Monday 24 April 2017

சசிகலா எதிர்ப்பு அரசியல்



மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் , கலைஞர் கருணாநிதியும் திரையுலக நண்பர்கள். இந்த நட்பு அரசியலிலும் தொடர்ந்தது. அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் கருணாநிதியா அல்லது நாவலர் நெடுஞ்செழியனா என்ற கேள்வி வந்த போது., அப்போது கட்சிக்கு வெளியே உள்ள பலரும் சொன்ன வாசகம் படித்த நாவலர்தான் வர வேண்டும் என்பது. ஆனால் அப்போது, எம்.ஜி.ஆர் தனது திரையுலக நண்பர் கருணாநிதிக்கு ஆதரவு தந்தார். நாவலருக்கென்று கோஷ்டி அரசியல் நடத்த ஆட்கள் இல்லை. கட்சித் தொண்டர்களின் ஆதரவும் கலைஞருக்கே இருந்தது. கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆனார்.

கருணாநிதி எதிர்ப்பு அரசியல்

முதல்நாள் ஒரு தி.மு.க மாநாட்டில் கட்சிக்காக இராணுவத்தையே எதிர்ப்பேன் என்ற எம்.ஜி.ஆர், ஒருநாள் கட்சியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினர் உட்பட மேலிடம் வரை அனைவரின் சொத்துக் கணக்கையும் காட்ட வேண்டும் என்றார். தி.மு.கவை உடைக்க, இந்திரா காங்கிரசின் சதி என்றார்கள். எம்ஜிஆர் தி.மு.கவை விட்டு நீக்கம் செய்யப்பட்ட போது ‘எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார்; கருணாநிதி அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டார்” என்று பிரச்சாரம் செய்தார்கள். மேலும் கட்சியின் தொண்டர்கள் பலரும் எம்.ஜி.ஆருக்குப் பின்னாலேயே சென்றார்கள். அதன் பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள், அ.தி.மு.க என்ற தனிக்கட்சி தொடங்கியதும் ஆட்சியைப் பிடித்ததும் எல்லோரும் அறிந்த வரலாறு. அன்று தொடங்கிய கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது, எம்.ஜி.ஆருக்குப் பின் வந்த ஜெயலலிதாவின் காலத்திலும் தொடர்ந்தது.

தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்குக் காரணம் கருணாநிதிதான் என்று சொன்னார்கள்; காவிரிப் பிரச்சினை ஆனாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றாலும் கருணாநிதிக்கு எதிராகவே வை.கோபால்சாமி, நடராஜன் (சசிகலா), பழ.நெடுமாறன், சுப்ரமணியன் சுவாமி, போன்ற தி.மு.க எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்தார்கள். இந்த கருணாநிதி எதிர்ப்பு அரசியலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். வெளியே இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த விஷயத்தில் இவர்களுக்குள் ஒரு UNDERSTANDING உண்டு. கருணாநிதி எது செய்தாலும் எதிர்ப்பார்கள்; ஆனால் அதே காரியத்தை ஜெயலலிதா செய்தால் வாயே திறக்க மாட்டார்கள். ஜெயலலிதா காலத்தில் இன்னும் வேகமாக கருணாநிதியை ஒரு தீயசக்தி என்று சொல்லி அரசியல் நடந்தது. கலைஞர் கருணாநிதியின் குடும்பம் சார்ந்த அரசியலும் தி.மு.க ஆட்சியில் ’குறுநில மன்னர்கள்’ பாணியில் மாவட்டத் தலைவர்கள் செய்த பரிபாலனமும் இந்த எதிர்ப்பிற்கு வலு சேர்த்தன.

