Tuesday 24 April 2018

தனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)

( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ? அவருக்கு நன்றி)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தனிமை.. ஒரு கொடுமை..

பிள்ளையை.. பெண்ணை பெற்று வளர்த்து.. படிக்க வைத்து ஆளாக்கி.. மணமுடித்து வைக்கிறோம்..வேறு ஊரில.. வேறு மாநிலத்தில்.. வேறு நாட்டில் வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்..

இங்கு.. 70வயதிற்கு மேல் நமக்கு.. வாழ்ந்த வீட்டில் தனிமை..
இங்குதான் என் மகள் படிப்பாள்.. இங்குதான் விளையாடுவாள்..
என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான் என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்ப்போம்..


என்ன சமைப்பது?.. என்ன சாப்பிடுவது?.. அ ரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்.. பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது..

தனிமை.. தனிமை..

அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால் பயணம் ஒரு கொடுமை.. லோயர் பர்த் கிடைக்கவில்லை என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும். சென்னை போன்ற ஊர்களில் சென்ட்ரல் போய்ச் சேருவதே ஒரு பிரம்ம பிரயத்தனம்..

சரி.. பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்.. பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்.. என்றால்..அந்த நேரம் அவர்கள்.. ஏதோ மாலில்... ஏதோ ஓட்டலில்.. ஏதோ ஒரு சினிமா தியேட்டரில் இருப்பார்கள்.. கூப்பிடுகிறேன் என்பார்கள்.. அதற்குள் நமக்குத் தூக்கம் வந்து விடும்..

நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம் அவர்களுக்கு இருக்காது.. மூன்று வயது வரைதான் தாத்தா.. பாட்டி என்று கூப்பிடும்.. பிறகு எப்போது அவர்களை அழைத்தாலும்.. அவன் வெளியே விளையாடுகிறான்.. அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருககிறான்.. அவன் டியூஷன் போய்விட்டான் என்ற பதில்தான் வரும்..

வாரம் ஒரு முறையாவது குழந்தைகளைப் பெற்றவர்கள்.. அவர்களுக்கு, தாத்தா பாட்டி கூட பேசச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.. அப்போதுதான் உறவுகள் விட்டுப் போகாமல் இருக்கும்.அதை விட்டு ஆசையாகக் கூப்பிடும் போது.. வீடியோ காலில் முகத்தைக் காட்டி.. ஹாய்.. என்று ஒன்றைச் சொல் சொல்லிவிட்டு ஓடினால் நமக்கு எப்படி இருக்கும்?

நமது பண்பாடு.. கலாச்சாரம்.. தாத்தா பாட்டி உறவுகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது.. நமது பிள்ளைகள்தான்.. அதை மறக்கக் கூடாது.

எத்தனை நேரம டிவி பார்ப்பது?.. இந்த அரசியல்களும்.. பொய்களும் நம்மை மேலும் கலங்க வைக்கின்றன.ஊடகங்களில் வரும் விவாதங்களை ஒருவன் தவறாமல் பார்த்தால்.. அதுதான் அவனுக்கு ஆயுள் தண்டனை என்றே ஆகிவிட்டது.

வயதானவர்களுக்கு சொந்த வீட்டில் இருந்தாலும், அது ஒருவகையில் முதியோர் இல்லம் போல் ஆகிவிட்டது.

ஏதோ.. வாட்சப்.. முகநூல் என்று இருப்பதினால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது..!!!!

கனவில் கூட நம்முடன் முகநூல் நண்பர்கள் இருப்பது போல் ஒரு பிரமை..
ஏதோ.. மார்க்கம்.. மகேசனும்தான் நமக்கு துணை..

😰😰😰😰😰😰😰

61 comments:

  1. இது உண்மைதான். என் உறவினர் ஒருவர் அடிக்கடி எனக்கு அலைபேசிக்கு கொண்டே இருப்பார். கேட்ட கேள்விகளையே கேட்பார். சமயங்களில் "நான் இப்போது ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்கவா?" என்று கூடக் கேட்டிருக்கிறார். "யாருமே என்னோடு பேசுவதில்லை. நீயுமா?" என்பார். அவருக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்து வாட்ஸாப் குடும்பக் குழுமத்தில் சேர்த்து விட்டேன். பிரமிக்கத்தக்க வகையில் அலைபேசியின் திறன்களை, இயக்கம் வகைகளைக் கற்றுக் கொண்டு இப்போது உற்சாகமாக இருக்கிறார்.

    இவற்றில் சில சமயம் இப்படி நன்மைகளும் உண்டு!!

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த, நண்பர், எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் அவர்களுக்கு நன்றி. தனிமை.. ஒரு கொடுமை.. என்ற தலைப்பை விட, முதுமையில் தனிமை ஒரு கொடுமை என்ற தலைப்புதான் சரியாக இருக்கும். ஆனால் முதன் முதல் வாட்ஸ்அப்பில் (Whatsapp) இதனை எழுதியவர் வைத்த இந்த தலைப்பினை நானும் மாற்ற விரும்பவில்லை.

      Delete
    2. பயமுறுத்துறீங்களே ஸ்ரீராம்.

      Delete
  2. //தனிமை.. ஒரு கொடுமை..//

    ஆம். தனிமையைப் போன்ற மிகப்பெரிய கொடுமை இருக்கவே முடியாது என்பதே என் கருத்தும் ஆகும்.

    இந்தக் கட்டுரையை நன்கு உணர்ந்து, முதன் முதலாக வாட்ஸ்-ஆப்பில் எழுதியுள்ளவருக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    // எத்தனை நேரம் டிவி பார்ப்பது?.. இந்த அரசியல்களும்.. பொய்களும் நம்மை மேலும் கலங்க வைக்கின்றன. ஊடகங்களில் வரும் விவாதங்களை ஒருவன் தவறாமல் பார்த்தால்.. அதுதான் அவனுக்கு ஆயுள் தண்டனை என்றே ஆகிவிட்டது //

    அதிலும் விவாதங்களில் பங்கு பெறுவோர், உணர்ச்சி வசப்பட்டு ஒரே நேரத்தில் ஒருவருக்கு மேல் பேசும் போது, மிகுந்த எரிச்சல் ஏற்பட்டு விடுகிறது.

    இடையில் திரும்பத் திரும்ப ஒரே விளம்பரங்கள், நிறையமுறைகள் வரும் போது எரிச்சலின் உச்சக்கட்டத்திற்குச் சென்றுவிட நேரிடுகிறது. அப்போது சேனலை மாற்றி வெளியேறவும் நேரிடுகிறது. இதனால் விவாதங்களை முழுமையாகக் கேட்கும் பொறுமையை நாம் இழக்க நேரிட்டு விடுகிறது.

    //வயதானவர்களுக்கு சொந்த வீட்டில் இருந்தாலும், அது ஒருவகையில் முதியோர் இல்லம் போல் ஆகிவிட்டது.//

    ஆம். நிச்சயமாக. அதிலும் ரசனைகளில் வித்யாசம் இருப்பின், வீட்டில் இருவர் இருப்பினும் இரு தனித்தனித் தீவுகள் போலவே உணரப்படுகிறது.

    //ஏதோ.. வாட்சப்.. முகநூல் என்று இருப்பதினால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது..!!!!//

    ஆம். முகம் தெரியாத நட்புக்களாகவே இருப்பினும், ஒரே ரசனைகள் உள்ள ஒரு பத்து நபர்களுடன் தினமும் மெயில்கள் + வாட்ஸ்-ஆப் மூலம், [க்ரூப் ஆக இல்லாமல் தனித்தனியே] மனம் விட்டுப் பேசிப் பழக நேரிடுவதால், மனதுக்கு நிம்மதியாகவும், ஆறுதலாகவும் உணர முடிகிறது என்பது உண்மைதான்.

    அதுவும்கூட ஒருவிதத்தில் நம்மை அடிமையாக்கி, பைத்தியம் பிடிக்கத்தான் வைத்துவிடுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்.

    இருப்பினும், பல்வேறு காரணங்களால் ஃபேஸ் புக் பக்கம் மட்டும் நான் அதிகமாகச் செல்வது கிடையாது.

    தங்களின் இந்தப்பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் திரு V.G.K அவர்களின் அன்பான விரிவான கருத்துரைக்கு நன்றி. நீங்களாவது திருச்சியில் டவுனில் இருக்கிறீர்கள்; நிறையபேரை பார்க்கவாவது முடியும்: நான் இருப்பது புறநகர்ப் பகுதி: இங்கு எல்லாமே பங்களா டைப் தனித்தனி வீடுகள். நண்பர்கள் ஆங்காங்கே டவுனிலும், இங்கு கொஞ்சம் தள்ளியும் இருக்கிறார்கள். இரண்டு சக்கர வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்த போது எல்லோரையும் பார்க்க முடிந்தது. இப்போது ஆட்டோதான்.அதிலும் முன்புபோல் அடிக்கடி எங்கும் வெளியில் செல்வதில்லை.

      // இருப்பினும், பல்வேறு காரணங்களால் ஃபேஸ் புக் பக்கம் மட்டும் நான் அதிகமாகச் செல்வது கிடையாது. //

      என்னாலும் முன்புபோல ஃபேஸ்புக் பக்கம் அதிகம் செல்ல இயலவில்லை; அதிலிருந்து வெளியே வந்து விடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன். வாட்ஸப்பிலும் சில குழுக்களில் இருந்து வந்து விட்டேன்.

      Delete
    2. கோபு சார்... வாட்சப் கொஞ்சம் வயதானவர்களுக்கு ரிலாக்ஸ் ஆக இருக்கும் என்பது உண்மைதான். அது கிட்டத்தட்ட பேனா நண்பர்கள் குழுமம் போன்றது.

      தீவாந்திரச் சிட்சையில் இருப்பவர்களுக்காவது 6-8 மணி நேரம் கட்டாய உடலுழைப்பு உண்டு. சொந்தங்கள் சூழ்ந்திருக்காத வயதான இருவருக்கு (65+) வாழ்க்கையே வெறுமையாக இருப்பது சகஜம்தான். நல்லவேளை யூடியூப், வாட்சப், இண்டர்னெட் போன்ற பொழுதுபோக்குகள் உள்ளன.

      Delete
    3. தி.தமிழ் இளங்கோ Wednesday, April 25, 2018 4:27:00 pm

      //நீங்களாவது திருச்சியில் டவுனில் இருக்கிறீர்கள்; நிறையபேரை பார்க்கவாவது முடியும்: நான் இருப்பது புறநகர்ப் பகுதி: இங்கு எல்லாமே பங்களா டைப் தனித்தனி வீடுகள். நண்பர்கள் ஆங்காங்கே டவுனிலும், இங்கு கொஞ்சம் தள்ளியும் இருக்கிறார்கள்.//

      இதற்கான மிக நல்லதொரு தீர்வாக நான் இன்று இப்போது உங்களுக்கு ஓர் தனி மெயிலில் விரிவாக எடுத்துச் சொல்லியுள்ளேன். முடிந்தால் இந்த அரியதொரு வாய்ப்பினை நழுவ விடாமல் பயன் படுத்திக்கொள்ளவும்.

      இதனால் நாம் ஒருவரையொருவர் தினமும் நேரில் சந்தித்துப் பேசவும் முடியும். :)

      அன்புடன் VGK

      Delete
    4. நெ.த. Wednesday, April 25, 2018 9:11:00 pm

      வாங்கோ ஸ்வாமீ .... வணக்கம்.

      //கோபு சார்... வாட்சப் கொஞ்சம் வயதானவர்களுக்கு ரிலாக்ஸ் ஆக இருக்கும் என்பது உண்மைதான். அது கிட்டத்தட்ட பேனா நண்பர்கள் குழுமம் போன்றது.//

      வாட்ஸ்-ஆப் ..... வயதானவர்களை ரிலாக்ஸ் செய்வது மட்டுமல்ல. அவர்களை இளமையானவர்களாக மாற்றும் வல்லமை படைத்தது என்றும் சொல்லலாம். தினமும் என்னுடைய நெருங்கிய நட்பு வட்டங்களிலிருந்து சுமார் 50 படங்களோ, வீடியோக்களோ, செய்திகளோ எனக்கு வந்துகொண்டே உள்ளன.

      அவற்றை உடனுக்குடன் ஓபன் செய்து பார்த்து வருவது என் மனைவி மட்டுமே. என் மொபைலின் சென்ஸார் போர்டு சீஃப் அத்தாரிட்டி என் மனைவி மட்டுமே. அதனால் தயவுசெய்து வில்லங்கங்கள் ஏதுமில்லாத, நல்லனவற்றை மட்டும், வடிகட்டி எனக்கு அனுப்பி வைக்குமாறு என் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரையும் நான் எச்சரித்து வைத்துள்ளேன். :) மீறி ஏதேனும் அனுப்பினார்களானால் அவர்களின் செய்திகள் எதுவும் என்னை வந்தடையாத வண்ணம் நான் தடை செய்து விடுவதும் உண்டு.

      அதன் பிறகு, எனக்கு ஒழிந்தபோது நான் அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்து, படித்துப் பார்த்து, அதில் எனக்கு மிகவும் பிடித்தமான சிலவற்றை மட்டும் வடிகட்டித் தேர்ந்தெடுத்து, அதில் ஏதாவது ஒரு 4-5 சமாச்சாரங்களை மட்டுமே பிறருடன் பகிர்ந்துகொள்வது உண்டு.

      வாட்ஸ்-ஆப் செய்தியாகவே இருப்பினும், நம் பதிவுலக வழக்கப்படி எங்களுக்குள், அவற்றிற்கான கருத்துக்களைப் பின்னூட்டங்களாக அளித்துக்கொள்வதும் / பதில் அளிப்பதும் உண்டு. இது விஷயம், நீங்களும் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் வாட்ஸ்-ஆப்பில் உள்ளதால் உங்களுக்கே நன்கு தெரிந்திருக்கும். இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளது, பிறருக்கு ஓர் தகவலாக இருக்க வேண்டி மட்டுமே.

      //சொந்தங்கள் சூழ்ந்திருக்காத வயதான இருவருக்கு (65+) வாழ்க்கையே வெறுமையாக இருப்பது சகஜம்தான். நல்லவேளை யூடியூப், வாட்சப், இண்டர்னெட் போன்ற பொழுதுபோக்குகள் உள்ளன.//

      சொந்தமாவது ..... பந்தமாவது? நூற்றுக்கணக்கான சொந்தங்கள் கூடவே இருப்பினும், வாட்ஸ்-ஆப் + மெயில் தொடர்புகளில் அன்றாடம் நம்முடன் நலம் விசாரித்துப் பாசத்துடன் பழகிவரும் சொந்தங்கள் போல வருமா என்ன? NEVER ! :) முகமறியா கற்பனை கதாபாத்திர நட்புகளே மிகவும் தங்கமானவர்கள் ... தங்களைப் போலவே .... :)))))

      காரணம்: நேரில் இதுவரை சந்திக்காமல் இருப்பதால் மட்டுமே :)))))

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      அன்புடன் கோபு

      Delete
    5. @கோபு சார் - நேரில் இதுவரை சந்திக்காமல் இருப்பதால் மட்டுமே :))))) - இது என்ன எல்லோருக்குமான மெசேஜா? பெரும்பாலும் நேரில் பார்க்காது நாம் கொண்டிருக்கும் பிம்பம் (எழுத்துக்களினால் உருவாக்கிய பிம்பம்) நேரில் சந்திக்கும்போது ஆட்டம் கண்டுவிட வாய்ப்பு இருக்கிறது. அதனால் நீங்கள் சொல்லியிருப்பதும் உண்மைதான்.

      Delete
    6. @கோபு சார் - இந்த அரியதொரு வாய்ப்பினை நழுவ விடாமல் பயன் படுத்திக்கொள்ளவும். - ஏதாகிலும் உபன்யாசம், மேடை நிகழ்ச்சிகள் போன்றவை திருச்சியில் நடக்கிறதா? அதற்குத்தான் தமிழ் இளங்கோ சாரையும் கூப்பிட்டிருக்கிறீர்களா? அப்படிப் பார்த்தால் திருச்சியில் இருப்பவர்களுக்குத்தான் 'தனிமையைத் தவிர்க்க' உங்கள்ட தீர்வு இருக்கு போலிருக்கே.

      Delete
  3. உண்மைதான் தனிமை கொடுமைதான்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. எவ்வளவு உண்மைகள் இருக்கிறது இதில் மனது பாரமாகி விட்டது எனது நாளைய நிலையை நினைத்தும்...

    ReplyDelete
  5. தனிமை கொடுமை - ஆனால் சில சமயங்களில் தனிமை தேவையாகவும் இருக்கிறது. முகநூலில் பஇத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. தனிமை கொடுமை என்பது பெரும்பாலாக கூறப்பட்டாலும், அதனையும் தமக்கேற்றவாறு, சூழலுக்கேற்றவாறு தகவமைத்து சிறப்பாக வாழ்வினை நடத்துவோரும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  7. இன்றைய முதியவர்களின் நிலைமையை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

    ஒரு விஷயம் மட்டும் விடுபட்டிருக்கிறது. இன்றைய முதியவர்களுக்கு பேரன், பேத்திகளை கட்டி மேய்க்கும் வேலை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. அமெரிக்காவாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் அதில் மாற்றங்களில்லை. வயதான காலத்தில் இருக்கும் மனத்தளர்ச்சியும் உடல் தளர்ச்சியும் இதனல் மேலும் அதிகரிக்கின்றது. ' எனக்கு ஓய்வு வேன்டும் ' என்று சொல்ல முடியாத அவஸ்தையில் தவிக்கும் எத்தனையோ பேரை அடிக்கடி பார்த்து வருகிறேன். சமீபத்தில் ஒரு பல் மருத்துவர் என்னிட்ம் பேசிய போது, ' இளம் வயதிலும் குழந்தைகளின் நலன் தான் நமக்கு முக்கியம். இந்த வயதிலும் அவர்களின் தேவையும் அவர்கள் பிள்ளைகளை வளர்ப்பதும் தான் முக்கிய வேலையாக இருக்கிறது. நமக்கென்று நாம் இனி எப்போது வாழ்வ்து?' என்று கேட்டார் அவர்.

    இந்த மாதிரி அவஸ்தையில் சிக்கியிருக்கும் எத்தனையோ பேருக்கு தனிமை என்பது இனிமை தான்!

    இங்கு மிக நல்ல வேலையில் இருந்த ஒருத்தர் மனைவி இற‌ந்ததும், மகன், மக்ள் இல்லங்களுக்கு சென்று தங்காமல் முதியோர் இல்லத்தில் பணம் கொடுத்துத் தங்கி அமைதியாக நாட்களைக் கழித்து வருகிறார்.

    ஆக, தனிமை இனிமையா, கொடுமையா என்பதை அவரவ‌ர் சூழ்நிலைகள் தான் முடிவு செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      //இன்றைய முதியவர்களின் நிலைமையை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். //

      இது என்னுடைய பதிவு இல்லை. வாட்ஸ்அப்பில் எனக்கு ஒரு சீனியர் சீட்டிசன் நண்பர் பகிர்வு செய்ததை நானும் பகிர்வு செய்து கொண்டேன். அவ்வளவுதான். நான் இந்த பதிவின் தொடக்கத்திலேயே,

      // என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ? அவருக்கு நன்றி //

      என்று சொல்லி விட்டுத்தான் பகிர்வு செய்து இருக்கிறேன்.

      Delete
  8. உங்கள் தனிமையின் கொடுமை புரிகிறது..நாங்கள் அறுபது வயது வரை உயிரோடு இருப்போமா என்றே தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் புதுச்சேரி கலியபெருமாள் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. . இந்த பதிவில் உள்ள கருத்துகளும், அனுபவங்களும் இன்னொரு பதிவின் (வாட்ஸ்அப்) பகிர்வுதான். நம்பிக்கைதான் வாழ்க்கை.நான் எனது குடும்பத்தாருடன் தான் இருக்கிறேன்

      Delete
  9. நம்மை பிஸியாக வைத்துக்கொள்ளும் வேலை (activity) இல்லை என்றால் தனிமை போரடிக்கும். அது 55 வருடங்களுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தெரியும்.

    கடமைகள் முடிந்ததும், பெரும்பாலும் நம் வாழ்க்கையைத் தனியே கழிக்கப் பழகிக்கொள்வதுதான் இதற்குத் தீர்வு. இரண்டில் எது ஒன்று போனாலும் மற்றவர் வாழ்ந்தாகவேண்டும். ஒரு கட்டத்தில், இப்போதைய காலகட்டத்தில், மிஞ்சும் ஒருவர் அவ்வளவாக வேண்டாதவராக ஆகத்தான் வாய்ப்பு இருக்கிறது. இதற்குத் தீர்வு தகுந்த முதியோர் இல்லம் (காரணம் நம் வயதை ஒத்தவர்கள் பேச்சுத் துணைக்கு இருக்கும் கிராமம் கான்செப்ட் இப்போது இல்லை. நகரத்தில் அடுத்தவீட்டில் இருப்பவரைப் பற்றியே நமக்கு பெரும்பாலும் தெரிவதில்லை)

    பேரன்/பேத்தி எல்லாம் அவர்களுக்கு உலகம் பிடிபடாதவரைதான் (3-4 வயது). அதற்குப் பிறகு அவர்கள் உலகம் அவர்களின் நண்பர்களோடுதான் (இது வெளியூரில்/நாட்டில் வாழும் பசங்கள் குடும்பத்தை மனதில் கொண்டு). ஊரிலேயே அல்லது நம்முடனேயே இருந்தால் அவங்களுக்கு தாத்தா/பாட்டி என்ற அன்பு இருக்கும் (பெரும்பாலும் அப்பா/அம்மா கோபத்திலிருந்து காப்பாற்றுவதால்)

    என்னைப் பொறுத்தவரை, 65+ல், பாசம் போன்றவற்றிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். தொலைக்காட்சிகளோ ரேடியோவோ நமக்குத் தகுந்த துணையாக முடியாது. நமக்கு ஆர்வமான ஓவியம், படிப்பு போன்றவைகளே நமக்குத் துணையாக இருக்கமுடியும். நிச்சயம் கணவன் மனைவி ஒரே மாதிரி அலைவரிசையில் இருப்பது வெகு அபூர்வம். அதற்கு நாம் 55லிருந்தே தயாராகவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. To நெல்லைத் தமிழன்

      //நிச்சயம் கணவன் மனைவி ஒரே மாதிரி அலைவரிசையில் இருப்பது வெகு அபூர்வம்.//

      அபூர்வமாக ஒரே மாதிரி அலைவரிசையில் இல்லாவிட்டாலும்கூட, சுனாமி அலை போல சீறிப் பாய்ந்து, ஒருவரை மற்றொருவர் சீரழிக்காமல் இருந்தால் சரியே என நினைக்க வேண்டியுள்ளது !

      //அதற்கு நாம் 55லிருந்தே தயாராகவேண்டும். //

      ’அதற்கு’ என்றால் எதற்கு ?

      இந்த இடத்தில் நீர் என்ன சொல்ல வருகிறீர் என்பது எனக்கு சரியாக அர்த்தம் ஆகவில்லை ஸ்வாமீ ............... :)))))

      அன்புடன் கோபு

      Delete
    2. கோபு சார்... 'அதற்கு'-ஓய்வு காலத்துக்கு. 55-58-60 வரைல, பகல் முழுவதும் ஆபீசுக்குச் சென்றுவிடுவதால் மனைவியோடு இருக்கும் நேரம் குறைவு. நாமும் பிஸியாயிடுவோம்.இரவு சாப்பாடு, தொலைக்காட்சி என்று வேறு தொல்லைகள் இருக்காது. ஓய்வு பெற்றபின்பு இருவரும் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்போம். அப்போது என்ன செய்து நம் நேரத்தை பிசியாக வைத்துக்கொள்வது என்பதை 55லியேயே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

      பொதுவா நான் நினைப்பது, பார்த்தது - கணவன் 40-50 வயது வரையில் மனைவியை டாமினேட் செய்து வாழ்கிறான். அதற்குப் பின்பு ஓரளவு மனைவியை அனுசரித்து வாழவேண்டி இருக்கிறது. அப்போ மனைவி, டாமினேட் செய்யவும், இத்தனை நாட்கள் கிடைக்காத சுதந்திரத்தைப் பயன்படுத்தவும் முனைகிறாள். இதையெல்லாம் முன்பே எதிர்பார்த்து அவைகளுக்குத் தயாராகிக்கொள்ள வேண்டியதுதான். ஹா ஹா ஹா.

      Delete
    3. மேலே கருத்துரை தந்த நண்பர் நெ.த அவர்களுக்கும், இன்னும் விவரமான தகவல்களை தந்திட்ட திரு V.G.K அவர்களுக்கும் நன்றி.
      நண்பர் நெ.த அவர்களுக்கு, இது ஒரு பகிர்வுப் பதிவு. எனவே இதில் சொல்லப்பட்டவை யாவும் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள். இல்லை. படித்ததில் பிடித்ததை பகிர்ந்தேன் அவ்வளவே. எனக்கும் திரு V.G.K அவர்களைப் போலவே உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. நீங்களும் மற்றவர்கள் பதிவுகளில் கருத்துரைகள் என்ற அளவிலேயே நின்று விடுகிறீர்கள். நிறைய விஷய தானம் செய்யும் நீங்கள், ஒரு வலைப்பதிவைத் தொடங்கி எழுதினால் இன்னும் சிறப்பு.

      அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு, நீங்கள் அனுப்பி வைத்த மின்னஞ்சல்கள் இரண்டையும் பார்த்தேன்; உங்கள் அன்பான ஆலோசனைக்கு நன்றி. இங்கு நாங்கள் சொந்த வீட்டில் இருப்பதாலும், இங்கும் அக்கம் பக்கம் அன்பாக பழகுபவர்கள் இருப்பதாலும், எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் இப்போதைக்கு வீடு மாறும் எண்ணம் இல்லை.

      Delete
    4. இது ஒரு பகிர்வுப் பதிவு. - ஆமாம் தமிழ் இளங்கோ சார். நீங்கள்தான் பதிவின் ஆரம்பத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்களே. இது ஒரு இண்டெரெஸ்டிங் சப்ஜெக்ட். அதனால்தான் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் படித்தேன்.

      பொதுவா, 'முதியோர் இல்லம்' என்று சுலபமா எழுதினாலும், எல்லாவற்றிர்க்கும் பணம் என்பது அத்யாவசியம்.

      Delete
  10. நாமாக அமைக்கும் தனிமை இனிமை:).. தானாக வந்து ஒட்டிக் கொள்ளும் தனிமை கொடுமை....

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. 'தனிமையிலே இனிமை காண முடியுமா?' என்பது கவிஞன் வாக்கு. முடியாது என்றாலும் தனிமை வேண்டிய அல்லது தனிமைக்கு அவாவுகின்ற சில பொழுதுகளும் இருக்கத் தான் செய்கின்றன. பெரும்பாலும் தனிமை இன்மையான பொழுதுகளுக்கு இடையே தான் நம் மனத்திர்கும் தனிமை சில நேரங்களில் தேவையாகத் தான் இருக்கின்றது.

    'யாருமேயில்லாத மனித அரவமே இல்லாத ஒரு தனித்தீவில் ஒரு வாரம் இருக்க வேண்டும்; முடியுமா உங்களால்?' என்பது போன்ற கேள்வியை எதிர்கொள்வது தான் உண்மையான தனிமை.

    பயணம் செய்த கப்பல் விபத்தில் நொறுங்கிப் போய் ஏதோ கையில் கிடைத்த மரப்பலகை பற்றி தனித் தீவில் ஒதுங்கிய ஒருவன் வாரக்கணக்கில், மாதக் கணக்கில் தனித்து விடப்பட்டு உருவமே மாறிப்போய் இன்னொரு மனித ஜீவனைக் காண முடியுமா என்ற எதிர்ப்பார்ப்பின் ஏக்கத்தில் தினம் தினம் செத்துப் பிழைத்து... இந்த மாதிரியான கதையமைப்பு கொண்ட ஓர் அயலகத் திரைப்படத்தைப் பார்த்த நினைவு வருகிறது..

    மனிதன் சமூக ஜீவி. அவனுக்குத் துணை வேண்டும். ஆணோ, பெண்ணோ
    இன்னொரு மனிதப் பிறவி வேண்டும். இல்லையென்றால் மனநலம் தான் பாதிக்கப் படும்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார்... சொன்னால் கொஞ்சம் ஆச்சர்யமா இருக்கலாம். நான் ஒரு தனிப் பறவை. என்னால் தனியாக, யாருடைய துணையும் இல்லாமல் என்னை பிஸியாகவும் டிசிப்பிளினோடும் வைத்துக்கொள்ள முடியும், செய்திருக்கிறேன். எப்போது நமக்கு உண்மையாக இன்னொரு துணை தேவை என்றால், நமக்கு உடல் நிலை கொஞ்சம் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் பய உணர்ச்சி வரும்போதோ, அல்லது நமக்கு கஷ்டங்கள் வரும்போதோ, அதைப் பகிர இன்னொருவர் துணை கண்டிப்பாகத் தேவை. அப்போது தனிமை நம்மை மிகவும் டிப்ரெஸ்ட் ஆக்கும். இந்த இரண்டும் இல்லாதபோது தனிமை என்பது மிக இனிமைதான்.

      Delete
    2. தனிமை கண்டதுண்டு-- அதிலே சாரம் இருக்குதம்மா..

      -- மஹாகவி

      Delete
    3. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எழுத்தாளர் என்பதால், மனநலம் சார்ந்த ஒரு உவமைக்கதை ஒன்றினை இங்கே சொல்லி விளக்கம் தந்து விட்டீர்கள். தீவு, கடல்பயணம் என்றாலே எனக்கு, சிறுவயதினில் படித்த சிந்துபாதின் கடல் பயணங்கள்தான் நினைவுக்கு வரும்.

      இங்கு மறு வருகை தந்த நண்பர் நெ.த அவர்களுக்கு நன்றி.

      Delete
    4. ஜீவி சார்.. நீங்கள், 'தனித்திரு விழித்திரு பசித்திரு' என்ற இராமலிங்க அடிகளாரை quote செய்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

      Delete
    5. மடிக்கணினி முன்னால் உட்கார்ந்து இரவு 12 மணியானாலும் நோக்கம் ஒன்றே குறிக்கோளாய் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் பொழுது இந்த மூன்று 'இரு'க்களின் நினைவு கூட இல்லாமல் கருமமே கண்ணாய் இருக்கும், நெல்லை.

      அடிகளாரின் மூன்று இருக்களும் ஆழ்ந்த பொருள் கொண்டவை, அல்லவா?..

      Delete
  12. அருமையான ஆய்வுக் கண்ணோட்டம்.

    தனிமையென்றாலும்
    உளநிறைவான பொழுதுபோக்கு இருப்பின்
    தனிமை கொடுமையாக இருக்காது!

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  13. இதை முகநூலிலும் படித்தேன். இங்கேயும் மீண்டும் படித்தேன். பொதுவாகத் தனிமை கொடுமை தான் என்றாலும் அக்கம்பக்கம் உள்ளவர்களோடும் கொஞ்சம் பழகிக் கொள்ள வேண்டும். அதோடு இப்போதெல்லாம் பேரன், பேத்தியை வளர்ப்பதில் தாத்தா, பாட்டிமார் சுணக்கம் காட்டுவதும் சரியாகத் தெரியவில்லை. அதில் உள்ள மகிழ்ச்சி வேறே எதில் இருக்கும்? எங்களை எப்போவோ நேரில் பார்க்கும் எங்க பெண்ணின் இரண்டாவது குழந்தை அப்பு, தாத்தா, பாட்டியை நான் இந்தியா போய்ப் பார்த்துக்கிறேன் என்கிறாள். குட்டிக் குஞ்சுலுவை நாங்க ஸ்கைபில் பார்க்கிறோம் தான். என்றாலும் நேரில் பார்த்துக் கையில் எடுத்துக் கொஞ்சுவது போல் வருமா? அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் தாத்தா, பாட்டியிடமோ அல்லது அம்பேரிக்காவிலேயே தாத்தா, பாட்டியுடன் வளரும் குழந்தைகளோ கொடுத்து வைத்தவர்கள். அந்தத் தாத்தா, பாட்டிகளும் தான்!

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் அனுபவ பூர்வமான, தாய் உள்ளத்துடனான கருத்துரைக்கு நன்றி. இந்த பதிவிற்கான ஃபேஸ்புக் பக்கமும் உங்களுடைய கருத்துரைகளுக்கும் நன்றி. அங்கு உங்களுடைய கருத்துரைக்கு, மறுமொழி தந்திட்ட Jayan Dgl அவர்களும் ஒரு வலைப்பதிவாளர்தான் (Retd SBI Officer). ஒரு கிளையில் அவருக்கு கீழும் பணி புரிந்து இருக்கிறேன்.

      Delete
  14. தனிமையைப் போக்க முதியோர் இல்லம் சென்று நம் வயதை ஒத்தவர்களுடன் பேசிப் பொழுதைக் கழித்து சந்தோஷமாக இருக்கலாம் எனில் பலரும் முதியோர் இல்லம் செல்ல ஆதரவு கொடுப்பதில்லை. எங்கே அத்தி பூத்தாற்போல் ஒரு முதியோர் இல்லம் மட்டுமே சரியாகச் செயல்படுவதாகச் சொல்கின்றனர். இப்போதைய பெற்றோர் சிறு வயதில் பெற்றோருக்கும், திருமணமான பின்னர் மாமியார் மாமனாருக்கும் கட்டுப்பட்டு இருந்ததாலோ என்னமோ இப்போது பிள்ளைகளுக்கும் கட்டுப்பட்டே இருக்க வேண்டி உள்ளது. உடலில் தெம்பு இருப்பவர்கள் தனியே இருக்கலாம். என்றாலும் பெண்களை விட ஆண்கள் விரைவில் மனம், உடல் இரண்டும் தளர்ந்து போகின்றனர். மனைவி இருக்கும் வரை சரி! அதன் பின்னர்? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. பெண்களை விட ஆண்கள் விரைவில் மனம், உடல் இரண்டும் தளர்ந்து போகின்றனர். - ஆயிரத்தில் ஒரு வார்த்தை. இது உண்மையும்கூட.

      முதியோர் இல்லம் சரியான தீர்வு என்றுதான் என் மனதுக்குப் படுகிறது. Common kitchen, உடற்பயிற்சி, தங்களுக்குத் தோதான நண்பர்கள், மருத்துவ வசதி... இவையெல்லாம் தனியாக ஃப்ளாட்டில் தங்கியிருந்தால் கிடைப்பது கடினம்.

      Delete
    2. இதைத் தான் ஃபேஸ்புக்கிலும் திரு தி.தமிழ் இளங்கோ அவர்களின் பதிவில் பகிர்ந்திருந்தேன். மூத்த வலைப்பதிவர் ஆன திரு ஞானவெட்டியான், முதியோர் இல்லங்கள் சரிவர நடப்பதில்லை என்பது தெரியாதா என்று கேட்டிருந்தார். ஒரு சில முதியோர் இல்லங்கள் சரியில்லை என்பது தெரிந்ததே! அதிலும் திருமதி ராஜம் கிருஷ்ணன் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை நன்கு அறிவேன். :(

      Delete
    3. ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும். முதியோர் இல்லங்களிலும் இருவர் தங்கும் வில்லாக்கள், அல்லது அபார்ட்மென்டாகக் கொடுக்கிறாங்க. அபார்ட்மென்ட் என்பது படுக்கை அறை தவிர்த்து ஓர் வரவேற்பறை(தொலைக்காட்சிப் பெட்டி வைக்கும் வசதியோடு) மற்றும் அந்த வரவேற்பறையிலேயே அதை ஒட்டிச் சின்னச் சமையலறை என இருக்கும் என்கின்றனர். நாங்க பல முதியோர் இல்லங்களையும் அலசி ஆராய்ந்து விட்டோம். அவற்றில் தெரிந்தது இது. பொதுச் சமையலறை பொதுவாக அனைவருக்கும் அன்றாட உணவு தயாரிப்பதற்காக மட்டும். உடல் தெம்பு உள்ளவர்கள், அல்லது செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் உள்ள முதியோர்கள் சமையலில் உதவி செய்யலாம். காய் நறுக்குதல், தேங்காய் துருவுதல், பாத்திரம் கழுவுதல், உணவுகளை எல்லோருக்கும் பரிமாறுதல் என. பொதுவான சாப்பிடும் அறைக்குச் சென்றும் நாம் சாப்பிட்டுக்கலாம். அல்லது நம் அறைக்கே கொண்டு வந்து தரும்படியும் சொல்லலாம். காலை ஒரு தரம் மட்டுமே காஃபி எனக் கேள்வி. காலை ஆகாரம் முடிந்து காஃபி சாப்பிடுபவர்கள், மற்றும் மாலையும் காஃபி, தேநீர் தேவைப்படுபவர்கள் அவரவர் அறைகளில் உள்ள சமையலறையில் போட்டுக் கொள்ள வேண்டும். சின்னக் குளிர்சாதனப் பெட்டிக்கு அனுமதி உண்டுனு நினைக்கிறேன். முதியோர் இல்லத்திலிருந்து வெளியே செல்லும் சமயம் பால் பாக்கெட்டுகள் வாங்கி வைச்சுக்கணும்! :) பல முதியோர் இல்லங்களும் ஊரை விட்டுத் தள்ளியே இருக்கின்றன. ச்ராத்தம் போன்றவற்றிற்கும் கோவை அருகே அக்ரஹாரம் என்னும் முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்து தருகின்றனர்.

      Delete
    4. பொதுவான குற்றச்சாட்டு என்னவெனில் முதியோர்களின் சேமிப்புக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட், ஆதார் கார்ட் போன்றவை இல்ல நிர்வாகிகளின் கண்காணிப்பில் தான் வைக்கணுனு சொல்றாங்க. வங்கியில் இருந்து பணம் எடுப்பதோ, போடுவதோ அவர்களுக்குத் தெரியாமல் செய்யக் கூடாது என்றும் சில இடங்களில் கண்டிப்பாகச் சொல்லுவதாகவும் சொல்கின்றனர். செக் புத்தகங்கள் கூட நிர்வாகிகளின் கண்காணிப்பில் தான் வைத்திருக்கணும் என்று சொல்வதாகவும் சொல்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட முதியோர் இல்லத்தின் பெயர் தெரியும் என்றாலும் பொதுவில் பகிர இஷ்டமில்லை.

      Delete
    5. கீசா மேடம்.. எனக்கு இந்த சப்ஜெக்டில் ஆர்வம் உண்டு. இதைப் பற்றி மேலும் அறிய ஆவல். பொதுவா நான் தெரிந்துகொண்டது, (1) ரூபாய் கட்டி ஒரு ஃப்ளாட், தனி வீடு அந்த வளாகத்தில் வாங்கிக்கணும்-40-80 லட்சம்-இது ஆள் மறைந்தபிறகு என்னவாகும் என்று தெரியலை (2) பொது சமையலறையில் 3 வேளை சாதாரண வெஜ் சாப்பாடு-மதியம் சாதம்/குழம்பு/ரசம் போன்று, இரவு சப்பாத்தி போன்று. காபியைப் பற்றி நான் கவலைப்படலை என்பதால் அதைப் பற்றித் தெரிந்துகொள்ளலை (3) மாதம் இவ்வளவு ரூபாய் என்று சாப்பாடு/மெயிண்டெனன்ஸ் செலவுகளுக்கு கொடுக்கணும். நாமே சமைத்துக்கொள்ளலாம் என்றால் முன்னமேயே சொல்லி அதற்கு நம் ஃப்ளாட்டில் ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும். கிளீனிங் போன்றவற்றிர்க்கு மாதம் ஒரு தொகை தந்து சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். இது தவிர மருத்துவர் சேவை தனியா பணம் கொடுத்துடணும். வளாகத்தில் கோவில் இருக்கும், சேர்ந்து பேசிக்கொண்டிருக்க இடம் இருக்கும். நடைப்பயிற்சிக்கு இடம் இருக்கும். முழு பாதுகாப்பு (4) நம்மைப் பார்க்க வருடத்துக்கு அல்லது இரு வருடத்துக்கு ஒரு முறை வருபவர்களுக்கு 1 மாதம் வரை தங்க கெஸ்ட் ஹவுஸ் உண்டு. நாமே (தங்குபவர்கள்) வெளியூருக்குச் செல்வதற்கும், விசேஷங்களில் கலந்துகொள்ளச் செல்வதற்கும் தடை இருக்காது.

      எனக்குப் புரியாதது, வங்கி கணக்கு ஏன் நிர்வாகிகளுக்கு டிரான்ஸ்பேரண்டா இருக்கணும்னு.

      எது சரியான முதியோர் இல்லம் போன்ற செய்திகள் பலருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். இதைப்பற்றி செய்திகள் நீங்கள் பகிரலாம். (உங்களுக்கு தெரியும் என்றால்). மிக முடியாதவர்களுக்கு என்ன ஏற்பாடு செய்கிறார்கள் என்றும் அறிந்துகொள்ள விருப்பம்.

      Delete
    6. மேடம் அவர்களின் விரிவான கருத்துரைகளுக்கு நன்றி. முதியோர் இல்லம் பற்றிய கருத்துரைகளை நன்றாகவே சொன்னீர்கள். மூத்த வலைப்பதிவர் திரு ஞானவெட்டியான் அவர்கள் கோவையில் ஒரு முதியோர் இல்லத்தில் தனது மனைவியோடு தங்கி இருக்கிறார். அண்மையில் கூட என்னுடன் செல் போனில் பேசி எனது நலன் விசாரித்து இருக்கிறார்.

      Delete
    7. இங்கு இடையில் வந்து கருத்துரை தந்த நண்பர் நெ.த அவர்களுக்கு நன்றி. நானும் சென்ற ஆண்டு முதியோர் இல்லம் குறித்தும் ஒரு பதிவினில் எழுதி இருக்கிறேன்.

      Delete
    8. //40-80 லட்சம்-இது ஆள் மறைந்தபிறகு என்னவாகும் என்று தெரியலை.//
      ஒரு சிலர் பாதியிலேயே முதியோர் இல்லத்தை விட்டுக்கிளம்புகின்றனர். அப்போது கிட்டத்தட்டப் பாதிப் பணம் பிடித்துக் கொண்டு மீதியைக் கொடுக்கின்றனர். இல்லை எனில் வாரிசுகளுக்குப் பின்னால் போய்ச் சேரும் என்கின்றனர். அதுக்கு ஒண்ணு வாரிசுகள் அங்கே வந்து இருக்கணும் அல்லது அவங்க நமக்குப் பின்னர் அந்த இடத்தை வேறொருவருக்கு விற்று வாரிசுகளுக்குக் கொடுக்கணும். இதில் எல்லாம் சரியான சட்டரீதியான ஏற்பாடுகள் இருப்பதாய்த் தெரியவில்லை. விளம்பரங்களில் சொல்வது தான். எனக்குத் தெரிந்து கோவையில் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த என் சித்தியின் இளைய மாமியார் திரும்ப சென்னைக்கே போய் விட்டார். நல்லவேளையாக திருவான்மியூரில் இருந்த அவங்க வீட்டை விற்கவில்லை. இன்னொருவர் மன நலம் பாதிக்கப்பட்டு விரைவில் இறந்து விட்டார்! :(

      கோவைக்கு அருகே உள்ள அக்ரகாரம் முதியோர் இல்லத்தில் ஒரு மாதம் தங்கி இருந்து பார்க்கலாம் எனப் போக முடிவு செய்தோம். ஆனால் ஒருத்தருக்கு 2 லட்சம் ரூபாய் ஆகிறது என்றார்கள். இரண்டு பேருக்கும் நாலு லட்சம் என்றதுமே பையர் போக வேண்டாம்னு சொல்லிட்டார். :)

      அதோடு அங்கே இருக்கும் பொதுச் சமையலறையில் நீங்கள் சமைக்க முடியாது. உங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறை அல்லது அபார்ட்மென்ட் சமையலறையில் காபி, டீ, சுண்டல் போன்றவை செய்துக்கலாம். எண்ணெய் வைத்துச் செய்யக் கூடாது எனச் சிலர் சொன்னதாகத் தகவல். ஆகவே நாம் முழுச் சமையலும் செய்துக்க முடியாது. அன்றாடம் பூஜை வைத்துக் கொண்டிருப்பவர் மட்டுமே ஏதோ கொஞ்சம் பிரசாதம் பண்ணிக்கலாம்னு அனுமதி கொடுப்பாங்களாம்.



      Delete
  15. முடிஞ்சால் மறுபடி வரேன். :))) ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் மிகுந்த மனச்சோர்வில் இருந்தப்போத் தான் (உடல்நிலையும் ஒரு காரணம்) 2005 ஆம் ஆண்டில் எங்க பையர் இந்தியா வந்தப்போக் கணினியை வாங்கிக் கொடுத்து இணையத்தில் ஏதாவது படி, எழுது என்று சொல்லிச் சென்றார். அதற்கு முன்னரே நான் ஓரளவு கணினி கற்றுக் கொண்டதால் தனியாகவே அதை இயக்கி ஒவ்வொன்றாகத் தெரிந்து கொண்டு வலைப்பக்கம் குறித்தும் அறிந்து கொண்டு நானாகவே வலைப்பக்கமும் திறந்து ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்துப் பின் தமிழ்ப் பதிவர்களைப் பார்த்துத் தமிழுக்கு மாறினேன். ஓரளவு என் மனச்சோர்வை நீக்க உதவியதில் இணையத்துக்குப் பெரும் பங்கு உண்டு. இப்போதும் வாட்சப், முகநூல் என்று போனாலும் அளவோடு தான்! வீட்டு வேலைகளுக்கு முதல் முக்கியத்துவம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். நானும் எனது மனச்சோர்வைப் போக்க வலைப்பக்கம்தான் செல்கிறேன். வாட்ஸ்அப், பேஸ்புக் பக்கம் செல்வதைவிட வலைத்தளம் எவ்வளவோ மேல் என்று நினைக்கிறேன். இவை செய்தி பரிமாற்றத்திற்கு மட்டுமே நல்ல பயன்பாடு உள்ளவை. எனினும் ஃபேஸ்புக் பற்றிய செய்திகள் கவலைப்படும் விதமாகவே உள்ளன.

      Delete
  16. வாட்சப்.. முகநூல் என்று இருப்பதினால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது..!!!!
    நான் கவிதைகளை விளம்பரப் படுத்தவே நடமாடுகிறேன்
    முகநூல் ஒரு கருவியாக...
    நல்ல ஆய்வு....சகோதரா.
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  17. சிலருக்குத் ’தனிமையிலே இனிமை காண முடியுமா’. சிலருக்கோ ’ஏகாந்தமே இன்பமயம்!’ எதையும் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது என்பேன் என்னைக் கேட்டால். இளம் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அடிக்கடி சொல்லும் சொற்கள், "கொஞ்ச நேரமாவது நிம்மதியா இருக்க விடுறியா?" என்பதுதான். குழந்தைகள் வீட்டில் இருக்கையில் அவர்களோடு விளையாடாமல் நூல் படிக்கிறேன், இசை கேட்கிறேன், தொலைக்காட்சி பார்க்கிறேன் எனத் தனிமையில் ஒதுங்க முயல்கிறோம். அந்த நேரத்தில் பிள்ளைகள் நம் அருகில் வந்தால் எரிந்து விழுகிறோம். அதே பிள்ளைகள் வளர்ந்து வேலை, குடும்பம், குழந்தை, குட்டி என ஆகி நம்மைத் தனிமையில் விட்டுச் சென்றால் அத்தனை காலம் தேடியலைந்த அந்தத் தனிமையைக் கிடைத்திருக்கும் அந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளாமல் அருகில் இல்லாத பிள்ளைகளை நினைத்து ஏங்குகிறோம். இது, எப்பொழுதுமே இருப்பதைத் துய்க்கத் தெரியாமல் இல்லாததையே தேடும் மனித மனப் பழக்கம் எனக் கருதுகிறேன் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. அனுபவ பூர்வமான கருத்துரை தந்த தோழருக்கு நன்றி. எதிர் வினைதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

      Delete
  18. இந்தப்பதிவை படித்தவுடன் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று தோன்றியது...
    உடல் நலம் பேணவும்
    திருத்தும் பணிகள் முடிந்தவுடன் சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் அன்பான நலன் விசாரிப்பிற்கு நன்றி. நானும் உங்களை சந்திப்பதில் ஆவலாக இருக்கிறேன்.

      Delete
  19. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர் உங்கள் தகவலுக்கும் ஆலோசனைக்கும் நன்றி.

      Delete
  20. அன்புள்ள இளங்கோ அவர்களுக்கு: நல்லதொரு விவாதத்தை எழுப்பி இருக்கிறீர்கள். திருமதி கீதா சாம்பசிவம் வெகு நேர்த்தியாக விவரங்களைத் தந்திருக்கிறார்.

    எனது நண்பர்கள் சிலரும் கோவையில் ஊருக்கு வெளியே ஓர் முதியோர் இல்லத்தில் இருந்தபோது நான் அங்குள்ள நிலைமையைக் கண்டிருக்கிறேன். மாதம் ஒருவருக்கு உணவுக்காக ரூபாய் நான்காயிரம் என்று ஆரம்பத்தில் இருந்தது. விலைவாசி ஏறியபோது, குறிப்பாக பருப்பும் எண்ணெயும் இரண்டு மடங்காக ஆனபோது மேலும் ஐந்நூறு கேட்டார்கள். பாதிப்பேர் ஒப்புக்கொண்டார்கள். பாதிப்பேர் ஏற்கவில்லை. விளைவு, உணவின் அளவைக் குறைத்துவிட்டார்கள் நிர்வாகிகள்.

    முன்பெல்லாம் கூட்டு, பொரியல் எல்லாம் கேட்டபடி கொடுப்பார்கள். இப்போது ஒரு கிண்ணத்தின் அளவுதான் கொடுக்கிறார்கள். மாலையில் கட்லெட் அல்லது பஜ்ஜி தருவார்கள். ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு என்று பேர்; ஆனால் மேற்கொண்டும் தருவார்கள். இப்போது ஆளுக்கு ஒன்றுதான் என்று சொல்லிவிட்டார்கள்! முன்பெல்லாம் கேட்கும்போது வெந்நீர் (குடிநீர்) தருவார்கள். இரவிலும் தேநீர் தருவார்கள். (தனி விலை உண்டு.) இப்போது அந்த வசதிகள் இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஐநூறு ரூபாய் கொடுக்க முன்வராதவர்கள் இப்போது வாயை மூடிக்கொண்டு கிடக்கிறார்கள். மற்றவர்களோ இவர்களால் வசதிக்குறைவை அனுபவித்துக்கொண்டு புலம்புகிறார்கள். முதியோர் இல்லம் இரண்டுபட்டுக் கிடக்கிறது. பாசக் கயிறு வரும்வரை இவர்களின் கதிதான் என்ன என்று வேதனையாக இருக்கிறது. லட்சக்கணக்கில் கொட்டி வீட்டை வாங்கியாகிவிட்டது. விற்றுவிட்டு வெளியேறவும் வழி இல்லை.

    இந்தச் சனியன்களைப் பார்க்கும்போது தனிமையே இனிமை என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

    -இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  21. இவ்வளவு பின்னூட்டங்களைப் பார்க்கும்போது முதுமையை எதிர் நோக்கி நடுத்தர வதில் இருந்தே தயார் படுத்திக் கொள்வது சிறந்தது என்பதை உணர முடிகிறது.

    ReplyDelete
  22. ''தனிமை கண்டதுண்டு அதில் தனிசுகம் இருக்குதம்மா'' என்றான் பாரதி. தனிமையில் சும்மா இருக்கிறோம் என்ற நினைவுதான் நம்மை கொடுமைப்படுத்துகிறது. கவிதை எழுதுதல், கட்டுரை படித்தல், ஓவியம் தீட்டுதல் என்று நம் லைப் ஸ்டைலை மாற்றிக்கொண்டால் தனிமை இனிமைதான்.
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete