Monday 5 August 2013

முதல் பதிவின் சந்தோசம் (தொடர் பதிவு)


குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் வலைப்பதிவர் ( http://kuttikkunjan.blogspot.in  )  சகோதரர் குட்டன் அவர்கள்  முதல் பதிவின் சந்தோசம் என்ற தலைப்பில், தொடர் பதிவு எழுத அழைத்த அறுவரில் நானும் ஒருவன். அழைப்புக்கு நன்றி! தொடர் பதிவில் ஒரு வசதி என்னவென்றால் தலைப்பைத் தேடி போக வேண்டியதில்லை. மேலும் என்ன எழுதுவது என்று முடிவான பின்னர் விறுவிறு என்று சிந்தனையும் செயலாக்கம் பெறுகின்றது.
 
வங்கிப் பணியில் இருந்தபோது கம்ப்யூட்டரில்தான் முழுக்க முழுக்க வேலை. அதிலும் அப்போதுதான் வங்கிகளில் கம்ப்யூட்டர் அறிமுகம் ஆன நேரம். எனவே வீட்டுக்கு திரும்ப நேரமாகி விடும். ஞாயிற்றுக் கிழமை தவிர மற்ற நாட்களில் சூரியனின் அஸ்தமனத்தை பார்த்ததில்லை. பின்னர் எல்லாம் இயல்பானபோது வீட்டிற்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் என்ற யோசனை வந்தது.


ஒருவழியாக புதிதாக  ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். இண்டர்நெட் இணைப்பு வந்ததும் முதல் வேலையாக எனக்கென்று ஒரு மின்னஞ்சல் கணக்கு துவங்கினேன். ஓய்வு நேரங்களில் இண்டர்நெட் பார்ப்பதோடு சரி. அதிலும் அரசாணைகள், வங்கி சம்பந்தப்பட்ட கட்டுரைகள் என்று இவைகளைப் பார்ப்பதோடு சரி. ஒருநாள் அவ்வாறு இண்டர்நெட்டை மேய்ந்து கொண்டிருந்த போது, எதையோ தேடப் போக கணினியின் திரையில் வந்து விழுந்தது தமிழ்மணம். அன்றிலிருந்து நான் தமிழ்மணம் வாசகன். கணினியில்  தமிழில் டைப் செய்யத் தெரியாது. எனவே அதில் உள்ள கட்டுரைகளை படிப்பதோடு சரி. அப்போது தமிழ்மணத்தில் தமிழில் எழுதலாம் வாருங்கள் என்று அழைத்தது கண்டு, அதில் உள்ள கட்டுரைகளை அச்சில் ஏற்றி ஸ்பைரல் பைண்டிங் செய்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துப் பார்த்தேன். அந்த கோட், இந்த கோட், யுனிகோட் என்று  எனக்கு எதுவும் எடுபடவில்லை.


பின்னர் வங்கியிலிருந்து ( 2007 ) விருப்ப ஓய்வு பெற்றதும், கணினிப் பயிற்சி விட்டுப் போகக் கூடாது என்பதற்காக வீட்டிலுள்ள கணினியில் அதிக நேரம் செலவிட ஆரம்பித்தேன். அப்போது தமிழ்மணத்தில் அடிக்கடி வந்த ஞானவெட்டியான் என்ற பதிவர் தொடர்பு ஏற்பட்டது. இவர் சித்தன், ஆலயம், ஞானவெட்டியான் என்ற வலைத்தளங்களின் ஆசிரியர். மேலும் நான் பணிபுரிந்த வங்கிக் கிளையில் எங்களுக்கு கள அதிகாரியாக (FIELD OFFICER) இருந்தவர். அவர் எனக்கு இ கலப்பை என்ற தமிழ் எழுதியைப் பற்றி சொன்னார். அந்த எழுதியைப் பயன்படுத்தி தமிழ்மணத்தில் பதிவுகளுக்கு தமிழில் கருத்துரை எழுதத் தொடங்கினேன். 

பின்னர் எல்லோருக்கும் வந்ததைப் போல வலைப்பூ தொடங்க ஆசை வந்தது. என்ன தலைப்பு வைப்பது என்று தெரியவில்லை. சிறு வயதில் எனது அம்மாச்சி ஊரில், தோட்டத்தில் ஏறி விளையாடிய பூவரசமரம் பெயரையே வைத்தேன். சாதாரண டெம்ப்ளேட் (Template) தான். அடுத்து என்ன?என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். கட்டுரையை பதிவு செய்தேன். கணினியில் எனது கட்டுரையை பார்த்த போது. ஒரே சந்தோசம். ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராக ஆனது போன்ற உணர்வு. பாட்டும் நானே பாவமும் நானே “ என்று பாடாத குறைதான். நானும் ஒரு ப்ளாக்கர் ஆனேன். தமிழ்மணத்தில் எட்டிப் பார்த்தேன். வரவில்லை. அடுத்து ஒரு கட்டுரை. “நீங்கள் என்ன ஜாதி? “ என்ற தலைப்பில். அதுவும் தமிழ்மணத்தில் வரவில்லை. (பின்னர் தற்போதைய வலைத் தளத்தில் இந்த பதிவினை மட்டும் இணைத்துள்ளேன்) அப்புறம்தான் எனக்கு, தமிழ்மணத்தில் உறுப்பினர் ஆக வேண்டும், பதிவை இணைக்க வேண்டும் என்ற விவரம் தெரிந்தது. எல்லாம் செய்த பிறகு தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை நிறுவுவதற்காக, அவர்கள் சொன்னபடி HTML  இல் நுழைந்தேன். சரியான புரிதல் இல்லாதது மற்றும் பதற்றம் காரணமாக எனது வலைப்பதிவே அழிந்து (collapse) விட்டது. சோகமோ சோகம். அதிலிருந்து HTML  இல் மாற்றம் செய்வது என்றாலே பயம்தான்.
பழைய அனுபவத்தை வைத்து எனது எண்ணங்கள் “ என்ற வலைப் பதிவைத் தொடங்கினேன். தமிழ், காவிரி என்ற குறிசொற்களில் ( LABLES )  நடந்தாய் வாழி காவேரி கரையில் நடக்கவே முடியவில்லை! h என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். http://tthamizhelango.blogspot.com/2011/09/blog-post.html  எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு ஒருவழியாக தமிழ்மணத்தில் இணைத்தும் விட்டேன். இந்த பதிவு தமிழ்மணத்தில் வெளியான நாளில்தான், எனது முதல் பதிவின் சந்தோசம் என்பதே தொடங்குகிறது. இகலப்பையை தமிழ்மணத்தில் தமிழில் எழுத பயன்படுத்தி வந்தேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. எனது கம்ப்யூட்டர் அதற்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. அந்தசமயம்  திரு Faizal K.Mohamed  அவர்கள் எழுதிய. “NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? “என்ற கட்டுரையைப் (http://blog.zquad.in/2008/10/nhmwriter.html ) படிக்க நேர்ந்தது. அன்றிலிருந்து தமிழில் எழுத  “NHMWriter  தான்

தொடர்பதிவு என்றால் நானும் சில வலைப் பதிவர்களை அழைக்க வேண்டும். நான்  எனக்கு அறிமுகமான  வலைப் பதிவர்கள் ஆறு பேரை அன்புடன் அழைத்துள்ளேன்
சுப்புத் தாத்தா  ( http://subbuthatha72.blogspot.in )
G M பாலசுப்ரமண்யம்  (http://gmbat1649.blogspot.in )
மனோ சுவாமிநாதன் (http://muthusidharal.blogspot.in )
ஆரூர் மூனா செந்தில் ( http://www.amsenthil.com )
கவியாழி. கண்ணதாசன் (http://kaviyazhi.blogspot.in )
யுவராணி தமிழரசன் ( http://dewdropsofdreams.blogspot.in )
 


          


( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
.

43 comments:

  1. கணினியில் எனது கட்டுரையை பார்த்த போது. ஒரே சந்தோசம். ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராக ஆனது போன்ற உணர்வு/எனக்கும் இப்படித்தான் இருந்தது.

    அழைப்புக்கு நன்றி.கணினி அனுபவம்பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்

    ReplyDelete

  2. தங்களின் முதல் பதிவின் சந்தோசத்தில் நானும் பங்கு கொண்டேன். பதிவை தமிழில் எழுத, http://www.suryakannan.in/2010/12/microsoft.html என்ற திரு சூர்யா கண்ணன் அவர்களின் பதிவில் குறிப்பிட்டுள்ள Microsoft Indic Language Input Tool ஐ பதிவிறக்கம் (Download) செய்து உங்கள் கணினியில் நிறுவி, நீங்கள் விரும்பும்போது தமிழில் தட்டச்சு செய்யலாம்.

    ReplyDelete
  3. முதல் பதிவின் சந்தோஷம்..... சிறப்பாக சொல்லி இருக்கீங்க.....

    நீங்கள் அழைத்தவர்களும் எழுதுவதை படித்திட ஆர்வத்துடன்.....

    ReplyDelete
  4. உங்கள் முதல் பதிவின் சந்தோஷம் உங்களது எழுத்துக்களில் தெரிகிறது.உங்களைப் போல் எல்லோருக்கும் எதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் இருக்கும்.
    உங்கள் பதிவு அருமை .
    மற்றவர்களுடைய அனுபவத்தை படிக்க ஆவலாய் காத்திருக்கிறேன்.
    நன்றி பகிர்விற்கு....

    ReplyDelete
  5. முதல் பதிவின் சந்தோஷத்தை
    நாங்களும் உணரும்படி அருமையாக
    பதிவு செய்துள்ளீர்கள்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்ல நினைவுகூரல் ஸார்..

    நீங்கள் சொல்வது மிக சரி...மேலும் நம் பதிவை முதல் முறை நாமே கணினியில் பார்ப்பது என்பது ஏதோ ஒரு புகழ் பெற்ற புத்தகத்தில் வெளியான சுகத்தைத் தரும் என்பது

    ReplyDelete
  7. தங்களின் முதல் சந்தோஷ அனுபவங்களை அழகாகக் கோர்வையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள், ஐயா.

    தேர்ந்தெடுத்துள்ள படங்கள் குறிப்பாக ’அந்த நாலாவது குரங்கு’ சூப்பர்.

    ReplyDelete
  8. பதிவு இனிமை.
    வாசிக்கச் சுவையாக உள்ளது.
    இனிய வாழ்த்து.
    எனது 2வது நூல் மொழி பெயர்ப்புக் கட்டுரை தான்.
    சிறந்த டெனிஸ் கட்டுரைகளின் மொழி பெயர்ப்பு.
    (எனது மூன்று நூல்களும் நூலகம்.ஓர்க் இணையத்தளத்தில் மின் நூல்களாகப் பார்க்கலாம்.)
    2nd one இங்கு தாங்கள் அதைப பார்க்கலாம்.
    http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. தங்களின் கணினி அனுபவங்கள் அருமையாக இருந்தது.முதல் பதிவின் சந்தோஷம் என்றுமே தனி தான்...

    ReplyDelete
  10. நீங்களும் என்னைப்போல தமிழ்மணம் தளத்தை ஆக்சிடென்ட்டலாக பார்த்துத்தான் எழுத ஆரம்பித்துள்ளீர்கள் போல. நான் துவக்க முதலே தமிழில் எழுத பயன்படுத்துவது ஈகலப்பைதான். அதில் phonetic முறையில் தட்டச்சு செய்ய வசதியுள்ளதால் வேறெந்த மென்பொருளையும் பயன்படுத்த முயன்றதில்லை. உங்களுடைய எளிமையான நடையில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said... // அழைப்புக்கு நன்றி.கணினி அனுபவம்பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன் //

    கவிஞருக்கு, அது கணினி அனுபவம். நான் இப்போது உங்களை எழுதச் சொன்னது முதல் பதிவு பற்றியது. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  12. மறுமொழி > வே.நடனசபாபதி said...
    எனது முதல் பதிவின் சந்தோசத்தில் பங்கு கொண்ட தங்களுக்கு நன்றி! பதிவை தமிழில் எழுத, தங்கள் மூலம் இன்னொரு தமிழ் எழுதியைப் பற்றி அறிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி! நானும் உங்களைப் போல மற்றவர்கள், எழுதுவதை படித்திட ஆர்வத்துடன் இருக்கிறேன்.

    ReplyDelete
  14. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    சகோதரி அவர்களின் அன்பான பாராட்டுரைக்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
    கவிஞரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > சீனு said...

    சகோதரர் சீனுவுக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... // தேர்ந்தெடுத்துள்ள படங்கள் குறிப்பாக ’அந்த நாலாவது குரங்கு’ சூப்பர். //

    VGK அவர்களுக்கு வணக்கம்! அந்த வாலு நாலு பேருக்குமே நன்றி!

    ReplyDelete

  18. தொடர் பதிவு அழைப்புக்கு நன்றி. பதிவுகள் எல்லாமே சந்தோஷம் தருபவையே. முதல் சந்தோஷப் பதிவு என்பதை விட அதிக சந்தோஷம்தந்த பதிவுகள் பற்றி எழுதலாமா. ?எழுதிய பின் நான் யாரையும் தொடர் பதிவு எழுத அழைக்கப் போவதில்லை. ஏற்கனவே அழைத்தவர்கள் எழுத வரவில்லை. என் கணினி அனுபவம் பற்றி எழுதி விட்டேன்.

    ReplyDelete
  19. மறுமொழி > kovaikkavi said... // பதிவு இனிமை. வாசிக்கச் சுவையாக உள்ளது. இனிய வாழ்த்து. //

    சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    // எனது 2வது நூல் மொழி பெயர்ப்புக் கட்டுரை தான்.
    சிறந்த டெனிஸ் கட்டுரைகளின் மொழி பெயர்ப்பு.
    (எனது மூன்று நூல்களும் நூலகம்.ஓர்க் இணையத்தளத்தில் மின் நூல்களாகப் பார்க்கலாம்.) 2nd one இங்கு தாங்கள் அதைப பார்க்கலாம். //

    டேனிஷ் மொழியிலிருந்து தாங்கள் செய்துள்ள மொழிபெயர்ப்பு பணி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தமிழுக்கு நீங்கள் செய்த தொண்டு வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டும். நீங்கள் சொன்ன இணையதளம் சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  20. மறுமொழி > கோவை2தில்லி said... // தங்களின் கணினி அனுபவங்கள் அருமையாக இருந்தது.முதல் பதிவின் சந்தோஷம் என்றுமே தனி தான்... //

    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... // நீங்களும் என்னைப்போல தமிழ்மணம் தளத்தை ஆக்சிடென்ட்டலாக பார்த்துத்தான் எழுத ஆரம்பித்துள்ளீர்கள் போல.//

    ஆமாம்! உங்களைப் போலவே எனக்கும் தமிழ்மணம் எதிர்பாராது
    வந்த ஒன்று.

    //நான் துவக்க முதலே தமிழில் எழுத பயன்படுத்துவது ஈகலப்பைதான். அதில் phonetic முறையில் தட்டச்சு செய்ய வசதியுள்ளதால் வேறெந்த மென்பொருளையும் பயன்படுத்த முயன்றதில்லை. //

    ஆரம்பத்தில் நான் இகலப்பையைத்தான் பயன்படுத்தினேன். என்னவோ (வைரஸ் வந்து இருக்கலாம்) எனக்கு அப்போது
    ஒத்து வரவில்லை.

    //உங்களுடைய எளிமையான நடையில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். //

    எனக்கு பெரும்பாலும் நீண்ட தொடர்களை எழுதியே பழக்கம். ஆனால் கணினி வேலை என்பதால் சிறு சிறு வாக்கியங்களாக எடிட் செய்துகொள்ள முடிகிறது. தங்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி > G.M Balasubramaniam said... // தொடர் பதிவு அழைப்புக்கு நன்றி. பதிவுகள் எல்லாமே சந்தோஷம் தருபவையே. முதல் சந்தோஷப் பதிவு என்பதை விட அதிக சந்தோஷம் தந்த பதிவுகள் பற்றி எழுதலாமா?.//

    GMB அவர்களின் நன்றிக்கு நன்றி! நீங்கள் எப்படி எழுதினாலும் ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். எழுதுங்கள். ஆவலோடு இருக்கிறேன்.

    // எழுதிய பின் நான் யாரையும் தொடர் பதிவு எழுத அழைக்கப் போவதில்லை. ஏற்கனவே அழைத்தவர்கள் எழுத வரவில்லை. என் கணினி அனுபவம் பற்றி எழுதி விட்டேன். //

    தொடர்பதிவு என்றாலே பலர் ஓடி விடுகிறார்கள். வேறு ஒன்றுமில்லை. முகமூடி போட்டு எழுதுபவர்களுக்கு உண்டான PROFILE பிரச்சினைதான். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  23. அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  24. சந்தோஷ பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  25. சுவாரஸ்யம்!நானும் nhm writer தான்!

    ReplyDelete
  26. அழைப்பை எற்றுத் தொடர்ந்தமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  27. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... //அருமை... வாழ்த்துக்கள் ஐயா... //

    எப்போதும் எனக்கு ஊக்கம் கொடுத்துவரும் தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said... // சந்தோஷ பகிர்வுகள்..பாராட்டுக்கள்.. //
    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > சென்னை பித்தன் said... //சுவாரஸ்யம்!
    நானும் nhm writer தான்! //

    நீங்களும் nhm writer தான்! என்பதில் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  30. மறுமொழி > குட்டன் said... // அழைப்பை ஏற்றுத் தொடர்ந்தமைக்கு நன்றி ஐயா! //
    நான்தான் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்ல வேண்டும். நன்றிக்கு நன்றி!

    ReplyDelete
  31. சுவாரசியமான அனுபவம்தான்!

    ReplyDelete
  32. மறுமொழி > கே. பி. ஜனா... said...
    எழுத்தாளர் கே பி ஜனா அவர்களின் எளிமையான, கருத்துரைக்கு நன்றி! உங்கள் வலைப்பக்கம் வரவேண்டும்.

    ReplyDelete
  33. அன்புள்ள சகோதரர் தமிழ் இளங்கோ அவர்களுக்கு!

    என்னை தொடர் பதிர்விற்கு தாங்கள் அழைத்திருப்பதற்கு அன்பான நன்றி! தற்போது தஞ்சையில் இருப்பதால் நான் எனது வசிப்பிடத்திற்குத்திரும்பிய பிறகு விரைவில் இந்த தொடர்பதிவில் இணைகிறேன்!!

    ReplyDelete
  34. தங்களின் வலைப்பூவை ஆட்டம் இல்லாமல் பல மாதங்களுக்குப்பிறகு தற்போது பார்த்ததும் மகிழ்வாக இருக்கிறது.

    தொடர் பதிவில் தங்கள் அனுபவங்கள் அருமையாக‌ உள்ளன. 'பூவரச மரம்' தலைப்புமே மிக புதுமையாக அழகாக இருக்கிறது. நான்காவது குரங்கு தரும் செய்தியும் அசத்தல்!!

    ReplyDelete
  35. மறுமொழி > மனோ சாமிநாதன் said... ( 1, 2 )
    சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  36. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தி
    சிறப்பித்தற்கு மனம் நிறைந்த
    இனிய அன்பு நன்றிகள்..!

    ReplyDelete
  37. முதல் பதிவின் உற்சாகமே தனி உற்சாகம்தான். அருமையாக கூறியுள்ளீர்கள் ஐயா. நன்றி. தாமத வருகைக்கு வருந்துகின்றேன்.

    ReplyDelete
  38. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
    ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  39. காந்திஜியின் மூன்று குரங்குகளுடன் நான்காவதும் இணைந்து 'கெட்டதை பதிவாக்காதே' என்று சொல்வது தேவையான ஒன்று.

    முதல் பதிவின் உற்சாகம் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  40. மறுமொழி > Ranjani Narayanan said...
    // காந்திஜியின் மூன்று குரங்குகளுடன் நான்காவதும் இணைந்து 'கெட்டதை பதிவாக்காதே' என்று சொல்வது தேவையான ஒன்று.
    முதல் பதிவின் உற்சாகம் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.பாராட்டுக்கள்! //
    சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  41. ஐயா முதலில் மிகுந்த தாமதமான பதிலுக்கு எம்மை மன்னியுங்கள்! என்னையும் "முதல் பதிவின் சந்தோஷம்" தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு மிகுந்த நன்றிகள்! இப்பொழுது தான் வேலையில் சேர்ந்துள்ளேன் உங்கள் துறையே தான்! வீட்டிற்கும் பணியிடத்திற்குமான அலைச்சலே எனது பாதி நேரத்தை எடுத்துக்கொள்கிறது! அதனால் பதிவினில் கவனம் செலுத்தமுடிவதில்லை! இனிமேல் தான் கொஞ்சம் கொஞ்சமாக எனது பொழுதுகளை திட்டமிடவேண்டும்!
    என்னை தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு மீண்டும் ஒருமுறை மிகுந்த நன்றிகள்! மேலும் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கும் மிகுந்த சந்தோஷமும் நன்றிகளும் சார்!

    ReplyDelete
  42. மறுமொழி> யுவராணி தமிழரசன் said...
    // இப்பொழுது தான் வேலையில் சேர்ந்துள்ளேன் உங்கள் துறையே தான்! வீட்டிற்கும் பணியிடத்திற்குமான அலைச்சலே எனது பாதி நேரத்தை எடுத்துக்கொள்கிறது! அதனால் பதிவினில் கவனம் செலுத்தமுடிவதில்லை! இனிமேல் தான் கொஞ்சம் கொஞ்சமாக எனது பொழுதுகளை திட்டமிடவேண்டும்! //

    தங்களுக்கு வங்கியில் வேலை கிடைத்து இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சிஇந்த நல்ல செய்தியை திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தமது பதிவொன்றில் முன்பே தெரிவித்து இருந்தார். ! வாழ்த்துக்கள்!

    வங்கிப் பணியில் கவனம் செலுத்தவும். வங்கி, வங்கிப் பணி தவிர்த்து மற்றவற்றை யோசித்து எழுதுங்கள்.

    ReplyDelete