சசிகலா அரசியல்

சசிகலாவின் அரசியல் என்பது, ஜெயலலிதாவோடு நட்பு தொடங்கிய காலத்திலிருந்தே தொடங்கி விட்டது எனலாம். ஜெயலலிதாவை முன்னிலைப் படுத்தி நிழல் அரசியல் நடத்தியவர் இந்த சசிகலாவை இயக்கியவர் அவரது கணவர் நடராஜன். இந்த அரசியலுக்கு மேலே சொன்ன கருணாநிதி எதிர்ப்பு அரசியல் பக்க பலமாக விளங்கியது.
இப்போது வரலாறு திரும்பி விட்டது. ஜெயலலிதா மறைவினாலும், கருணாநிதியின் உடல்நிலையாலும் இப்போது கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது மங்கி விட்டது. கலைஞருக்குப் பின்னால் தி.மு.க எப்படி என்று சொல்ல முடியாது. எனவே கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது எதிர்மறை பலனையே தரும். அதேபோல இறந்து போன ஜெயலலிதாவை குற்றவாளி என்று திரும்பத் திரும்ப சொன்னாலும் எதிர்மறை பலன்தான். ( நமது நாட்டில் எப்போதுமே, இறந்தவர்களை அவர் எவ்வளவு பொல்லாதவராக இருந்தாலும் மன்னித்து, நல்லவராக்கி விடுவார்கள்: இது தெரியாத ஸ்டாலின் ஜெயலலிதாவை தூற்றுவதில் அரசியல் சாணக்கியத்தனம் இல்லை.. பி.ஜே.பியிலிருந்து ஜெயலலிதா பற்றிய விமர்சனம் எதுவும் இல்லை என்பதிலிருந்தே அவர்களின் யுத்தியை அறிந்து கொள்ளலாம் ) இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், இதுநாள் வரை சசிகலா நடராஜன் என்று அழைக்கப்பட்ட இவர் இப்போது வி.கே.சசிகலா என்ற பெயரில், சின்னம்மாவாக உருவெடுத்து இருக்கிறார்.

சசிகலா எதிர்ப்பு அரசியல்

அன்றைக்கு திமுகவை விட்டு வெளியே வந்த எம்.ஜி.ஆருக்கும், எம்.ஜி.ஆருக்குப் பின் வந்த ஜெயலலிதாவிற்கும் ஜாதி மத அபிமானங்களைக் கடந்த  கட்சித் தொண்டர்கள் என்ற ஆதரவு இருந்தது. ஆனால் இப்போது அரசியல் பிரவேசம் செய்துள்ள சசிகலா நடராஜனுக்கு இந்த தொண்டர்கள் ஆதரவு இல்லை. எனினும் ஜெயலலிதா மறைவிற்குப் பின், முதல்வர் பதவியை அடைய ரொம்பவும் சாமர்த்தியமாகவே காய்களை நகர்த்தினார். ஏனெனில் அ.தி.மு.க.வில் உள்ள எம்.எல்.ஏக்கள் அனைவருமே ( ஓ.பி.எஸ் உட்பட) சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள். ஆனால் கோர்ட் தீர்ப்போ அவரை சிறைக்குள் தள்ளி விட்டது. இப்போது சிறையில் இருந்தபடியே, தமிழ்நாட்டின்  அரசியல் அதிகாரத்தை தனது கைக்குள் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பான்மையோர் ஜாதி, மதம் கடந்து சொல்லும் ஒரு வாசகம் “வேறு யார் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் இந்த சசிகலா வகையறாக்கள் மட்டும் வர வேண்டாம்” என்பதே. அந்த அளவுக்கு வெளியே வெறுப்பு அனல் பறக்கிறது. இதனாலேயே, ஓ.பி.எஸ் எனப்படும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்ன விமர்சனம் இருந்தாலும் பலரும் அவற்றை கண்டு கொள்வதில்லை. மத்தியில் ஆளும் பி.ஜே.பியும் தாங்கிப் பிடிக்கிறது.. ( சசிகலா - நடராஜன் மட்டும் தனக்கு ஜெயலலிதாவிடம் இருந்த செல்வாக்கை வைத்து, தமிழ், தமிழர் நலன் என்று தமிழ்நாட்டு நலனிலும் உண்மையான அக்கறை காட்டி வெளிப்படையான அரசியல் செய்து இருந்தால், இன்று எங்கோ உயர்ந்து இருப்பார் ; இவருக்கென்று ஒரு ‘மாஸ்’ ( mass ) உருவாகி இருக்கும். ஆனால், நிழல் மனிதர்கள் வெளிச்சத்தில் மறைந்து போய்விடுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.)

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் “நான் ஒரு பாப்பாத்தி“ என்று தன்னை சொல்லிக் கொண்டாலும், பிராமணர்களுக்காக அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்பதே அந்த சமூக மக்களின் கருத்து. இன்றும் ”ஜெயலலிதா கெட்டிக்காரி” என்று வாயால் சொன்னாலும், அவரைப் பற்றி அவர்கள் சொல்லும் ஒருவரி விமர்சனம் ‘பிடிவாதக்காரி’ என்பதே. பிராமணர்களில் பலருக்கு இன்னும் காஞ்சி சங்கராச்சியார் ஜெயேந்திரரை கைது செய்த விவகாரத்தில் யார் பின்புலம் என்பதை மறக்க மாட்டாதவர்களாகவே உள்ளனர்.  
   
அடுத்து என்ன?

எம்.ஜி.ஆர் அபிமானம், ஜெயலலிதாவின் செல்வாக்கு என்ற காரணங்களால் கிடைத்த, தற்போதுள்ள ஆட்சி, அதிகாரம், எம்.எல்.ஏ பதவி என்ற காரணங்களுக்காக – இந்த பதவியில் உள்ளவர்கள் மட்டுமே சசிகலாவை ஆதரித்தார்கள். அவர் கைகாட்டிய எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள். தினகரன் மூலம் தனது பதவிக்கு ஆபத்து என்றதும், இவரும் ஓ.பி.எஸ் போலவே இப்போது சசிக்கு எதிராக கலகக்குரல் எழுப்புகிறார். எத்தனை நாட்களுக்கு இப்படியே ஓடும்? ஒருவேளை ஆட்சி கலைக்கப்பட்டு அல்லது கவிழ்க்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி வருமேயானால், எல்லாம் தலைகீழ்தான்.

ஆனால் அ.தி.மு.கவில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை, சசிகலாவிற்கான எதிர்ப்பை, தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் காலூன்ற, மேலே மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பி.ஜே.பி முயற்சி செய்து வருகிறது. இதற்கு அ.தி.மு.கவை தங்கள் கைப்பாவையாக்கி, அவர்களை முன்னிறுத்தி காரியம் நடைபெற்று வருவது எல்லோரும் அறிந்த ஒன்று. இதற்கு தி.மு.க எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்களது மறைமுக ஆதரவும் உண்டு. காரணம் அவர்கள், வெளியே பெரியார் கொள்கை, தமிழ் தேசியம், ஈழம் என்று பேசினாலும் அவர்களைப் பொருத்தவரை யார் ஆட்சிக்கு வந்தாலும் தி.மு.க மட்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் மேலும் கலைஞரின் நேரடி வழிகாட்டுதல் இல்லாத இல்லாத திமுக இனி எப்படி பயணம் செய்யும் என்று சொல்ல முடியாது. இது திராவிட பூமி, பெரியார் மண், இங்கு பி.ஜே.பியை விட மாட்டோம் என்பதெல்லாம், சிலர் தமக்கு தாமே சொல்லிக் கொள்ளும் ஆறுதல் வார்த்தைகள் ஒழிய வேறு இல்லை. ஏனெனில் இவர்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்போ, ஒற்றுமை உணர்வோ அல்லது சகிப்புத் தன்மையோ கிடையாது .தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் என்று வந்தால், அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி என்று ஒன்று உருவாகி, சட்டசபைக்குள் பி.ஜே.பிக்கு என்று சில சீட்டுகள்  கிடைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. 

(பேசாமல் ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ‘பிரஜா ராஜ்யம்’ என்ற, தான் தொடங்கிய கட்சியை காங்கிரசில் கரைத்தது போல அ.தி.மு.கவை பா.ஜ.கவில் இணைத்து விடலாம் )
   
( ஒரு மாதத்திற்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட கட்டுரை இது. கால மாறுதலுக்கு ஏற்ப, கொஞ்சம் திருத்தி வெளியிட்டுள்ளேன் )                        
                           xxxxxxxxxxxxxxxxxxx .

தொடர்புடைய எனது பிற பதிவுகள்

ஜெயலலிதா - கண்ணீர் அஞ்சலி! http://tthamizhelango.blogspot.com/2016/12/blog-post_7.html
மீண்டும் ஆட்சியில்அம்மாதான் http://tthamizhelango.blogspot.com/2016/02/blog-post_20.html

27 comments:

  1. உண்மை நிலையையும் உங்கள் அபிப்பிராயங்களையும் இணைத்து கட்டுரை ஆக்கி இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல ஜெயலலிதா ஆதரவு என்பதை விட கருணாநிதி எதிர்ப்பு என்பதே அதிகம். இப்போதும் அதே போல சசிகலா எதிர்ப்புதான் பன்னீரை ஆதரிக்க வைக்கிறது. அவரும் ஒன்றும் சுயம்பிரகாசத்தி தங்கம் இல்லை என்பதை உணர்ந்தே இருந்தாலும், இப்போதைய அனுபவங்கள் இனி வரும் அரசியலை மாற்றலாம் என்கிற நப்பாசையும் இருக்கிறது. ஸ்டாலின் நீண்ட நாட்களாய் அரசியலில் இருந்தாலும் அவரிடம் ஒரு பண்பட்ட அரசியலைப் பார்க்க முடியவில்லை. தமிழகத்தில் ஒரு தேசெய்யக் கட்சி அவ்வப்போது ஆட்சிக்கு வந்தால் நல்லதுதான் என்றாலும் அவர்களுக்கும் ( காங்கிரஸ், பீ ஜே பி) வாய்ப்பு இல்லை என்பதும் கள நிலவரம். தமிழக அரசியல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. சொந்தக் சண்டைகள் முடிந்து அரசாங்கம் எப்போது செயல்படத் தொடங்குமோ தெரியாது!

    தம +1

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ,எங்கள் Blog, ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி என்பது தமிழகத்திற்கு நல்லதுதான். ஆனால் இங்குள்ள தேசியக் கட்சியினரே டெல்லிக்கு போய்விட்டால் தமிழ்நாட்டை ஏதோ ஒரு அந்நிய நாடு போல பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த மனோபாவம் மாற வேண்டும்.

      Delete
  2. பி.ஜே.பி குறுக்கு வழிகளையே நாடுகிறது ஐயா
    அதனால் அக்கட்சிக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள்,வளர்வதற்கு இல்லை என்றே எண்ணுகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      Delete
  3. மிகவும் தெளிவாக அலசி இருக்க்ன்றீர்கள் நண்பரே... அனைத்தும் உண்மை
    த.ம

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. பன்னீர் செல்வத்த்திற்கு சற்று அதிகமாக ஆதரவு தந்து பாஜக தன் பெய்ரை கெடுத்து கொண்டது தமிழ்க பாஜக தலைவர்களை மாற்றி மாநில பிரச்சனைகளுக்காக போராடு ஒரு தலைவரை தேர்ந்தெடுத்தால் கொஞ்சமாவது வாய்ப்புக்கள் கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மதுரைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி அரசானது, ஜெயலலிதா இறந்தவுடனேயே, தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் நடத்தி இருந்தால், அதன் மதிப்பு உயர்ந்து இருக்கும்.

      Delete
  5. தமிழக அரசியலை அலசியிருக்கிறீர்கள். அதிமுகவுக்கு இன்னும் 40% ஆதரவு இருக்கும். அதைப்போய் சீரஞ்சீவி கட்சிபோன்று சொல்லிட்டீங்களே.

    மக்கள் கருத்துக்கு எதிராக இருந்தால் ஆதரவு சட்டென்று காணாமல்போய்விடும். சீரஞ்சீவிக்கு நடந்ததுபோல. ஸ்டாலின் திமுக மேல் நம்பிக்கை பிறக்கவில்லை.

    பாஜகா தானே மற்ற கட்சிகளை ஊன்றுகோலாகப் பயன்படுத்தாமல் தமிழகத்தில் முயன்றால் பெரியகட்சியாக நிச்சயம் எதிர்காலத்தில் வரும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      // அதிமுகவுக்கு இன்னும் 40% ஆதரவு இருக்கும். அதைப்போய் சீரஞ்சீவி கட்சிபோன்று சொல்லிட்டீங்களே. //

      இவ்வளவு மெஜாரிட்டி எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் இருந்தும், அ.தி.மு.க.விற்கு என்று சரியான ஆளுமை இல்லாததால், இரு அணியினருமே, பி.ஜே.பியிடம் சரணடையத் தயார் நிலையில் உள்ளனர். இதனால்தான் அப்படி சொல்ல வேண்டியதாயிற்று.

      Delete
  6. சென்ற சட்டசபை தேர்தலின் போதே தனித்து நின்று திமுக ஒரு சதவீத வாக்கில் தான் தோற்றது ,ஜெ இல்லாத அதிமுகவை வரும் தேர்தலில் எளிதாக தோற்கடித்து விடும் என்றே தோன்றுகிறது :)

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி. இப்போது களத்தில் கலைஞரும் இல்லை.ஜெயலலிதாவும் இல்லை.

      Delete
  7. மிகவும் அருமையானதோர் அரசியல் அலசல்.

    இன்று தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனை குடி தண்ணீர் மட்டுமே. அதற்கு முன்னுரிமைகொடுத்து செயல்படும் எந்தக் கட்சிக்கும் மக்கள் நிச்சயமாக வாக்களிப்பார்கள்.

    இதனை இன்றைய மத்திய அரசு புரிந்துகொண்டு செயல் பட்டால் தமிழ்நாட்டில் அவர்களால் மிகச்சுலபமாக காலூன்ற முடியும்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது எனக்கு மூதுரையில் ஔவைப்பாட்டி சொன்ன

    கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
    தானு மதுவாகப் பாவித்துத்-தானுந்தன்
    பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
    கல்லாதான் கற்ற கவி.

    என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

    ஒவ்வொருவரும் தனது தனித்தன்மையை நிரூபித்து தலைவனாக ஆகவேண்டும். புகழ்பெற்ற ஒருவரைப்போல் உடை அணிந்தோ அல்லது அவரைப்போல் நடை நடந்தோ வந்தால் மக்களை கவர்ந்துவிடலாம் என்று நினைத்தால் தற்போது நடந்தது போல் தான் நடக்கும்.

    தமிழ் நாட்டைப் பொருத்தவரை என்றைக்கு நாம் தனி நபர் துதிபாடுதலை நிறுத்துகிறோமோ அன்று தான் நமக்கு விமோசனம் கிட்டும் என்பது என் கருத்து.

    எனக்கென்னவோ பா.ஜ.க தமிழ் நாட்டில் காலூன்றுவது கடினம் என்றே தோன்றுகிறது.





    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. தேசீயக் கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டை திமுக-வும் பிறகு எம்ஜியார்-ஜெயலலிதாவும் ஹைஜாக் செய்துவிட்டார்கள். கம்யூனிஸ்ட்டுகள், இந்த இருவரில் ஒருவருக்கு துணி துவைத்துப்போட்டே தொழில் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். காங்கிரஸ், காமராஜ் காலத்தில் இரண்டுபட்டது, பின்னாளில் நாடார் இனத்தவரின் கட்சியாக மாறிப்போனது. இந்திரா காங்கிரஸ், இரண்டு கழகங்களில் ஏதாவது ஒன்றின் முதுகில் சவாரி செய்வதே சௌகரியம் என்று முடிவுசெய்துவிட்டது. சினிமா எனற கவர்ச்சியால் ஆட்சிக்கு வந்த கழகங்கள், பிற்பாடு காசு கொடுத்து ஓட்டு வாங்கும் கலையை நிரந்தரப்படுத்திவிட்டன. எனவே, தமிழகத்திற்கு இனிமேல் நாதியில்லை. நியாயமான மனிதர்களோ, கட்சிகளோ இங்கே வெற்றிபெறுவதற்கும் ஆட்சி அமைப்பதற்கும் வழியே இல்லை. எனவே, அதிக பலத்தோடு மத்தியில் ஆட்சி பெற்றிருக்கும் பாஜக மட்டுமே இந்த நச்சு அரசியலில் இருந்து தமிழகத்தை விடுவிக்க முடியும் என்பதை நடுநிலையாளர்கள் நம்புகின்றனர். அதுவே நடக்கவும் போகிறது. குறிப்பாக இரண்டு ஊழல் குடும்பங்களும் அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்டால் அதுவே நன்மைக்கு முதல் அறிகுறியாக இருக்கும்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய மூத்த வலைப்பதிவர் இராய செல்லப்பா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தமிழகத்தில் நிலவும் ஒரு அசாதரணமான இன்றைய குழப்பமான சூழலில், பொதுத்தேர்தல் ஒன்றே நிலைமையை தெளிவுபடுத்தும்.

      Delete
  10. அருமையான கண்ணோட்டம்
    ஆட்சி மக்களிடம்
    அவர் தம் வாக்கில் (Vote)
    பணத்திற்காக வாக்குப் (Vote) போட்டால்
    நல்லாட்சி மலருமா?

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. எந்த அரசியல்வாதி மீதும் நம்பிக்கை ஏற்படுவதில்லை.திராவிடக் கட்சிகள் மதம் மொழி இனம் என்று கூறியே அரசியல் நடத்துகின்றனர் இப்போது மத்தியில் இருக்கும் காவி அரசியலும் அதையே செய்கிறது நாடு எங்குதான் போகிறதோ

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. தமிழ்நாட்டின் அவல அரசியல் வரலாற்றைத் தெளிவுபடக்காட்டியுள்ளீர்கள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  13. நல்லதொரு கட்டுரை. தமிழக அரசியல் டாஸ்மாக் சரக்கடித்தது போல தள்ளாடிக் கொண்டிருக்கிறது.... வேறென்ன சொல்ல....

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete