போல ஆட்டோ ஒரு லிட்டருக்கு 40 கி.மீ புது ஆட்டோகூட தர வாய்ப்பில்லை. ட்ராபிக் நெரிசலில் பெட்ரோல் அதிகம் செலவாகும். இது மட்டுமேயன்றி வாகன பராமரிப்பு செலவும் உண்டு. போலீஸ்காரர்களின் தொல்லையும் உண்டு.//

    மூங்கிற்காற்று முரளிதரன் அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி! ஆட்டோ தொழில் பற்றியும் நன்றாகவே சொன்னீர்கள்.

    // ஆட்டோக்காரர்கள் அதிக காசு வாங்குகிறார்கள் என்றால் அவர்கள் லட்சாதிபதிகளாக அல்லவா மாறி இருக்க வேண்டும். ஆட்டோ ஒட்டி முன்னுக்கு வந்தவர்களை எனக்கு தெரிந்து பார்த்தது இல்லை //

    பெரும்பாலான ஆட்டோக்களுக்கு உரிமையாளர்கள் வேறு ஆட்கள். அவை ஓட்டுநர்களுக்கு சொந்தமாக இல்லை. நாள் வாடகைக்கு எடுத்து ஓட்டுகிறார்கள். அவர்கள் உழைப்பின் பலன யாருக்கோ போய் சேருகிறது. எனவே அவர்களால் முன்னுக்கு வர இயலவில்லை.

    // பணம் படைத்தோர் பலர் எவ்வளவு பணமானாலும் கவலைப் படாமல் ஆட்டோக்காரர்கள் கேட்டதை கொடுத்துவிடுகிறார்கள். ஒரு நாளைக்கு அது போல் இரண்டு மூன்று சவாரி கிடைத்தால் கூட போதும் என்று நினைத்து உறுமீன்வருமளவு காத்திருக்கிறார்கள் .பெரும்பாலான ஆட்டோக்காரர்களின் பேச்சு நடத்தை எல்லாம் அடாவடித்தனமாக இருப்பதும் உண்மை.ஒரு சில நல்லவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.//

    எது எப்படி இருந்தாலும் பொதுமக்கள் நலன் கருதி, ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். மினி பஸ்களையும், ஷேர் ஆட்டோக்களையும் அதிகப்படுத்த வேண்டும். அல்லது எல்லா ஆட்டோக்களையும் ஷேர் ஆட்டோக்களாக அனுமதிக்க வேண்டும்.

    ReplyDelete
  24. //சென்னையில் ஒரு வழியாக ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து விட்டார்கள்.//

    கட்டணத்தை நிர்ணயம் செய்துய்விட்டார்களே தவிர அதை பெரும்பாலோர் கடைபிடிப்பதில்லை.

    They will not obey sir!!

    ReplyDelete
  25. இந்த விஷயத்தில் எங்களூர் பெங்களூர் தேவலாம் போலிருக்கிறதே. குறைந்த கட்டணம்1.9கிமீ -க்கு ரூ25-/ அதன் பிறகு கிமீ ஒன்றுக்கு ரூ 13-/- அங்கும் இங்கும் சிலர் கூப்பிட்ட இடத்துக்கு வரமாட்டார்கள். சிலர் போகவர என்று இரட்டைக் கட்டணம் கேட்பார்கள் .. ரயில்வே ஸ்டேஷன்களில் ப்ரீபெய்ட் வசதி உண்டு. இன்ன கட்டணம் என்று கம்ப்யூட்டரில் அச்சடித்துக் கொடுத்து விடுவார்கள். அதற்காக ரூ1-/ கட்டணம்தரவேண்டும்.

    ReplyDelete
  26. மறுமொழி > Jayadev Das said...
    // கட்டணத்தை நிர்ணயம் செய்துய்விட்டார்களே தவிர அதை பெரும்பாலோர் கடைபிடிப்பதில்லை. They will not obey sir!! //

    சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது. வேறு என்னத்தைச் சொல்ல! சகோதரர் ஜெயதேவ் தாஸ் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // இந்த விஷயத்தில் எங்களூர் பெங்களூர் தேவலாம் போலிருக்கிறதே. //

    அய்யா GMB அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு!

    ReplyDelete
  28. தி.தமிழ் இளங்கோ சார்,

    ஆட்டோப்பற்றி எழுதனும் என நினைத்துக்குக்கொண்டேயிருப்பேன், ஆனால் வழக்கம் போல ஹி...ஹி!

    எந்த ஆட்டோவும் 40 கி.மி மைலேஜ் தராது என முரளி சொன்னது உண்மையே.

    புது ஆட்டோ சுமார் 30-32 கி.மி லிட்டர் தரும். சுமார் ஒரு வருடம் ஆகிட்டாலே மைலேஜ் 20-25 கி.மி/லிட்டர் ஆகீடும். டிராபிக் நெரிசல் எனில் மைலேஜ் இன்னும் குறையும்.

    ஆட்டோவுக்கு பெட்ரோல் உடன் ஆயில் சேர்த்து போட வேண்டும் என்பதால் 1 லிட்டர் பெட்ரோல் + 50 மிலி ஆயில் போடுவாங்க ,பழைய ஆட்டோ எனில் 100 மிலி ஆயில் போடுவாங்க எனவே 10 ரூ கூடுதல் செலவாகும்.

    மேலும் ஒரு நாள் ஆட்டோ வாடகை -175 ரூ .

    ஆட்டோவுக்கு ஒரு நாள் என்பது 12 மணி நேரம் மட்டுமே எனவே டே &நைட் 24 மணி நேரத்துக்கு 350 ரூ வாடகை.

    ஒரு ஆட்டோ டிரைவர் 1000 சம்பாதித்தால் வாடகை + பெட்ரோல் என பாதி போயிடும். எனவே 500 தான் வீட்டுக்கு எடுத்துப்போக முடியும்.

    சென்னை போன்ற நகரங்களில் தினசரி ரூ 500க்கு குடும்பம் நடத்துவதே கடினம்,அதுவும் நிலையல்ல. எனவே கிடைக்கிற இடத்தில் பிடுங்கப்பார்க்கிறார்கள்.

    மீட்டர் கட்டணம் சரியான அளவு நிர்ணயிக்கப்பட்டால் பிரச்சினை தீரும்.

    அடவாடி செய்பவர்களும் இருக்கிறார்கள்,சரியான கட்டணம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.

    நான் பெரும்பாலும் சராசரியாக பேசி சமாளிச்சுடுவேன் . ஒரு ஆட்டோ இல்லைனா இன்னொருத்தன் வராமலா போயிடுவான் :-))

    # கால் டாக்சி முறை மலிவு அல்லது சரியான கட்டணம் ஆனால் தமிழ் நாட்டில் எல்லா இடத்திலும் இன்னும் வரலை. சென்னையில் நல்ல பலன் அளிக்குது. ஆனால் பல சமயம் போன் செய்துவிட்டு காத்திருக்க விடுவாங்க அவ்வ்.
    ----------------

    பெங்களூரில் ஆட்டோ கட்டணம் மலிவு என்பதெல்லாம் சும்மா, அங்கே ஆரம்பத்திலேயே கி.மிக்கு 13 ,மேலும் இரவு 9- காலை 6 வரையில் இருமடங்கு மீட்டர் கட்டணம். அதோடு அங்கு ஏகப்பட்ட ஒன்வே என்பதால் சுத்தி சுத்தி போய் காசு புடுங்குறாங்க,அதுவும் தமிழில் பேசினால் கேட்டதை கொடுக்கனும் அவ்வ். எனவே எல்லா ஊரிலும் அதே கதை தான் அவ்வ்!

    2009 ல பெங்களூர்ல ஆட்டோவுக்கு அழுத கதைய எழுதியிருப்பேன் அவ்வ்.ஒரே இடத்துக்கே போகும் போது ஒருக்கட்டணம்,வரும் போது ஒருக்கட்டணம் கேட்டால் "ஒன்வே" என்பார்கள். மொழி தெரியாதவர்கள் என்பதால் ஊரை சுத்திக்காட்டுவாங்க (எல்லா ஊரிலும் இப்படித்தான்)

    ReplyDelete
  29. மறுமொழி > வவ்வால் said...

    அன்புள்ள வவ்வால் அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி!

    // தி.தமிழ் இளங்கோ சார், ஆட்டோப்பற்றி எழுதனும் என நினைத்துக்குக்கொண்டேயிருப்பேன், ஆனால் வழக்கம் போல ஹி...ஹி! //

    எல்லா சப்ஜெக்ட்டிலும் பூந்து விளையாடும் நீங்கள் இதைப் பற்றியும் எழுதலாம். நீங்கள் எழுதினால் நிறைய புள்ளி விவரங்களை நகைச் சுவையோடு கொடுப்பீர்கள்.
    ஆட்டோ, ஆட்டோ டிரைவர், சென்னை ஆட்டோ, பெங்களூர் ஆட்டோ என்று நிறைய தகவல்கள் தந்தீர்கள்.

    // சென்னை போன்ற நகரங்களில் தினசரி ரூ 500க்கு குடும்பம் நடத்துவதே கடினம்,அதுவும் நிலையல்ல. எனவே கிடைக்கிற இடத்தில் பிடுங்கப்பார்க்கிறார்கள். மீட்டர் கட்டணம் சரியான அளவு நிர்ணயிக்கப்பட்டால் பிரச்சினை தீரும். //

    மத்திய அரசு ஆதர் அடையாள அட்டையில் டபுள் கேம் ஆடுகிறது. இவர்களும் அப்படியே. ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்தாலும் அவர்கள் செய்வதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    // 2009 ல பெங்களூர்ல ஆட்டோவுக்கு அழுத கதைய எழுதியிருப்பேன் //

    2009 – இல் நீங்கள் எழுதிய பதிவை சென்று பார்க்கிறேன். ஒருவேளை படித்தும் இருப்பேன். நன்றி!

    ReplyDelete
  30. ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்தால் தான் நல்லது...

    டெல்லியில் குறைந்த கட்டணம் 20 தான் ஆனால் இங்கோ 40...
    அங்கு மீட்டருக்கு மேலே கேட்பது எல்லாம் கிடையாது...

    ReplyDelete
  31. தில்லியில் இப்போது குறைந்த பட்ச கட்டணம் 25. ஆனால் இங்கு இருக்கும் ஒரு தொல்லை - நாம் கூப்பிடும் இடத்திற்கு அவர்கள் விரும்பினால் தான் வருவார்கள்..... சில இடங்களுக்கு பத்து ஆட்டோக்கள் கேட்ட பிறகு பதினொன்றாவது ஆட்டோ வாலா தான் கிடைப்பார்! :)

    திருச்சியிலும் ஆட்டோ காரர்கள் தரும் கஷ்டங்கள் அதிகம் தான். சரியான கட்டணத்தை நிர்ணயம் செய்து அவ்வப்போது கவனித்து வந்தால் நல்லது. ஆனால் அரசு செய்ய முன்வருவதில்லை என்பது தான் சோகம்.

    ReplyDelete
  32. வவ்வாலுக்கு,

    மும்பையை விட சென்னையில் விலைவாசி அதிகம் என்கிறீர்களா. அங்கே இத்தனை இலவசங்களும் ஒரு ரூபாய்க்கு இட்லியும் கிடைப்பதில்லையே. பெங்களூர் ஆட்டோகாரர்கள் சென்னைவந்துதான் நீங்கள் சொல்லியதைக் கடைப்பிடிக்கிறார்களோ. அவன் நம்பகிட்ட புடுங்கறான். நம்ம அவங்ககிட்ட புடுங்குவோம் என்று சிந்திக்க்த்தொடங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
    கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் ஆட்டோ/டாக்சி ஓட்டுனர்களிடம் உள்ள் நேர்மை தமிழகத்தில் மட்டும் ஏன் இல்லை. நான் மற்றமாநிலங்களிலிருந்து ஒவ்வொருமுறை சென்னை வந்தபோதும் அவர்களிடம் தகறாருதான். இடதுசாரி சங்கத்தலைவர்களுக்கு தமிழகத்து நடுத்தரவர்க்க்த்தினர் முதலாளிகளாகத் தெரிகிறார்களா?நிற்க, உச்ச நீதிமன்றம் தலையிடாவிட்டால் அரசு இந்த நடவடிக்கைகூட எடுத்திருக்காது. இதையே பலவ்ருடங்கள் முன்னால் செய்திருக்கவேண்டும்

    கோபாலன்

    ReplyDelete
  33. இவர்களை இவ்வளவுதூரம் ஏத்திவிட்டதற்கு நம்து நடிகர்களுக்கும் பங்கு உண்டு. பாட்சா, வேட்டைக்காரனில் வந்த நடிகர்கள் ஆட்டோ ஓட்டியபோது மீட்டர் போட்டா ஓட்டினார்கள். அப்படி ஒரு சீன் காண்பித்திருக்கலாமே.

    கொபாலன்

    ReplyDelete
  34. மறுமொழி > ADHI VENKAT said...

    // ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்தால் தான் நல்லது... //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! அரசு நிர்ணயித்தாலும் அதன்படி அவர்கள் செயல் படுவதில்லை. அதுதான் பிரச்சினையே.

    ReplyDelete
  35. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // திருச்சியிலும் ஆட்டோ காரர்கள் தரும் கஷ்டங்கள் அதிகம் தான். சரியான கட்டணத்தை நிர்ணயம் செய்து அவ்வப்போது கவனித்து வந்தால் நல்லது. ஆனால் அரசு செய்ய முன்வருவதில்லை என்பது தான் சோகம். //

    யாராலுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இயலாது போலிருக்கிறது.சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  36. அன்றாடம் அனைவரையும் பாதிக்கும் பிரச்சனை இது
    என்பது பின்னூட்டங்களில் இருந்து புரிந்து கொள்ளமுடிகிறது
    விரிவான சரியான பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

    கவிஞர் ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  38. சென்னை ஆட்டோகாரர்கள் திருந்துவதற்கு இன்னுமொரு நூற்றாண்டு ஆகலாம்!
    ஆனால் சென்னையில் பேருந்து வசதிகள் நன்றாக இருப்பதால் ஆட்டோவை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
    எங்களைப் போல வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு சென்ட்ரலில் இறங்கியதும் ஆட்டோகாரர்களுடன் சண்டைதான் ஒவ்வொருமுறையும்!

    பெங்களூரிலும் இப்போது மினிமம் 25 ரூபாய். சிலர் சென்னை முதலிய இடங்களில் கேட்பது போல தோராயமாக ஒரு தொகை சமீபகாலமாகக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. அதேபோல இங்கேயும் கூப்பிட்ட இடத்திற்கு விருப்பம் இருந்தால்தான் வருவார்கள்.

    ReplyDelete
  39. மறுமொழி > Ranjani Narayanan said...

    // சென்னை ஆட்டோகாரர்கள் திருந்துவதற்கு இன்னுமொரு நூற்றாண்டு ஆகலாம்! //

    சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் எங்குமே அவர்கள் திருந்த மாட்டார்கள்.

    // ஆனால் சென்னையில் பேருந்து வசதிகள் நன்றாக இருப்பதால் ஆட்டோவை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
    எங்களைப் போல வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு சென்ட்ரலில் இறங்கியதும் ஆட்டோகாரர்களுடன் சண்டைதான் ஒவ்வொருமுறையும்! //

    எல்லா இடத்திலும் இவ்வாறுதான் இருக்கிறது.

    சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!


    ReplyDelete
  40. "கோப"லனய்யா அவர்களே,

    நாம ஏதோ இருக்கிறத தான் சொன்னோம். தமிழ் நாட்டுல ஆட்டோ கட்டண கொள்ளையும் இருக்கு, சராசரிக்கட்டணமாகவும் இருக்கு. இப்போதைக்கு நிலமை அதான்.

    சென்னையில மினி பஸ் போன்ற பொது போக்குவரத்தெல்லாம் சிறப்பாக இயங்குகின்றன , கூடிய விரைவில் இன்னும் எண்ணிக்கை பெருகினால் 'ஆட்டோ ராஜ்யம்" அமுங்கிடும்.

    பிற மாநிலங்களில் பொது போக்குவரத்து மிக மோசம் என்பதை ஏன் சொல்வதேயில்லை.

    பெங்களூர்,மும்பை,டெல்லியில் இரவு 10 மணிக்கு மேல் "டவுன் பஸ்' ஓடிப்பார்த்திருக்கிங்களா?

    திருச்சியில் கூட சத்திரம் பேருந்து நிலையம் - மத்திய பேருந்து நிலையம் இரவு முழுக்க பேருந்து ஓடுது.
    -------------

    தி.தமிழ் இளங்கோ சார்,

    ஏதோ முடிஞ்சத எழுதுறேன், மற்றப்படி எல்லாவற்ரையும் அலச எங்கே முடியுது. ஆட்டோ கதைய கண்டிப்பாக எழுதனும்னு இருக்கேன் ,பார்ப்போம்.

    அரசு நிர்ணயம் செய்தாலும் தொடர்ந்து கண்காணிக்கவும் செய்யனும், நம்ம ஊரில எல்லாத்துக்கும் ரெகுலேஷன்ஸ் இருக்கு ஆனால் அதனை அமலாக்கம் செய்வதில் தான் தவறுகிறார்கள்.

    ReplyDelete
  41. மறுமொழி > வவ்வால் said...

    வவ்வால் சார்! குறைந்த கட்டணம் வாங்கும் ‘மக்கள் ஆட்டோ’க்களைத் கோவை ஆட்டோ டிரைவர்கள் தாக்கியதாக இன்று (18.02.2014) செய்தி படித்தேன். அப்போது நீங்கள் எழுதிய

    // தி.தமிழ் இளங்கோ சார், ஏதோ முடிஞ்சத எழுதுறேன், மற்றப்படி எல்லாவற்ரையும் அலச எங்கே முடியுது. ஆட்டோ கதைய கண்டிப்பாக எழுதனும்னு இருக்கேன் ,பார்ப்போம். //

    கருத்துரை ஞாபகம் வந்தது. எப்போது எழுதப் போகிறீர்கள்?


    ReplyDelete