Monday 16 October 2017

என் மனம் தொட்ட கண்டசாலா பாடல்கள்



அப்போதுதான் எங்கள் வீட்டிற்கு புதிதாக ஒரு புஷ் ( BUSH ) டிரான்சிஸ்டரை அப்பா வாங்கி வந்தார். நான் அப்போது கல்லூரி மாணவன். அதனை வாங்கி வந்ததிலிருந்து மறக்க முடியாத அந்த இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் பழைய தமிழ் திரையிசைப் பாடல்களை கேட்பதுதான் எனது பொழுது போக்கு. கல்லூரி பாட சம்பந்தமான குறிப்புகள் எடுக்கும் போது கூட, இந்த டிரான்சிஸ்டர் பாடிக் கொண்டே இருக்கும். ( அப்புறம் வந்தது பிலிப்ஸ் பெரிய ரேடியோ ) 

எப்போதும் அமைதியான குரல்தான்

அன்றைய இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் பெருமையை எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொண்டே இருக்கலாம். ( அந்த ஒலி பரப்பு இப்போதும் உண்டா என்று தெரியவில்லை. டீவி வந்த பிறகு வானொலி கேட்பதே இல்லை ) அப்போதெல்லாம் அடிக்கடி ”பாடியவர் கண்டசாலா” என்று சொல்லி அவரது பாடல்களை ஒலிபரப்புவார்கள்; இவரே பல பாடல்களுக்கு இசையமைத்தும் பாடியும் இருக்கிறார். பெரும்பாலும் சோகப் பாடல்கள் அல்லது தத்துவப் பாடல்களாகவே இருக்கும். அந்த சோகத்திற்கு தகுந்தாற் போலவே அவரது குரலும் இழைந்தோடும். இன்னும் காதல் பாடல்களையும் அதே நளினத்தோடு அமைதியாகவே பாடியிருப்பார். அதிலும் நான் பிறப்பதற்கு முன்பு வந்த,  பார்த்திராத பழைய காலத்து படங்களில் வந்த பாடல்களாக இருக்கும்.

கண்டசாலா பாடல்களை நான் ரசித்தாலும், அவரைப் பற்றிய முழு விவரம் எனக்குத் தெரியாது. அப்போது பத்திரிகைகளிலும் அவ்வளவு விவரமாக எழுத மாட்டார்கள். அதிலும் இவர் ஒரு தெலுங்கு இசையமைப்பாளர் என்று மட்டும் அப்போது கேள்விப் பட்டு இருக்கிறேன்.

(இப்போது வீட்டுக்கு வீடு டீவி வந்து விட்டாலும், முன்புபோல கண்டசாலா பாடல்களை கேட்க முடிவதில்லை. எம்.கே.டி பாகவதர் பாட்டையே ஒலி பரப்புவதில்லை: அப்புறம் மற்றவர்கள் பற்றி என்ன சொல்வது?)

வாழ்க்கைக் குறிப்புகள் (நன்றி கூகிள்)

முழுப்பெயர்: கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ் ( பிறப்பு 4 டிசம்பர் 1922 இறப்பு 11 பிப்ரவரி 1974 ) – தெலுங்கு பிராமணர் - பிறந்த ஊர்: சௌட்டா பள்ளி (ஆந்திரா) - தந்தையின் பெயர்: சூரய்யா கண்டசாலா – தாயாரின் பெயர்: ரத்தம்மா – விசாகப்பட்டினத்தில் இசைக் கல்லூரியில் பயின்றவர் – வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு 18 மாதம் சிறைவாசம் பெற்றவர் – நல்ல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் – தெலுங்கு, தமிழ் மட்டுமன்றி கன்னடம், மலையாளப் படங்களிலும் பின்னணி பாடி இருக்கிறார். – தெய்வபக்தி நிரம்பிய தனிப் பாடல்களையும் பாடி இருக்கிறார் ஐக்கிய நாட்டு சபையில் பாடும் வாய்ப்பு பெற்றவர் -  திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் – இந்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம் இவருக்கு வழங்கப் பட்டுள்ளது. – கண்டசாலாவுக்கு சாவித்திரி, சரளாதேவி என்று இரண்டு மனைவிகள்; எட்டு குழந்தைகள். - கண்டசாலாவை பாராட்டும் வகையில் 2003 இல் இந்திய தபால்துறை இவருடைய படத்துடன் தபால்தலை வெளியிட்டுள்ளது.

தும்மலப்பள்ளியிலுள்ள கலாக்ஷேத்திரத்தில் கண்டசாலாவுக்கு சிலை வைக்கப் பட்டுள்ளது.
  
நான் ரசித்த பாடல்களில் சில

அமைதி இல்லாதென் மனமே
என் மனமே
அமைதி இல்லாதென் மனமே
என் மனமே

( படம்: பாதாள பைரவி ( 1951 ) -  பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்கள்; கண்டசாலா & P.லீலா இசை: கண்டசாலா )

காதலே தெய்வீகக் காதலே

( படம்: பாதாள பைரவி ( 1951 ) - பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்கள்; கண்டசாலா & P.லீலா இசை: கண்டசாலா )
xxxxxxxxxxxxx

ஓ … தேவதாஸ் ..
ஓ … … பார்வதி.
.
( படம்: தேவதாஸ் ( 1953 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்கள்; கண்டசாலா & ஜிக்கி - இசை: C.R.சுப்புராமன்)

துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே

( படம்: தேவதாஸ் ( 1953 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்: கண்டசாலா - இசை: C.R.சுப்புராமன்)

உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலை ஏது நாம் காணும் சுகமே மாயம்
அலையும் நீர் மேவும் குமிழாதல் போல
ஆவதும் பொய்யாவதெல்லாம்
ஆசையினாலே
அரச போகமும் வைபோகமும்
தன்னாலே அழியும்
நாம் காணும் சுகமே மாயம்
உலகே மாயம்…

( படம்: தேவதாஸ் ( 1953 ) -  பாடல்: கே.டி.சந்தானம் – பாடியவர்: கண்டசாலா - இசை: C.R.சுப்புராமன்)
xxxxxxxxxxxxxx

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

( படம்: கள்வனின் காதலி ( 1955 ) -  பாடல்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – பாடியவர்கள்; கண்டசாலா & P.பானுமதி - இசை: கண்டசாலா )
xxxxxxxxxxxxxxxx

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

( படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ( 1956 ) -  பாடல்: மருதகாசி – பாடியவர்: கண்டசாலா - இசை: தட்சிணா மூர்த்தி)
xxxxxxxxxxxxxxx

உல்லாசம் தேடும்
எல்லோரும் ஒருநாள்
சொல்லாமல் போவார்
அல்லாவிடம் 

( படம்: தெனாலிராமன் ( 1956 ) -  பாடல்: தமிழ் மன்னன் – பாடியவர்: கண்டசாலா - இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி)
xxxxxxxxxxxxxx

ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது

( படம்: எங்க வீட்டு மஹாலக்ஷ்மி ( 1957 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்கள்; கண்டசாலா & P.சுசீலா - இசை: மாஸ்டர் வேணு )
xxxxxxxx

ஆஹா இன்ப நிலாவினிலே,
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே 
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

( படம்: மாயா பஜார் ( 1957 ) -  பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்கள்; கண்டசாலா & P.லீலா இசை: கண்டசாலா )

நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது

( படம்: மாயா பஜார் ( 1957 ) -  பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்கள்; கண்டசாலா & P.லீலா இசை: கண்டசாலா )
Xxxxxxxxxx

கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்....
ஓதும் தென்றல் முன்னால் வரும்
இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்

( படம்: மஞ்சள் மகிமை( 1959 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்கள்; கண்டசாலா & P.சுசீலா - இசை: மாஸ்டர் வேணு )

ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
 அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே

( படம்: மஞ்சள் மகிமை( 1959 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்கள்; கண்டசாலா & P.சுசீலா - இசை: மாஸ்டர் வேணு )
xxxxxxxxx

முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒன்னுக்குள் ஒன்னாக 

( படம்: அன்புச் சகோதரர்கள் ( 1973 ) -  பாடல்: கண்ணதாசன் – பாடியவர்: கண்டசாலா - இசை: கே.வி.மகாதேவன் )
Xxxxxxxxxxxxxx

எங்குமே ஆனந்தம்
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்

( படம்: பலே ராமன் ( 1957 ) -  பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்; கண்டசாலா - இசை: T.A. கல்யாணம் ) இந்த பாடலைக் கண்டு கேட்டு களிக்க இங்கே கீழே திரையில் ‘க்ளிக்’ செய்யவும்
( Courtesey https://www.youtube.com/watch?v=pYQUU3SsFCw )

                                            (All Pictures and Video Courtesy : Google )

                                                               XxxxxxxxxxxX

  அனைவருக்கும் எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்!

34 comments:

  1. இலங்கைவானொலியை மறக்க முடியுமா? எப்பேர்ப்பட்ட வானொலி. அவர்களைப் போன்று வானொலி நிகழ்ச்சிகள் நடத்துவது என்பது இனி நடக்காது. இப்போது இல்லை என்றே தோன்றுகிறது.

    கண்டசாலாவின் பாட்டுகள் ஒருசில கேட்டதுண்டு. நீங்கள் இங்குச் சொல்லியிருப்பதில் சில கேட்டதில்லை...பகிர்விற்கு மிக்க் நன்றி

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. அன்பிற்குரிய நண்பர்கள் துளசிதரன் மற்றும் கீதா ஆகியோரது கருத்துரைக்கு நன்றி. இப்போதும் யூடியுப்பில் இருக்கும், அந்தக் கால இலங்கை வானொலியின் பொங்கும் பூம்புனல், பிறந்தநாள் வாழ்த்துகள் போன்ற நிகழ்ச்சிகளின் துவக்க இசையை அடிக்கடி கேட்டு ரசிப்பேன்.நீங்கள் குறிப்பிட்டதைப் போல இனி அதுபோல் யாரும் நிகழ்ச்சிகள் நடத்த முடியாது.

      Delete
  2. இந்தப் பாடல்களும், இன்னும் பல பாடல்களும் அவர் குரலில் மறக்க முடியாதவை. மெல்லத் திறந்தது கதவு படத்தில் வரும் "வா வெண்ணிலா" பாடல் ஒரு பழைய கண்டசாலா பாடலின் மறு ஆக்கமென்று ( ரசிகர்களின் விருப்பம் ) எம் எஸ் வி சொல்லி இருந்தார். சண்டி ராணி படத்தில் வரும் 'வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே' பாடலிலிருந்து.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் கருத்தினுக்கும், எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடைய பாடல் ஒன்றினைப் பற்றிய தகவலுக்கும் நன்றி.

      Delete

  3. கண்டசாலாஅந்த காலத்தில் பாடிய பாடல்கள் அம்மாவின் தாலாட்டுகள் போலவும் இன்றையகாலத்து பாடல்கள் மனைவி நம்மை பார்த்து பாடும் பாடல் போல இருக்கிறது.... இப்ப்டி எனக்கு மட்டும்தானா தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. நல்ல நகைச்சுவை. உங்களுக்கு எப்பவுமே மனைவியின் ஞாபகம்; பயமா, மரியாதையா என்று உங்களுக்கு மட்டுமே தெரியும். - தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. நல்ல கலைஞனைப்பற்றி தந்த தொகுப்புகள் அருமை.
    இதில் அன்புச் சகோதரர்கள் பாடலை கேட்டு மனம் உருகாதோர் உண்டோ...

    இதில் எல்லா பாடலுமே நான் தொடர்ந்து கேட்டதே பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  5. பதிவில் குறிப்பிட்டுள்ள அத்தனை பாடல்களும் தேன் துளிகள்..
    மிகவும் பிடித்தமானவை..

    இலங்கை வானொலி மட்டும் இல்லையெனில் இந்தப் பாடல்கள் எல்லாம் காற்றோடு காற்றாகப் போயிருக்கும்..

    அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகளுடன்..

    ReplyDelete
    Replies
    1. // இலங்கை வானொலி மட்டும் இல்லையெனில் இந்தப் பாடல்கள் எல்லாம் காற்றோடு காற்றாகப் போயிருக்கும்.. //

      ஆமாம் நண்பரே.

      Delete
  6. நல்லபாடல்கள் நான் மிகவும் இரசித்தவை கண்டசாலா பற்றிய குறிப்பு நன்று!

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு. எங்குமே ஆனந்தம் பாடல் நான் கேட்டதில்லை. கண்டசாலாவின் சிறந்த பாடல்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அருமை. தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      // எங்குமே ஆனந்தம் பாடல் நான் கேட்டதில்லை.//

      நானும் வானொலியில் இந்த பாடலை கேட்டதில்லை. யூடியூப்பில் மட்டுமே, பழைய பாடல்கள் வரிசையில் கேட்டு ரசித்ததுதான்.

      Delete
  8. இதில் கூறி இருக்கும்எல்லாப்பாடல்களையும் நானும் கேட்டு ரசித்திருக்கிறேன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி.

      Delete
  9. அக்காலப் பாடகனின் நினைவுகள். எக்காலத்திலும் ரசிக்கும் தரம் வாய்ந்தவை. கூடுதல் செய்திகளுடன் பகிர்ந்த விதம் அருமை. நன்றி...தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

      Delete
  10. கண்டசாலா பாடல்கள் அந்தக்காலத்தில் மிகவும் பிரசித்தம். இலங்கை வானொலியில் அவரின் அத்தனை பாடல்களையும் கேட்டு ரசித்ததுண்டு. ஆனாலும் அவரின் குரல் சற்று மூக்கால் படுவது போல இருக்கும். பெரும்பாலும் ஜெமினி கணேசன் படங்களுக்கு பாடியிருப்பார். அவரின் பெரும்பாலான பாடல்கள் சோகப்படல்கள் என்பதால் நான் அவ்வளவாக அவரது குரலை ரசித்ததில்லை. அதையும் மீறி அனார்கலி என்ற படத்தில் அவரும் ஜிக்கியும் இணைந்து பாடியிருக்கும் ' ராஜசேகரா என் மேல் மோடி செய்யலாகுமா?' என்ற பாடலுக்கு நான் என்றுமே ரசிகை! இப்போதுமே! கீழே அந்தப்பாடலின் லிங்க் உள்ளது. கேட்டு, பார்த்து ரசித்து சொல்லுங்கள்.

    https://www.youtube.com/watch?v=2I50BQ8BLJE

    இன்னொரு பாடலும் மிகவும் புகழ் பெற்றது. மணாளனே மங்கையின் பாக்கியம் படத்தில் ' தேசுலாவுதே தேன் மலர்' என்ற பாடல். அதன் லிங்க்கும் கீழே உள்ளது.
    https://www.youtube.com/watch?v=JzvY7JrWfJY

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பாடல்களையும், யூடியூப்பிற்கு சென்று ரசித்தேன். என்ன இருந்தாலும் மஞ்சள்மகிமையில் வரும் ‘ ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா’ பாட்டிற்கு மனம் அசைந்தாடியதைப் போல வருமா?

      Delete
  11. இனிய பாடல்களை வீட்டிற்குச் சுமந்து வந்து தந்த இலங்கை வானொலியை மறக்கத்தான் முடியுமா,
    கண்டசலாபாடல்களை ரசித்திருக்கிறேன்
    நன்றி ஐயா
    தம+1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. சில நாட்களாக எம்.கே.டி.-யில் மூழ்கியிருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களுக்கு முன் கண்டசாலாவின் நினைவு வந்தது. அவரது பெயரே அபூர்வமானது. குரல் இனிமையை என்னவென்று சொல்வது. எங்கள் வீட்டிலும் ஒரு புஷ் இருந்தது அது ரேடியோ. நிறைய பழைய பாடல்களை என் சிறுவயதில் அள்ளித் தெளித்தது. கண்டசாலாவின் குரலைக் கேட்டு கிறங்கிப்போய்க் கிடந்திருக்கிறேன், என்னமாதிரியான பாடகர் இவர் என.

    ஆஹா இன்பநிலாவினிலே..., ஆகாயவீதியில் அழகான வெண்ணிலா.., கோடை மறைந்தால் இன்பம் வரும்... ஆகிய பாடல்கள் இத்தகையவை.

    ‘உல்லாசம் தேடும் எல்லாரும் ஓர் நாள்...’ கேட்டு ரசித்திருக்கிறேன். இவர் பாடியது என்று இன்றுதான் தெரியும்.

    கண்டசாலாவின் நினைவினை தீபாவளி ஹல்வாவைப் போல் நன்றாகக் கிளறிவிட்டுள்ளீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஏகாந்தன் அவர்களின் கருத்துரைக்கும், பாராட்டினுக்கும் நன்றி.

      Delete
  13. கண்டசாலாவின் பாடல்கள் அதிகம் கேட்டதில்லை...
    சில சின்ன வயதில் ரேடியோவில் கேட்டதுண்டு...
    மிக நல்ல பகிர்வு ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பரிவை சே.குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நேரம் கிடைக்கும்போது கண்டசாலாவின் பாடல்களை கேட்டு ரசியுங்கள்.கம்ப்யூட்டரை விட ஆண்ட்ராய்டு (Samsung)போனில் உங்கள் வலத்தளத்தை படிப்பதில் சுலபமாக இருக்கிறது. இனி உங்கள் வலைத்தளம் வருவேன்.

      Delete
  14. மறக்க முடியாத நினைவுகள்... டெல்லியில் இருந்த போதும் தெளிவாக க் கேட்க முடியும்.சூப்பர் வானொலி

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது வலைத்தளம் வந்து கருத்துரை தந்த, சகோதரி அவர்களுக்கு நன்றி.

      Delete
  15. கானக்குரலோன் கண்டசாலாவின் பாடல்களை நினைவூட்டியமைக்கு நன்றி! அவரது தெலுங்கு கலந்த தமிழ் ஒரு வசீகரத்தை தந்தது உண்மை. பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி.

      // அவரது தெலுங்கு கலந்த தமிழ் ஒரு வசீகரத்தை தந்தது உண்மை. //

      உண்மைதான் அய்யா. சிலசமயம், கண்டசாலாவின் பாடல்களில் மெய்மறந்து ரசித்து கேட்டுக் கொண்டு இருக்கும்போது, அவர் தமிழில் பாடினாலும், சுந்தரத் தெலுங்கில் பாடுவது போலவே இருக்கும்.

      Delete
  16. கண்டசாலா அவர்களின் பாடல் பகிர்வு அனைத்து சிறப்பு , எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இன்றைக்கும் நான் என்னையும் அறியாமல் முணுமுணுக்கும் பாடல் ‘அமைதி இலாதென் மனமே என் மனமே’

      Delete
  17. ஒரு இனிய மீட்டல்.
    நன்றி-
    தமிழ் மணம்.10
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். உங்கள் வலைப்பக்கம் நான் வந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. மன்னிக்கவும். மீண்டும் தொடர்வேன்.

      Delete
  18. ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா..கேட்டு மகிழ்ந்தேன்.உடுமலையார் ..கண்டசாலா..மத்யமாவதி..மஞ்சள் மகிமை ..என்ற விவரங்கள் பின்னர் அறிந்து வியந்தேன்...நன்றி..என் வயது 78.

    ReplyDelete