Thursday 1 August 2013

தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பவர்கள்.



நேற்று இரவு தூக்கம் வரவில்லை. சரி தூக்கம் வரும்வரை தொலைக் காட்சியையாவது பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன். எங்கள் ஏரியாவில் அரசு கேபிள். சில சானல்களில் தெலுங்கானா வரலாற்றினையும் பேட்டிகளையும் காண்பித்து  நேரத்தைப் போக்கிக் கொண்டு இருந்தார்கள்.

சில சானல்களில் ( மறு ஒளிபரப்பு ) தெலுங்கானவைப் போன்று தமிழநாட்டையும் எப்படி பிரிப்பது என்று சில லெட்டர்பேடு தலைவர்களின் கருத்தை கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களும் அப்பாடா நமக்கு வந்தது ஒரு வாய்ப்பு என்று, எப்படி எந்த சுத்தியல் வைத்து தமிழ்நாட்டை எப்படி பிரிப்பது? என்று வாரி வாரி வழங்கிக் கொண்டு இருந்தார்கள். கூடவே சில புள்ளி விவர மேதைகள். அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார்கள். இடையிடையே தொகுப்பாளரின் சிந்தனைகள். சிலர் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியவில்லை.

ஒரு முன்னாள் எம்பி தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கச் சொன்னதாக ஒரு செய்தி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த எம்பி மீது அவரது மகளே தனது சொத்தை அபகரித்துக் கொண்டதாக போலீசில் புகார் அளித்து இருந்தார். தமிழ்நாட்டை பிரிக்கச் சொல்பவர்கள் முதலில் தங்களிடம் இருக்கும் சொத்துக்களை தங்கள் பிள்ளைகளுக்கு சரியாக பிரித்துக் கொடுத்தார்களா என்று தெரியவில்லை. நேற்றுவரை தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்கள்தான் இவர்கள். தன் வீட்டுப் பிள்ளை முதல்வராக, மந்திரியாக இருக்க வேண்டும் என்ற சுயநலமே இதற்குக் காரணம். இப்படியே போனால் யார் உண்மையான தமிழர்கள் என்பதில் வட தமிழர்களா தென் தமிழர்களா என்ற கேள்வி வந்துவிடும்.

கையில் ரிமோட். சும்மா இருக்க முடியவில்லை. எனவே, மேலே சொன்ன விவாதங்களுக்கு இடையிடையே ஜெயா டீவியையும் வந்து எட்டிப் பார்த்தேன். நேற்று இரவு ஜெயா டீவியில் பாகப்பிரிவினை படம் ஓடிக் கொண்டு இருந்தது. என்ன பொருத்தம் பாருங்கள்? நான் பார்க்க உட்கார்ந்த நேரம் அப்போதுதான் நம்ம எம்ஆர்ராதா அவர்கள் பாகப்பிரிவினை செய்து வீட்டிற்கு நடுவே பெரிய சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார். பின்னணியில் ஒரு பாடல். ஜோடியாக இருந்த குத்துவிளக்குகள் இரண்டையும் தனித் தனியாக பிரிப்பார். ஜோடியாக இருந்த காளைமாடுகளைப் பிரிப்பார். ஆட்டைத் தனியாகவும் அதன் குட்டியைத் தனியாகவும் பிரிப்பார்.தாய்க் கோழியைத் தனியாகவும், அவற்றின் குஞ்சுகளை தனியாகவும் பிரிப்பார்.

அந்த பாடலின் காணொளி (VIDEO) காண இந்த முகவரியை க்ளிக் செய்யுங்கள்.

பாடல் வரிகள் கீழே:

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: மருதகாசி

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

திரைப்படம்: பாகப்பிரிவினை


மந்தரையின் போதனையால் மனம் மாறிக் கைகேயி
மஞ்சள் குங்குமம் இழந்தாள்
வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்
பஞ்ச பாண்டவரைப் பகைத்து அழிந்தார்
சிந்தனையில் இதையெல்லாம்
சிறிதேனும் கொள்ளாமல் மனிதரெல்லாம்
மந்த மதியால் அறிவு மயங்கி
மனம் போனபடி நடக்கலாமோ?


ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

 
உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாசமே
அணையாத தீபமாய் சுடரென்றும் வீசுமே
நெஞ்சில் உண்டான அன்பையே துண்டாடி வம்பையே
உறவாகத் தந்திடும் சிலர் சொல்லை நம்பியே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
 
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
 
துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே
வனவேடன் வீசிய வலைதன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

 
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
 


 

22 comments:

  1. நல்ல பொருத்தம்... நல்ல பாடல்...!

    ReplyDelete
  2. நானும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தேன். தொகுப்பாளர் ‘மக்கள் அனைவரும் தமிழ்நாட்டைப் பிரிக்க எண்ணுகிறார்களா?’ எனக்கெட்டபோது அந்த பிரிவினைவாதிகளால் சரியாக பதில் சொல்ல இயலவில்லை.
    கவலை வேண்டாம். தமிழ் நாட்டைப் பிரிக்க மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். //

    //ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
    வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே.’’

    என்ற பாட்டின் வரிகளே அவர்களுக்கு பதில்.

    ReplyDelete
  3. இன்று காலை தினமலரிலும் இந்த செய்தி படித்தேன் + படமும் பார்த்தேன். மனதுக்குக் கஷ்டமாகவே இருந்தது.

    //ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
    வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே.’’

    நல்ல பாடல் வரிகள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  4. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... // நல்ல பொருத்தம்... நல்ல பாடல்...! //

    கவ்ஞர் மருதகாசியின் வரிகள், பாடியவர்கள், அந்த காட்சிக்கு உயிரூட்டும் வண்ணம்ம் நடித்தவர்கள், இசையமைப்பு என்று நெஞ்சைத் தொடும் பாடல்.

    ReplyDelete
  5. மறுமொழி > வே.நடனசபாபதி said... //நானும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தேன். தொகுப்பாளர் ‘மக்கள் அனைவரும் தமிழ்நாட்டைப் பிரிக்க எண்ணுகிறார்களா?’ எனக்கேட்டபோது அந்த பிரிவினைவாதிகளால் சரியாக பதில் சொல்ல இயலவில்லை. //

    தமிழ்நாட்டு மக்களிடம் வடக்கு தெற்கு கோஷம் எடுபடவில்லை. எனவே பலர் அடக்கியே வாசிக்கிறார்கள்.நான் முதலில் இந்தியன அப்புறம் தமிழன்.


    //கவலை வேண்டாம். தமிழ் நாட்டைப் பிரிக்க மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். //

    தமிழ்நாட்டில் பிரிவினைக்கு என்றுமே ஆதரவு இல்லை.
    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  6. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... // இன்று காலை தினமலரிலும் இந்த செய்தி படித்தேன் + படமும் பார்த்தேன். மனதுக்குக் கஷ்டமாகவே இருந்தது. //

    நானும் தினமும் தினமலர் படிப்பவன்தான். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கார்ட்டூன் போட்டு இருந்தார்கள். VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  7. பொருத்தமான பாடல்தான். இந்த பாடலை கண்ணதாசன் எழுதினார் என்று நினைத்திருந்தேன். தனி தெலுங்கானாவினால் பெரிய நன்மை விளைந்து விடும் என்று தோன்றவில்லை

    ReplyDelete
  8. நல்ல பதிவு.கொள்ளையடிப்பதற்காக நாட்டை துண்டு துண்டாடக உடைக்கவே விரும்புவார்கள் சுயநலவாதிகள்.

    ReplyDelete
  9. பொருத்தமான பாடல்......

    பிரிக்காமல் இருந்தால் தான் நல்லது.

    ReplyDelete
  10. சிலருக்கு நாமளும் முதலமைச்சராகணும்கற எண்ணம் இருக்கு அட்லீஸ்ட் நம்ம பையனாவது ஆகணும்கற ஆசையில தமிழ்நாட்டை சாதி அடிப்படையிலையாவது பிரிசிரலாம்னு பாக்கறாங்க. ஆனா அது நடக்க போறதில்லை.

    ReplyDelete
  11. மறுமொழி > T.N.MURALIDHARAN said... // பொருத்தமான பாடல்தான். இந்த பாடலை கண்ணதாசன் எழுதினார் என்று நினைத்திருந்தேன். தனி தெலுங்கானாவினால் பெரிய நன்மை விளைந்து விடும் என்று தோன்றவில்லை //

    கருத்தாழம் மிக்க பல பாடல்களை கண்ணதாசன் மட்டுமே அவ்வாறு எழுத் முடியும் என்ற மயக்கம் அனைவருக்கும் உண்டு. நானும் வாலியின் சில பாடல்களை அவ்வாறு நினைத்ததுண்டு.

    தெலுங்கானா நிலவரம். போகப் போகத்தான் தெரியும் எது எப்படி இருப்பினும் மொழிவாரி மாகாணங்கள் என்று அமைந்த பிறகு மேலும் மேலும் உடைப்பது இந்தியாவின் ஒற்றுமைக்கு நல்லதல்ல.

    மூங்கிற்கார்று முரளிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > வேகநரி said... // நல்ல பதிவு.கொள்ளையடிப்பதற்காக நாட்டை துண்டு துண்டாடக உடைக்கவே விரும்புவார்கள் சுயநலவாதிகள். //

    “ சுயநலவாதிகள் “ இதற்கு மேல் விமர்சனத்தில் வேறு சொற்றொடர் இல்லை. வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... // பொருத்தமான பாடல்...... பிரிக்காமல் இருந்தால் தான் நல்லது. //

    யாரும் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கப்படுவதை விரும்பவில்லை என்பதே உண்மை. தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > indrayavanam.blogspot.com said... // அருமையான பதிவு //

    தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... // சிலருக்கு நாமளும் முதலமைச்சராகணும்கற எண்ணம் இருக்கு அட்லீஸ்ட் நம்ம பையனாவது ஆகணும்கற ஆசையில தமிழ்நாட்டை சாதி அடிப்படையிலையாவது பிரிசிரலாம்னு பாக்கறாங்க. ஆனா அது நடக்க போறதில்லை. //

    எதுவும் நடக்கப் போவதில்லை. இருந்தாலும் போகிற போக்கில் ஒரு கல்லை விட்டெறிந்து பார்க்கிறார்கள். அதே கல் திரும்பி அவர்களை நோக்கியும் திரும்பும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

    தங்களின் மேலான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  16. Dear Sir, I beg to differ from your view. Already we have Pondicheery and Tamilnadu. If we have more states, state fund could be distributed evenly. We may have more MP’s in the central, which can give us better voice in making policies. All this could be possible only if we are united. Hope we will be like five fingers in the same hand. Sorry for writing in English. It takes more time for me to write in Tamil.

    ReplyDelete
  17. மறுமொழி > Packirisamy N said...
    தங்களின் மாறுபட்ட கருத்துக்கு நன்றி!

    பாண்டிச்சேரியையும் தமிழ் நாட்டோடு இணைக்கச் சொன்னார்கள். அதற்கு அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடச் சொல்லி போராட்டம் செய்பவர்கள், பாண்டிச்சேரியில் இதுபற்றி எதுவுமே சொல்வதில்லை. இதேபோல்தான் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்தாலும் எல்லா காரியங்களும் ஜாதி அடிப்படையில் நடக்கும். பல சமூகத்தவர்கள் சிறுபான்மை ஆகி விடுவார்கள். தமிழனின் ஒற்றுமை என்பது உலகமே அறிந்த ஒன்று.

    ReplyDelete
  18. வளர்ச்சி என்பதை சென்னையோடு நிறுத்திக்கொள்ளாமல், கன்னியாகுமரிவரை கவனம் செலுத்தினால், யார் கேட்பார் பிரிவினை ?

    தலைவர்களுக்கு அல்லது மக்களுக்கு இது எப்பொழுது புரிய வரும் ? குஜராத் மாநிலம் ஒன்றில் மட்டுமே அனைத்து மாவட்டங்களும் முழு வளர்ச்சியை கொண்டுள்ளன!!!!!!!

    நாம் TASMAC கடைகளை மட்டுமே நிறைவாக பெற்று உள்ளோம் !!!!!!!!!!

    ReplyDelete
  19. மறுமொழி > Anonymous said...

    அனானிமஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
    மேலே பக்கிரிசாமி அவர்களுக்கு கொடுத்த மறுமொழியிலேயே பதிலும் இருக்கிறது. இருந்தாலும் சில வார்த்தைகள்.

    // வளர்ச்சி என்பதை சென்னையோடு நிறுத்திக்கொள்ளாமல், கன்னியாகுமரிவரை கவனம் செலுத்தினால், யார் கேட்பார் பிரிவினை ? //

    தமிழ்நாட்டை இரண்டாக உடைக்க வேண்டும் என்று சொல்பவர்கள், சென்னைக்கு மட்டுமே எல்லாவற்றையும் ஏன் செய்கிறீர்கள் என்று இன்றுவரை ஏன் போராடவில்லை என்று தெரியவில்லை?

    ஸ்ரீரங்கத்தில் தலைமைச் செயலகம் என்ற எனது பதிவில் நான் எழுதிய கருத்து வருமாறு ... ...

    ” சென்ற முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ராணிமேரிக் கல்லூரியின் இடத்தை தேர்ந்தெடுக்காமல், வேறொரு இடத்தை தேர்ந்தெடுத்து இருந்தால், தலைமைச் செயலகத்திற்கு இவரது காலத்திலேயே புதிய கட்டிடம் உருவாகி இருக்கும். அப்போது பிரச்சினை என்று வந்தபோது மற்ற மாவட்ட மக்கள் நமக்கென்ன என்று இருந்து விட்டார்கள். இவரை ஆதரித்து அப்போது யாரும் குரல் கொடுக்கவில்லை. ஏனெனில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சென்னைக்கே முதலிடம் தருகின்றனர். சென்னை நகருக்கு மட்டுமே புதிய சாலைகள்,புதிய பேருந்துகள், புதிது புதிதாக மேம்பாலங்கள். மெட்ரோ ரயில், பெரிய நூலகங்கள், துணை நகரத் திட்டங்கள், பூங்காக்கள் என்று சென்னைக்கே அள்ளித் தந்தனர். சென்னையை மட்டுமே முதன்மை படுத்தினார்கள். மற்ற மாவட்ட மக்களுக்கு கிள்ளி கூட தரவில்லை. இன்னும் மற்ற மாவட்டங்களில் உள்ள சாலைகளும், பாலங்களும், குடிநீர்த் தொட்டிகளும், ஆண்டுக் கணக்கில் பராமரிப்பு கூட இல்லாமல் இருக்கின்றன. காவிரிக் கரையில் உள்ள திருச்சி போன்ற நகரங்களில் உள்ள மக்கள் இன்னும் தண்ணீர் தேடி குடங்களோடு அலைகின்ற சூழ்நிலை.

    எனவே முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தி.மு.க ஆட்சி போன்று சென்னைக்கு மட்டுமே முதலிடம் தராமல் மற்ற மாவட்ட மக்களுக்கும் புதிய திட்டங்களை உருவாக்கினால் சரித்திரத்தில் அவர் பெயர் நிற்கும். அதற்கு முன்னோடியாக தமிழகத்தின் நடுவில் இருக்கும் அவரது தொகுதியான ஸ்ரீரங்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டினால் முதல்வர் ஜெயலலிதா பெயர் சொல்லும்.”
    http://tthamizhelango.blogspot.com/2011/11/blog-post_15.html


    // தலைவர்களுக்கு அல்லது மக்களுக்கு இது எப்பொழுது புரிய வரும் ? குஜராத் மாநிலம் ஒன்றில் மட்டுமே அனைத்து மாவட்டங்களும் முழு வளர்ச்சியை கொண்டுள்ளன!!!!!!! //

    நீங்கள் சொல்லும் குஜராத் போன்று தமிழ்நாடும் தன்னிறைவு பெற வேண்டும். ஆனால் புவியியல் அமைப்பில் இரண்டும் வெவ்வேறானவை என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    // நாம் TASMAC கடைகளை மட்டுமே நிறைவாக பெற்று உள்ளோம் !!!!!!!!!! //

    இப்போது தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் டாஸ்மாக்கை மட்டும் அளவுகோலாக வைத்து பேசுவது பேஷனாக உள்ளது.
    ( நீங்கள் நானும் டாஸ்மாக் பேர்வழியோ என்று எண்ணி விடாதீர்கள். எனக்கு மது அருந்துதல், புகைத்தல் பழக்கங்கள் கிடையாது )

    எந்த மதுவாக இருந்தாலும், யாரும் அந்தப் பக்கம் போகக் கூடாது; முற்றிலும் ஒழிக்க வேண்டும். மக்கள் மத்தியில் இன்னும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.

















    ReplyDelete
  20. நண்பர் நீங்க இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லையா என்று கேட்ட போது தான் இது போன்ற ஒரு நிகழ்ச்சி குறித்து தெரியவந்தது.

    கொங்கு நாடு ஈஸ்வரன் பேசினாராமே?

    ReplyDelete
  21. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said

    ஜோதிஜி அவர்களுக்கு வணக்கம்! அன்று இரவு நான் பார்த்தது ஒரு டீவி சானலின் மறு ஒளிபரப்பு. அந்த உரையாடலில் கொங்கு நாடு ஈஸ்வரன் இல்லை..

    மாலையில் இதுபோல் இரண்டு அல்லது மூன்று சானல்களில் விவாதம் நடைபெற்றதாகத் தெரிகிறது.

    ReplyDelete